கன்னியாகுமரி: 'மாற்று மதம் என்பதால் பெண் கொடுக்க மறுத்து வந்த காதலியின் பெற்றோரிடம், தான் நல்ல வேலையில் சேர்ந்து 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதை தெரிவிக்க சென்ற இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தை அடுத்த செருபாலூர் காவுவிளை பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் தனுஷ் (22). இவர் பள்ளியில் படிக்கும் போது கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
காதலியின் வீட்டில் சடலமாக கிடந்த இளைஞர்
இதனிடையே, கல்லூரி படிப்புக்காக தனுஷ், தனது தாயுடன் கோயம்புத்தூர் சென்று அங்கு கல்லூரி படிப்பை முடித்தார். அவர்களின் காதலும் நீடித்து வந்தது. இதற்கிடையே, இளம்பெண்ணுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முயற்சிப்பதை அறிந்த தனுஷ், தனது காதல் விவகாரத்தை வீட்டில் தெரியப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, தனுஷின் பெற்றோர், தனது உறவினர்களுடன் பல முறை இளம்பெண் வீட்டுக்கு சென்று பெண் கேட்டு வந்தனர். ஆனால் இளம்பெண் வேறு சாதி, வேறு மதம் என்பதால் பெண் வீட்டார் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தனுஷ், காதலி வீட்டின் மொட்டை மாடியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் வீட்டார் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தனுஷின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர்.
இளைஞரின் தந்தை குமுறல்
தகவல் அறிந்து திருச்சியில் இருந்து குலசேகரம் வந்த தனுஷின் தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது மனம் பதறி பேசிய அவர், '' பல முறை பெண் கேட்டபோதும், காதலுக்காக தன் மகன் மதம் மாறுவான் என கூறிய போதும் பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. சின்னஞ் சிறுசுகள் காதலித்து விட்டார்கள் என்று சேர்த்து வைக்க பல முறை முயற்சி செய்தபோதும் பெண் வீட்டார் சம்மதிக்கவில்லை. நாங்கள் பட்டியலின சமூகம் என்பதால் என் மகனை கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். அவன் தற்கொலை செய்யவில்லை. என் மகனுக்கு Rs.60,000/ சம்பளத்தில் வேலை கிடைத்த தகவலை தெரிவிக்க பெண் வீட்டிற்கு சென்றபோது இப்படி நிகழ்ந்துள்ளது. அவன் தெளிவானவன், தற்கொலை செய்திருக்க மாட்டான். இதற்கு நீதி வேண்டும், சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
மேலும், இது தொடர்பாக தனுஷின் தந்தை குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'உண்மைத் தன்மையை வெளிக்கொணர வேண்டும்'
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதள பக்கத்தில், ''மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்த இளைஞர் தனுஷ், மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் சடலமாக கிடந்தது சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வருகிறது. இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை விளக்கம்
நயினார் நாகேந்திரனின் சந்தேகத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ள கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், '' முதற்கட்டமாக சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதது. வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது. இளைஞரின் லேப்டாப் மற்றும் மொபைல் போன் ஆகியவை சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வீட்டின் மேலே இளைஞர் ஏறியதற்கான சுண்ணாம்பு தடம் உள்ளது. இளைஞரை அடித்தது மாதிரியான தடங்கள் எதுவும் இல்லை. பிரேத பரிசோதனை முடிவடைந்து வழக்கு விசாரணையில் இருப்பதால் வழக்கு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்'' என தெரிவித்தார்.