பழநி முருகன் கோயில் ஒலிபெருக்கியில் தவெக பாடல்: இளைஞர் மீது போலீஸில் புகார் 13 Feb 2026
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், படிப்பாதை, யானை பாதை மற்றும் கிரிவலப் பாதையில் தேவஸ்தானம் சார்பில் ஒலிபெருக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதில், தினமும் கால பூஜைகள், பக்தி பாடல்கள், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன.
கோயில் வளாகத்தில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, மலைக் கோயிலுக்குச் செல்லும் யானை பாதையில் உள்ள ஒலிபெருக்கியில் தவெக கட்சிப் பாடலை இளைஞர் ஒருவர் தனது செல்போனில் இருந்து ஒலிபரப்பி, அதை வீடியோ எடுத்து ரீஸ்ஸ் வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோ வலைதளத்தில் பரவியது. மேலும், இது முருக பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தேவஸ்தானம் சார்பில் அந்த இளைஞர் மீது அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதில், ‘மலைக்கோயிலுக்குச் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி செல்போன் கொண்டுசென்றது மட்டுமில்லாமல், பக்தர்கள் வசதிக்காக யானை பாதையில் வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தவெக பாடலை ஒலிக்கச் செய்துள்ளார்.
மேலும், இதை வீடியோவாகவும் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கோயிலின் புனிதத்தை கெடுக்கும் வகையிலும், பழநி முருகன் கோயி லுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் அதைப் பதிவிட்டுள்ளார். இந்த செயல் சட்டப்படி குற்றமாகும்.
எனவே, மேற்கண்ட வீடியோவை பதிவிட்ட நபர் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, அந்த வீடியோவை சமூகவலைதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் தொடர்பாக, பழநி அடிவாரம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:
Post a Comment