புற்றுநோய் பாதிப்பால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: பெரம்பூரில் தந்தை, மகன் பரிதாப உயிரிழப்பு
சென்னை: பெரம்பூரில் தனியார் ஊழியர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தையும், 4 வயது மகனும் உயிரிழந்த நிலையில், தாயும் மகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை பெரம்பூர் சங்கர மடம் பகுதியில் வசித்து வந்தவர் சகாய செபஸ்டின் (43). கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தைச் சேர்ந்த இவர், மாதவரத்தில் உள்ள தனியார் நிறுவன கிடங்கில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி ரெக்சி பியூலா (38). மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் அண்டோ (4). சில மாதங்களுக்கு முன்பு பியூலாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனால், செபஸ்டின் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள பேக்கரியில் இருந்து கேக் வாங்கிய செபஸ்டின், வீட்டில் யாருக்கும் தெரியாமல் அதில் பூச்சிக்கொல்லி மருந்தைக் கலந்து, அதன் மேல் ‘ஹேப்பி ஃபேமிலி டே’ என எழுதிவைத்து குடும்பத்தினருடன் கேக் வெட்டி சாப்பிட்டுள்ளார்.
சிறிது நேரத்தில், மகன் யுவான் அண்டோ மயங்கி விழுந்து உயிரிழந்தார். மனைவி பியூலாவும், மகள் இவாஞ்சலினும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். அவர்களும் உயிரிழந்துவிட்டதாக நினைத்த செபஸ்டின், மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை 8 மணி அளவில் மயக்கம் தெளிந்த சிறுமி, காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். செம்பியம் காவல் ஆய்வாளர் சிரஞ்சீவி தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பியூலா உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவாஞ்சலின் அபாய நிலையைத் தாண்டியுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். செம்பியம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை தீர்வல்ல: தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் தோன்றினால் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக ‘சினேகா’ தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050, மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104, ஐகால் (iCall Pychosocial) உதவி எண் - 022-25521111 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.


No comments:
Post a Comment