Saturday, May 16, 2026

செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி இடைaக்கால நிர்வாகியாக அப்பல்லோ மருத்துவ குழும விஜய்குமார் ரெட்டி - நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு தற்காலிக நிர்வாகியாக தொழிலதிபர் விஜயகுமார் ரெட்டி நியமனம்: ஐகோர்ட் உத்தரவு

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், மே 7, 2026 அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின்படி அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார். Written by Abi Sudha M 16 May 2026 

 

சென்னையில் உள்ள புகழ்பெற்ற செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியை நிர்வகித்து வரும் 'குமார ராஜா முத்தையா பாரம்பரிய கலை மற்றும் கைவினைப் பள்ளி' (Kumara Rajah Muthiah School of Traditional Arts and Crafts) என்ற பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக, பிரபல தொழிலதிபர் பி. விஜயகுமார் ரெட்டியை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சங்கத்தின் செயலாளராக இருந்த மீனா முத்தையா கடந்த மே 2, 2026 அன்று காலமானதை அடுத்து இந்த புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி என்ன?

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ஆர். முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா மற்றும் 5 பேர் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், சங்கத்தின் புதிய செயலாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு பொதுக்குழு கூட்டத்தைக் கூட்டுவதற்குப் பதிலாக, சங்கத்தின் உறுப்பினர்களான கே.டி.ஆர். ராஜா கருப்பன் செட்டி மற்றும் சி. சொக்கலிங்கம் ஆகியோர் தன்னிச்சையாக மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், மே 7, 2026 அன்று மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்டுவதற்காக அனுப்பப்பட்ட நோட்டீஸ், சங்கத்தின் விதிமுறைகளின்படி (Bylaws) அனுப்பப்படவில்லை என்ற மனுதாரர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டார்.

"சங்கத்தின் விதிமுறை 22-ன் படி, மேலாண்மைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் செயலாளருக்கு முறைப்படி கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால், செயலாளர் இல்லாத நிலையில், இரு தனிநபர்கள் தன்னிச்சையாக இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்.

விதிமுறைகளின்படி, கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே தெளிவான அறிவிப்பு (Notice) தரப்பட வேண்டும். இது நோட்டீஸ் அச்சிடப்பட்ட தேதியைக் குறிக்காது, மாறாக உறுப்பினர்களுக்கு அது கிடைத்த தேதியிலிருந்து கணக்கிடப்பட வேண்டும். இந்த விதியும் இங்கு பின்பற்றப்படவில்லை.

செயலாளரின் மறைவு மற்றும் பொருளாளரின் ராஜினாமா போன்ற அசாதாரண சூழலில், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு (General Body) மட்டுமே உண்டு. இந்த விவகாரத்தில் விதிமுறைகளை மீறி அவசர அவசரமாகச் செயல்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை" என்று நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து ராஜா கருப்பன் செட்டி மற்றும் சி. சொக்கலிங்கம் ஆகியோர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தை நடத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும், அவர்கள் பள்ளியின் அன்றாட செயல்பாடுகள், நிர்வாகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளில் தலையிடக் கூடாது.

இடைக்கால ஏற்பாடாக, பள்ளி எந்தவிதத் தடையுமின்றி சுமூகமாக இயங்குவதை உறுதிசெய்ய, மேலாண்மைக் குழுவின் தற்போதைய தலைவராக இருக்கும் பி. விஜயகுமார் ரெட்டி, சங்கத்தின் தற்காலிக நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அனுபவமும் அறிவும் சங்கத்தை வழிநடத்தச் சரியானதாக இருக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment