Monday, August 31, 2026

JCD Prabakaran delete from Assembly record -இளைஞர் சமுதாயத்தை ஜல்லிக்கட்டு போட்டி சீரழிக்கிறது - சோழவந்தான் தவெக எம்எல்ஏ கருப்பையா

இளைஞர் சமுதாயத்தை ஜல்லிக்கட்டு போட்டி சீரழிக்கிறது என பேசிய சோழவந்தான் த.வெ.க எம்.எல்.ஏ கருப்பையா
நானும் மாடுபிடி வீரர்தான்; ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல - சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா விளக்கம்

திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டு நானே நடத்தியுள்ளேன் என எம்எல்ஏ கருப்பையா தெரிவித்துள்ளார்.

சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா விளக்கம்
சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா விளக்கம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : August 29, 2026 at 10:10 PM IST

மதுரை: நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன்; நானும் மாடுபிடி வீரர்தான் என்று சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, "இளைஞர்களை சீர்குலைக்கும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதற்கு பதிலாக 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கியிருந்தால் விவசாயிகள் பயன் பெற்றிருப்பார்கள்" எனத் தெரிவித்தார். அவரின் இந்த பேச்சுக்கு அதிமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மன்னிப்புக் கேட்க வேண்டும்

அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்? மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் ஆக தனது எம்எல்ஏவை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.

தனது எம்எல்ஏ பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!" என்று வலியுறுத்தியுள்ளது.

தவெக தலைமை தங்களது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது.

சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்ள மக்கள் வரிப் பணத்திலிருந்தே கார் வழங்கலாம் என்று முடிவெடுத்த தவெக, அதனை தனது இரு சட்டமன்ற உறுப்பினர்களை வைத்தே எப்படி அவையில் முன் மொழிந்ததோ அதேபோல ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை வைத்தே இத்தகைய இழிவான பேச்சைச் சட்டமன்றத்தில் பதிவு செய்திருப்பதன் மூலம், வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா? என்ற சந்தேகம் அனைவரின் மத்தியிலும் எழுந்திருக்கிறது.

அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை, தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் வெகுண்டெழுந்து, ஒன்றுதிரண்டு நடத்திய போராட்டத்தின் விளைவாகப் பெற்ற நமது பாரம்பரிய உரிமையை கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படாமல் இருப்பதன் மூலம், இது முன்கூட்டியே திட்டமிட்ட செயலா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

தமிழர்களின் வீரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாகவும், விவசாய வாழ்வியலின் அங்கமாகவும் திகழும் ஜல்லிக்கட்டு குறித்த சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் இழிவான பேச்சுதான் தவெகவின் நிலைப்பாடா? என்பதை அக்கட்சித் தலைமை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

எனவே, வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளையும், அதற்காகப் போராடிய மக்களின் உணர்வையும், பங்களிப்பையும் கொச்சைப்படுத்தும் வகையிலான தவெக சட்டமன்ற உறுப்பினரின் பேச்சை சட்டப் பேரவைத் தலைவர் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, அப்பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என தவெகவின் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை வலியுறுத்துகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நானும் மாடுபிடி வீரர்தான்

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, "திமுக ஆட்சியில் தடையில் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை 2011- 16- ஆம் ஆண்டுகளில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளேன். எனவே, நான் எப்போதும் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கவே மாட்டேன்; நானும் மாடுபிடி வீரர்தான்; இளைஞர்களை எனக்கு எதிராக திருப்பிவிட பார்க்கிறார்கள்.

இளைஞர்கள் எப்போதும் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள் தான்; நான் பேசியது ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைத்து போட்டி நடத்தினால் வெளிநாடுகளைப் போன்று ஒரு மைதானத்திற்குள்ளேயே இளைஞர்களின் திறமையை அடக்குவது போல அமைந்துவிடும் என பேசினேன். மைதானத்திற்கு ஒதுக்கிய 50 கோடி ரூபாயை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கீடு செய்திருந்தால் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

வரும் ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டியானது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்; எந்தவித குளறுபடியும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரிய முறைப்படி நடத்தப்படும். இளைஞர்களின் போராட்டங்களுக்கு பின்பு கிடைத்த ஜல்லிக்கட்டு போட்டி குறித்து நான் எப்படி தவறாகப் பேசுவேன்; நான் பேசியது குறித்து திரித்து தற்போது பேசப்பட்டு வருகிறது" என்று விளக்கம் அளித்துள்ளார்.



 

No comments:

Post a Comment