மகளிர் கணக்கில் உரிமைத் தொகை ரூ. 5,000 வரவு! முதல்வர் அறிவிப்பு! Dinamani 13 பிப்ரவரி 2026
3 மாதம் + கோடை சிறப்புத் தொகையுடன் ரூ.5,000 வரவு வைப்பு
“திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு” - மு.க.ஸ்டாலின் வாக்குறுதி
சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “மிகவும் முக்கியமான விஷயத்துக்காக தான் இந்த வீடியோ. இன்று காலை அரசு சார்பில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்ட பயனாளிகளுக்கு ரூ.5 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவாக வந்திருக்கும்.
எதற்காக இந்த பணம் என்றால், நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோது கரோனா நோய் பரவலின் தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்தது மட்டுமல்லாது வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் நிவாரணத் தொகையும் வழங்கினோம். முந்தைய ஆட்சியில் விட்டுச் சென்ற நிதி நெருக்கடியை சமாளித்து ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை நிறைவேற்றினோம்.
ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தேன். அப்போது இது சாத்தியமே இல்லை என சிலர் சொல்லி இருந்தார்கள். இருப்பினும் நிதி நெருக்கடியை சமாளித்து, ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையை மீறி கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். முதலில் 1.13 கோடி மகளிருக்கு பயனளித்து வந்த இந்த திட்டமானது அண்மையில் விரிவுபடுத்தப்பட்டது. இப்போது 1.31 கோடி மகளிர் பயன் பெற்று வருகின்றனர்.
இது வெறும் நிதியுதவி மட்டுமல்ல. சமூகத்தில் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையிலான உரிமைத் தொகை. இதை கொண்டு அன்றாட வீட்டுச் செலவுகள், குடும்பத்தினரின் மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் என பல அத்தியாவசிய செலவுகளை மகளிர் தாங்களாவே மேற்கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதியை திட்ட பயனாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்ற நாளாக அமைந்துள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை மற்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன.
இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வருகின்றோம். அதற்கு எதிராக டெல்லியில் உள்ள ஒரு கூட்டமும், தமிழ்நாட்டில் அவர்களுக்கு அடிமையாக உள்ள மற்றொரு கூட்டமும் எதிர்வரும் தேர்தலை காரணம் காட்டி அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கான சூழ்ச்சி செய்வதாக தகவல். இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் சிலர் முயற்சி செய்வதாக செய்திகள் வருகிறது.
1.31 கோடி மகளிர் பயனடையும் இந்த திட்டத்தை மூன்று மாதங்கள் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமங்களுக்கு ஆளாவீர்கள் என்பதை உங்கள் வீட்டில் ஒருவராக உள்ள எனக்கு நன்றாகவே தெரியும். கடும் வெயிலில் வேலைக்கு செல்ல கடினமாக இருக்கும் கோடை காலத்தில் இந்த தொகை நிறுத்தப்பட்டால் உங்களுக்கு எவ்வளவு வலி ஏற்படும் என்பது எனக்கு தெரியும். உங்கள் மாதாந்திர செலவை எப்படி சமாளிக்க முடியும். குடும்பத்தினருக்கு மாத்திரை மருந்து வாங்கித் தர முடியுமா? தேர்வு நேரத்தில் குழந்தைகளுக்கான கல்விச் செலவை சமாளிக்க முடியுமா? இதையெல்லாம் எண்ணி பார்த்துதான் முக்கியமான முடிவை எடுத்துள்ளேன்.
அதன்படி இந்த பிப்ரவரி மாதம் மட்டுமல்லாது அடுத்த இரண்டு மாதங்களான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையையும் சேர்த்து ரூ.3 ஆயிரம், கூடுதலாக கோடை கால செலவை கருத்தில் கொண்டு மேலும் ரூ.2 ஆயிரம் சிறப்பு தொகையும் சேர்த்து இந்த பிப்ரவரி மாதம் ரூ.5 ஆயிரத்தை சிறப்பு மகளிர் உரிமைத் தொகையாக 1.31 கோடி மகளிருக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இந்த தருணத்தில் உன்னொரு அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். இந்த 5 ஆயிரம் ரூபாயை அடுத்த மூன்று மாதங்களுக்கு நீங்கள் பயன்படுத்த வேண்டி உள்ளது. அதனால் கொஞ்சம் கவனமாக செலவிடுங்கள். முடிந்தவரை சேமிக்கவும் பாருங்கள்.
அன்பு சகோதரிகளே, உங்கள் ஆதரவோடு அடுத்து அமைய உள்ளதும் திராவிட மாடல் ஆட்சிதான். அதனால் உங்கள் மனம் குளிரும் சிறப்பான அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் உங்களுக்கான உரிமைத் தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சொன்னதை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி இது.
இதை எப்படி செய்வீர்கள் என சிலர் கேட்கலாம். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் வளர்ச்சி பெற செய்துள்ளோம். அதனால் எந்த தடை வந்தாலும் அதையெல்லாம் தாண்டி ‘தமிழ்நாடே’ வெல்வோம் ஒன்றாக” என்றார் முதல்வர் ஸ்டாலின்.


No comments:
Post a Comment