Thursday, June 25, 2026

கரூர் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் விவகாரம்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் மீது DVAC FIR பதிவு!

கரூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை திட்டங்களுக்கான டெண்டர் ஒதுக்கீடு மற்றும் பணிகளை மேற்கொள்ளாமலேயே நிதி விடுவிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிரடி நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 'அறப்போர் இயக்கம்' அளித்த புகாரின் பேரில், முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அரசு அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.


அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் 4 பக்கங்கள் கொண்ட விரிவான புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில், கரூர் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பிரிவில், மார்ச் 2022 காலகட்டத்தில் எந்தவொரு சாலைப் பணிகளும் தரைமட்டத்தில் செய்யப்படாமலேயே, பல கோடி ரூபாய் அரசுப் பணம் ஒப்பந்ததாரர்களுக்கு சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக, கரூரில் சாலைகளை அகலப்படுத்துதல், தரம் உயர்த்துதல் மற்றும் குறுக்கு வடிகால் அமைத்தல் போன்ற பணிகளுக்காக 'சங்கரானந்த் இன்ஃப்ரா' (Sankaranand Infra) என்ற நிறுவனத்திற்கு சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் ஒதுக்கப்பட்டது. ஆனால், 2022 மார்ச் இறுதிக்குள் எந்தவொரு பணியும் தரைமட்டத்தில் நடைபெறாத நிலையிலும், திட்ட அனுமதியில் 77 விழுக்காடு தொகையான 3.23 கோடி ரூபாய் மார்ச் 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அவசர அவசரமாக ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டதாகப் புகாரில் ஆதாரங்களுடன் தெரிவிக்கப்பட்டது.
இந்த முறைகேடு தொடர்பாக ஜூன் 24, 2026 அன்று சென்னை லஞ்ச ஒழிப்புத் தலைமை அலுவலகத்தால் குற்ற எண்: 03/2026-ன் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் மொத்தம் 11 முக்கிய நபர்கள்/நிறுவனங்கள் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்:
திரு. எ.வ.வேலு (A-1): முன்னாள் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர்.
திரு. ஆர். கண்ணன் (A-2): முன்னாள் உதவி கோட்டப் பொறியாளர் (நெடுஞ்சாலை), கரூர்.
திரு. பூபாலன் சிங் (A-3): முன்னாள் இளநிலைப் பொறியாளர் (நெடுஞ்சாலை), கரூர்.
திரு. கே. பெரியசாமி (A-4): முன்னாள் கோட்டக் கணக்காளர் (நெடுஞ்சாலை), கரூர்.
திருமதி. ஆர்.பி. சத்யபாமா (A-5): முன்னாள் கோட்டப் பொறியாளர் (ஓய்வு), கரூர்.
திரு. வி.வி. நிதிலன் (A-6): முன்னாள் கோட்டப் பொறியாளர், ஈரோடு நபார்டு மற்றும் கிராமப்புற சாலைகள்.
திரு. ஏ. ரபீக் முகமது (A-7): முன்னாள் உதவி கோட்டப் பொறியாளர், கரூர் நபார்டு பிரிவு.
திருமதி. சி. தீபிகா (A-8): முன்னாள் உதவிப் பொறியாளர், கரூர் நபார்டு பிரிவு.
திரு. எஸ். கார்த்திக் (A-9): முன்னாள் உதவிப் பொறியாளர், கரூர் நபார்டு பிரிவு.
திருமதி. என்.எஸ். சத்யா (A-10): முன்னாள் கோட்டக் கணக்காளர், கரூர் நபார்டு பிரிவு.
சங்கரானந்த் இன்ஃப்ரா (A-11): கரூரைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் (உரிமையாளர்: எம்.சி. சங்கர் ஆனந்த்).
இவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 120B (கூட்டுச் சதி), 420 (ஏமாற்றுதல்), 409 (அரசு ஊழியரால் பொதுப் பணத்தை முறைகேடு செய்தல்), 468, 471 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act, 1988 as amended in 2018) ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
FIR பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கரூர் செங்குந்தபுரத்தில் உள்ள பிரபல ஒப்பந்ததாரரான எம்.சி. சங்கர் ஆனந்திற்கு சொந்தமான இல்லம் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சங்கர் ஆனந்த், முன்னாள் திமுக அமைச்சர் வி. செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய ஆதரவாளராகவும், அரசியல் வட்டாரத்தில் அவரது நிழலாகவும் செயல்பட்டு வந்தவர் எனக் கூறப்படுகிறது.
இந்த சோதனையின் போது, முறைகேடாகப் பெறப்பட்ட டெண்டர் ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனை நகல்கள் மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட பணி நிறைவுச் சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கோப்புகளை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
அரசுப் பணத்தைச் சாலைகள் அமைக்காமலேயே போலி ஆவணங்கள் மூலம் கையாடல் செய்ததாக எழுந்துள்ள இந்த விவகாரம், தமிழக அரசியல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உயர் அதிகாரிகள் இந்த சதியில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக FIR-ல் குறிப்பிடப்பட்டிருப்பதால், அடுத்தகட்டமாக லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

TVK - TNEB White paper