Friday, May 27, 2016

எறையூர் சர்ச் ஜாதிசண்டை, 144 தடை உத்தரவு வன்னியக் கிறிஸ்துவர் வ்ச் எஸ்.சி கிறிஸ்துவர்

First Published : 27 May 2016 03:02 AM IST


விழுப்புரம் எறையூர் மாதா தேவாலயத் தேரோட்டத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து, சனிக்கிழமை (28-ஆம் தேதி) முடிவு எடுத்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
 விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த மாத்யூ என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எங்கள் கிராமத்தில் ஜெபமாலை மாதா தேவாலயம் உள்ளது. ஆண்டுதோறும் மே இறுதியில் தேவாலயத்தில் தேரோட்டம் நடத்தப்படும். இதுதொடர்பாக, கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த இரு ஜாதியினருக்கு இடையே ஏற்கெனவே பிரச்சினை ஏற்பட்டது. ஆகையால், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தேவாலயத்தைச் சுற்றி மட்டும் தேரோட்டம் நடத்த வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கினர்.
 இந்த நிலையில், இரு பிரிவினருக்கு இடையே மாவட்ட பேராயர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், அனைத்து தெருக்களிலும் தேர் செல்லலாம், சட்ட-ஒழுங்கு பிரச்சினை வராது என்றும் இரு தரப்பினரும் உறுதி அளித்தனர். கடந்த 21-ஆம் தேதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்திலும், இதே முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், திடீரென திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தேவாலயத்தை சுற்றியே தேரோட்டம் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 இந்த உத்தரவு சட்ட விரோதமானது, தன்னிச்சையானது. இதை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு கோடை விடுமுறை கால நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், எம்.வி. முரளிதரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் வி.ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, தேரோட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 இதற்கான உத்தரவை, கடந்த 25-ஆம் தேதியே மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது எனக் கூறி, உத்தரவு நகலையும் தாக்கல் செய்தார்.
 இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வன்னிய கிறிஸ்துவர்கள், தலித் கிறிஸ்துவர்கள் ஆகிய இரு பிரிவினருடன் வெள்ளிக்கிழமை (27-ஆம் தேதி) திருக்கோவிலூர் வருவாய் கோட்டாச்சியர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். சனிக்கிழமைக்குள் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 1-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கிறோம் என்றனர்.

No comments:

Post a Comment