பிரேமலதா மீடியாக்களுக்கு கொடுத்த பேட்டியில்,
''திமுகவின் நெடு நாளைய கூட்டணி கட்சிகள் எல்லாம் போராடியும், விட்டுக் கொடுத்தும் தொகுதிகளை வாங்கினாங்க.. நீங்க மட்டும் எப்படி 10 தொகுதிகளை சுலபத்தில் வாங்கினீர்கள்?''என்ற கேள்விக்கு
''லேட்டா லேட்டஸ்டாக வந்தது தான் காரணம். நாங்களும் நாங்க கேட்ட தொகுதிகளை விட்டுக் கொடுத்து தான் வாங்கி இருக்கிறோம்…''என்றார்.
திமுகவிடம் உத்தேச விருப்ப பட்டியலாக 25 தொகுதிகளைக் கேட்டுள்ளார், பிரேமலதா. அதில் 10 தொகுதிகளை ’மிக முக்கியம்’ எனக் கூறியுள்ளார். அதைப் பார்த்து அறிவாலயத்தில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
காரணம், சென்ற 2021 தேர்தலில் அமமுகவுடன் 60 தொகுதிகளில் களம் கண்ட தேமுதிக அனைத்திலும் டெபாசிட் இழந்து மொத்தமே 2,00157 ஓட்டுகளே பெற்றது.
தற்போது ’தந்தே ஆக வேண்டும்’ எனக் கேட்கும் ரிஷிவந்தியம், விக்கிரவாண்டி, விருதுநகர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் 2021ல் தேமுக நிற்கவேயில்லை. அமமுக மற்றும் கூட்டணியில் உள்ளவர்களே நின்றுள்ளனர்.
அதிலும், விக்கிரவாண்டியில் தேமுக கூட்டணியுடன் அமமுக பெற்ற வோட்டுகள் மூவாயிரத்து சொச்சம் தான்.
ஆம்பூரில் கூட்டணி கட்சி பெற்ற வாக்குகள் ஆயிரத்து எழு நூற்று சொச்சம் தான்.
''கண்டிப்பாக தந்தாக வேண்டும்'' எனக் கேட்டுள்ள விருகம்பாக்கம் தொகுதியில் அமமுகவுடன் கூட்டணி வைத்து தேமுதிக பெற்ற வாக்குகள் ஆயிரத்து ஐநூற்று சொச்சம் தான்! ஆனால், அத் தொகுதியை வென்ற திமுக பெற்றுள்ள வாக்குகள் 73 ஆயிரத்து சொச்சம். அதுவும் 18,000 சொச்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திமுக.
இது போல, தேமுதிக நிர்பந்தித்து கேட்கும் தொகுதிகள் பலவற்றில் ஆயிரத்து சொச்சம் , இரண்டாயிரத்து சொச்சம் ஓட்டுகள் பெற்றவையே! ஒரு சிலவற்றில் மூவாயிரத்து சொச்சம் பெற்றுள்ளது.
விக்கிரவாண்டியில் தேமுதிக ஆதரவுடன் அமமுக பெற்ற வாக்குகள் வெறும் மூவாயிரத்து சொச்சமே. தற்போது அதை திமுகவின் கோட்டையாக்கி வைத்துள்ளார், தற்போதைய எம்.எல்.ஏவான அன்னியூர் சிவா. அதை ''கண்டிப்பாக தர வேண்டும்'' என்கிறாராம் பிரேமலதா.
பிரேமலதாவே நின்ற விருதாச்சலம் தொகுதியில் மட்டுமே13 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் ''ரொம்ப பிடிவாதம் காட்டாதீங்க. உங்களுக்கு ஏற்கனவே ராஜ்ய சபா சீட்டு வேறு தந்திருக்கிறோம்'' என்று சொல்லப்பட்டுள்ளது.
''அதற்கு என்ன பெரிய ராஜ்ய சபா சீட்டு. அதை வேணும்னா திருப்பி வாங்கிக்கோங்க..''ன்னு ஆத்திரத்தை கட்டியுள்ளார் அம்மணி.
இத்தனைக்கும் திமுக குழுவில் ரொம்பவும் சீனியரான டி.ஆர் பாலு உள்ளிட்ட பலரும் கறார் ஆனவர்கள் தான். அதே சமயம் பெண் என்பதால் கொஞ்சம் கவனமாக பேச வேண்டியுள்ளது. ஆனால், அம்மணியின் அதட்டலாக பேசும் தொனியும், பிடிவாத போக்கும் எல்லோரையுமே 'அப்செட்'டாக்கியுள்ளதாம்.
போன தேர்தலில் தேமுதிக பெற்ற வாக்குகள் சதவிகிதம் 0.43% தான். அதாவது அரை சதவிகிதத்திற்கும் குறைவு. மக்கள் நீதி மையம் பெற்ற வாக்கு சதவிகிதம் 2.62% . அதாவது, தேமுதிகவைவிட ஐந்து மடங்கு அதிக வாக்குகள்! அப்படியிருந்தும் கமலஹாசன் அலட்டிக் கொள்ளவில்லை.
தேர்தல் முடியும் மட்டும் பிரேமலதாவை எப்படி சமாளிப்பது என்பது திமுக கூட்டணியின் தற்போதைய பிரச்சினை என்றால், தேர்தலுக்கு பிறகு, ’’எங்கள் தயவால் தான் திமுக வெற்றி பெற்றது’’ எனப் பேசுவதையும் எதிர்கொண்டே ஆகவேண்டும்.
No comments:
Post a Comment