Sunday, June 14, 2026

திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? நெய்வேலி அசோக்

 திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 1: நெய்வேலி அசோக்

_________________________________________
காங்கிரசும், திராவிட இயக்கமும் - மேற்கத்திய ஆய்வாளர் டேவிட் அர்னால்ட்
__________________________________________
இந்திய தேசியவாதம் தமிழ்நாட்டில் எவ்வாறு வேரூன்றியது என்பதைப் புரிந்து கொள்ளாமல், திராவிட இயக்கங்களின் எழுச்சியையோ தப்போது ஏற்பட்ட தேக்கத்தையோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.
சமூக வலைத்தளங்களில் திராவிட இயக்கம் சரியாக செயல்படாதது தான் இந்த தொய்வுக்கு காரணம் என்று நம்புவது ஜமக்காலத்தில் வடிகட்டின முட்டாள்தனத்துக்கு சமம். இந்த தொய்வை முழுமையாக புரிந்து கொள்ள அரசியல் பொருளாதார வரலாற்று பின்னணியை மேல் வாசிப்பு செய்யப்படுவது அவசியம்.
இந்தப் பின்னணியில், பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான டேவிட் அர்னால்ட் ( David Arnold) என்பவரின் எழுத்துக்கள் முக்கிய அரசியல் ஆவணமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டில் இந்திய தேசிய காங்கிரஸ் எவ்வாறு ஒரு “தேசிய விடுதலை இயக்கம்” என்ற முகமூடியுடன் சமூக ஆதிக்கத்தின் புதிய வடிவமாக உருவானது என்பதையும், அதற்கு எதிராக நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் எவ்வாறு எதிர் அரசியலை, ஒரு "பண்பாடாக" உருவாக்கின என்பதையும் மிக நுணுக்கமாக பதிவு செய்கிறது.
டேவிட் ஆர்னால்டின் ஆய்வில் மிக முக்கியமாக வெளிப்படுவது, தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆரம்ப காலத்தில் ஒரு “மக்கள் இயக்கம்” அல்ல என்பதே. அது முதலில் நகர மையங்களில் இருந்த பார்ப்பன நடுத்தர வர்க்கத்தின் அரசியல் கருவியாகவே வளர்ந்தது. வழக்கறிஞர்கள், கல்வியறிவு பெற்ற பார்ப்பனர்கள், செய்தித்தாள் வட்டாரங்கள், ஆங்கிலக் கல்வி பெற்ற நகர அறிவுஜீவிகள் ஆகியோரின் கைகளில் தான் காங்கிரஸ் இருந்தது.
குறிப்பாக மதராஸ் பிரசிடென்சியில் “தேசியம்” என்ற கருத்தே வடஇந்திய-ஆரிய கலாச்சார குறியீடுகளின் மூலம் பரப்பப்பட்டது என அவர் சுட்டிக்காட்டுகிறார். காந்தி, ஹிந்தி, கைத்தறி, ராமாயண அரசியல், இந்து ஆன்மிக மொழி ஆகியவை ஒன்றோடொன்று கலந்த ஒரு அரசியல் மொழியாக காங்கிரஸ் இயங்கியது.
ஆனால் தமிழ்நாட்டின் சமூக அமைப்பு அதனை எளிதாக ஏற்கவில்லை. ஏனெனில் இங்கு ஏற்கனவே பார்ப்பன ஆதிக்கம் நிர்வாகம், கல்வி, நீதித்துறை, அரசு வேலை, மொழி, கலாச்சாரம் ஆகிய துறைகளில் பெரும் அதிருப்தியை உருவாக்கியிருந்தது. அதுவும் ஏதோ சமகாலத்தில் உருவான எதிர்ப்பு அல்ல அதற்கான ஒரு வரலாற்று பின்னணியும் இருக்கிறது. அடுத்த பதிவில் காணலாம்.
இந்தச் சூழலில் தான் 1916ஆம் ஆண்டு நீதிக்கட்சி உருவானது. இந்திய தேசியம் என்று சொல்லப்படும் ஒன்று, உண்மையில் “பார்ப்பன தேசியம்” ஆக மாறி வருகிறது என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து தான் தமிழ்நாட்டில் “இந்தியா” என்ற அரசியல் கருத்துக்கும் “திராவிடம்” என்ற சமூக-அரசியல் எதிர் கருத்துக்கும் இடையிலான மோதல் தொடங்குகிறது.
டேவிட் ஆர்னால்டின் வாசிப்பில், நீதிக்கட்சியின் முக்கியத்துவம் வெறும் தேர்தல் வெற்றிகளில் இல்லை.
அவர்கள் முதன்முறையாக “அரசியல் பிரதிநிதித்துவம் என்பது சமூக பிரதிநிதித்துவத்தோடு தொடர்புடையது” என்ற கேள்வியை எழுப்பினர். காங்கிரஸ் “ஒரே இந்தியர்” பற்றி பேசும்போது, நீதிக்கட்சி “யார் அந்த இந்தியர்?” என்று கேட்டது. இதுவே பின்னர் ஒதுக்கீடு அரசியல், சமூகநீதி அரசியல், பார்ப்பனர் அல்லாதோர் உரிமை அரசியல் ஆகியவற்றின் அடித்தளமாக மாறியது.
ஆனால் நீதிக்கட்சிக்கு ஒரு வரம்பும் இருந்தது.
அது பெரும்பாலும் நில உரிமையாளர்கள், செல்வந்த பார்ப்பனர் அல்லாத மேல்சாதி தலைவர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரின் கட்சியாகவே இருந்தது.
அதனால் அதன் அரசியல் பொதுமக்கள் மனநிலைக்குள் ஆழமாக இறங்கவில்லை.
இந்த இடைவெளியை நிரப்பியவர் தான் தந்தை பெரியார்.
காங்கிரசுக்குள் இருந்தபோது கூட அவர் பார்த்தது, இந்திய தேசியவாதம் சமூக சமத்துவத்தை உருவாக்கப் போவதில்லை என்பதையே. குறிப்பாக குருகுல பிரச்சினை, சாதி உணவுப் பிரிவு, வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரஸ் மறுத்தது போன்ற சம்பவங்கள், காங்கிரஸ் “தேசியம்” என்பது உண்மையில் ஒரு சாதி அமைப்பை மறைக்கும் புதிய மொழி என்பதை அவருக்குப் புரிய வைத்தன.
இதிலிருந்தே சுயமரியாதை இயக்கம் உருவாகிறது. இது வெறும் அரசியல் இயக்கமல்ல; “இந்திய தேசியம்” உருவாக்கிய மன அடிமைத்தனத்திற்கு எதிரான பண்பாட்டு புரட்சி. பெரியார் உருவாக்கிய அந்தப் பண்பாட்டுப் புரட்சியை நாம் கைவிட்டு ஜனநாயகப் புரட்சியின் மேல் நம்பிக்கை வைத்து செயல்பட்டது எத்தகைய சருக்களுக்கு காரணம் என்பதையும் அடுத்தடுத்து கட்டுரைகளில் காணலாம்.
டேவிட் ஆர்னால்டின் நூலில் நேரடியாக இல்லாவிட்டாலும், அதன் அரசியல் பின்னணியை வைத்து பார்க்கும்போது சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் இந்திய தேசியத்தின் ஒற்றை அடையாள அரசியலை உடைத்த மிகப் பெரிய திருப்புமுனை என்று புரிகிறது. ஏனெனில் காங்கிரஸ் “நாடு” பற்றி பேசிக்கொண்டிருந்த போது, பெரியார் “மனிதன்” பற்றி பேசினார். காங்கிரஸ் “சுதந்திரம்” பற்றி பேசும்போது, அவர் “சுயமரியாதை இல்லாத சுதந்திரம் யாருக்காக?” என்று கேட்டார், அதனை சமூக உளவியலாக சமூக பண்பாடாக மாற்றியமைத்துக் கொண்டிருந்தார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் அரசியல் மையம் மாறியது. தேசிய விடுதலைக்கு பதிலாக சமூக விடுதலை, இந்து கலாச்சாரத்திற்கு பதிலாக திராவிட அடையாளம், ஹிந்திக்கு பதிலாக தமிழ், வர்ணாசிரமத்திற்கு பதிலாக பகுத்தறிவு ஆகியவை அரசியல் உரையாடலின் மையமாக மாறின. இதுவே பின்னர் திராவிட இயக்கங்களுக்கு வெறும் தேர்தல் வெற்றியை அல்ல, ஒரு “பண்பாட்டு மாற்றத்தின்” அடையாளத்தை வழங்கியது.
1937ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைத்து கட்டாய ஹிந்தியை கொண்டு வந்தபோது, இந்த முரண்பாடு முழுமையான அரசியல் வெடிப்பாக மாறியது. இந்திய தேசியம் தமிழ்நாட்டில் மொழி மற்றும் கலாச்சார ஆதிக்கமாக வெளிப்படுகிறது என்ற வாதத்திற்கு இது உயிரூட்டியது. அதனால் தான் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் வெறும் மொழிப் போராட்டமாக இல்லாமல், “யார் இந்த நாட்டின் உரிமையாளர்?” என்ற அடிப்படை அரசியல் கேள்வியாக மாறியது.
இந்த வரலாற்றை மீண்டும் வாசிப்பது இன்று மிகவும் அவசியம். ஏனெனில் திராவிட கட்சிகளின் தற்போதைய வீழ்ச்சி பற்றி பேசும் போது, அவர்கள் ஒருகாலத்தில் எந்த சமூக முரண்பாட்டிலிருந்து உருவாகினர் என்பதையே பலர் மறந்து விடுகின்றனர்.
நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் இந்திய தேசியத்தை வெறும் “வடஇந்திய அரசியல்” என்று மட்டுமே எதிர்க்கவில்லை; அது சாதி, மதம், மொழி, அதிகாரம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்த ஆதிக்க அமைப்பு என்று புரிந்து கொண்டன. அதனை எதிர்க்க ஜனநாயகம் என்பதை ஒரு குறைந்தபட்ச கருவியாக மட்டுமே பெரியாரும் ஆரம்ப கால திராவிட இயக்கமும் பார்த்ததே ஒழிய,
ஜனநாயகமே முழுமையான விடுதலை அல்லது ஓட்டு அரசியல் மூலம் பண்பாட்டுக் கூறுகளை மாற்றியமைக்கலாம் என்பதையும் அவை கருதவில்லை. இன்றைய போதாமையானது, இந்த கருத்தாகங்கள் விவாதிக்கப்படாமல் முழுமையாக ஜனநாயகத் தன்மையே விடுதலை என்கிற போக்கில் போவது தான் மலட்டுத்தன்மை பிடித்து கொண்டிருக்கும் திராவிட இயக்கத்தின் சாபமாக மாறி உள்ளது.
தொடரும் ..!
திராவிடர் இயக்கம், மாற்று பண்பாடு. - அமெரிக்க ஆய்வாளர் ராபர்ட். எல். ஹார்டுகிரேவ்:
__________________________________________
ராபர்ட். எல். ஹார்ட்கிரேவ் (Robert L. Hardgrave) என்கிற அமெரிக்க நாட்டு ஆய்வாளர், திராவிட இயக்கம் பற்றிய தனது ஆய்வில் மிக தெளிவாகக் கூறுவது, திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய சக்தி அதன் தேர்தல் அரசியலில் அல்ல; அது உருவாக்கிய “பண்பாட்டு அரசியலில்” தான் என்பதே.
அவரது பார்வையில், தமிழ்நாட்டில் நீண்ட காலமாக இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஆரிய-பார்ப்பன பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு சமூக மறுசீரமைப்பு முயற்சியே திராவிட இயக்கம் என்று வரையறை செய்கிறார்.
Hardgrave சுட்டிக்காட்டுவது, இந்திய தேசியம் தமிழ்நாட்டில் வெறும் அரசியல் வடிவில் மட்டும் வரவில்லை; அது மொழி, மதம், சடங்கு, புராணம், கல்வி, பெயர்கள், உடை, திருமணம், கடவுள், பெண்களின் நிலை போன்ற அன்றாட வாழ்வின் எல்லா பகுதிகளிலும் “இந்திய-ஆரிய” கலாச்சாரத்தை பொதுவான ஒன்றாக நிறுவ முயன்றது.
இந்த நிலையில் தான் திராவிட இயக்கம் “தமிழர் யார்?”, “எந்த கலாச்சாரம் நமக்கு திணிக்கப்படுகிறது?” என்ற அடிப்படை கேள்விகளை எழுப்பியது.
அவரது வாசிப்பில், சுயமரியாதை இயக்கத்தின் முக்கியத்துவம் மனிதர்களின் மனநிலையை மாற்றியதில் தான். திருமணத்தில் பார்ப்பனர் தேவையில்லை, சாதி பெயர் தேவையில்லை, இந்து சடங்குகள் தேவையில்லை, பெண்களுக்கு சம உரிமை வேண்டும், தமிழ் மொழியே அடையாளம், பகுத்தறிவே வழிகாட்டி — இவ்வாறு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் அரசியலாக்கியது திராவிட இயக்கம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
அதனால் தான் இது வெறும் “anti-Brahmin movement” - பார்ப்பன எதிர்ப்பு அரசியல் மட்டும் அல்ல; மாறாக அது “anti-hegemony cultural revolution” சமூக உளவியல் மேலாண்மைக்கு எதிரான ஒரு இயக்கம் என Hardgrave அணுகுகிறார்.
குறிப்பாக, திராவிட இயக்கம் தமிழர்களுக்கு ஒரு புதிய வரலாற்று நினைவகத்தை உருவாக்கியது என்பதே.
ராமாயண மைய இந்திய வரலாற்றுக்கு எதிராக, சங்க இலக்கியம், திராவிட நாகரிகம், தமிழர் பெருமை, இராவணன் போன்ற எதிர் அடையாளங்களை முன்வைத்து, “இந்தியா” என்ற ஒற்றை அடையாளத்திலிருந்து தமிழர்களை வேறுபட்ட சமூகமாக சிந்திக்க வைத்தது.
அதனால் தான் Hardgrave-ன் பார்வையில், திராவிட இயக்கத்தின் உண்மையான வெற்றி ஆட்சியை பிடித்ததில் இல்லை; தமிழ்நாட்டின் பண்பாட்டு அளவுகோலையே மாற்றியதில் இருக்கிறது.
ஒரு காலத்தில் இந்து-சமஸ்கிருத அடையாளங்கள் “மேம்பட்டவை” என கருதப்பட்ட சூழலை உடைத்து, தமிழ், திராவிடம், பகுத்தறிவு, சமூகநீதி ஆகியவற்றை பொதுமக்களின் அன்றாட அரசியல் மொழியாக மாற்றியது தான் அதன் வரலாற்றுச் சாதனை என்று அவர் புரிந்து கொள்கிறார்.
ராபர்ட் ஹார்டுகிரேவ் தனது ஆய்வில் முன் வைப்பதும், டேவிட் அர்னால்டு பற்றி நான் ஏற்கனவே எழுதிய முதல் பாகத்திலும், மிகத் தெளிவாக நமக்கு தென்படுவது திராவிட இயக்கம் ஒரு மாற்றுப் பண்பாட்டு இயக்கம் என்பது தான்.
ஏதோ ஒரு வகையில் 90களில் ஆரம்ப காலகட்டம் வரை அது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி மெல்ல மெல்ல நடைபெற்றது. ஆனால் அது முழுமையாக நடந்ததா என்றால் பெரியாருக்கு பின் அது முற்றிலும் தடைப்பட்டு நின்றது என்று கூறவேண்டும்.
அது ஏன் அப்படி நடந்தது, அந்த காலகட்டத்தில் என்ன நடந்தது, பேரறிஞர் அண்ணா அவர்கள் பெரியாரிடம் இருந்து பிரிந்து திமுகவை உருவாக்கி இருந்தாலும் அவர் காலத்தில் பண்பாட்டு விழுமியம் எவ்வாறு நடைபெற்றது, அவருக்கு பின்னால் என்ன ஆனது, அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கம் ஏன் தொய்வதைந்தது போன்ற கூறுகளை அடுத்த பாகத்தில் வேறு ஒரு மேற்கத்திய அறிஞரின் ஆய்வு மூலம் காணலாம்
தொடரும் ..!

திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 3:
_________________________________________
மாற்று பண்பாடும் திராவிட இயக்கமும் - அமெரிக்க ஆய்வாளர்கள் மில்டன் சிங்கர் மற்றும் சார்லஸ் ராயர்சன்:
__________________________________________
மில்டன் சிங்கர் (Milton Singer) என்ற அமெரிக்கா நாட்டு ஆய்வாளர் இந்திய சமுதாயத்தை ஆய்வு செய்தபோது, இந்தியா என்பது பல அடுக்குகள் கொண்ட ஒரு “நாகரிக ஒழுங்கு” (Civilizational Order) என்று வரையறை செய்தார். குறிப்பாக அவர் முன்வைத்த “பெரும் மரபு” (Great Tradition) மற்றும் “சிறு மரபு” (Little Tradition) என்ற கருத்துகள், இந்திய சமூகம் எப்படி இயங்குகிறது என்பதை புரிந்துகொள்ள முக்கியமான கருவிகளாக மாறின.
ஆனால் இந்த அமைப்பை (Framework) தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றோடு இணைத்து வாசிக்கும்போது தான் திராவிட இயக்கத்தின் உண்மையான பண்பாட்டு அரசியல் நமக்குப் புரிகிறது.
அந்த இணைப்பை மிகவும் தெளிவாக காட்டியவர் சார்லஸ் ராயர்சன் (Charles Ryerson) என்ற அமெரிக்க நாட்டு ஆய்வாளர்.
இன்று காண்பதுபோல திராவிட இயக்கம் என்பது ஏதோ மொழி செழுமை இயக்கம் என்பதை தாண்டி, ஒரு பெரிய பண்பாட்டு மறுசீரமைப்பாக (Cultural Reconstruction) மாறியது என்பதை விளக்குகிறது.
மில்டன்சிங்கர்-ன் பார்வையில், இந்திய நாகரிகத்தின் “பெரும் மரபு” (Great Tradition) என்பது சமஸ்கிருதம், வேதம், பிராமணிய சாஸ்திரங்கள், அகில இந்திய இந்து பண்பாட்டு அதிகாரம் போன்றவற்றின் உலகம். அதற்கு எதிரே “சிறு மரபு” (Little Tradition) என்பது கிராம மக்கள், உள்ளூர் தெய்வங்கள், நாட்டுப்புற வழிபாடுகள், வட்டார மொழிகள், மக்கள் கலைகள் போன்றவற்றின் உலகம். ஆனால் சிங்கர் இதை ஒரு நேரடி மோதலாக பார்க்கவில்லை.
இந்திய சமூகம் இந்த இரு உலகங்களையும் இணைத்து கொண்டு நகர்கிறது என்றார். ஆரம்ப கால சென்னை நகர தொழிலதிபர்கள் நவீன முதலாளித்துவத்தை (Modern Capitalism) ஏற்றுக்கொண்டாலும், சாதி மற்றும் மத மரபுகளை கைவிடவில்லை என்ற அவரது கவனிப்பு (Observation) இதன் ஒரு எடுத்துக்காட்டு.
ஆனால் தமிழ்நாட்டில் நடந்த மாற்றம் சிங்கர் கூறியதைவிட மிகவும் அரசியல் தன்மை கொண்டது.
ரயர்சன் இந்த வாதத்திற்கு, சங்க கால கூறுகளில், பக்தி இலக்கிய கூறுகளிலும் இருந்த குறைந்தபட்ச பார்ப்பன எதிர்ப்பு என்பதன் மூலம் “தமிழ் மறுமலர்ச்சி” (Tamil Renaissance) என்பது வெறும் இலக்கிய மறுமலர்ச்சி அல்ல; அது வடஇந்திய-பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு பிராந்திய எதிர்ப்பு (Regional Resistance) என்று வரையறை செய்தார்.
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், சைவ சித்தாந்தம், உள்ளூர் தெய்வங்கள், சங்க கால வரலாறு போன்றவை மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. Robert Caldwell போன்ற மொழியியலாளர்கள் திராவிட மொழிகளை (Dravidian Languages) ஆரிய மொழிகளிலிருந்து தனித்துவமான குடும்பமாக பிரித்துக் காட்டியதும், தமிழ் ஒரு “பழமையான நாகரிக மொழி” என்ற உணர்வை உருவாக்கியது. இதுவே பின்னர் “தமிழர்” என்ற அரசியல் அடையாளமாக மாறியது.
இந்த இடத்தில் திராவிட இயக்கம் ( ஆரம்ப காலம் - நீதி கட்சி) Singer கூறிய “சிறு மரபை” (Little Tradition) அரசியல் சக்தியாக மாற்றியது. கிராம வழிபாடுகள், முருகன், அம்மன், சைவ சித்தாந்தம், தமிழ் தாய்மை, உள்ளூர் வரலாறு ஆகியவை அனைத்தும் “பிராமணரல்லாத அடையாளம்” (Non-Brahmin Identity) உடன் இணைக்கப்பட்டன. இதனால் திராவிட இயக்கம் வெறும் தேர்தல் கட்சியாக அல்லாமல், ஒரு மாற்று பண்பாட்டு அமைப்பாக (Alternative Cultural System) செயல்பட ஆரம்பித்தது.
இன்னும் சொல்லபோனால், இந்திய பெரிய மரபுக்குள் சிக்குண்ட நிலத்தில், இந்த மரபு சிறிய மரபாக இருந்தாலும் அது அந்த பெரிய மரப்புக்கு மாற்று மரபாக மட்டுமல்லாமல் தன்னைத்தானே பெரிய மரபாகவும் மாற்றிக் கொண்டிருந்தது.
Ryerson-ன் முக்கியமான கவனிப்பு என்னவென்றால், திராவிட இயக்கத்தை “நாத்திக இயக்கம்” (Atheist Movement) என்று மட்டும் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான். பெரியார் பார்ப்பனிய இந்துத்துவத்தை எதிர்த்தாலும், கோயில் நுழைவு போராட்டம் போன்ற உரிமைகளை பெற்றுத்தரும் இடத்தில் அந்த உணர்வுகளையும் மதித்து வந்தார். ராமனுக்கு பதிலாக ராவணன், கம்பனுக்கு பதிலாக கபிலர், மனுதர்மத்திற்கு பதிலாக திருக்குறள் என்ற மாற்றுத்தலங்களையும் அது மக்களிடம் கொண்டு சென்றது.
இதுவே பின்னர் திமுக போன்ற இயக்கங்கள் செய்த முக்கியமான அரசியல் மாற்றமாகும். அவர்கள் இந்திய தேசியவாதம் போல “ஒரே மதம், ஒரே மொழி” என்ற அடையாளத்தை உருவாக்கவில்லை. அதற்கு பதிலாக “ஒரே தமிழர் உணர்வு” என்ற பண்பாட்டு அரசியலை உருவாக்கினர். அந்த உணர்வு வெறும் மொழி உணர்வு அல்ல; அது சாதி அரசியல் (Caste Politics), பிராந்திய பெருமை (Regional Pride), திரைப்பட பண்பாடு (Cinema Culture), மக்கள் மதம், மொழி காதல் ஆகியவற்றின் கலவையாக இருந்தது.
இதில் திரைப்படம் மிகப்பெரிய பங்கு வகித்தது. Singer கூறிய “பண்பாட்டு நிகழ்த்தல்” (Cultural Performance) என்ற கருத்து இங்கே மிகவும் பொருந்துகிறது. அவர் இந்திய நாகரிகம் புத்தகங்களில் இல்லை; நிகழ்த்தல்களில் (Performances) வாழ்கிறது என்றார். அதேபோல் திராவிட இயக்கமும் தன்னை:
பொதுக்கூட்டங்கள்,
தெரு நாடகங்கள்,
திரைப்பட வசனங்கள்,
பாடல்கள்,
இதழ்கள்,
திரைப்பட கதாநாயகர்கள்,
தமிழ் விழாக்கள்
மூலம் மீண்டும் மீண்டும் மக்கள் மனதில் உருவாக்கியது.
அதனால் தான் பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் வெறும் அரசியல்வாதிகள் அல்ல; “பண்பாட்டு திரைக்கதை எழுத்தாளர்கள்” (Cultural Script Writers) ஆக இருந்தனர். அவர்கள் எழுதிய வசனங்கள், அரசியல் பேச்சுகளாக மட்டுமல்லாமல், புதிய தமிழ் மனிதரை உருவாக்கும் பண்பாட்டு கருவிகளாக செயல்பட்டன.
Ryerson-ன் ஆய்வின் மிக முக்கியமான புள்ளி, திராவிட இயக்கம் “மதம் எதிர் நாத்திகம்” (Religion vs Atheism) என்ற எளிய இருமை எதிர்வில் (Binary) இயங்கவில்லை என்பதுதான். அது “பார்ப்பனிய இந்துமதத்தை” (Brahminical Hinduism) எதிர்த்தது; ஆனால் மக்கள் மத உலகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை.
இதனால் தான் தமிழ்நாட்டில் பகுத்தறிவுவாதம் (Rationalism) மற்றும் கோவில் பண்பாடு ஒரே நேரத்தில் இணைந்து இயங்க முடிந்தது. இது இந்தியாவின் பிற மாநிலங்களில் அரிதான அரசியல் வடிவம்.
Singer இந்திய நாகரிகத்தை ஒரு ஒருங்கிணைந்த பண்பாட்டு அமைப்பாக (Unified Cultural System) பார்த்தார். ஆனால் Ryerson காட்டுவது, அந்த நாகரிகத்துக்குள் அதிகார மோதல் (Power Struggle) இருந்தது என்பதுதான். அகில இந்திய சமஸ்கிருத அடையாளத்திற்கு (Pan-Indian Sanskritic Identity) எதிராக தமிழ் பிராந்திய அடையாளம் (Tamil Regional Identity) உருவானது. அதாவது திராவிட இயக்கம் என்பது வெறும் சமூகநீதி இயக்கம் மட்டும் அல்ல; அது ஒரு “மாற்று பண்பாட்டு ஆதிக்க எதிர்ப்பு” (Counter-Hegemony).
இந்த ஆதிக்க எதிர்ப்பு எப்படி வேலை செய்தது என்றால், இந்திய தேசியவாதம் “இந்தி, இந்து, இந்தியா” என்ற ஒருங்கிணைந்த அடையாளத்தை உருவாக்க முயன்றபோது, திராவிட இயக்கம் “தமிழ், திராவிடம், சமூகநீதி” என்ற மாற்று அடையாளத்தை உருவாக்கியது. அதற்காக அது மக்கள் கலாசாரத்தை அரசியலாக்கியது. மொழியை உணர்ச்சியாக மாற்றியது. சாதி எதிர்ப்பை பண்பாட்டு எதிர்ப்பாக மாற்றியது. மத எதிர்ப்பை பிராமணிய எதிர்ப்பாக மாற்றியது. திரைப்படத்தை அரசியல் பள்ளியாக மாற்றியது.
ஆனால் இன்றைய சூழலில் திராவிட இயக்கம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், அது ஒருகாலத்தில் உருவாக்கிய அந்த மாற்று பண்பாட்டு உலகத்தை (Alternative Cultural World) தொடர்ந்து புதுப்பிக்க தவறிவிட்டது என்பதுதான். முன்னர் திராவிட இயக்கம் மக்கள் மனங்களில் ஒரு “உணர்ச்சி நாகரிகத்தை” (Emotional Civilization) உருவாக்கியது. இன்று அது பெரும்பாலும் நிர்வாக அரசியல் (Administrative Politics), தேர்தல் கணக்கு (Electoral Arithmetic), நலத்திட்ட ஆட்சி (Welfare Governance) ஆகியவற்றுக்குள் சுருங்கி வருகிறது.
ஒருகாலத்தில் திராவிட இயக்கம் உருவாக்கிய:
மொழி உணர்வு,
சமூகநீதி கோபம்,
சாதி எதிர்ப்பு,
வடஇந்திய ஆதிக்க எதிர்ப்பு,
பண்பாட்டு தன்னம்பிக்கை
போன்றவை இன்று பல இடங்களில் வெறும் நினைவு அரசியலாக (Memory Politics) மட்டுமே மாறி வருகின்றன. புதிய தலைமுறையிடம் அந்த அரசியல் “வாழும் பண்பாடு” (Living Culture) ஆக இல்லை; “பழைய வரலாறு” ஆக மட்டுமே சென்று சேர்கிறது.
அதனால் இன்று திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி என்பது வெறும் வாக்கு வீழ்ச்சி அல்ல; அது ஒரு “பண்பாட்டு இடைவெளி” (Cultural Disconnect). ஒருகாலத்தில் மக்கள் வாழ்வின் மொழியாக இருந்த இயக்கம், இன்று பல இடங்களில் வெறும் கட்சி அமைப்பாக மட்டுமே தெரிகிறது. இதுவே அதன் மிகப்பெரிய சவாலும், அதேசமயம் அதன் எதிர்காலத்தை தீர்மானிக்கும் கேள்வியும் ஆகும்.
இந்த கோணத்தை புரிந்து கொள்ளாமல் சோசியல் மீடியாவில் தான் நாம் சரிந்து கொண்டிருக்கிறோம் என்கின்ற மொன்மையான வாதம் எல்லாம் சிறுபிள்ளை வாதம் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்? !
தொடரும் ..!
திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 4:
_________________________________________
பெரியார், அண்ணா, கலைஞர் காலக்கட்டம்- அமெரிக்க ஆய்வாளர்கள் சார்லஸ் ராயர்சன்:
__________________________________________
சென்ற பாகத்தில் கண்ட அதே சார்லஸ் ராயர்சன் அவர்களின் கூற்றுகளை மேலும் காணும்போது,
பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரை தமிழ்நாட்டின் பண்பாட்டு அரசியலை (Cultural Politics) மாற்றிய வெவ்வேறு வரலாற்று கட்டங்களின் பிரதிநிதிகள் என்று அணுகுகிறார்.
அதனால் தான் அவர் பெரியாரை “தீவிர சமுக சமதர்ம கட்டமைப்பாளர்” (Advocate of Radical Socialism), அண்ணாதுரையை “மரபு தேசியவாதத்தின் நாயகன்” (Hero of Romantic Nationalism), கலைஞரை “மீளெழும் பிராந்தியவாதத்தின் தீரர்” (Champion of Resurgent Regionalism) என்றும் விவரிக்கிறார்.
இந்த தலைப்புகளுக்குள் திராவிட இயக்கத்தின் முழு அரசியல் பரிணாமமும் மறைந்து கிடக்கிறது.
பெரியாரின் அரசியல் அடிப்படையில் உளுத்துபோன பார்ப்பன மேலாண்மை சமூக உடைப்பில் (Social Rupture) இருந்தது. அவர் இந்து மதம், சாதி, பார்ப்பன பணியா, ஆண் ஆதிக்கம், சமஸ்கிருத ஆதிக்கம் ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் சவாலிட்டார். அதனால் Ryerson அவரை “தீவிர சமூக சமதர்ம கட்டமைப்பாளர்” என்று அழைக்கிறார். பெரியாரின் அரசியல் என்பது ஏற்கனவே இருந்த சமூக கட்டமைப்பையே உடைக்க முயன்றது மட்டுமல்ல, அதற்கு மாற்றாக " மானமும் அறிவும் கொண்டு ஒரு சமூகத்தை" உருவாக முயன்ற ஒரு புரட்சிகர பண்பாட்டு தாக்குதல்.
அண்ணா வந்தபோது, திராவிட அரசியல் தனது மொழியை மாற்றிக்கொண்டது.
பெரியாரின் கோப அரசியல் (Politics of Anger) மக்கள் உணர்ச்சி அரசியலாக (Politics of Emotion) மாறியது.
அதனால் தான் Ryerson அவரை “மரபு தேசியவாதத்தின் நாயகன்” என்று கூறுகிறார்.
அண்ணா நேரடி சமூக உடைப்பை விட, “தமிழர் யார்?” என்ற உணர்ச்சி அடையாளத்தை, பண்டைய தமிழ் இலக்கிய தன்மையுடன் கட்டமைத்தார். தமிழ், திராவிடம், மொழி, பண்பாடு, இனப்பெருமை ஆகியவற்றை மக்கள் மனதில் ஒரு காதல் உணர்வாக மாற்றினார். சினிமா, மேடை நாடகம், உரைநடை, பொதுக்கூட்டங்கள் மூலம் திராவிட இயக்கம் முதல் முறையாக ஒரு வெகுஜன பண்பாட்டு இயக்கமாக ( popular cultural movement)மாறியது.
கலைஞர் வந்தபோது, அந்த உணர்ச்சி அரசியல் நிர்வாக அரசியலாக (Administrative Politics) மாற ஆரம்பித்தது.
ஆனால் அதே நேரத்தில் அவர் திராவிட இயக்கத்தை மாநில அடையாள அரசியலாக (Regional Identity Politics) உறுதிப்படுத்தினார்.
அதனால் Ryerson அவரை “மீளெழும் பிராந்தியவாதத்தின் தீரர்” என்று குறிப்பிடுகிறார்.
கலைஞர் காலத்தில் தமிழ் அடையாளம் வெறும் எதிர்ப்பு மொழியாக இல்லாமல் ஆட்சி மொழியாக மாறியது. கல்வி, திரைப்படம், ஊடகம், இலக்கியம், அரசு விழாக்கள், நினைவுச்சின்னங்கள் ஆகிய அனைத்திலும் “தமிழ்நாடு” என்ற பண்பாட்டு உணர்வு கட்டமைக்கப்பட்டது.
இந்த மூன்று கட்டங்களையும் கூறி “சிறு மரபின் அரசியல் எழுச்சி” (Political Rise of Little Tradition) என்ற பார்வையில் பார்க்கலாம். பெரியார் பார்ப்பன “பெரும் மரபை” (Great Tradition) தாக்கினார். அண்ணா மக்கள் பண்பாட்டை அரசியல் மொழியாக மாற்றினார். கலைஞர் அந்த பண்பாட்டை அரசு அமைப்புக்குள் கொண்டு வந்தார்.
ஆனால் இங்கேயே திராவிட இயக்கத்தின் தற்போதைய சிக்கலும் தொடங்குகிறது.
ஒருகாலத்தில் திராவிட இயக்கம் மக்கள் மனங்களில் ஒரு புதிய பண்பாட்டு உலகத்தை உருவாக்கியது. அது வெறும் கட்சி அரசியல் அல்ல; வாழ்வியல் (Way of Life), ஒரு வாழும் பண்பாட்டு அரசியல் (Living Cultural Politics) ஆக இருந்தது.
ஆனால் இன்று அந்த இயக்கம் பெரும்பாலும் நிர்வாகம், தேர்தல், கூட்டணி, நலத்திட்டம் ஆகியவற்றுக்குள் சுருங்கியுள்ளது. பெரியாரின் சமூக உடைப்பு இல்லை. அண்ணாவின் உணர்ச்சி மொழி இல்லை. கலைஞரின் பண்பாட்டு கட்டமைப்பு அரசியல் இல்லை. அதன் விளைவாக, திராவிட இயக்கம் இன்று “மக்கள் பண்பாடு” (Popular Culture) உருவாக்கும் சக்தியை மெதுவாக இழந்து வருகிறது.
அதனால் இன்று திராவிட இயக்கத்தின் வீழ்ச்சி என்பது வெறும் வாக்கு வீழ்ச்சி அல்ல; அது ஒரு பண்பாட்டு தொடர்ச்சி முறிவு (Break in Cultural Continuity). ஒருகாலத்தில் மக்கள் வாழ்வின் மொழியாக இருந்த இயக்கம், இன்று பல இடங்களில் வெறும் தேர்தல் இயந்திரமாக மட்டுமே தோன்ற ஆரம்பித்துள்ளது.
இன்னும் கொஞ்சம் பகிரங்கமாக சொல்ல வேணுமானால், திராவிடம் எனும் பிறப்புறுப்பு மலடு தன்மையாக மாறியுள்ளது என்ற கசப்பான உண்மையை உணர வேண்டியுள்ளது !!
தொடரும் ..!
திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 5:
_________________________________________
1991 பொருளாதார தாராளமயவாதம்- திராவிட இயக்கத்தின் முதல் தொய்வு அமெரிக்க ஆய்வாளர் சார்லஸ் அடியா நிமிஷ்:
__________________________________________
திராவிட இயக்கம் ஒரு மாற்று பண்பாட்டு இயக்கமாக (Cultural Movement) உருவாகி அதன் ஊடாக பின்னர் அரசியல் இயக்கமாக (Political Movement) வளர்ந்து; அதன் பிறகு ஒரு ஆட்சியமைப்பாக (Governing System) மாறியது என்பதையும், அதன் காலப்போக்கில் அது சில தொய்வுகளை கண்டது என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம்.
1990-1991 ஆம் காலகட்டத்தில் ஏற்பட்ட உலகமயவாதம், தாராளமயவாதம் போன்றவற்றை திராவிட இயக்கம் சரியாக கையாளவில்லை அல்லது கையாளும் சூழல்களை அது இழந்து விட்டது.
அந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள Nimish Adhia-வின் கருத்தியல் மாற்றம் (Ideological Change) குறித்த ஆய்வு அவசியமாகிறது. இவர் இந்திய வம்சாவளியை சார்ந்த அமெரிக்கா அவர். அமெரிக்க நாட்டின் மான் ஹாட்டன் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அரசியல் சார்ந்த பேராசிரியராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Milton Singer இந்திய சமுதாயத்தை “பெரும் மரபு” (Great Tradition) மற்றும் “சிறு மரபு” (Little Tradition) என்ற இரண்டு பண்பாட்டு உலகங்களாகப் பார்த்தார். Charles Ryerson-ன் ஆய்வு காட்டுவது, தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் இந்த “சிறு மரபை” அரசியல் சக்தியாக மாற்றியதுதான் அதன் மிகப்பெரிய வெற்றி என்பதாகும்.
இந்த முழு செயல்முறையிலும் சினிமா, நாடகம், பொதுக்கூட்டம், இதழ்கள், இலக்கியம் ஆகியவை முக்கியமான கருவிகளாக இருந்தன. ரயர்சன் கவனித்தது போல, திராவிட இயக்கம் முதலில் மக்களின் வாக்குகளை வெல்லவில்லை; மக்களின் கற்பனையை (Imagination) வென்றது. அரசியல் அதிகாரம் பின்னர் தான் வந்தது.
இங்குதான் Nimish Adhia-வின் ஆய்வு முக்கியத்துவம் பெறுகிறது.
நிமிஷ், இந்தியாவின் 1991 பொருளாதார தாராளமயமாக்கல் (Economic Liberalization) வெறும் பொருளாதார நெருக்கடியின் விளைவு அல்ல என்று வாதிடுகிறார்.
அதற்கு முன்பே இந்திய சமூகத்தின் கருத்தியல் உலகம் மாறிவிட்டது என்கிறார். இந்த மாற்றத்தை நிரூபிக்க அவர் பொருளாதார புள்ளிவிவரங்களை அல்ல, திரைப்படங்களை ஆய்வு செய்கிறார்.
1950, 1960, 1970களின் இந்திய திரைப்படங்களில் பணக்கார வணிகர் பெரும்பாலும் வில்லனாகவே சித்தரிக்கப்பட்டார். தொழிலாளி, விவசாயி, தியாகி, சமூக நலனுக்காக போராடுபவர் என்பவர் சாமானிய மனிதனாக இருப்பார், அவரை கதாநாயகன்.
லாபம் (Profit) சந்தேகத்திற்குரியது. செல்வம் (Wealth) ஒழுக்க ரீதியாக உயர்ந்த மதிப்பு அல்ல. தனிநபர் வெற்றியை விட சமூக நீதி (Social Justice) முக்கியமானது என்று ராபின் ஹுட் போல காட்சியளிப்பார்.
ஆனால் 1980களில் திரைப்படங்கள் மாற ஆரம்பிக்கின்றன. குறிப்பாக பாலிவுட் தரத்தில் வெற்றிகரமான தொழில்முனைவோர் (Entrepreneur), நகர வாழ்க்கையை நோக்கி முன்னேறும் இளைஞன், தனிப்பட்ட கனவுகளை அடைய விரும்பும் மனிதன் ஆகியோர் கதாநாயகர்களாக மாறுகின்றனர்.
சமூக மாற்றத்தை விட தனிநபர் முன்னேற்றம் (Individual Mobility) முக்கியமானதாகிறது. தியாகத்தை விட ஆசை (Desire), சமத்துவத்தை விட வெற்றி (Success), கூட்டுக் கனவை விட தனிப்பட்ட கனவு மேலோங்கத் தொடங்குகிறது.
நிமிஷ்-ன் மிக முக்கியமான வாதம் இதுதான்: பொருளாதார கொள்கைகள் முதலில் மாறவில்லை; மக்களின் கற்பனை முதலில் மாறியது. திரைப்படங்கள் அந்த மாற்றத்தின் அறிகுறிகளாக இருந்தன.
இந்த கோணத்தில் தமிழ்நாட்டைப் பார்த்தால், திராவிட இயக்கத்தின் மாற்றமும் புதிய அர்த்தம் பெறுகிறது.
1950கள் முதல் 1970கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் திராவிட இயக்கத்தின் அரசியல் நேரடியாக காணப்பட்டது. பராசக்தி, வேலைக்காரி, மனோகரா போன்ற படங்களில் கதாநாயகன் தனக்காக போராடவில்லை; சமூக அநீதிக்கு எதிராக போராடினான். சாதி, மதம், ஏழ்மை, சுரண்டல் ஆகியவை கதையின் மையமாக இருந்தன. சினிமா என்பது பொழுதுபோக்கு அல்ல; அது ஒரு கருத்தியல் பள்ளி.
அந்த காலத்தில் திராவிட இயக்கம் மக்களிடம் ஒரு கேள்வியை எழுப்பியது: “நீ ஏன் அடக்கப்படுகிறாய்?” என்ற கேள்வி. அதுதான் அதன் அரசியல் ஆற்றலின் மூலாதாரம்.
ஆனால் 1980களின் இறுதியிலும், குறிப்பாக 1990களுக்குப் பிறகும், தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகன் மாற ஆரம்பித்தான். கதாநாயகன் வழிபாடு மட்டுமல்லாமல் சாதியம் சார்ந்த பெயர்களில் படங்கள் வர ஆரம்பித்தனர். வழக்கொழிந்து போன கொங்கு பகுதி ஜமீன்தார், நில கிழார்கள் போன்றவர்கள் நீதிமான்களாக சித்தரிக்கப்பட்டனர்.
ரஜினி கமல் போன்றவர்கள் திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஏழையாகவும் பாதி படத்திற்கு மேல் பணக்காரராக மாறி எதிரிகளை தொம்சம் செய்வது போன்ற படங்கள், அரசியல் தரத்தில் பேசப்பட்ட சுயமரியாதை சமதர்ம கொள்கைகளுக்கு நீர் மாறாக அந்த தலைமுறை இளைஞர்களை தள்ளியது.
இதுவே நிமிஷ் கூறும் கருத்தியல் மாற்றம் தமிழ்நாட்டில் எடுத்த வடிவமாக பார்க்கப்படலாம்.
ஒருகாலத்தில் திராவிட இயக்கம் மக்களின் கற்பனையை சமூகநீதியை நோக்கி திருப்பியது. ஆனால் 1990களுக்குப் பிறகு அதே மக்களின் கற்பனை பொருளாதார முன்னேற்றம், நுகர்வு (Consumption), நடுத்தர வர்க்க வாழ்க்கை (Middle-Class Lifestyle), தனிநபர் வெற்றி ஆகியவற்றை நோக்கி நகர்ந்தது. இந்த மாற்றத்தை உருவாக்கியது திராவிட இயக்கம் அல்ல. ஆனால் அந்த மாற்றத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள அது கட்டாயப்படுத்தப்பட்டது.
அதனால் தான் திராவிட அரசியலின் மொழியும் மாறியது.
ஒருகாலத்தில் அதன் முக்கிய சொற்கள்: சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, மாநில சுயாட்சி, மொழி உரிமை, சமூக மாற்றம்.
பின்னர் அதன் முக்கிய சொற்கள்: வளர்ச்சி (Development), முதலீடு (Investment), வேலைவாய்ப்பு (Employment), தகவல் தொழில்நுட்பம் (Information Technology), உள்கட்டமைப்பு (Infrastructure), நலத்திட்டங்கள் (Welfare Schemes).
இந்த மாற்றம் திடீரென்று நிகழவில்லை. அது மக்களின் ஆசைகள் மாறியதால் நிகழ்ந்தது. அரசியல் கட்சிகள் மக்களை மாற்றுவதோடு மட்டுமல்ல; மக்களின் மாற்றத்திற்கும் தங்களை மாற்றிக்கொள்கின்றன. மக்களின் மனதை மாற்ற முடியாமல் போனது என்கின்ற கசப்பான உண்மையை நாம் இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும்.
இதன் விளைவாக, திராவிட இயக்கம் தனது ஆரம்பகால அரசியல் இயல்பிலிருந்து மெதுவாக விலகத் தொடங்கியது. சமூகப் புரட்சி என்ற இலக்கு பின்னணிக்குச் சென்றது. ஆட்சித் திறன் முன்னணிக்கு வந்தது. கருத்தியல் (Ideology) மெதுவாக நிர்வாகமாக (Administration) மாறியது. உரிமை (Rights) என்ற மொழி நலத்திட்டம் (Welfare) என்ற மொழியாக மாறியது.
இங்கே முக்கியமான கேள்வி, திராவிட இயக்கம் தனது கொள்கைகளை கைவிட்டதா என்பதல்ல. மாறாக, அது உருவாக்கிய பண்பாட்டு உலகம் மாறிவிட்டதா என்பதுதான்.
ரயர்சன் காட்டியது போல, திராவிட இயக்கத்தின் வலிமை அதன் பண்பாட்டு அரசியலில் இருந்தது. நிமிஷ் காட்டியது போல, ஒரு சமூகம் தனது கதைகளையும் கனவுகளையும் மாற்றும்போது அதன் அரசியலும் மாறுகிறது.
அதனால் இன்று திராவிட இயக்கத்தின் சிக்கல் தேர்தல் தோல்வி அல்ல; கருத்தியல் சோர்வு (Ideological Exhaustion). ஒருகாலத்தில் அது மக்களிடம் ஒரு புதிய உலகைக் கற்பனை செய்யச் சொன்னது. இன்று அது பெரும்பாலும் அந்த உலகில் எவ்வாறு வசதியாக வாழலாம் என்று சொல்கிறது.
இதனால் திராவிட இயக்கத்தின் எதிர்காலம் பற்றிய அடிப்படை கேள்வி உருவாகிறது. அது மீண்டும் சமூகநீதி, பகுத்தறிவு, மொழி, பண்பாடு ஆகியவற்றை புதிய தலைமுறையின் கனவுகளுடன் இணைத்து ஒரு புதிய கற்பனையை உருவாக்குமா? அல்லது வளர்ச்சி, நலத்திட்டம், நிர்வாகம் என்ற அரசியலுக்குள் மட்டுமே தன்னை அடைத்துக்கொள்ளுமா?
ஏனெனில் நிமிஷ்-ன் ஆய்வு நமக்கு நினைவூட்டுவது ஒன்று: அரசியல் மாற்றங்கள் முதலில் தேர்தல்களில் நிகழ்வதில்லை; அவை மக்களின் கதைகளிலும் கனவுகளிலும் நிகழ்கின்றன. திராவிட இயக்கத்தின் எழுச்சியும் அப்படித்தான் தொடங்கியது. அதன் தற்போதைய தேக்கமும் அதே இடத்தில்தான் தொடங்கியுள்ளது.
தொடரும் ..!
திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 6:
_________________________________________
தமிழ் நாடும் அண்டை நாடும் - விக்கிலீக்ஸ் கொடுக்கும் செய்தி :
__________________________________________
உலக அரசியலையே ஆட்டி பார்த்த பிரபல விக்கிலீக்ஸ் ( wikileaks) இணையத்தில் இருந்த எடுக்கப்பட்ட கட்டுரைகள் பலவற்றின் சாரம் -
1990கள் இந்திய அரசியலிலும் பொருளாதாரத்திலும் ஒரு திருப்புமுனைக் காலம். அந்த காலகட்டத்தில் இந்தியா தாராளமயமாக்கல் (Economic Liberalization), உலகமயமாக்கல் (Globalization), தனியார்மயமாக்கல் (Privatization) ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டது.
இந்தியாவின் பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் இந்த மாற்றத்திற்கு பதிலளிக்கத் தொடங்கின. வளர்ச்சி, முதலீடு, தொழில்மயமாக்கல், வேலைவாய்ப்பு போன்றவை அரசியலின் மையக் கருத்துகளாக மாறின.
ஆனால் தமிழ்நாட்டில் இந்த மாற்றம் முழுமையாக வேறொரு அரசியல் சூழலில் நடந்தது.
1990கள் மற்றும் 2000களில் இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மறுவடிவமைக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் அரசியல் வாத விவாதங்கள் பெரும்பகுதியை ஈழத் தமிழர் பிரச்சினை ஆக்கிரமித்திருந்தது.
அமெரிக்கத் தூதரக அறிக்கைகள் கூட, தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எவ்வளவு தீவிரமாக அரசியல் விவாதமாக மாற்றியிருந்தார்கள் என்பதை பதிவு செய்கின்றன.
இதன் விளைவாக ஒரு முக்கியமான அரசியல் வெற்றிடம் உருவானது.
இந்தியாவின் பிற பகுதிகளில் "தாராளமயமாக்கல் சமூகத்தை எவ்வாறு மாற்றுகிறது?", "புதிய சந்தைப் பொருளாதாரம் யாருக்கு பயனளிக்கிறது?", "நடுத்தர வர்க்கம் எப்படி உருவாகிறது?", "சமூகநீதி அரசியலின் எதிர்காலம் என்ன?" போன்ற கேள்விகள் எழுந்துகொண்டிருந்தன.
ஆனால் தமிழ்நாட்டில் அதே காலகட்டத்தில் அரசியல் விவாதத்தின் பெரும் பகுதி ஈழம், தமிழர் உரிமை, இலங்கை அரசு, போர்நிறுத்தம், அகதிகள், முள்ளிவாய்க்கால் போன்ற கேள்விகளைச் சுற்றியே இயங்கியது.
இந்த காலகட்டத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் போன்ற திராவிடம் அல்லாத கட்சிகள் மேல் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் விளைவாக, இந்தியா முழுவதும் நிகழ்ந்த கருத்தியல் மாற்றம் குறித்து தமிழ்நாட்டில் போதுமான அரசியல் சிந்தனை உருவாகவில்லை.
ஒரு காலத்தில் திராவிட இயக்கம் சமூகத்தைப் பற்றிய அடிப்படை கேள்விகளை எழுப்பியது. ஆனால் 1990களுக்குப் பிறகு, பொருளாதார தாராளமயமாக்கல் தமிழ்ச் சமூகத்தை எவ்வாறு மாற்றுகிறது என்ற கேள்வி அதன் மைய விவாதமாக மாறவில்லை.
இதுவே இன்று திரும்பிப் பார்க்கும்போது முக்கியமான வரலாற்றுப் புள்ளியாகத் தெரிகிறது.
இந்தியாவின் பொருளாதார அமைப்பு மாறிக்கொண்டிருந்தது. தமிழ்ச் சமூகத்தின் ஆசைகள் மாறிக்கொண்டிருந்தன.
திரைப்படங்கள் புதிய நடுத்தர வர்க்க கனவுகளை உருவாக்கிக்கொண்டிருந்தன. நுகர்வு கலாசாரம் (Consumer Culture) பரவிக்கொண்டிருந்தது.
ஆனால் தமிழ்நாட்டின் அரசியல் உணர்வு பெரும்பாலும் ஈழத்தை நோக்கியே திரும்பியிருந்தது.
அதனால் 1990கள் மற்றும் 2000கள் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு விசித்திரமான காலமாக அமைந்தன. பொருளாதார ரீதியாக இந்தியா புதிய காலத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தது. ஆனால் அரசியல் ரீதியாக தமிழ்நாடு இன்னும் ஒரு இனப்போரின் உணர்ச்சி அலைக்குள் வாழ்ந்துகொண்டிருந்தது.
இன்று திராவிட அரசியலின் மாற்றங்களைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, இந்த முரண்பாட்டை புறக்கணிக்க முடியாது, கூடாது ! தமிழ்நாட்டு அரசியலை நடுரோட்டில் போட்டுவிட்டு எழுத்துக்கு சென்றது எவ்வளவு பெரிய தவறு என்பதை இப்போது புரிந்து கொள்ள வேண்டும் இந்த தலைவர்கள் என்பவர்கள். ஆனால் இதனை சரியாக கனித்தவர் திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி மட்டுமே !
ஏனெனில் இந்தியாவின் பொருளாதார மாற்றங்களும், ஈழப் பிரச்சினையின் உணர்ச்சி அரசியலும், ஒரே காலகட்டத்தில் தமிழ்நாட்டை வெவ்வேறு திசைகளில் இழுத்த இரண்டு சக்திகளாக இருந்தன. அந்த இரண்டின் சந்திப்பில்தான் இன்றைய தமிழ்நாட்டு அரசியலின் பல முரண்பாடுகளும் உருவாகின.
இன்னும் கொஞ்சம் பகிரங்கமாக சொல்ல வேண்டுமானால், 1990 காலகட்டத்திற்கு பிறகும், நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி அமைக்கும் வரையும், இங்கே திராவிடம், பெரியார் போன்ற விடயங்கள் எல்லாம் பிரச்சாரத்திலிருந்து முற்றிலுமாக மறைக்கப்பட்டது அல்லது மறக்கப்பட்டது.
தமிழர்களின் ஒரே அடையாளம் ஒரே தலைவர் என்றால், அது பக்கத்து நாட்டில் இருக்கும் ஏதோ ஒரு தலைவரை தூக்கிக்கொண்டு இந்த அறிவு சமூகம் ஆடியது.
என் காரணமாக ஒரு தலைமுறைக்கு திராவிடம் பெரியார் என்றால் என்னவென்று தெரியாமல் போனது.
வரலாற்று ரீதியாக இந்த இடமே திராவிடம் சரிய தொடங்கிய முக்கிய காலம் !
இந்த காலகட்டத்தில் அமெரிக்க உளவுத்துறை அந்த ஈழ பிரச்சினையால் திமுக எப்படிப்பட்ட சிக்கல்களை அனுபவிக்கப் போகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியது. அதனை அடுத்த பாகத்தில் காணலாம்.
தொடரும் ..!
திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 7:
_________________________________________
திமுகவும் பக்கத்து நாடும் - விக்கிலீக்ஸ் அறிக்கை :
__________________________________________
இந்தியா முழுவதும் பொருளாதார தாராளமயமாக்கல் (Economic Liberalization), உலகமயமாக்கல் (Globalization), தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, புதிய நடுத்தர வர்க்கத்தின் எழுச்சி போன்றவை அரசியல் விவாதங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டின் அரசியல் கற்பனை முற்றிலும் வேறு திசையில் நகர்ந்தது. அதன் மையத்தில் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம் தான் !
இதனை உறுதி செய்யும் விதமாக,
2009 பிப்ரவரி 27-ஆம் தேதி சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் அனுப்பிய ரகசிய அறிக்கை, இலங்கைப் போர் தமிழ்நாட்டில் ஒரு தேர்தல் பிரச்சினையாக மாறிவிட்டதாக பதிவு செய்கிறது. 1991-இல் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு அரசியல் ரீதியாக ஓரங்கட்டப்பட்டிருந்த ஈழக் கேள்வி, மீண்டும் தமிழ்நாட்டின் அரசியல் மையத்திற்கு வந்திருந்தது.
அந்த காலகட்டத்தில் தமிழ் ஊடகங்கள் முழுவதும் இலங்கையில் கொல்லப்பட்ட பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், அகதிகள் பற்றிய செய்திகளும் புகைப்படங்களும் நிரம்பியிருந்ததாக தி இந்து மற்றும் ஃப்ரண்ட்லைன் இதழ்களின் மூத்த பத்திரிகையாளர் T.S. Subramanian அமெரிக்க அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆங்கில ஊடகங்களை மட்டும் படிப்பவர்கள் தமிழ்நாட்டில் உருவாகியிருந்த உணர்ச்சி வெடிப்பை புரிந்துகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் M.K. Pathmanaathan கூட, சில தமிழ் நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளில் 30 முதல் 50 சதவீதம் வரை இலங்கை தொடர்பானவையாக இருந்ததாகக் கூறியிருந்தார். அதாவது தமிழ்நாட்டின் பொது உரையாடல் (Public Discourse) முழுவதும் இலங்கைப் போரைச் சுற்றியே சுழன்றுகொண்டிருந்தது.
இந்தச் சூழலில் விடுதலைப் புலிகள் மீதான பார்வையும் மாறத் தொடங்கியது. அரசியல் ஆய்வாளர் M.S.S. Pandian-ன் கருத்துப்படி, பல தமிழர்கள் புலிகளை அவர்களின் கடந்தகால அரசியல் நடவடிக்கைகளின் அடிப்படையில் அல்ல, இலங்கைத் தமிழர்களை காப்பாற்றும் கடைசி சக்தியாகப் பார்க்க ஆரம்பித்திருந்தனர். ராஜபக்ச அரசின் ராணுவ நடவடிக்கைகள், போர்ப்பகுதிகளுக்கான தகவல் தடைகள், பொதுமக்கள் உயிரிழப்புகள் ஆகியவை இந்த மனநிலையை உருவாக்கின.
இதன் தாக்கம் அரசியல் கட்சிகளிலும் வெளிப்பட்டது. வைகோவும், தொல். திருமாவளவனும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கோரினர். மேலும், அப்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்த டாக்டர் எஸ். ராமதாஸும் அந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்ததாக அறிக்கை பதிவு செய்கிறது. 2002-இல் எடுத்திருந்த தனது நிலைப்பாட்டை 2009-இல் அவர் மீண்டும் வலியுறுத்தியது, தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையைப் பிரதிபலிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதினர்.
இந்தச் சூழலில் மிகப்பெரிய அழுத்தத்தை சந்தித்தது திமுக. 2008 அக்டோபரில், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து விலகுவார்கள் என்று கருணாநிதி எச்சரித்திருந்தார். ஆனால் அந்த மிரட்டல் நடைமுறைக்கு வரவில்லை. இதனால் திமுக மீது "பாசாங்கு", "இயலாமை", "உண்மையான நடவடிக்கை எடுக்காதது" போன்ற விமர்சனங்கள் எழுந்தன.
அமெரிக்க அதிகாரிகளிடம் கனிமொழி கூறியதாக அறிக்கை பதிவு செய்யும் ஒரு கருத்து மிகவும் முக்கியமானது. "இலங்கைப் பிரச்சினை குறித்து திமுக எடுத்த நிலைப்பாடு, தமிழ்நாட்டின் பொதுவான உணர்வை பிரதிபலிக்கவில்லை" என்றும், "திமுக தொண்டர்களே கட்சியின் அணுகுமுறையால் அதிருப்தியடைந்துள்ளனர்" என்றும் அவர் ஒப்புக்கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. கிளிநொச்சி வீழ்ச்சிக்குப் பிறகு இந்த அதிருப்தி மேலும் அதிகரித்ததாகவும் அறிக்கை கூறுகிறது.
இங்கு வரலாற்றின் ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு தெரிகிறது. இந்தியா முழுவதும் புதிய பொருளாதார யுகம் உருவாகிக் கொண்டிருந்தது. சந்தை, முதலீடு, தகவல் தொழில்நுட்பம், உலகமயமாக்கல், நடுத்தர வர்க்க கனவுகள் ஆகியவை புதிய அரசியல் மொழியை உருவாக்கிக் கொண்டிருந்தன. ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் உணர்வை இயக்கியது பொருளாதார வளர்ச்சி அல்ல; முள்ளிவாய்க்கால். முதலீட்டாளர் மாநாடுகள் அல்ல; கிளிநொச்சி. புதிய பொருளாதார கனவுகள் அல்ல; ஈழத் தமிழர்களின் உயிர்வாழ்வு.
Nimish Adhia கூறுவது போல, அரசியல் மாற்றங்கள் முதலில் மக்களின் கற்பனையில் நிகழ்கின்றன. 2009-இல் தமிழ்நாட்டின் அரசியல் கற்பனை இந்தியாவின் பொருளாதார மாற்றங்களை நோக்கி அல்ல, ஈழத்தின் மனிதாபிமானப் பேரழிவை நோக்கி திரும்பியிருந்தது. அதனால் இந்தியா புதிய பொருளாதார உலகிற்குள் நுழைந்துகொண்டிருந்த அதே நேரத்தில், தமிழ்நாட்டின் அரசியல் உரையாடல் ஒரு இனப்போரின் இறுதிக்கட்டத்தை மையமாகக் கொண்டு இயங்கியது. இதுவே 1990களுக்குப் பிந்தைய திராவிட அரசியலின் பாதையைப் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான வரலாற்றுத் தருணமாகும்.
இதே காலகட்டத்தில் அதாவது 1990 காலகட்டத்தில் திராவிட இயக்கம் மிகப்பெரிய சரிவை சந்திக்க ஆரம்பித்தது. ஆம், பாட்டாளி மக்கள் கட்சி விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றின் எழுச்சியே அது !
தொடரும் !

திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 8:
_________________________________________
பாமக, விசிக வருகை - திராவிட தொய்வு - ஜான் ஹாரிஸ், ஆண்ட்ரூ வைட் ( அமெரிக்க ஆய்வாளர்கள் )
__________________________________________
1980-90 காலகட்டத்தில் உலகமே பொருளாதார துறையில் மிகவும் மாறிக் கொண்டிருந்த காலம் என்றும், இங்கே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு என்கின்ற அரசியல் ஒரு இடத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழலை ஈழ அரசியல் முழுமையாக விழுந்திருந்தது என்பதை ஏற்கனவே கண்டோம்.
ஆனால் அந்த காலகட்டத்தில் இன்னொரு முக்கியமான மாற்றமும் நடந்து கொண்டிருந்தது.
1967 முதல் 1980களின் இறுதி வரை திராவிட இயக்கத்தின் மிகப்பெரிய பலம், பல்வேறு சாதிகளையும் சமூகக் குழுக்களையும் "பார்ப்பனரல்லாதார் - திராவிடர்கள்" (Non Brahmins - Dravidians) என்ற ஒரே அரசியல் அடையாளத்தின் கீழ் ஒன்றிணைத்ததுதான்.
ஆனால் 1980களின் இறுதியிலும் 1990களிலும் இந்தப் பரந்த கூட்டணி பிளவுகளை சந்திக்கத் தொடங்கியது.
அமெரிக்க நாட்டு ஆய்வாளர்கள் ஜான் ஹாரிஸ் மற்றும் ஆண்ட்ரூ வைட் ஆகியோர் குறிப்பிடுவது போல, திராவிட அரசியலின் தேய்மானம் என்பது தேர்தல் தோல்வியால் ஏற்பட்டது அல்ல; அது அதன் சமூக அடித்தளம் பல சிறிய அரசியல் அடையாளங்களாக உடைந்ததன் விளைவாகும். திராவிட இயக்கம் சமூகநீதியைப் பற்றி பேசினாலும், பல சாதிக் குழுக்கள் தங்களது குறிப்பிட்ட கோரிக்கைகள் கவனிக்கப்படவில்லை என்று உணர ஆரம்பித்தன.
இந்த உணர்வை மிகவும் திறமையாக அரசியலாக்கியவர் மருத்துவர் ராமதாஸ்.
1980களில் வடதமிழகத்தில் நடைபெற்ற வன்னியர் இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தன. வன்னியர்கள் எண்ணிக்கையில் பெரிய சமூகமாக இருந்தாலும், அதிகார அமைப்புகளிலும் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தங்களுக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற உணர்வு பரவலாக இருந்தது. இந்த அதிருப்தி 1987ஆம் ஆண்டின் சாலை மறியல் போராட்டங்களிலும், இடஒதுக்கீட்டு இயக்கங்களிலும் வெளிப்பட்டது. அந்த சமூக இயக்கத்தின் அரசியல் வடிவமாக 1989ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) உருவானது.
பாமக வெறும் சாதிக் கட்சியாக இல்லாமல், ஒரு புதிய அரசியல் மாதிரியை அறிமுகப்படுத்தியது. திராவிட இயக்கம் "அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்குமான அரசியல்" என்றால், பாமக "ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் அரசியல் பிரதிநிதித்துவம்" என்ற கோட்பாட்டை முன்வைத்தது. இது தமிழ்நாட்டின் அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகும். வன்னியர் சமூகத்தின் வாக்குகளை ஒருங்கிணைத்து, எந்த பெரிய கூட்டணியும் தங்களை புறக்கணிக்க முடியாத நிலையை பாமக உருவாக்கியது.
பெங்களூர் குணா எனும் சர்வதேச கைக்கூலி மூலம் " திராவிடத்தால் விழுந்தோம் " என்ற சொல்லாடலும் பாமக மேடைகளில் தான் உருவாக்கப்பட்டது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.
இதற்குப் பிறகு ஏற்பட்ட மிக முக்கியமான எழுச்சி விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் எழுச்சியாகும்.
திராவிட இயக்கம் சாதி ஒழிப்பைப் பற்றி தொடர்ந்து பேசியிருந்தாலும், கிராமப்புற தமிழ்நாட்டில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள், தீண்டாமை, நில உரிமை மறுப்பு, காவல்துறை அத்துமீறல்கள் ஆகியவை தொடர்ந்தன. இந்த முரண்பாட்டை நேரடியாக அரசியல் கேள்வியாக மாற்றியவர் தொல். திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் தோன்றியபோது அது ஒரு தேர்தல் கட்சியாக அல்ல, தலித் சுயமரியாதை இயக்கமாக தன்னை முன்வைத்தது.
1985 இல் மதுரையில் உருவான தலித் ஆதாரமையும் மூலம் தலித் என்கின்ற வார்த்தை உள்ளே சொருக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு என தனி பண்பாடு, அரசியல் என பிரிக்கப்பட்டது. அதாவது பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஒற்றுமையாக இருப்பதை பாமகவும் விசிக்கவும் பிரித்தது.
அம்பேத்கரியம், சமூக சமத்துவம், நில உரிமை, சாதி ஆதிக்க எதிர்ப்பு ஆகியவற்றை அதன் அரசியலின் மையமாக வைத்தது. முக்கியமாக, "திராவிட இயக்கம் சமூகநீதியைப் பற்றி பேசுகிறது; ஆனால் தலித்துகளின் அன்றாட வாழ்க்கை அனுபவங்கள் ஏன் மாறவில்லை?" என்ற கேள்வியை எழுப்பியது.
இதன் மூலம் தமிழ்நாட்டின் அரசியல் மொழியே மாறியது.
ஒரு காலத்தில் அரசியல் விவாதங்கள் "பார்ப்பன எதிர்ப்பு" என்ற அச்சில் நடந்தன. ஆனால் 1990களுக்குப் பிறகு "இடைநிலை சாதிகள் மற்றும் தலித்துகள்", "பிராந்திய சமூகங்களின் பிரதிநிதித்துவம்", "உள்ளூர் அதிகார உறவுகள்" போன்ற புதிய கேள்விகள் அரசியல் மேடைக்கு வந்தன.
பாமக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இரண்டும் திராவிட இயக்கத்திற்கு வெளியே உருவான சக்திகள் அல்ல; மாறாக திராவிட இயக்கம் இடைவிட்ட சமூக எழுச்சியின் புதிய வெளிப்பாடுகள். திராவிட இயக்கம் அரசியல் விழிப்புணர்வை உருவாக்கியது. ஆனால் அந்த விழிப்புணர்வு பின்னர் தனித்தனி சமூகக் குழுக்களை தங்களுக்கான அரசியல் மேடைகளை உருவாக்கத் தூண்டியது. இதன் தொடர்ச்சியே ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி, தனிகரசு, கொங்கு ஈஸ்வரன் போன்றவர்களின் தலைமையில் சாதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இதனால் 1990களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் அரசியல் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்தது. திமுக மற்றும் அதிமுக இன்னும் பெரிய கட்சிகளாக இருந்தன. ஆனால் அவை இனி சமூகத்தின் அனைத்து அடுக்குகளையும் ஒரே அரசியல் கற்பனையின் கீழ் ஒன்றிணைக்க முடியவில்லை. அந்த இடைவெளியை பாமக வன்னியர்களிடையே நிரப்பியது. விடுதலைச் சிறுத்தைகள் தலித்துகளிடையே நிரப்பியது. பின்னர் வந்த சாதிய கட்சிகள் வேறு அடையாள அரசியல்களின் பிரதிநிதிகளாக உருவாயின.
இதனால் திராவிட இயக்கத்தின் தேய்மானம் என்பது அதன் மறைவு அல்ல. அது உருவாக்கிய பரந்த அரசியல் கூட்டணி பல தனித்தனி சமூக அரசியல்களாகப் பிரிந்து வளர்ந்த வரலாற்று தருணமாகும். பாமகவும் விடுதலைச் சிறுத்தைகளும் அந்த மாற்றத்தின் மிகவும் முக்கியமான மற்றும் நீடித்த அரசியல் வெளிப்பாடுகளாக அமைந்தன.
இப்படி தாங்கள் பலவீனப்படுகிறோம் என்பதை உணராமலேயே, திமுக மற்றும் அதிமுக-க்குள் சிலர் பண்ணையார்களாக உருவெடுக்க ஆரம்பித்து அது பலராக மாறி உள்ளூர் வார்டு கவுன்சிலர் வரை பண்ணையாராக மாற ஆரம்பித்தனர்.
தொடரும் !

திராவிட இயக்கம் சரிவது எங்கனம் ? - வரலாற்று ஆய்வின் மூலம் முன்வைக்கப்படும் விடைகள்! - பாகம் 9:
_________________________________________
திராவிட இயக்கத்தில் புதிய பண்ணையார்கள், மறைக்கப்பட்ட சமதர்ம குரல் - ஆண்ட்ரூ ஒயிட் ( அமெரிக்க ஆய்வாளர்)
__________________________________________
1990 ஆம் காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மாற்றம், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, ஈழ சிக்கல், இதன் ஊடாக வளர்ந்த பாமக மற்றும் விசிக, அதனால் கொண்டுவரப்பட்ட திராவிடத்தால் வீழ்ந்தோம் என்ற சொல்லாடல் இருந்த காலகட்டத்திலேயே திராவிட இயக்கம் இன்னொரு குறிப்பிடத்தக்க சிக்கலையும் உருவாக்கிக் கொண்டிருந்தது.
" நவீனப் பண்ணையார்கள்" " நவீன குறுநில மன்னர்கள்" " நவீன மன்னர் பரம்பரை" ஆக திராவிட இயக்கம் ஒரு வெகுஜன சமூக இயக்கத்திலிருந்து மாறி ஒரு "அரசியல் உயரடுக்குக் கட்சியாக" (Political Elite Party) என்கிற சிக்கலாக மாறியது என்று கூறுகிறார் அமெரிக்க ஆய்வாளர் ஆண்ட்ரூ ஒயிட்.
1967-ல் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்த திமுக, ஒரு சாதாரண அரசியல் கட்சி அல்ல. அது தெருக்களில் முழங்கிய ஒரு சமூகப் புரட்சியின் அரசியல் வடிவமாக இருந்தது. சுயமரியாதை இயக்கம், இந்தி எதிர்ப்பு போராட்டம், சமூகநீதி, இடஒதுக்கீடு, பிராமணிய எதிர்ப்பு ஆகியவற்றின் சங்கமமாக உருவான அந்த இயக்கம், ஆயிரக்கணக்கான சாதாரண மக்களை அரசியலுக்குள் இழுத்து வந்தது.
பழக்கடை வியாபாரிகள், கூலித் தொழிலாளர்கள், கை ரிக்ஷா இழுத்தவர்கள், குதிரை ஓட்டுனர்கள் எல்லாம் அன்றைக்கு அங்கீகரிக்கப்பட்டு அரசு அதிகாரம் என்கின்ற இடத்திற்கு அவர்களை கொண்டு சென்று அழகு பார்க்கப்பட்டது.
ஆனால் எந்த இயக்கமும் நிரந்தரமாக இயக்கமாகவே நீடிப்பதில்லை. அதிகாரம் அதன் இயல்பை மாற்றத் தொடங்குகிறது. 1967-ல் ஆட்சிக்கு வந்த திமுக, 1990களுக்குப் பிறகு வேறொரு அமைப்பாக மாறத் தொடங்கியது.
இதனை அரசியல் ஆய்வாளர்கள் C. மணிகண்டன் மற்றும் ஆண்ட்ரூ ஒயிட் ஆகியோர் மிக முக்கியமாக ஆய்வு செய்துள்ளனர்.
அவர்களின் Elite Formation within a Political Party: The Case of the Dravida Munnetra Kazhagam என்ற ஆய்வு, திமுகவின் உள்கட்டமைப்பில் உருவான புதிய அரசியல் உயரடுக்கை (elite) வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.
திராவிட இயக்கத்தின் ஆரம்பகாலத் தலைவர்களைப் பார்த்தால் அவர்கள் பெரும்பாலும் எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், சமூகப் போராளிகள், நாடகக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், சாமானிய தொழிலாளர்களாகவே இருந்தனர். பேரறிஞர் அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன், போன்றவர்கள் தங்கள் கருத்தியல் திறமையால் மட்டுமே உயர்ந்தவர்கள். அவர்களது சமூகப் பின்னணி முக்கியமாக இருக்கவில்லை; அவர்களது அரசியல் திறனே முக்கியமாக இருந்தது.
ஆனால் 2011-ஆம் ஆண்டு திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் சமூக அமைப்பை ஆய்வு செய்த மணிகண்டன் மற்றும் ஒயிட், வேறொரு படத்தைப் பார்க்கிறார்கள்.
திமுக பல்வேறு சாதிகள், மதங்கள், சமூகங்களை சார்ந்து செயல்பட்டது. அதாவது நான்கு வருட முறையில் சிக்கிக் கொண்டிருந்தது.
ஆனால் கட்சியின் மேல்மட்டங்களில் அந்தப் பிரதிநிதித்துவம் சுருங்கிவிடுகிறது. கீழ்மட்டங்களில் காணப்படும் சமூகப் பன்மை, உயர்மட்டத் தலைமையில் காணப்படுவதில்லை.
இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று குடும்ப அரசியலின் எழுச்சி.
திராவிட இயக்கத்தின் தொடக்க காலங்களில் தலைமை பெரும்பாலும் அரசியல் செயற்பாட்டின் மூலம் கிடைத்தது. ஆனால் பின்னர் அரசியல் குடும்பங்கள் உருவாகத் தொடங்கின. குடும்பத் தொடர்புகள், அரசியல் மரபுரிமை, உறவினர் வலையமைப்புகள் ஆகியவை கட்சிக்குள் முன்னேற்றத்திற்கான முக்கிய வழிகளாக மாறின. ஆய்வாளர்கள் இதனை "Dynastic Ties" என்று குறிப்பிடுகின்றனர். தலைமையில் மட்டுமே இந்த குடும்ப அரசியல் என்னும் நவீன பண்ணையார் முறை, நவீன மன்னர் பரம்பரை முறை இருக்கவில்லை, மாறாக தடைமட்ட பதவி வரை இந்த இயல்பு பரவி இருந்தது.
இதன் விளைவு என்ன?
ஒரு காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் என்ற பரந்த சமூக உளவியலை உருவாக்கிய கட்சி, படிப்படியாக சில குறிப்பிட்ட சமூகங்கள் மற்றும் அரசியல் குடும்பங்களின் செல்வாக்கிற்குள் செல்லத் தொடங்கியது. இது திமுகவின் பிரச்சினை மட்டுமல்ல. இந்தியாவின் பல கட்சிகளிலும் காணப்படும் ஒரு போக்கு. ஆனால் திராவிட இயக்கம் சமூகநீதியை தனது அடையாளமாகக் கொண்டிருந்ததால், இந்த மாற்றம் அதிக அரசியல் விளைவுகளை ஏற்படுத்தியது.
கிராமங்களில் வாழ்ந்த வன்னியர் இளைஞன், அல்லது தலித் பட்டதாரி, அல்லது பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புதிய தலைமுறை அரசியல்வாதி, திமுக மற்றும் அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்குள் தன்னுடைய வளர்ச்சிக்கு எல்லைகள் இருப்பதாக உணரத் தொடங்கினார். இந்த உணர்வே புதிய அரசியல் அமைப்புகளின் உருவாக்கத்திற்கு வழிவகுத்தது. புதிய இளைஞர்கள் இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு வராமல் போனதற்கு இதுவே காரணம்.
இப்போதும் கூட அந்த தவறை மேலும் செய்வதற்காக DMK GenZ என்ற பெயரில் நவீன கொத்தடிமைகளை உருவாக்கும் வேலையில் இந்த நவீன பண்ணையார்கள் கடுமையாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவில் வைக்க.
பாமக உருவானது வெறும் வன்னியர் அடையாளத்தின் காரணமாக மட்டுமல்ல. திராவிட கட்சிக்குள் பிரதிநிதித்துவம் பெற முடியாத ஒரு புதிய பிராந்திய நடுத்தர வர்க்கத்தின் அரசியல் வெளிப்பாடாகவும் அது இருந்தது. அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள், தலித்துகளின் அரசியல் சுயாதீனத்திற்கான கோரிக்கையாக உருவானது. திமுக சமூகநீதியைப் பேசினாலும், தலித்துகள் தங்களுக்கான தனித்த அரசியல் மேடை தேவை என்று உணர்ந்தனர்.
இதுதான் 1990களுக்குப் பிறகான தமிழ்நாட்டு அரசியலின் மிகப் பெரிய மாற்றம். திராவிட இயக்கம் ஒருகாலத்தில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்தது. ஆனால் அதன் நிறுவனமயமாக்கல் (institutionalisation) மற்றும் உயரடுக்குமயமாக்கல் (elite formation) காரணமாக, அதே சமூகங்கள் மீண்டும் தனித்தனி அரசியல் பாதைகளைத் தேடத் தொடங்கின.
அரசியல் விஞ்ஞானிகள் பொதுவாக இந்தியக் கட்சிகள் பலவீனமான அமைப்புகளைக் கொண்டவை என்று கூறுவார்கள். ஆனால் மணிகண்டன் மற்றும் ஒயிட் வேறொரு சுவாரசியமான முடிவுக்கு வருகிறார்கள். திமுக பலவீனமான கட்சி அல்ல; மாறாக அது வலுவான அமைப்பையும் உள்கட்டமைப்பையும் கொண்டுள்ளது. ஆனால் அந்த அமைப்பு சமூகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குகிறதா என்பது வேறு கேள்வி.
இதுவே திராவிட அரசியலின் முரண்பாடு.
ஒரு காலத்தில் சமூக உயரடுக்கை எதிர்த்து உருவான இயக்கம், காலப்போக்கில் தன்னுடைய சொந்த உயரடுக்கை உருவாக்கியது. ஒரு காலத்தில் அரசியல் அதிகாரத்தை மக்களிடம் கொண்டு சென்ற இயக்கம், பின்னர் அந்த அதிகாரத்தை நிர்வகிக்கும் அரசியல் வர்க்கத்தை உருவாக்கியது. இதன் காரணமாகவே புதிய சமூகக் குழுக்கள், புதிய தலைமுறைகள், புதிய சாதி மற்றும் புதிய அடையாள அரசியல்கள் தங்களுக்கு தனித்த அரசியல் மேடைகளை உருவாக்கத் தொடங்கின.
அதன் விளைவே திராவிட இயக்கம் தனது இறுதி பக்கங்களை எழுத தொடங்கின.

No comments:

Post a Comment

453 கோடி

ஒரு யூனிட் மின்சாரம் கூட வாங்காமல் ₹453 கோடியை வாரி வழங்கிய டான்ஜெட்கோ (TANGEDCO) – CAG அறிக்கையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்! https://www....