Sunday, July 5, 2026

தமிழ்க்கடவுள் முருகன் - சில கேள்விகள்

தமிழ்க்கடவுள் முருகன் என்று சொல்லப்படுவது குறித்து எனக்குள் சில கேள்விகள் -  Suresh Venkatadri :
1.தமிழ் நாட்டில் மக்களின் வாழ்விடம் சார்ந்து 5 தெய்வங்கள் வழிபடப்பட்டுள்ளன. முருகன், திருமால், இந்திரன், வருணன்,கொற்றவை. எல்லாமே இந்திய நிலப்பரப்பு முழுவதும் வழிபடப்பட்ட கடவுள்கள் தான்.மற்ற நான்கு தெய்வங்களையும் விட்டு விட்டு முருகனை மட்டும் தமிழரின் தனித் தெய்வம் என்று பிரித்து உயர்த்திப் பிடிப்பது ஏன்?
2.இந்துமதத்தின் பொற்காலம் என்று சொல்லப்படும் குப்தர்களின் மன்னர்கள் வரிசையில் கி.பி.4,5 ம் நூற்றாண்டிலேயே, இரண்டு குமார குப்தர்கள்,ஸ்கந்த குப்தர்கள் என்ற முருகனின் பெயர் கொண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால்,முருகன் தான் தமிழர்களின் தனிப்பெருங்கடவுள் என்றிருக்கையில்,சங்க காலம் தொடங்கி நாமறிந்த தமிழ் பேரசர்களில் எவருக்காவது முருகனின் பெயர் இருக்கிறதா என்று யோசித்தேன். எனக்குத் தெரிந்து இல்லை..இருந்தால் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.மிகப் பழமையான (கி.பி.4-5 நூற்றாண்டுகளில்) கல்வெட்டுகளில் வரும் பல்லவ மன்னர்களின் பெயர்கள் விஷ்ணு கோபன், சிம்ம விஷ்ணு,மகேந்திர வர்மன்,நரசிம்மவர்மன்,பரமேஸ்வர வர்மன் என்றுதான் இருக்கின்றன.அதன் பின்னர் வரும் சோழ,பாண்டிய சேர மன்னர்களிலும் முருகன் பெயரைக் கொண்ட மன்னர்களே இல்லையே !! ஏன்?
தமிழ்ச்சங்கமே இறையனாரான சிவபெருமானும் அவர் மகனான முருகனும் பங்கு கொண்டவைதானே. அப்போதே சிவனின் மகன் முருகன் என்றுதானே உள்ளது..ராஜேந்திரன் ஆதித்தன் என்ற பெயர்கள் நிறைய இருக்கின்றனவே..வீர நாராயணன் என்ற பட்டங்கள் கூட இருக்கின்றது.மருந்துக்கு ஒரு பெயர் கூட,முருகன் வேலன்,குமரன் என்றில்லையே.இது odd ஆகப் படவில்லையா?
(ஒரு பல்லவ மன்னருக்கு "சிவஸ்கந்த வர்மன்" என்ற பெயர் இருந்தது)
முருகன் அவதரித்தது இமயமலையில், அதாவது வடநாட்டில் தான் என்ற “இலக்கியத் தகவல்” முருகனை மட்டும் தமிழகத்திற்கு குத்தகைக்கு எடுத்திருப்பவர்களுக்கு சற்று வியப்பான செய்தி தான். அதிலும் இக்கூற்றை பரிபாடலில் "நல்லந்துவனார்" மட்டுமல்லாது திருமுருகாற்றுப்படையிலும் "நக்கீரரும்" குறிப்பிடுவதால் தான் நல்லந்துவனாரையும், நக்கீரரையும் இவர்கள் ஏற்பதில்லை.
"நெடும்பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறுஅமர் செல்வ”
- திருமுருகாற்றுப்படை.
பொருள் : நக்கீரர் சொல்கிறார், தீயானது தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டுவந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் ‘சரவணம்’ எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப்பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே என்கிறார்.
இதைப்போலவே "ஓங்கு இமயத்து நீலப் பைஞ் சுனைப் பயந்தோர் என்ப" என்ற பரிபாடல் வரிகளுக்கும் புதிய விளக்கங்கள் கொடுக்க முடியுமா என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.
இன்றுவரை முருகனுக்குக் கிடைக்கும் மிகப்பழமையான சிற்பங்கள் இந்தியாவின் வடபகுதிகளில் இருந்துதான் அதிகமாக கிடைத்துள்ளன என்ற தகவலும் முருகனை மட்டும் தமிழ் கடவுளாக தூக்கிப் பிடிப்பவர்களுக்கு அதிர்ச்சியான செய்திதான்.
@S. Manickavasagam :
இது மிகவும் எளிமையான விசயம். எந்த மக்கள் ஒரு குறிப்பிட்ட கடவுளை அதிகமாக பின்பற்றுகிறார்களோ, அந்தக் கடவுள் அந்த மக்களின் கடவுளாகி விடுவார்... முருகக் கடவுளை அதிக அளவில் தூக்கிப் பிடிப்பவர்கள் தமிழர்கள் தான். தமிழ்நாட்டை தாண்டி எங்காவது பெரிய அளவில் வசித்தால், அங்கேயும் முருகர் கோயில் கட்டி விடுவார்கள்... அவ்வளவு தான் விசயம். அதனால் தான் முருகர் தமிழர்களின் கடவுள் என்று சொல்கிறோம். இதற்கு இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நிறைய சான்றுகள் இருக்கிறது....
தமிழகத்தில் முருகனைப் பின்பற்றுபவர்களை விட அதிகமாக சிவனைப் பின்பற்றுபவர்கள் வரலாற்று ரீதியாகவும் அதிகம். எனில் சிவனுக்கு தானே தமிழ் கடவுள் என்ற பெயர் வந்திருக்க வேண்டும்?
தமிழர்கள் முருகனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவது 100 ஆண்டுகளுக்கு உள்ளாகத்தான். ஆனால் முருகனை விட சிவனை தலையில் தூக்கி வைத்து காலம் காலமாக கொண்டாடியவர்கள் தமிழர்கள். இதேபோல முருகன் ஒருகாலத்தில் வடபகுதியிலும், புகழ்பெற்றிருக்கலாம். கோவில்களும் இருந்திருக்கலாம் என்பதற்கு வடபகுதியில் கிடைக்கும் கல்வெட்டு மற்றும் சிற்பங்களும், நாணயங்களும், அரசர்களின் பெயர்களும் சான்று. இவை காலத்தால் தமிழகத்தை விட முன்னது.

No comments:

Post a Comment