ஒரு சவரன் நகையை ரூ.6,000க்கு தருவதாகக் கூறி மோசடி செய்ததாக நகைக் கடை அதிபர் கைது
சென்னையில், ஒரு சவரன் நகையை 6 ஆயிரம் ரூபாய்க்கு தருவதாகக் கூறி ஏழு கோடி ரூபாய் மோசடி செய்த நகை கடை அதிபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த கிருஸ்துதாஸ் என்பவர், 2015 ஆம் ஆண்டு வடபழனியில் தனியார் நடசத்திர விடுதி ஒன்றில் மகளிர் சுய உதவிக்குழு கூட்டி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், ஒரு லட்ச ரூபாய் செலுத்தினால் 3 மாதத்தில் 15 சவரன் நகை கொடுக்கப்படும் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மகளிர் சுயஉதவிக்குழு மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து அவரிடம் பலரும் பணம் செலுத்தியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் 2015 ஆம் ஆண்டே வடபழனி மற்றும் அரும்பாக்கத்தில் மணம் ஜூவல்லரி என்ற பெயரில் கிருஸ்துதாஸ் நகைக்கடை தொடங்கியுள்ளார். அந்த நகைக்கடையிலும், மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் மாதத்துக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் கிருஸ்துதாசிடம் செலுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் கொடுத்த பணத்திற்கு நகைகளை கொடுக்காமல் கிருஸ்துதாஸ் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கிருஸ்துதாஸ் 2016 ஆம் ஆண்டு இரு நகைக்கடைகளையும் மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து மதுரவாயலைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்டோர் கடந்த 6 மாதத்துக்கு முன்பு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்ததாகவும், ஆனால் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த கிருஸ்துதாஸ் அண்ணாநகரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றுக்கு வந்திருப்பதாக அறிந்த பாதிக்கப்பட்டவர்கள் அங்கு சென்று அவரை பிடித்து மதுரவாயல் போலிசில் ஒப்படைத்தனர்.
No comments:
Post a Comment