Monday, September 9, 2024

ஆசீவகம்.." கப்சாக்கள்

 ஆசீவகம்.."

ஐயனார் வழிபாடு பற்றிய இந்த P.Hd. ஆய்வுக் கையேடு- தொ.பரமசிவம் மேற்பார்வையில் உள்ளதில் ஐயனார் உடன் #கப்சா_ஆசிவிகம் உடன் எவ்வித தொடர்பும் இல்லவே இல்லை.

https://www.mediafire.com/file/xikg12k289h4nzf/Iyanar+varalaaRu+P.Hd.2003.pdf/file


உலகைப் படைத்தது கடவுள் என்பதை மறுக்கு மௌரியர் மற்கலி துவங்கிய அஜ்விகிசம். பலர் வேண்டுகோள் காரணமாக நானே இதை இணையத்தில் ஏற்றி உள்ளேன் இணைப்பு கீழே


தமிழர்களின் மெய்யியல்.. - மாரி ராஜன்
உலகத்தில் முதலில் தோன்றிய முதல் தமிழ் மதம்.. என்று வலிந்து திணிக்கப்படும் ஓர் கற்பிதம்..
ஆசு+ஈவு + அகம்.. என்று கலந்து கட்டி அடிக்கிறார்கள்..









பாரம்பரிய தமிழ் கடவுள் ஐயனாரை ஆசீவகமாக்கி, பாரம்பரிய தமிழ் சித்தர்களை ஆசீவகத் துறவியாக்கி வடக்கே எங்கோ பிறந்து...மகாவீரரின் சீடராகி பிறகு முரண்டு பிடித்த மற்கலி கோசலருக்கு தமிழகத்தில் திருச்சி பக்கத்தில் உள்ள திருப்பட்டூரை சொந்த ஊராக்கி, சங்க இலக்கியப்பாடலை ஆதாராமாக்கி..இன்னும் நிறையவே உள்ளது..
என்ன ஆதாரம் என்று கேட்டால்.. ஆசீவகம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூற்களைக் காட்டுகிறார்கள். அந்த நூலைப் பார்த்தால்.. ஏராளமான உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாம். அழிக்கப் பட்டதாம்.
மறைக்கப்பட்டுள்ள தகவல்களை இவர்கள் எவ்வாறு பெற்றார்கள் என்னும் ரகசியத்தை கடைசிவரை அந்நூலில் சொல்லவில்லை.
இருக்கட்டும்..
ஆசீவகம் என்னும் மதக்கோட்பாடு குறித்து தமிழக வரலாற்றில் தேடினால் .. எங்குமே அதற்கானத் தடயங்கள் இல்லை.
ஒரு நிகண்டு நூல் மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் மட்டும் நேரிடையான ஆசீவகக்குறிப்புகள் கிடைக்கின்றன.
மேற்கண்ட இரண்டும் சமண மதத்தின் ஒரு பிரிவாக ஆசீவகத்தை குறிப்பிடுகிறது.
திவாரக நிகண்டு
எனும் தமிழ் மொழி நிகண்டு, சமணரின் ஒரு பிரிவினராகக் ஆசீவர்களைக் குறிப்பிடுகிறது.
"சாவகர் அருகர் சமணர் ஆகும் , ஆசீவகரும் அத்தவத் தோரே "
அதாவது சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது.
இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களின் படி,..
கோவலனுடைய மாமனாரும் கண்ணகியின் தந்தையுமாகிய மாநாய்கன் என்னும் சமணர் வணிகன், கோவலனும்,கண்ணகியும் உயிர்நீத்த செய்தி கேட்டு உலகத்தை வெறுத்துத் தனது சொத்துக்கள் அனைத்தையும்
தானம் செய்துவிட்டு, ஆசீவகத்தை
பின்பற்றி துறவு கொள்கிறார். இதன்மூலம், சமணத்தின் உட்பிரிவாகவே ஆசீவகம் இடம்பெறுகிறது..
ஆசிவகத்தின் நிறுவனர் என்று கருதப்படும் மற்கலி கோசலாரின் பிறப்பு பற்றியத்தகவல் சமணநூலான
பகவதி சூத்திரத்தில் காணப்படுகிறது. இரந்துண்ணும் தொழில் செய்யும் “மன்கலி’ என்பவருக்கு மகன் எனும் பொருள்படும் “மன்கலிபுத்தர்’ என்பவர் பிறந்தார். இவர் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த காரணத்தால் ‘கோசாலர்’ என அழைக்கப்பட்டார்.
( History and doctrines ajivikas - A.l.Basham.
Pa - 16 )
எங்கோ வட இந்தியாவில் பிறந்த இவர் எப்படி தமிழகத்தில் திருபட்டூரில் பிறந்திருக்கமுடியும்.
இவர் எப்படி சாத்தன் என்னும் ஐயனாராக முடியும்..
ஆசீவகத்தின் மூலம் எது என்றத் தேடலைத் தொடங்கினால்.. வடக்கே அமைந்துள்ள அசோகனது காலத்திற்குகுச் செல்லவேண்டும்.. இங்குதான் ஆசீவகம் பற்றிய முதல் தரவும் நமக்குக் கிடைக்கிறது.
அசோகர் கல்வெட்டில்தான் ஆசீவகம் என்னும் சொல் இடம் பெறுகிறது.
பேரரசர் அசோகரது வாழ்க்கை வரலாற்றை ஒட்டி எழுதப்பட்ட. ஒரு நூல் அசோகவதனம்.
இந் நூல் மதுரா பகுதியில் இருந்த பௌத்த பிட்சுகளால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்டதாகும்.
அசோகர் பௌத்த சமயத்தை பரப்பிய வரலாற்றை பதிவு செய்யும் ஒரு நூல்.
இந்நூலை சீன பௌத்த அறிஞரான பாசியான் என்பவர் சீன மொழியில் மொழிபெயர்த்துள்ளார். கிபி 500ல் ஆ-வு-வாங் எனும் பெயரில் சீன மொழியில் இந்நூலின் மறுபதிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இந்நூல் பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்தது.
1923ல் ஜீன் பிர்சிலுஸ்கி என்பவரால் பிரான்சு மொழியிலும், 1983ல் ஜான் எஸ். ஸ்டிராங் என்பவரால் ஆங்கிலத்திலும் இந்நூல் மொழிபெயர்க்கப்பட்டது
அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்ட நூல்...
' The legend of king Asoka "
( a study and translation of the Asokavathna)
John.s.stornge.
அசோகவதனா நூலில் காணப்படும்
தரவுகள்.
இளமைப்பருவத்தில் அசோகரை மகதத்தின் மன்னராக்க
அவரது தந்தை விரும்பவில்லை.
அசோகர் தனது சிற்றன்னையின் மகனான தனது சகோதரனை கொன்றும் மகத நாட்டின் ஐநூறு அமைச்சர்களைக் கொன்றும் பின்னர் தானே மகத நாட்டு மன்னர் என அறிவித்துக் கொண்டார்
அந்தப்புரப் பெண்கள் அசோகனை வெறுத்ததால் அவர்களை
தீயில் தள்ளி எரித்துக்கொன்றார்.
தன்னை மதிக்காத அனைவரையும் சித்திரவதை செய்ய, அரண்மனை வளாகத்தில் அசோகரின் நரகம் என அழைக்கப்பட்டப் பெரிய சித்திரவதை கூடத்தை நிறுவினார்.
ஒரு முறை சாதுவான ஒரு பௌத்த பிக்குவைச் சந்தித்த பின்னரே, அசோகர் அன்பு மற்றும் சமாதானத்தின் பெருமையை உணர்ந்து பௌத்த சமயத்தை பின்பற்றத் துவங்கி, தனது பேரரசில் 84,000 பௌத்த தூபிகளை நிறுவினார்.
அசோகர் பௌத்த சமயத்தை மௌரியப் பேரரசு முழுவதும் பரப்பினார்.
பௌத்த பிக்குகள் மற்றும் பிக்குணிகள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர்.
புத்த தர்மம் கொண்டாடப்பட்டது.
அசோகரின் இளையராணி திஸ்யாரக்சிதாவின் தூண்டுதலில் பேரில், அசோகரின் மகனான குணாளனின் கண்கள் பிடுங்கப்பட்டதையும், பின் குணாளன் பௌத்த பிக்குவாக மாறி போதி ஞானத்தை அடைந்ததையும், இறுதியில் குணாளன் தந்தையான அசோகரிடம் மீண்ட கதையும் கூறப்பட்டுள்ளது.
அக்காலக்கட்டத்தில் பௌத்தத்திற்கும்..
சமணத்திற்கும் கடும்போர். வாக்குவாதம். தர்க்கரீதியான மோதல்கள். வன்முறை வெறியாட்டம்.
சமணத்திலிருந்து பிரிந்து சென்ற ஒரு அமைப்பாக ஆசீவகம் என்னும் மதக்கோட்பாடு கொண்டவர்களும் மிகுந்திருந்தனர்.
சமணத்திற்கும், ஆசீவகத்திற்கும் ஆகவே ஆகாது என்பது தனிக்கதை என்றாலும்..
அசோகரது ஆட்சியில் பௌத்தத் தூண்டுதலின் பேரில் ஆசீவகர்கள் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்டார்கள்.
ஒரு நாள்
கௌதம புத்தர், மகாவீரர் காலடியில் அமர்ந்திருப்பது போன்ற ஒரு ஓவியத்தை வரைந்த சமணத் துறவியைக் கைது செய்து அவரை கொலை செய்ய ஆணையிடுகிறார் அசோகர்.
மற்றொரு நிகழ்வில் மௌரியப் பேரரசில் வாழ்ந்த 18,000 ஆசீவகத் துறவிகளை கொல்ல அசோகர் ஆணையிடுகிறார்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரு ஆசீவகர், புத்தரை இழிவு படுத்தி ஓவியம் வரைந்தமைக்கு, அசோகர் ஆசீவகரையும்,
அவரது குடும்ப உறுப்பினர்களையும் வீட்டில் வைத்து உயிருடன் எரித்தார்.
சமணத் துறவிகளின் தலையைக் கொண்டு வருவர்களுக்கு ஒரு தினா ( வெள்ளி அல்லது தங்க நாணயம்) பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
பேரரசு முழுவதும் தேடித்தேடி ஆசிவகர்களும் சமணத்துறவிகளும் கொல்லப்பட்டார்கள்.
அசோகரின் இந்த ஆணைப்படி, ஒரு இடையர் அசோகரது தம்பியும், பௌத்த துறவியுமான விதாசோகரை, சமணத் துறவி எனத் தவறாக நினைத்து, விதாசோகரின் தலையைத் துண்டித்தான்.
இதனைக்கண்டு வருத்தமுற்ற அசோகர் சமணத் துறவிகளின் தலையைத் துண்டிக்கும் ஆணையை ரத்துசெய்தார்.
மேற்கண்ட அனைத்துத் தகவல்களையும் அசோகவதனம் நூல் பதிவு செய்கிறது.
இதை மேலும் மெய்பிக்கும் சான்றாக அசோகரது கல்வெட்டு ஒன்றும் உறுதிசெய்கிறது.
தனது ராஜ்யத்தில் உள்ள அனைத்து மத காரியங்களையும் பௌத்தபிக்குவே கவனிப்பார். பிராமணர், ஆசீவகர், சமணர் மற்றும் மற்ற மதத்தார் அனைவரும் தமது மதச்செயல்பாடுகளை பௌத்தபிக்குவிடம் ஒப்படைக்கவேண்டும்.
சாசனத்தின் தமிழாக்கம்..
" தேவர்களுக்குப் பிரியனான பியதஸி இப்படிச் சொல்லுகிறான். என் தர்ம மகா மாத்திரரிடம் பல நற்காரியங்களை நான் ஒப்பித்திருக்கிறேன். கிருகஸ்தர்களுக்கும் துறவிகளுக்கும் பற்பல மதஸ்தர்களுக்கும் வேண்டிய உபகாரங்களை அவர் செய்துவருகின்றனர். மேலும் (பௌத்த) ஸங்கத்தின் காரியங்களையும்
அவரிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அதுபோலவே பிராமணர் ஆஜீவகர்களுடைய காரியங்களையும் அவரிடம் ஒப்புவித் திருக்கிறேன். அதுபோலவே நிர்கிரந்திகளின் (ஜெயினரின்) காரியங்களையும் அவரிடம் ஒப்புவித்திருக்கி றேன். எல்லா மதத்தாரின் காரியங்களையும் அவர் கவனித்து வரவேண்டும். சாதாரண மகாமாத்திரர் தந்தம் வேலையை மட்டும் பார்ப்பார்கள். தர்ம மகாமாத்திரரோ எல்லா மதங்களின் காரியங்களையும் பார்வையிட வேண்டும்.
.(அசோகனது பெரும் தூண் சாசனங்கள்
எண் - 7)
கல்வெட்டில் முதன்முதலாக ஆசீவகம் என்னும் சொல் இடம்பெறுகிறது.
அதாவது..
பௌத்தம் மட்டுமே தனது இராஜ்யத்தில் இடம்பெறவேண்டும். மற்ற மதங்களுக்கு இங்கே இடமில்லை என்பதாகும்..
இந்த கொடூரத்தாக்குதலில் இடம்பெயர்ந்த சமணர்களும் அவர்களின் ஒரு பிரிவான ஆசீவகமும் தமிழகத்தில் நுழைந்தது...
அதாவது ஆசீவகம் என்பது தமிழகத்தில் தோன்றியது அல்ல. வட இந்தியாவில் தோன்றியது. அசோகரால் அழிக்கப்பட்டது.
---------------------------------
ஆகவேத் தோழர்களே..
தமிழர்களின் மெய்யியலையும் பாரம்பரிய வழிபாடுகளையும் தமிழ் நிலத்தில் தேடுங்கள்.
வடக்கிருந்து வந்த ஒன்று ஏன் தமிழர்களின் மெய்யியலாக வேண்டும்.
அன்புடன்..
மா.மாரிராஜன்.
( Ref.
The legend of king asoka.. john s.storng.
Page 147 & 148 )
பின்குறிப்பு..
ஆசீவகம் பற்றி ஒரு முழுமையான நூலை முதன்முதலில் எழுதியவர் வரலாற்று பேரரரிஞர் A.i. பாஷ்யம் அவர்கள்.
" History and doctrines of ajivikas "
( A vanished india religion)
இந்நூலில் தென்னிந்தியாவில் காணப்படும் ஆசீவகநெறியின் தரவுகளை மற்றொரு பதிவில் தொடர்கிறோம்.

இல்லாத தமிழ் மதத்தை உருவாக்குதல் - முனைவர் நெடுஞ்செழியனின் செப்பிடு வித்தை
‘பேசு தமிழா பேசு’ வலையோடையில் முனைவர் ஆசீவக சுடரொளி என்பார் பச்சைப் பட்டுடுத்திப் பேசும் இரு பாகக் காணொளியை நேற்றுப் பார்க்க நேரிட்டது. அந்தப் பேச்சில் ஒளிர்ந்த தன்னம்பிக்கை ஆச்சரியத்தை அளித்தது.
ஆசீவகம் (ஆஜீவக) என்ற மதம் குறித்து இன்று தமிழ் வலையோடைகளில் பலர் பேசிவருகிறார்கள். சில புத்தகங்கள் வந்துள்ளன. ஆஜீவகம் குறித்து முழுப் புத்தகம் ஒன்றை முதலில் எழுதியவர் ஏ.எல்.பாஷாம் என்பவர். இந்தியவியலாளர். பிரிட்டிஷ்காரர். The Wonder that was India என்ற புத்தகத்தை எழுதியதன்மூலம் இந்தியாவில் பெரும்புகழ் பெற்றவர். இப்புத்தகம் தமிழில் ‘வியத்தகு இந்தியா’ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஷாமுடைய முனைவர் பட்ட ஆராய்ச்சி ஆஜீவகர்களைப் பற்றியது. மேலே சொன்ன இந்தியா குறித்த புத்தகத்துக்கு முன்னதாகவே ஆஜீவகர்கள் குறித்த அவருடைய புத்தகம் வெளியாகியிருந்தது. “History and Doctrines of the Ajivikas, A Vanished Indian Religion” என்பதுதான் அதன் பெயர். archive.org தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
பாஷாமின் இந்தப் புத்தகத்துக்கு அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், முனைவர் விஜயலட்சுமியின் “தமிழகத்தில் ஆசீவகர்கள்” என்பதை மட்டுமே சொல்லமுடியும். [உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதல் வெளியீடு, கிழக்கு பதிப்பகத்தின் மறுவெளியீடு.]
பாஷாமிடமிருந்து நாம் தெரிந்துகொள்வது இதுதான். நேரடியாக ஆஜீவக நூல் எதுவும் நமக்குக் கிட்டவில்லை. பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட பௌத்த, ஜைன நூல்களிலிருந்து நமக்கு மக்கலி கோசாலர் (Makkhali Gosala) என்பவர் குறித்துத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுவும் எதிர்மறையாக.
சாமக்ஞபலசுத்த என்ற பௌத்த நூலில் ஆறு துறவிகள் பெயர் வருகிறது. பேரரசன் அஜாதசத்ரு ஆன்மிக நாட்டம் கொண்டவனாக, சரியான குருவைத் தேடும்போது, பூரண கஸ்ஸபர், மக்கலி கோசாலர், அஜித கேசகம்பளி, பகுட கச்சாயனர், சஞ்சய பெலதிபுத்தர், நிகந்த நாடபுத்தர் என்ற அறுவரை மன்னரின் மந்திரிகள் அறிமுகப்படுத்துகின்றனர். இறுதியில் ஒரு மந்திரி புத்தரை அறிமுகப்படுத்த, அவர் மன்னரின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்கிறார்.
பகவதீ சூத்திரம் என்ற ஜைன நூல், மக்கலி கோசாலரும் இறுதி ஜைன தீர்த்தங்கரரான மகாவீரரும் சேர்ந்தே சுற்றிவந்ததாகச் சொல்கிறது. மக்கலி பொறாமை பிடித்தவராக, அவசரக் குடுக்கையாக, கெட்டவராகக் காட்டப்படுகிறார். மக்கலி ஒரு மந்திரத்தை மகாவீரரிடமிருந்து தெரிந்துகொள்ள முற்படுகிறார். ஆனால் அதற்கெல்லாம் தீவிர தவம் செய்யவேண்டும் என்று மகாவீரர் அவரைத் துரத்திவிடுகிறார். பின்னர் மக்கலி தன் தவத்தின்மூலம் அந்த மந்திரத்தைத் தெரிந்துகொள்கிறார். பின் தனக்கென ஒரு தத்துவத்தை (ஆஜீவகம்) உருவாக்கிக்கொள்கிறார்.
சில ஆண்டுகளுக்குப்பின் மகாவீரர் மீண்டும் மக்கலி கோசாலரைச் சந்திக்க, இருவரும் வாதம் புரிகிறார்கள். மகாவீரர் மக்கலியைத் தோற்கடிக்கிறார். மக்கலி மகாவீரர்மீது மந்திரத்தை ஏவி, உன்னைக் கொன்றுவிடுவேன் என்கிறார். ஆனால் அந்த மந்திரம் ஏவியவன்மீதே பாய்ந்து ஜுரம் வந்து ஒரு வாரத்துக்குள் மக்கலி இறந்துவிடுகிறார்.
***
பாஷாமின் புத்தகம் இங்கு தொடங்கி பிற ஆஜீவகர்களைப் பற்றிப் பேசுகிறது. பூரண கஸ்ஸபரும் பகுட கச்சாயனரும் மக்கலி கோசாலரின் கருத்துகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள். பௌத்த ஜாதகக் கதைகளில், பௌத்த சுத்தங்களில் மக்கலி கோசாலரைப் பற்றி மட்டுமின்றி, பூரணரைப் பற்றியும் பகுடரைப் பற்றியும் தகவல்கள் உள்ளன. ஆஜீவகக் கொள்கை பற்றி பௌத்த, ஜைன நூல்களிலிருந்து எடுத்தவற்றை பாஷாம் தொகுத்து விளக்குகிறார்.
அத்துடன், மூன்று தமிழ் நூல்களில் ஆஜீவகக் கொள்கை பற்றி வரும் கருத்துகளை ஒரு சிறு அத்தியாயத்தில் கடைசியாக இணைக்கிறார். இவை முறையே, மணிமேகலை (பௌத்தம்), நீலகேசி (ஜைனம்) மற்றும் சிவஞான சித்தியார் (சைவம்).
எப்படி பௌத்தமும் ஜைனமும் வடக்கில் தோன்றி இந்தியா முழுதும் பரவி தமிழகம் வந்தனவோ, அதேபோல ஆஜீவகமும் வந்திருக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் (5-ம் நூற்றாண்டு) இறுதியில் மணிமேகலை துறவு மேற்கொள்ள விழைகிறாள். சேர நாடு சென்று அங்கு வெவ்வேறு சமயத்தைப் பின்பற்றுவோரிடம் அவர்களது சமயம் பற்றிக் கேட்டறிகிறாள். அப்போதுதான் ஆஜீவகம் குறித்தும் அவள் தெரிந்துகொள்கிறாள். இறுதியில் இவை யாவும் வீண் என்று முடிவு செய்து, காஞ்சிபுரம் வந்து பௌத்தத்தை ஏற்று, பிக்குணி ஆகிறாள்.
நீலகேசியில் (12-ம் நூற்றாண்டு), நீலகேசி என்ற பூதம், ஜைனத் துறவி ஒருவரைக் கொல்ல முற்பட்டு, முடியாமல் அவரிடம் போதனை பெற்று, போகும் வழியெல்லாம் பிற சமய ஆட்களுடன் வாதிட்டு அவர்களை ஜைன மதத்துக்கு மாற்றுகிறது. அப்போதும் ஆஜீவகம் குறித்து விவாதம் நிகழ்கிறது.
சிவஞான சித்தியாரை இயற்றிய அருள்நந்தி சிவாச்சாரியார் (14-ம் நூற்றாண்டு), சுபக்கம் (தன்தரப்பு), பரபக்கம் (எதிர்த்தரப்பு) என்ற இரு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு எதிர்த்தரப்பைப் பற்றிப் பேசும்போது ஆஜிவகத்தையும் எடுத்துக்கொண்டு விளாசித் தள்ளுகிறார்.
முனைவர் விஜயலட்சுமி இந்த நூல்களை அடிப்படையாக வைத்து ‘தமிழகத்தில் ஆசீவகம்’ என்னும் நூலை எழுதியுள்ளார். தமிழகத்தில் ஆஜீவகக் கொள்கைகள் எவ்வாறு பரவியிருந்தன என்பதை விவரிக்கிறார். சில கல்வெட்டுகளை எடுத்துக்கொண்டு அவற்றில் ‘ஆசுவ’ என்று வரும் சொற்களை ஆராய்ந்து அது ஆசீவகத்தைக் குறித்திருக்கலாமா இல்லையா என்று முடிவு செய்கிறார். பிற சங்க இலக்கியங்களில் ஆஜீவகக் கருத்துகள் எங்கெல்லாம் இருந்திருக்கலாம் என்பதை விரிக்கிறார் [கணியன் பூங்குன்றனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’].
ஆஜீவகக் கொள்கைகளுக்கும், பௌத்த/ஜைன/இந்துக் கொள்கைகளுக்குமான வித்தியாசங்களை இந்த இரு புத்தகங்களிலிருந்தும் நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இரண்டுமே நம்பிக்கைக்குகந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் உருவானவை. மூல நூல்களை ஆராய்ந்து, அவற்றின் உரைகளை ஆழ்ந்து கற்று, குறைந்தபட்சம் நான்கு மொழிப் புலமைகொண்டு (பாலி முதலான பிராகிருதங்கள், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம்), சர்வதேச ஆய்விதழ்களில் அதுவரை வெளியான கட்டுரைகளை ஆராய்ந்து தெளிவாக, ஆய்வுநடையில் எழுதப்பட்டவை.
***
அதன்பின் தமிழகத்தில் ஒரு குடிசைத் தொழில் தொடங்குகிறது. இதனை முதன்முதலில் தொடங்கிவைப்பவர் முனைவர் நெடுஞ்செழியன் என்ற திராவிட இயக்க அறிஞர். இவர் ஒரு காணொளியில் தெளிவாகவே, ‘என்னப் பேரறிஞர் என்று கூறாதீர்கள், நான் வெறும் பேராசிரியர் மட்டுமே, பேரறிஞர் என்றால் அது அண்ணா ஒருவர் மட்டுமே” என்கிறார். அதன்பின், அண்ணா அவர்கள் Fish என்பதற்கு ஆங்கிலத்தில் தந்த ஸ்பெல்லிங்கைச் சுட்டிக்காட்டுகிறார். தமிழ் ஒன்றுமட்டுமே எழுதுவதைப்போல பேசும், பேசுவதைப் போல எழுதும் மொழி என்கிறார். [இந்திய மொழிகள் அனைத்தும் இப்படிப்பட்டவை, உலகின் வேறு பல மொழிகளும் இவ்வகையானவையே. ஆனால் தமிழ்நாட்டில் இம்மாதிரியான உயர்வுநவிற்சிக்குக் குறைவே இல்லை.]
நெடுஞ்செழியன், ஏதோ ஒரு கட்டத்தில் திராவிட இயக்கத்தையும் தமிழ் மொழி ஆராய்ச்சியையும் விட்டுவிட்டு, மிச்சமுள்ள தன் வாழ்நாள் முழுவதையும் ஆஜீவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார். மிக சமீபத்தில்தான் உயிரிழந்தார்.
இவருடைய அடிப்படைக் கருத்துகளை சுமாராக இப்படிச் சொல்லலாம்.
ஆஜீவகம் தமிழகத்தில் தோன்றியது. இங்கிருந்துதான் அது வடக்கு நோக்கிச் சென்றது. ஆஜீவகத்தில் கடவுள்கள் உண்டு. அவர்கள்தான் ஐயனார்கள். தமிழகத்தில் நீங்கள் காணும் ஐயனார் கோவில்கள் அனைத்துமே ஆஜீவக மதத்தின் கோவில்கள். [இது பாஷாம், விஜயலட்சுமி போன்றோர் சொல்லாதவை. வேறு எந்த தீவிர அறிஞரும் சொல்லாதவை. நமக்குக் கிடைத்துள்ள எந்த நூல்களிலும் இல்லாதவை.]ஆஜீவகத்தில் மூன்று ஐயனார்கள் உண்டு (ஐயாவின் அடியொட்டி வரும் சிலர் மிகப்பல ஐயனார்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள்) - பூரணர், மக்கலி, பகுடர் என்று மேலே பாஷாம் போன்றோர் குறிப்பிட்டோரே இந்த ஐயனார்கள். தமிழர்களின் ஆதிமதம் ஆஜீவகமே.
நெடுஞ்செழியன் கருத்தின்படி, தொல்காப்பியம் கிமு (பொயுமு) 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்துமதத்தின் தொன்மை நூலான ரிக்வேதம் தமிழகத்தில்தான் தொகுக்கப்பட்டு எழுத்தில் வடிக்கப்பட்டது. அதன்பின்னரே அது ‘எழுதாக் கிளவி’ ஆயிற்று. கிபி (பொயு) ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் பக்தி இயக்க மறுமலர்ச்சியின்போது ஆஜீவகம் அழிக்கப்பட்டது, அவர்களுடைய கோவில்கள் பிடுங்கிக்கொள்ளப்பட்டன. முக்கியமாக சைவர்கள் ஆஜீவகத்தின் பெரும் எதிரிகளாக இருந்தனர். பல நேரங்களில் வைணவர்கள் ஆஜீவகர்களுக்குத் தஞ்சம் கொடுத்தனர். அவ்வாய்ப்பில் ஆஜீவகர்களின் கடவுள்களையும் கருத்துகளையும் திருடிக்கொள்ளவும் செய்தனர்.
உதாரணமாக, இரண்டு யானைகளைக் கொண்ட லட்சுமி, ஆஜீவகத்தின் கொடை. சைவ, வைணவக் கோவில்களில் வாயிற்கதவு மேல் (லலாடபட்டம் என்று பெயர்) இந்த அமைப்பைக் காணலாம். [உண்மையில் ஜைன, பௌத்த வழிபாட்டிடங்களிலும் கஜலட்சுமி இருப்பது வழக்கம்.] யானைதான் ஆஜீவகத்தின் குறியீடு. எங்கெல்லாம் கோவிலில் தனியாக நரசிம்மர் சந்நிதி உள்ளதோ அந்தக் கோவில்கள் எல்லாமே ஆஜீவக வழிபாட்டிடங்களாக இருந்து சிங்கம் யானையை அடித்துத் துரத்தியதுபோல் வைணவக் கோவில்களாக மாற்றப்பட்டன.
இப்படி விரிவான கள ஆய்வுகளைச் செய்துள்ள நெடுஞ்செழியன், ‘ஆசீவகமும் ஐயனார் வரலாறும்’ என்று பெரும் புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார்.
***
ஏற்கெனவே அயோத்திதாச பண்டிதர், கற்பனை ஒன்றை மட்டுமே மூலதனமாக வைத்து வரலாற்றை எழுதிவிடலாம் என்று காட்டியுள்ளார். இன்று தமிழகத்தின் அறிவுஜீவிகளும் பேராசிரியர்களும் அதே வழியைப் பின்பற்றுகின்றனர். ஏன் தமிழகம் உட்பட்ட இந்தியா முழுதும் பௌத்த பூமியாக இருக்கவேண்டும், அது ஏன் ஆஜீவக பூமியாக இருக்கக்கூடாது என்று நெடுஞ்செழியன் கண்ட கனவு இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது.
முனைவர் ஆசீவக சுடரொளி போன்றோர் அந்த வழியில் வருபவர்கள். நெடுஞ்செழியன் நான்கடி பாய்ந்தால் அடுத்து அறுபத்து நான்கடி பாயத் தயாராக இருக்கிறார்கள். கடல்கொண்ட குமரிக் கண்டத்தில் பாண்டியர்கள் காலத்தில் உருவான மதம்தான் ஐயனாரிய ஆஜீவகம். ராஜசேகர பாண்டிய மன்னன் (அப்படி ஒருவரைப் பற்றி நீங்கள் வரலாற்றில் கேட்டதேயில்லையா? அது உங்கள் தவறு) , சொரிமுத்து ஐயனார், சபரிமலை ஐயப்பன், முருகன் யார், மக்கலி கோசாலர் யார் (மாகாளி ஐயனார்!), பூரண கஸ்ஸபர் யார் (பூரண ஐயனார்) போன்ற பலவற்றை பேசு தமிழா பேசு காணொளியில் விரிவாகப் புட்டுப் புட்டு வைக்கிறார்.
தமிழகம் புண்ணிய பூமி. ஒரே காலகட்டத்தில் இங்கே தொ.பரமசிவம், க.நெடுஞ்செழியன் போன்றோர் வாழ்ந்து புதுப்புது அறிவுக் கோட்பாடுகளைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நூற்றாண்டு முன்னர் அயோத்திதாச பண்டிதர் இருந்திருக்கிறார். மல்ட்டிவெர்ஸ் என்னும் கருத்தாக்கம்போல ஒரே தமிழகம்தான் - ஆனால் அதன் பல்வேறு பிரபஞ்ச வகைக்குள்ளே ஆஜீவகத் தமிழகம் இருக்கிறது, சிறுதெய்வத் தமிழகம் இருக்கிறது, பௌத்தத் தமிழகம் இருக்கிறது. ஒரே நேரத்தில் இவை எல்லாமே மூல முதல் காரணியாக இருந்திருக்கின்றன. ஒரே நேரத்தில் இவை மூன்றிடமிருந்தும் ஒரே கருத்துகளை வைதீக இந்து மதம் திருடியிருக்கிறது.
ஹீரோக்கள் வெவ்வேறு என்றாலும் வில்லன் ஒன்றே ஒன்றுதான்.


ஆசீவகமும்-அரசியலும்
22.04.2021 "இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும்","article Body":" இந்தியாவைப் பற்றி நூல்கள் எழுதியுள்ள பல வெளிநாட்டுப் பயணிகளுள் அல்பெரூணி என்ற பாரசீகப் பயணி, \"இந்தியர்கள், தத்துவம், கணிதம், வானியல் இவற்றில் சிறந்தவர்கள், சாதாரணமாகத் தெருக்களில் கூடும் மக்கள் கூட தத்துவ விவாதங்களைச் செய்கின்றனர்' என்று பதிவு செய்திருக்கிறார். அந்த அளவுக்கு இந்த தேசம் தத்துவ மரபில் திளைத்தது. இந்திய தத்துவ மரபு அறிவார்த்தமானது என்பதோடு இரு விதமான ஆராய்ச்சிகளைத் தன்னகத்தே கொண்டது.
இந்த உலகில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி சுகமாக வாழ்வது எனக் கண்டறிவது ஒருவித அறிவியல் ஆய்வு. மற்றொன்று, இந்த உலகிற்கு நாம் எதற்காக வந்திருக்கிறோம் என்பதனை அறிவதற்கான ஆய்வு. இரண்டிலும் பாரத தேச அறிஞர்கள் வெற்றி கொண்டவர்களாக இருந்தனர். "மதம் என்றால் "கருத்து; என்று பொருள். தத்துவங்களின் அடிப்படையிலேயே சமயங்கள் இந்தியாவில் துளிர்த்தன.
ஆதிசங்கரர் எழுபத்துரண்டு மதங்களை தர்க்கத்தில் வென்று அத்வைதத்தை நிலைநாட்டினார் என்று சொல்கிறார்கள். எனில், எழுபத்துரெண்டு விதமான சித்தாந்தங்கள் இங்கே இருந்திருக்கின்றன. சமணமும் பெளத்தமும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின என்றால் இன்னும் சில சமயங்களும் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அவற்றுள் ஒன்று "ஆசீவகம்; இதனை "அஜீவகம்' என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு.
ஆசீவகம் தமிழகத்தில் இருந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனால், முற்றிலும் அழிந்து போன சமயங்களில் ஒன்று ஆசீவகம். அது பற்றிய நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சமண, பெளத்த நூல்களில் அந்த சமயம் பற்றியக் குறிப்புகள் கிடைக்கின்றன. அவற்றுள் முக்கியமானது \"மணிமேகலை'. பெளத்தக் காப்பியமாக அறியப்படும் மணிமேகலையில், \"சமயக் கணக்கர் திறம் கேட்ட காதை'யில் மணிமேகலை பத்து சமயங்களைச் சேர்ந்தவர்களோடு விவாதம் செய்வதாக வருகிறது. அதிலே ஆசீவக சமயமும் ஒன்று. ஆசீவகத்தைச் சேர்ந்த அறிஞரிடம் ஊழ் பற்றிய வினாக்களை மணிமேகலை எழுப்புகிறாள். அதனால் ஆசீவகம் ஊழ் (விதி) பற்றிய நம்பிக்கையுடைய சமயம்.
ஊழ் கோட்பாட்டை முழுமையாக நம்பியது என்பதோடு இறை மறுப்புக் கொள்கையையும் ஆசீவகம் கொண்டிருந்ததாக குறிப்புகள் உள்ளன. இறை நம்பிக்கையை மறுப்பது, ஊழ் கோட்பாட்டை வலியுறுத்துவது இரண்டும் வெவ்வேறு தளங்களில் அமைந்தவை. வைதிக சமயத்திற்கு எதிரானது ஆசீவகம் என்றும் கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தக் கருத்துகளில் உடன்படுவதும் மாறுபடுவதும் அவரவர் விருப்பம். ஆசீவகம் பற்றிப் பேசுவோர் அது தமிழர் மதம் என்றும் தமிழர்கள் இந்துக்கள் அல்ல ஆசீவகர்கள் என்றும் ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். தமிழகம் முழுவதும் தமிழர்கள் அனைவரும் பின்பற்றிய சமயம் ஆசீவகம் என்பதான பிம்பத்தை கட்டமைப்பதற்கான அவசியம் என்ன? ஆன்மிக உலகம் பேசாத இந்த சமயம் பற்றி அரசியல் உலகம் பேசுவதற்கான காரணம் என்ன? தமிழன் ஹிந்து அல்ல என்று அவனை ஒரு பெரும் குழுவிலிருந்து பிரித்து நிறுத்துவதற்கான காரணம் என்ன? ஆசீவகம் வைதிக சமயம் என்றழைக்கப்படும் ஹிந்து தத்துவங்களுக்கு எதிரானது என்ற கருத்து ஏற்புடையதல்ல. விதிப்படி வாழ்க்கை என்பதும் மறுபிறவிக் கோட்பாடும் வைதிக சமயம் என்று சொல்லப்படும் சனாதனத்தின் கோட்பாடுகள். சனாதனம் உருவ வழிபாட்டை ஏற்கிறது. நல்வினை, தீவினை என்னும் நம்பிக்கையும் சனாதனத்தின் பாற்பட்டதே. இதில் ஆசீவகத்தின் தனித்துவம் என்று ஒன்றும் இல்லை. ஆசீவகம் தெய்வம் இல்லை என்ற கொள்கை கொண்டது. தமிழர்கள் தங்கள் வாழ்வியலில் முதற்பொருளாக தெய்வத்தைக் கருதியவர்கள். சிவன், முருகன், கொற்றவை, வருணன், இந்திரன் என்று பல தெய்வங்களை வணங்கி வழிபட்டவர்கள். உண்மை இப்படி இருக்க எப்படி ஆசீவகம் தமிழர் மதம் ஆகும்?
ஆசீவகம் துறவறத்தை வலியுறுத்திய மதம், நிர்வாண நிலை அடைவதே நோக்கம் என்று அனைவருமே ஒப்புக் கொள்கின்றனர். சீவகம் என்றால் வாழ்தல் ஆசீவகம் என்றால் வாழ்வைத் துறத்தல் என்று பொருள் வழங்கியது. சமீப காலமாய் ஆசீவகம் என்றால் ஆசு ஈவு அகம் எனப்பிரித்து பிழையற்ற தீர்வு தரும் இடம் என்று பொருள் தருகிறார்கள். அப்படியெனில் மக்கள் ஒட்டுமொத்தமாக அதனைப் புறக்கணித்து இிருப்பார்களா?
ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர் மற்கலிகோசலர் என்கின்றனர். வரலாற்று அறிஞரான ஏ எல் பாக்ஷம் தனது \"வியத்தகு இந்தியா' என்ற நூலில், சமண சமயத்தைத் தோற்றுவித்த மகாவீரரும் மற்கலிகோசலரும் பதினெட்டு ஆண்டுகள் ஒன்றாகவே தவம் செய்ததோடு தேசமெங்கும் யாத்திரை செய்தனர் என்றும் திகம்பர ஜைனர்கள் என்று சொல்லப்படும் ஆடைகளையும் கூடத் துறந்துவிட்ட நிலையை மற்கலிகோசலர் அறிமுகம் செய்தார் என்றும் அதிலே மஹாவீரர் உடன்படவில்லை என்றாலும் அனைத்தையும் துறப்பது என்ற வகையில் ஏற்புடையது என்று ஒப்புக் கொண்டதாகவும் பதிவு செய்திருக்கிறார். திகம்பர ஜைனத்தை தோற்றுவித்தவரை தமிழர் என்று ஏற்பதா?
வரலாற்றில், சந்திரகுப்தரின் மகனான பிந்துசாரர் ஆசீவகத்தை ஆதரித்தார் என்று குறிப்புகள் இருக்கின்றன. தமிழகத்தில் அப்படி ஆதரித்த மன்னர்கள் பற்றி குறிப்பு எங்கும் இல்லை. மஹாவீரரோடு வாழ்ந்தவர் தமிழரின் மதத்தை ஸ்தாபித்தார் என்பது அறிவுடைமை ஆகுமா? உத்தர பிரதேசம், பிகார் பகுதிகளில் பெருமளவில் நிலவிய இந்த சமயம் தமிழகத்திலும் இருந்தது என்பதை ஏற்கலாமே அன்றி அதைத் தமிழரின் சமயம் என்று ஏற்க முடியுமா?
மற்கலிகோசலரோடு இணைந்து இந்த சமயத்தைப் பரப்பியவர்கள் பூரண காசியபர், பகுத கச்சானர். இவர்கள் இருவருமே தமிழர்கள் இல்லை. திவ்யம், ஒளத்பாதம், ஆந்தரிக்ஸம், பெளமம், அங்கம், சுவாரம், வியஞ்சனம் என ஆசீவகம் பற்றிய நூல்கள் இருந்தன என்று சொல்லப்படுகிறது. இதிலும் தமிழ் இல்லை. தமிழரின் மதக் கோட்பாடுகள் தமிழ் அல்லாத மொழியில் இருக்கலாம் என்பதை ஏற்போமாயின் வேதத்தையும் தமிழர்களுக்கானது என ஏற்பதில் என்ன பிழை இருக்கிறது?
எல்லாவற்றிற்கும் மேலாக ஆசீவகத்தின் வடிவம்தான் தமிழகத்தில் இருக்கும் ஐயனார் வழிபாடு என்று அரசியலை தமிழகத்தின் கிராமங்களுக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வோர். ஐயனார்தான் மற்கலிகோசலர் என்று புத்தகம் எழுதும் அளவுக்குத் துணிந்திருக்கிறார்கள். ஐயனார் தமிழகத்தின் பெரும்பாலானவர்களின் குலதெய்வம். ஐயனார் ஆலயங்களில் ஆயுதமேந்தி நிற்கும் போர்க்கோலம் கொண்ட ஐயனாரைக் காணலாம். இவர் எப்படி நிர்வாண முக்தி பற்றிப் பேசியவர் ஆவார்? தவிரவும், இறை நம்பிக்கையற்ற ஆசீவகம் ஆலயம் எழுப்பி உருவ வழிபாடு செய்வது சாத்தியமா? ஐயனார் ஆலயங்களின் சிறப்பே அங்குள்ள உருவாரங்கள் தான்.
மற்றொன்று, பல பெயர்களில் ஐயனார் உண்டு. ஒவ்வொரு கோயிலில் உள்ள ஐயனாருக்கும் தனித்துவமான வரலாறு உண்டு. பெரும்பாலும் தன் குலத்தைக் காப்பதற்குப் போரிட்டு வீர மரணம் அடைந்தவராக ஐயனார் இருப்பார். \"நடுகல் வழிபாடு' என்பது தமிழர் மரபு. வழிபாட்டை மறுக்கும் சமயத்தை இதோடு தொடர்பு படுத்துவது நகைப்புக்குரியது. மூதாதையர்களை வழிபடும் பித்ரு வழிபாடே ஐயனார் வழிபாடு. ஏனெனில் ஐயனாரை குலதெய்வமாகக் கொண்டவர்கள் அனைவரும் தாயாதிகள். அதனால்தான் அவர்கள் தங்களுக்குள் மணம் செய்துகொள்ளக்கூடாது என்ற விதி இருக்கிறது.
ஐயனார் கோவில்களில் அவருக்குப் பக்கத்தில் அவரது பரிவாரங்களும் துணையாக நிற்கும் தளபதிகளும் வணங்கப்படுகிறார்கள். போர் பற்றிய செய்திகள் அந்தந்தப் பகுதி சார்ந்ததாக இருப்பதையும் காண்கிறோம். உதாரணமாக திருச்செந்தூர் அருகில் அருஞ்சுனை காத்த ஐயனார் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார். அவரது ஆலயம் சுனைகளுக்கு நடுவில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. அந்த நீர்நிலைகளைக் காப்பதற்காக தியாகம் செய்தவர் என்று அவருக்கு வரலாறு உண்டு. இப்படித் தமிழர் வாழ்வோடும் மண்ணோடும் சம்பந்தப்பட்ட ஐயனாரை எங்கோ மகாவீரரோடு இருந்தவர் என்று நிறுவ முயலுவதில் உள்ள அரசியல் என்ன? நீடித்து நிற்கும் உயிர்துடிப்பு மிக்க கலாசாரத்தைத் துண்டாடுவதற்கும் குழப்புவதற்குமான அவசியம் என்ன?
எழுபத்துரண்டு சமயங்கள் இருந்ததாகச் சொல்வதில் உண்மை இருக்கலாம். அவரவர் விரும்பும் தெய்வத்தை, நம்பும் சித்தாந்தத்தைப் பின்பற்றுவதற்கு அனைவர்க்கும் உரிமை உண்டு. விவேகானந்தர் சொன்னதைப்போல "சனாதன தர்மம் ஒவ்வொரு மனிதனும் தனி மதம் என்னும் அளவுக்கு விரிவடையும் தன்மை கொண்டது; சித்தாந்தங்களை உள்ளடக்கியது.
வரலாறு, சமயம் இரண்டும் ஆராய்ச்சிக்கு உட்படவேண்டியவைதான். ஆராய்ச்சி அறிவியல்பூர்வமாய் இருக்க வேண்டுமே அன்றி அனுமானங்களின் அடிப்படையில் இருத்தல் தகாது. ஐயனார் தமிழரின் தியாகத்தை, வீரத்தை, காவல் குணத்தை விளக்கும் வடிவம். அவரை அரசியல் லாபங்களுக்காக அழிந்துபட்ட ஒரு மதத்தின் எச்சமாகக் காட்ட முயல்வது, தமிழருக்கும் தமிழ் மண்ணுக்கும் அதற்காக தன்னையே தியாகம் செய்த ஐயனாருக்கும் செய்யும் அநீதியாகும்.
கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.


No comments:

Post a Comment

Christians grab SC Reserved seats with Hindu Caste Certficates - Supreme courts helps!

Kerala CPM Devikulam MLA - A.RAJA  a practicing CSI Christian had won Kerala assembly elections in 2021 an was disqualified in 2022 - but Su...