சென்னை | கோயில் நிலத்தை விற்று ரூ.2,500 கோடி மோசடி: தனியார் கட்டுமான நிறுவனம் மீது போலீஸில் புகார் செய்திப்பிரிவு Published:12th Feb, 2026
சென்னை: அம்பத்தூரில் கோயில் நிலத்தை தனியார் நிலம் என பொய் கூறி விற்று, 2,036 குடும்பங்களிடம் தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.2,500 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குடியிருப்புவாசிகள் புகார் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து, குடியிருப்புவாசிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: தெளிவான பட்டா, வில்லங்கம் இல்லாத நிலம் என்று தனியார் கட்டுமான நிறுவனத்தின் விளம்பரத்தை நம்பி, அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தில் 2,036 குடும்பங்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பு மற்றும் வங்கிக் கடன்கள் மூலம் பல கோடி ரூபாய் முதலீடு செய்து வீடுகளை வாங்கியுள்ளன.
இந்த நிலையில், அந்த நிலம் தனிநபர் சொத்து அல்ல. கடந்த 1974-ம் ஆண்டிலேயே நீதிமன்றத் தீர்ப்பின்படி, அது இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான ஸ்ரீகரபாத்ர சிவபிரகாச சுவாமிகள் சன்னதி நிலையம் என்ற கோயில் சொத்து என்பது உறுதியாகியுள்ளது.
கட்டுமான நிறுவனம் 2006-ல் தற்காலிகமாகப் பெற்ற பட்டாவை, வருவாய்த் துறை அதிகாரிகள் நிலத்தின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து கடந்த 2015, 2016, 2018-ல் அடுத்தடுத்து ரத்து செய்துள்ளனர். ஆனாலும், உண்மையை மறைத்து, ரத்தான பட்டாவை வைத்துக் கொண்டு பொதுமக்களை அந்த நிறுவனம் ஏமாற்றியுள்ளது.
இந்த சூழலில், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த நிலத்தை கோயில் நிலம் எனப் பதிவுத் துறை வகைப்படுத்தியுள்ளதால், வீடுகளைப் பதிவு செய்யவோ, அடமானம் வைக்கவோ, விற்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.2,500 கோடி வரை பணத்தை கொடுத்து வீடு வாங்கியவர்கள், இன்று கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
வீடுகளைத் தவிர்த்து, மக்களிடம் பராமரிப்புக்காக வசூலித்த ‘கார்பஸ் ஃபண்ட்’ ரூ.30 கோடி, கிளப் ஹவுஸ் வைப்புத் தொகை ரூ.30 கோடி என மொத்தம் ரூ.60 கோடியையும் நிறுவனம் முறைகேடாக பயன்படுத்தி உள்ளது.
எனவே, கட்டுமான நிறுவனத்தின் சொத்துகளை உடனே கைப்பற்றி, எங்கள் பணத்தை மீட்டுத் தரவேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





No comments:
Post a Comment