Saturday, September 19, 2026

பிள்ளையார் வழிபாடு வேண்டாம் என்றவர் ஆதிசங்கரர் தான் உளறல்களுக்கு மறுப்பு

 “ஆதிசங்கரர் தான் விநாயகர் வழிபாடு வேண்டாம் என்றவர்” Back Nayar - விளக்கம்

கீதை 9.25 சுலோகத்திற்கான சங்கரர் உரையில் உள்ள ஒரு வரியை எடுத்துக் கொண்டு அதற்கு நகைப்பிற்குரிய வகையில் படு அபத்தமான விளக்கத்தை நாயர் அளித்திருக்கிறார்.
यान्ति देवव्रता देवान् पितृ़न्यान्ति पितृव्रताः। भूतानि यान्ति भूतेज्या यान्ति मद्याजिनोऽपि माम् ।।
“தேவர்களை வழிபடுவோர் தேவர்களையும், பித்ருக்களை வழிபடுவோர் பித்ருக்களையும், பூதங்களை வழிபடுவோர் பூதங்களையும் அடைகின்றனர். என்னைப் பூஜிப்பவர்களும் என்னை அடைகின்றனர்” என்பது இந்த சுலோகத்தின் பொருள்.
இதில் உள்ள भूतानि यान्ति भूतेज्याः என்ற மூன்றாவது வாக்கியத்திற்கான சங்கரர் உரையில் भूतानि विनायकमातृगणचतुर्भगिन्यादीनि यान्ति भूतेज्याः भूतानां पूजकाः என்று வருகிறது. “பூதங்கள், அதாவது விநாயகர்கள், மாத்ருகைகள் (அன்னையர்கள்), சதுர்பகினிகள் (நான்கு சகோதரிகள்) முதலானவைகளை வழிபடுபவர்கள்” என்பது இதன் பொருள்.
இந்த வாக்கியத்தில் “பூதங்கள்” என்பதற்குப் பின்வருபவற்றைப் பன்மையாகக் கொள்ளவேண்டும் என்பது சம்ஸ்க்ருத இலக்கணத்தின் அடிப்படைகளைக் கற்றவர்கள் எவருக்கும் புரியும். விநாயகா: என்ற பன்மைச்சொல் கணபதியாகிய விநாயகரைக் குறிப்பதல்ல. அது ஒருவகையான பூத-அசுர கணங்களுக்கான பெயர். பன்மையில் வரும் மற்ற இரண்டு சொற்களும் அவ்வாறே.
புகழ்பெற்ற Monier Williams சம்ஸ்கிருத அகராதி, “விநாயக” என்ற சொல்லுக்கான பொருள்களைத் தருமிடத்தில், विनायक - m. plural, a particular class of demons என்று தெளிவாகக் கூறுகிறது. இத்தகைய பொருளில் பயன்பாடு மானவ கிருஹ்யஸூத்ரம் (ManGr), மகாபாரதம் (MBh) ஆகிய நூல்களில் உள்ளது என்றும் குறிப்பிடுகிறது. அகராதியின் அந்தக் குறிப்பிட்ட பக்கத்தின் படம் முதல் மறுமொழியில்.
ஆக, தான் எடுத்துக்கொண்ட சொல்லுக்கு, அகராதிப் பொருளைப் முதலில் பார்ப்பது என்ற அடிப்படை நெறியைக் கூட கடைப்பிடிக்காமல், “இந்த கீதா பாஷ்யகாரர் விநாயகரையும் பூத வரிசையில் சேர்த்து அவரது வழிபாடு உத்தமமானது அல்ல என்று தெளிவாக சொல்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.. சங்கரருக்கு பின் வந்த அவரது சம்ப்ரதாய பாஷ்யகாரர்கள் யாரும் சங்கரர் கூறும் விநாயகர் நாம் வழிபடும் விநாயகர் அல்ல என்று தெளிவு படுத்தவில்லை. மற்றபடி கடந்த 2000 வருட வரலாற்றில் எந்த விளக்கமும் எனக்கு தெரிந்து இல்லை. எனக்கு தெரிந்து மஹா பெரியவர் இதனை விளக்கவில்லை. பாஷ்ய ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டை சேர்ந்த ச்ருங்கேரி சீடர் ராமானந்த பாரதியும் விளக்கியிருப்பதாக நினைவு இல்லை” என்றெல்லாம் நாயர் தடாம்-புடாம் என்று அதீதமாக அடித்து விட்டுக் கொண்டு போகிறார். பாமரர்கள் இதில் மயங்கக் கூடும், ஆனால் அறிஞர்கள் நகைப்பார்கள்.
வாக்கியத்தின் பொருள் இவ்வளவு நேரடியாக இருக்கும்போது, அகராதியிலேயே விநாயகா: என்ற பன்மைச் சொல்லின் பொருள் தரப்பட்டுள்ளபோது, கூடுதல் விளக்கத்திற்கு என்ன அவசியம்? கடினமாகவோ சிக்கலாகவோ, குழப்பமாகவோ இருந்தால் தான் அது தேவைப்படும்.
பாஷ்யத்தில் உள்ள அந்த வாக்கியத்தைப் பார்த்த உடனேயே எனக்குப் பொருள் விளங்கி விட்டது. ஏனென்றால் விநாயகா: (விநாயகர்கள்) என்ற அந்தச் சொல் ஶ்ரீமத்பாகவதம் தசமஸ்கந்தத்தில் (அத். 6) உள்ளது நினைவு வந்தது.
கொல்லவந்த பூதனையை “பேய்முலை நஞ்சுண்டு” குழந்தைக் கண்ணன் சாய்த்ததும், பயந்துபோன யசோதையும் கோபிகைகளும் சில சடங்குகளைச் செய்து பகவான் குழந்தையைக் காக்கட்டும் என்று வேண்டும் பகுதியில் அந்த சுலோகம் வருகிறது.
डाकिन्यो यातुधान्यश्च कूष्माण्डा येऽर्भकग्रहाः । भूत-प्रेत-पिशाचाश्च यक्ष-रक्षो-विनायकाः ॥ २७ ॥ कोटरा रेवती ज्येष्ठा पूतना मातृकादयः । उन्मादा ये ह्यपस्मारा देह प्राणेन्द्रिय-द्रुहः ॥ २८ ॥ स्वप्नदृष्टा महोत्पाता वृद्धा बाल-ग्रहाश्च ये । सर्वे नश्यन्तु ते विष्णोः नाम-ग्रहण-भीरवः ॥ २९ ॥
பொருள்: குழந்தைகளைத் துன்புறுத்துபவர்களான டாகினிகள், யாதுதானிகள் (அரக்கிகள்), கூஷ்மாண்டாக்கள், பூதப்ரேத பிசாசர்கள், யக்ஷ ராக்ஷசர்கள், விநாயகர்கள், கோடராக்கள், ரேவதிகள், பூதனாக்கள், மாத்ருகைகள் (அன்னையர்), உன்மாதர்கள், அபஸ்மாரர்கள் இப்படி உடலையும் பிராணனையும் இந்திரியங்களையும் வருத்துபவர்கள், கனவில் வருவதால் தீங்கை விளைவிக்கும் பால-கிரஹங்கள், வ்ருத்த கிரஹங்கள் இவையனைத்தும் விஷ்ணுவின் நாமத்தைச் சொல்வதால் பயந்து நாசமடையட்டும்.
இந்தப் பட்டியலில் வருவதாலேயே விநாயக என்ற சொல் எதிர்மறையானது என்று அர்த்தமல்ல. “தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்” என்ற பொருளில் கணபதிக்கு வழங்கும் அச்சொல் ”அடக்குவதற்குத் தலைவன் இல்லாமல் திரிபவர்கள்” என்று பன்மையில் பூதகணங்களைக் குறிப்பதற்காக வந்திருக்கலாம். “அன்னையர்” என்று பொருள்தரும் மாத்ருகா என்ற சொல்லும் இதில் உள்ளது. தேவியின் ஏழு வடிவங்களைக் குறிக்கும் “சப்த மாத்ருகா” என்பதில் வரும் சொல் அது. எனில், இங்கு அன்னையைப் போல பரிவாக வந்து குழந்தைகளைக் கவர்ந்து செல்லும் அல்லது துன்புறுத்தும் பெண்பூதம் என்பதாகக் கொள்ளவேண்டும். தமிழ் கிராமிய தெய்வங்களில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொல்வது போன்று சித்தரிக்கப்படும் ஒரு அம்மனுக்கு “பேராச்சி” என்று பெயர் இருப்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலும் “ரேவதி” என்று இங்கு பூதமாகக் குறிப்பிடப் படும் இதே பெயர் கொண்ட ககுத்மி ராஜனின் மகளான ரேவதியை பலராமர் திருமணம் செய்வதாக பாகவதத்தில் பின்னால் வருகிறது. இதேபோல, கூஷ்மாண்டா என்று இதில் வரும் பெயர் நவதுர்க்கைகளில் ஒரு தேவிரூபத்தின் பெயராகவும் உள்ளது.
சம்ஸ்கிருதத்தில் இப்படி ஒரே சொல்லுக்கு நேர்மறை, எதிர்மறை அர்த்தங்கள் இரண்டும் வருவது மிகவும் சகஜமானது. எல்லாருக்கும் தெரிந்த உதாரணம் “ஶ்ரீ”. அச்சொல்லுக்கு திருமகள், செல்வம் என்பதோடு, விஷம் என்றும் பொருள் உண்டு. ஶ்ரீநிவாஸ: - திருமகள் வசிக்கும் திருமார்பரான விஷ்ணு. ஶ்ரீகண்ட: - விஷத்தைக் கழுத்தில் தாங்கிய சிவன்.
(மேற்கூறிய பாகவத சுலோகங்கள் எனக்கு உடனடியாக நினைவு வந்ததற்குக் காரணம், அவை மனப்பாடமாக இருந்தது தான். அந்த அத்யாயத்தில் “அவ்யாஜதோங்க்ரி” என்று தொடங்கும் எட்டு சுலோகங்களை “பாலரக்ஷா ஸ்தோத்ரம்” என்று சிறுகுழந்தைகள் இருக்கும் வீடுகளில் தாய்மார்கள் பாராயணம் செய்யும் மரபு எங்கள் குடும்பத்தில் உண்டு. நானும் எனது தங்கைகளும் சிறு குழந்தைகளாக இருந்தபோது, என் அம்மா தினந்தோறும் இந்த ஸ்தோத்ரத்தைக் கூறி ரக்ஷை செய்திருக்கிறார். இப்போதும் எங்கள் உறவினர், நண்பர் குடும்பங்களில் குழந்தை பிறந்த செய்தி வந்ததும், என் அப்பா தன் ஆசீர்வாதத்தைச் சொல்லி, இந்த ஸ்தோத்ரத்தை குழந்தைக்கு 2-3 வயதாகும் வரை தினமும் பாராயணம் செய்யுங்கள் என்று கூறுவார். தனது தந்தையாரிடம் இருந்து அவர் இந்த ஸ்தோத்திரத்தைப் பற்றி அறிந்து கொண்டார். அனேகமாக, உபன்யாச சக்ரவர்த்தி என்று புகழப்பட்ட அனந்தராம தீக்ஷிதர் இதைப் பிரபலப் படுத்தியிருக்கலாம் என்பது எனது ஊகம்).
மற்றபடி, விநாயகா: என்ற இந்தச் சொல்லை இட்டுத் தேடினால், பல சம்ஸ்கிருத நூல்களில் இந்தப் பன்மைச் சொல் இதே பொருளில், இதே போல பூதங்களின் பட்டியலில் வரிசையாக சேர்ந்து வருகிறது என்பதைக் காணலாம். கீழே உள்ளவை சில உதாரணங்கள். விநாயகாஸ்ச என்பது போல கூட்டுச் சொல் வடிவத்திலும் தேடினால் இன்னும் அதிகமாககக் கிடைக்கும். ஆக, ஏற்கனவே பிரபலமாக உள்ள பூதங்கள் வரிசையில் மூன்று பெயர்களைத் தான் சங்கரரின் உரை அந்த இடத்தில் கூறுகிறது.
மொத்தத்தில், சம்ஸ்கிருதப் புலமையும் கிடையாது, சங்கரர் நூல்களிலும் தரிசனத்திலும் பரிச்சயமும் கிடையாது என்றபோதும் “ஆதாரத்துடன் கூறுகிறார் நாயர். சங்கரர் சொன்னதை எல்லாம் வெளியில் சொல்ல ஆரம்பித்தால்..” என்று நெல்லை சொக்கர் பாய்ந்து வந்து இதைப் பகிர்வதற்குக் காரணம் - சங்கரர் மீதும் ஸ்மார்த்த அந்தணர் மரபின் மீதும் அவருக்கு உள்ள அதீதமான வெறுப்பு. அவருடைய சைவக்குறுங்குழுவாதம் என்பது சமயம் என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கும் “சைவ (வேளாளர்) சாதி” சாதியவாதம் தான். அது இன்னொரு கொடுமை. இத்தனைக்கும், தனிப்பட்ட அளவில் அவருடைய கஷ்டகாலங்களில் நான் உட்பட சில ஸ்மார்த்த அந்தணர்கள் அவருக்கு எந்த பிரதிபலனும் பார்க்காமல் உதவியிருக்கிறோம். இதையும் கூட சொல்ல விரும்பவில்லை. வேறுவழியில்லாமல் மிகவும் கூச்சத்துடனும் தயக்கத்துடனும் பதிவு செய்கிறேன்.
1. அக்னி புராணம், அத்யாயம் 270
ये कूष्माण्डास्था यक्षा ये दैत्या ये निशाचराः । प्रेता विनायकाः क्रूरा मनुष्या जम्भगाः खगाः ॥९
2. வாமன புராணம், அத்யாயம் 48
तेजसा यशसा चैव युक्तो भवति निर्मलः । न राक्षसाः पिशाचा वा न भूता न विनायकाः १२ । विघ्नं कुर्युर्गृहे तत्र यत्रायं पठ्यते स्तवः ।
3. பரத முனிவரின் நாட்ய சாஸ்த்ரம், அத்யாயம் 36
यावत्तं पूरयेद्देशं ध्वनिर्नाट्यसमाश्रयः । न स्थास्यन्ति हि रक्षांसि तं देशं न विनायकाः ॥ २४॥ आवाहे च विवाहे च यज्ञे नृपतिमङ्गले । नान्दीशब्दमुपश्रुत्य हिंस्रा नश्यन्ति चैव हि ॥ २५॥
4. ப்ரஹ்மபுராணம், அத்யாயம் 40
न यक्षा न पिशाचा वा न नागा न विनायकाः। कुर्युर्विघ्नं गृहे तस्य यत्र संस्तूयते भवः॥ ४०.१२६
5. நாரத புராணம், பூர்வார்த்தம், அத்யாயம் 77
डाकिन्यो द्रुणसाः प्रेताः क्षेत्रपाला विनायकाः ।। महाव्याघ्रमहामेघा महातुरागरूपकाः ।। ७७-६७
6. ஸ்கந்த புராணம், நாகர கண்டம், அத்யாயம் 46
यक्षगुह्यकभूताश्च दैत्या ये च विनायकाः ॥ त्वत्प्रसादेन ते सर्वे संसिद्धिं परमां गताः ॥ ३१ ॥
7. அஹிர்புத்ன்ய ஸம்ஹிதா, அத்யாயம் 28 (இது பாஞ்சராத்ர வைஷ்ணவ ஆகம நூல்களில் ஒன்று)
भूतप्रेतपिशाचाश्च कूश्माण्डाश्च विनायकाः। प्रेष्यास्तस्य भविष्यन्ति साधकस्य महात्मनः।। 28.84
8. வாமன புராணம், அத்யாயம் 86
ये कूष्माण्डास्तथा यक्षा दैत्या ये च निशाचराः। प्रेता विनायकाः क्रूरा मनुष्या जृम्भकाः खगाः।। ८६.१५
ஓம்.

No comments:

Post a Comment

மதூரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் - பாசீச தவெக அமைச்சர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை அவமதிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தின் போது உயர் நீதிமன்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் உயர் ...