சிறுவாபுரி என்ற ஊரையும் அங்கு குடி கொண்டிருக்கும் முருகனையும் தெரிந்து கொண்ட பின்பு, ஒரு நாளாவது அங்கே போய் முருகனை தரிசிக்க வேண்டும் என்ற ஆசையும் எனக்குள் நிறைவே இருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே போக வேண்டும் என்று போட்டிருந்த திட்டம் பல்வேறு காரணங்களினால் நிறைவேறவில்லை.
ஆனால் இந்த வருடத் துவக்கத்திலேயே வரும் பிறந்த நாள் அன்று நிச்சயமாக சிறுவாபுரிக்கு படையெடுத்து போக வேண்டும் என்று நினைத்தேன்.
என்னுடைய துடிப்பை நிறைவேற்ற அன்பு தம்பி ஜெகன் முன் வந்தார். முருகனை தரிசிக்க நாங்களும் வருகிறோம் என்று அண்ணன் இனியனும், தம்பி தினேஷம் சேர்ந்து கொள்ள, கடந்த ஜனவரி 28 அன்று காலையில் சிறுவாபுரிக்கு பயணமானோம்.
போகும்பொழுது அந்தக் கோவில் ஏதோ பழனி, திருச்செந்தூர், மருதமலை போல் அழகாக இருக்கும்... சுத்தமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.
ஆனால் கோவில் வாசலுக்கு போன பின்புதான் தெரிந்தது இந்த முருகனை ரொம்பவே கேவலமாக்கி வைத்திருக்கிறார்கள் என்று..!
உண்மையில் இந்த சிறுவாபுரி முருகன் அந்த ஊர் மார்க்கெட்டுக்கு நடுவில் ஏதோ போனால் போகிறது என்று ஊர்க்காரர்கள் கொடுத்த இடத்தில் குடியிருக்கிறான்.
கோவிலுக்குள் நுழைந்தாலும் வெளியில் இருந்து பூ 50 ரூபாய், மாலை 150 ரூபாய் என்று கடைக்காரர்கள் சத்தம் போடும் குரல், உள்ளே சென்று கொண்டிருப்பவர்களுக்குத் தெளிவாக கேட்டது.
அந்த அளவுக்கு கோயில் வாசலையும், கோயிலுக்கான சாலையையும் கோவிலை சுற்றியும் ஆக்கிரமிப்பு செய்திருக்கிறார்கள் நம்முடைய மக்கள்.
இதில் இன்னும் ஒரு கொடுமையாக நாய்கள் எல்லாம் கோவிலுக்குள் நுழையும் வழிகளிலேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தன. கோவிலுக்குள்ளேயும் சில நாய்கள் சுற்றி தெரிந்து கொண்டிருந்தன.
ஆச்சரியமாக இருந்தது! இப்படி எல்லாம் ஒரு முருகன் கோயிலில் அதுவும் புகழ் பெற்ற ஒரு கோவிலை இவ்வளவு கேவலமாக வைத்திருக்க முடியுமா என்று!?
இத்தனைக்கும் இந்தக் கோயில் இப்போது இந்து சமய அறநிலைத்துறையின் கையில்தான் இருக்கிறதாம்.
விழா சமயத்திலும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்றும் கூடுகின்ற கூட்டம் அளவில்லாதது என்கிறார்கள்.
அவ்வளவு கூட்டத்தை சமாளிக்க வேண்டும் என்றால் நிறைய இடங்கள் தேவைப்படும். ஆனால் ஒரு மார்க்கெட்டுக்கு நடுவில் கோவிலை வைத்திருப்பதால் அங்கு வரும் பக்தர்கள் நிச்சயமாக சேறு சகதியில்தான் கால் வைத்து கோவிலுக்கு உள்ளே போக வேண்டிய கட்டாயம். அப்படித்தான் அந்தக் கோவிலில் சுற்றுப்புறமும் அமைந்திருக்கிறது.
கோவிலுக்கு மிக அருகாமையில் இருக்கும் அந்த சாலை முழுவதும் வலது, இடது பக்கங்களில் எல்லாம் வீடுகளை கட்டி அதிலும் கொஞ்சம் கொஞ்சம் ஹோட்டலாகவும் மாற்றி வைத்திருக்கிறார்கள்.
நம்முடைய மக்கள் எப்பொழுதும் பிசினஸை நடத்துவதற்கு எப்படி வேண்டுமானாலும் கோல்மால் செய்யலாம் என்று நினைப்பவர்கள்தான்.
இது எல்லாவற்றையும் செய்துவிட்டு முருகனுக்கு 50 ரூபாய் செலவில் இரண்டு விளக்குகளை ற்றி வைத்துவிட்டால் அவர் நம்முடைய பாவத்தை மன்னித்து விடுவார் என்று நம்முடைய மக்கள் அப்படியே நம்புகிறார்கள்...!
அடுத்து வரக் கூடிய ஆண்டுகளில் நிச்சயமாக அந்த கோவில் இன்னும் மிகப் பெரிய அளவுக்கு பிரபலமாகும். பக்தர்கள் ஓடோடி வருவார்கள்.
ஆனால், இப்போது இருக்கின்ற அந்த நிலைமையை நிச்சயமாக மாற்றியே தீர வேண்டும்.
சுற்றி இருக்கின்ற மார்க்கெட்டுகளை நகர்த்தி வேறு இடத்தில் அமைக்க வேண்டும்.
அதேபோல் எதிரில் இருக்கும் வீடுகளை எல்லாம் ஆக்கிரமிப்பாக கருதி அவைகளையும் எடுத்துவிட்டு அந்த இடத்தில் கோவிலுக்கான இடங்களை கட்டி பராமரிக்க வேண்டும்.
இது இருந்தால்தான் அந்தக் கோவில் இன்னமும் அதிக பக்தர்களை இழுக்கும்.
ஆனால் இப்பொழுது தெரியாமல் முதன்முறையாக பார்க்க வருபவர்கள் எல்லாம், இவ்வளவு கேவலமாக ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் இருக்கிறதே என்று விசனப்பட்டு கொண்டே செல்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை மனம் வைத்து இந்த சிறுவாபுரி முருகன் கோவிலை மற்றைய புகழ்பெற்ற கோயில்கள் மாதிரி மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அப்பன் முருகன் எங்களை மன்னிப்பாராக!!!
(கோவிலின் வீடியோ முதல் கமெண்டில் இருக்கிறது)

No comments:
Post a Comment