Tamilar Kural - Devapriya- தேவப்ரியா- (Based on Archaelogical,Historical & Theological)
(Historical & Theological view based on International University researches)
Tuesday, June 30, 2026
Times of India- அண்ணாமலை பேட்டி - தமிழில் Ravi Tds
Times of India-க்கு தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி தமிழில் Ravi Tds
பாஜகவில் உங்கள் அரசியல் பயணம் எப்படி இருந்தது?
கடந்த 2020 ஆகஸ்ட் 25 அன்று, பாஜகவில் இணைந்தேன். அது எனக்கு ஒரு சிறந்த பயணமாகவே இருந்தது. நான் தேச ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட, உறுதியான தேசியவாதியாகவே எப்போதும் இருப்பேன். அதே நேரத்தில், ஒவ்வொரு மாநிலத்துக்குமிடையே ஆரோக்கியமான போட்டி இருந்தால் தான், மாநிலங்கள் வளர்ச்சி அடையும், முன்னேறும் என்றும் நம்புகிறேன். பாஜகவில் எனக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவை என்னை ஒரு சிறந்த, முதிர்ச்சியடைந்த மனிதனாக உருவாக்கியிருக்கின்றன. அந்த வாய்ப்புகளுக்காக, நான் என்றும் பாஜகவுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்.
பாஜகவை விட்டு வெளியேற முடிவு செய்தது ஏன்?
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, மக்களுக்கு எந்த வகையில் சிறப்பாக பணி செய்ய முடியும் என்பது குறித்து தொடர்ந்து சிந்தித்து வந்தேன். நமது அரசியல் நோக்கம் திசைமாறிச் சென்று கொண்டிருப்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில், தலைமைப் பொறுப்புக்குச் செல்லும் பாதை, அனைவருக்கும் எட்டும்படி இல்லை. அந்தப் பாதையே முடங்கியிருப்பதாக தோன்றியது. மேலும், கட்சியின் பார்வையிலும், அணுகுமுறையிலும் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஒரு கட்சி தனது சொந்த வலிமையில் வளர வேண்டும். அடிமட்டத் தலைவர்களை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனை முதன்மையாகக் கொள்ள வேண்டும். இளைஞர்கள் அதிகமாக தலைமைக்கு வர வேண்டும். தமிழக பாஜகவுக்கு, தெளிவான, நீண்டகால நோக்கமும், செயல்திட்டமும் தேவை என்பதே எனது எண்ணமாக இருந்தது.
பாஜகவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த அந்த கருத்து வேறுபாடுகள் என்ன?
முதலில், முடிவுகள் எடுக்கப்படும் முறை. கட்சியின் முக்கிய முடிவுகள், டெல்லியில் எடுக்கப்படுகின்றன என்று தமிழக மக்கள் எண்ணும் நிலை இருக்கிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அது சரியான அரசியல் நிலைப்பாடு அல்ல என்று எண்ணுகிறேன். இரண்டாவதாக, தமிழ்நாடு போன்ற மாநிலத்துக்குக் கிடைக்க வேண்டிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினேன். மூன்றாவதாக, ஒவ்வொரு மாநிலத்திலும், உள்ளூர் அளவிலான வலுவான அடிமட்டத் தலைவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பன்முகத்தன்மை இன்னும் வலுவாக இருக்கும். பாஜக மீது எனக்கு எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. எனினும், பல நேரங்களில் என்னால் முழுமையாக செயல்பட முடியாத கட்டுப்பாடுகளை உணர்ந்தேன். தற்போது, சமூகநீதி மற்றும் பன்முகத்தன்மையை மையமாகக் கொண்ட ஒரு புதிய இயக்கத்தை உருவாக்க விரும்புகிறேன்.
இந்த புதிய இயக்கத்தை உருவாக்கும் எண்ணம் எப்போது வந்தது?
கடந்த 2024 ஆம் ஆண்டு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கருத்தரங்கில், அரசியலை கல்வி ரீதியாக ஆழ்ந்து சிந்திக்கும் நேரமும், வாய்ப்பும் கிடைத்தது. உலக நாடுகளின் ஜனநாயக அமைப்புகளையும், ஏன் புதிய அரசியல் இயக்கங்கள் உருவாகின்றன என்பது குறித்தும் நிறைய படித்தேன். கடந்த 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள், இந்திய அரசியலின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கும் எண்ணத்தை ஏற்படுத்தியது. தேசிய அளவிலான அரசியல் கட்டமைப்பில், எனது பணி நிறைவடைந்துவிட்டது என்ற உணர்வு ஏற்பட்டது.
இது குறித்து, கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், எனது எண்ணங்களை கட்சித் தலைமையுடன் பகிர்ந்தேன். அப்போதைய நேரமும், சூழலும், அந்த முடிவுக்கு உகந்தது அல்ல என்று தலைமை கூறியதை மதித்து ஏற்றுக் கொண்டேன். எனினும், ஒத்த சிந்தனை கொண்டவர்களுடன் சேர்ந்து, ஒரு தனித்துவமான இயக்கத்தைத் தொடங்குவதே சிறந்ததாக இருக்கும் என்று முடிவு செய்தேன் இறுதியாக, இந்த ஆண்டு ஜூன் 1 அன்று டெல்லி சென்று, எனது கருத்து வேறுபாடுகளைக் குறித்தும், எனது முடிவு குறித்தும் தலைவர்களிடம் மரியாதையுடன் வெளிப்படுத்தினேன்.
பாஜக தலைமை எப்படி எதிர்வினையாற்றியது?
பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் மீது எனக்கு என்றும் மரியாதை உண்டு. நீண்ட நேரம் அவர்களுடன் பேசினேன். நான் வெளியேறும்போது, கண்ணியத்துடன் வெளியேற விரும்புகிறேன் என்று கூறினேன். தமிழ்நாட்டிலிருந்து ஒரு மின்னஞ்சல் அனுப்பி ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனவே, என் ராஜினாமா முறையாக ஏற்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். கட்சி என்னை தக்க வைக்க முயன்றது உண்மை. ஆனால், எனது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கி, எனது முடிவில் உறுதியாக இருப்பதைப் பார்த்ததும், கட்சி எனது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டது.
விஜயின் எழுச்சி காரணமாக இந்த முடிவை எடுக்கத் தோன்றியதா?
நிச்சயம் இல்லை. புதியவர்கள் அரசியலுக்கு வருவதை நான் எப்போதும் வரவேற்றிருக்கிறேன். சில சமயங்களில், பணபலம், சாதி அரசியல் போன்ற பழைய கட்டமைப்புகளை உடைக்க ஒரு மக்கள் ஈர்ப்பு கொண்ட தலைவர் தேவைப்படுவார். அந்த வகையில் விஜயின் தவெக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், திரைக்கவர்ச்சியை மட்டுமே வைத்து, அரசியலை நீண்ட காலத்துக்கு வெற்றிகரமாக நடத்த முடியாது. தமிழ்நாட்டிற்கு, நிர்வாகத் திறன், ஆக்கபூர்வமான முடிவுகள், மக்கள் முன் பொறுப்புடன் நிற்கும் தலைவர்கள் தேவை.
பாஜகவில் இருந்தபோது நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா?
கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே, எனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தேன். தமிழ்நாட்டில் பாஜக தனித்த அடையாளத்துடன் வளர வேண்டும் என்று விரும்பினேன். 2026 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வருவதை நான் ஆதரிக்கவில்லை. மேலும், நான் போட்டியிட வேண்டும் என்று கட்சி விரும்பினாலும், எனக்கான ஒரு தொகுதியை பெறவில்லை. ஒரு தொண்டனாக, கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டேன். ஆனால், காலப்போக்கில் கட்சியில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்த அரசியல் தவறுகள், பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டன என்று உணர்ந்தேன். எனது பார்வையில், தமிழக அரசியல் சார்ந்த முடிவுகள், தொலைதூரத்தில் இருந்து எடுக்கப்படுவது சரியாக இருக்காது.
விஜய் வெற்றி பெற காரணம் என்ன?
திமுக அரசின் மீது தமிழகத்தில் இருந்த கடுமையான எதிர்ப்பு அலை முக்கிய காரணம். திமுகவுக்கு எதிரான மனநிலை, மக்களிடம் ஏற்கனவே உருவாகியிருந்தது. விஜய் தேர்தலில் நன்றாகச் செயல்படுவார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இவ்வளவு அதிகமான இடங்களில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் அவருக்குக் கிடைத்துள்ள பெரும் ஆதரவு, அவரது வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
திமுக ஏன் தோற்றது?
திமுக அரசு மிகவும் ஊழல் நிறைந்த அரசு. மக்களும் அதை ஊழல் அரசாகவே பார்த்தார்கள். அதுதான் திமுகவின் தோல்விக்குக் காரணம்.
தவெக ஆட்சியை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
விஜய்க்கு ஒரு வருடம் அவகாசம் கொடுக்க வேண்டும். அவர் நிர்வாகத்துக்குப் புதியவர். அவருக்கு தன்னை நிரூபிக்க, அவகாசம் வழங்க வேண்டும். ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைக்கலாம். ஆனால், ஆட்சி நடத்துவதற்கான சூழலை அவருக்கு வழங்க வேண்டும்.
குதிரை பேரம் (Horse-trading) குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி?
அதிகாரம் கண்ணில் தென்பட்டவுடன், அனைத்து கொள்கைகளையும் கைவிட்டுவிடுவது, தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படை எவ்வளவு சீரழிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தேர்தலுக்கு முன்பு விஜயை கடுமையாக விமர்சித்தவர்கள், தேர்தலுக்குப் பிறகு அவருடன் இணைந்தனர். இதுபோன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் சிறப்பைப் பாதிப்பதோடு, தேவையற்ற இடைத்தேர்தல்களையும் உருவாக்குகின்றன.
அதிமுக ஏன் தோல்வியடைந்தது?
அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்தன. தலைவர்கள் காலத்தின் தேவைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப நெகிழ்வுத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நட்பும், ஒத்துழைப்பும், கூட்டணியும் அரசியலில் முக்கியமானவை. வாக்காளர்களின் மனநிலை மாறிவிட்டது. குறிப்பாக இளைஞர்கள் அரசியலை வேறு கோணத்தில் பார்க்கிறார்கள். அரசியல் மாறிவிட்டது; அரசியல் கட்சிகளும் மாற வேண்டும். இல்லையெனில் அவற்றின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
பாஜக தேசிய தலைவருக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன் என்று கூறியிருந்தீர்கள். ‘We, the Leaders’ மூலம் எந்த வகையான அரசியலை உருவாக்க விரும்புகிறீர்கள்?
உண்மையின் அடிப்படையில் இயங்கும், நல்லாட்சியை மையமாகக் கொண்ட, நேர்மறையான அரசியலை உருவாக்க விரும்புகிறேன். எங்கள் இயக்கத்தில் பதவிக் கால வரம்பு, வயது வரம்பு மற்றும் பதவி வரம்பு இருக்கும். பலப்பல ஆண்டுகளாக ஒரு நபரைச் சுற்றி மட்டுமே அரசியல் இயங்கக்கூடாது. இளம் தலைமுறையினருக்கும் புதிய சிந்தனைகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்கும் வகையில் அரசியல் இருக்க வேண்டும். அரசியல் என்பது சுதந்திரமான கருத்துப் பரிமாற்றமாகவும், தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும்படியாகவும் இருக்க வேண்டும். நம் தமிழ்ப் பழமொழியான "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதுபோல, மாற்றம் இயல்பாக நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும். இன்று அண்ணாமலை இருக்கலாம்; இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் அண்ணாமலை மட்டுமே இருந்தால், அதில் வித்தியாசமில்லாமல் போய்விடும்.
தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டின் மொழியில் பேசுவதில்லை என்று கூறியுள்ளீர்கள். அதில் பாஜகவும் அடங்குமா?
நிச்சயமாக. பாஜக உட்பட அனைத்து தேசியக் கட்சிகளுக்கும் என் விமர்சனம் இதுதான். மொழி என்பது வெறும் மொழிபெயர்ப்பு அல்ல. அது ஒரு மாநிலத்தின் கலாச்சாரம், சமூக அமைப்பு மற்றும் அதன் செயல்பாட்டினைப் புரிந்துகொள்வதைக் குறிக்கிறது.
இனி பாஜக தலைமையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்?
இது ஒரு தன்னிச்சையான இயக்கம். நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், யார் ஆட்சியில் இருந்தாலும் நாங்கள் முழுமையாக ஆதரிப்போம். பிரதமர் திரு. மோடி அவர்கள் மற்றும் உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் ஆகியோருடன் நாகரிகமான உறவு தொடரும். ஆனால் அது அரசியல் நட்பாக இருக்காது.
உங்கள் புதிய முயற்சிக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ். அல்லது பாஜக இருப்பதாக சிலர் கூறுகிறார்கள்.
அதை நான் ஏற்கவில்லை. பாஜகவிலிருந்து வெளியேறியதன் மூலம், நான் பெற்றதை விட இழந்ததே அதிகம். எதிர்காலத்தில் எங்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளுமே இந்தக் கருத்துக்கான சிறந்த பதிலாக இருக்கும்.
'We, the Leaders' எப்போது அரசியல் கட்சியாக மாறும்? வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடுமா?
இடைத்தேர்தல் எங்கள் இலக்கு அல்ல. அது மறைமுக அரசியல் ஒப்பந்தங்களில் ஈடுபடுபவர்களுக்கான களம். ஒரு இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவது ஒரு நீண்டகால செயல்முறை. தற்போது எங்களிடம் சுமார் 19 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அது 50 லட்சத்தை எட்டிய பிறகே, அரசியல் கட்சியாக மாறுவது குறித்து விவாதிப்போம். மேலும், இளம் அரசியல் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், அப்துல் கலாம் பெல்லோஷிப் திட்டத்தைத் தொடங்க விரும்புகிறோம். இளைஞர்களுக்கு, ஒரு வருடம் பயிற்சி, வழிகாட்டுதல், அவர்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவி உள்ளிட்டவை வழங்கி, அவர்கள் மக்களோடு நேரடியாக பணியாற்றும் வாய்ப்பை உருவாக்குவோம்.
முதல்வராக வேண்டும் என்பதுதான் உங்கள் இறுதி இலக்கா?
அரசியல் ஒரே நபரை மையமாகக் கொண்டு இயங்கக்கூடாது. என்னைவிட அந்தப் பொறுப்புக்கு தகுதியான ஒருவர் இருந்தால், அவர் அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டும். மகாத்மா காந்தி அவர்கள், "கொள்கையற்ற அரசியல்", “உழைப்பில்லாமல் கிடைக்கும் பணம்” உள்ளிட்டவற்றை, ஏழு பெரும் சமூகப் பாவங்களாகக் கூறியிருக்கிறார். இவற்றைக் கொண்டுள்ள அரசியல் கலாச்சாரத்தை மாற்றவே நாங்கள் விரும்புகிறோம். மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளும்போது, 2031 ஆம் ஆண்டோ, அல்லது எப்போது தேர்தல் வந்தாலும், எங்களுக்கு வாய்ப்பு வழங்குவார்கள்.
வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைப்பீர்களா?
தற்போதைய சூழலில் வேறு எந்தக் கட்சியுடனும் இணையவோ, கலக்கவோ, அரசியல் ஒப்பந்தம் செய்யவோ, கூட்டணி அமைக்கவோ எங்களுக்குத் திட்டமில்லை. இது கடினமான பாதை. ஆனால் தமிழ்நாட்டுக்கு உண்மையான புதிய அரசியல் மாற்றத்தை வழங்க விரும்புகிறோம்.
உங்கள் அரசியல் எதிரி யார்?
மோசமான அரசியல் கலாச்சாரம்தான் எங்கள் எதிரி. சாதாரண மக்களையும், ஜனநாயகத்தையும் மையமாகக் கொண்ட அரசியலை உருவாக்கவே நாங்கள் விரும்புகிறோம்.
எதிர்காலத்தில் விஜயுடன் இணையும் வாய்ப்பு உள்ளதா?
தரமற்ற அரசியல் கலாச்சாரத்திற்கு நாங்கள் எதிரானவர்கள். தவெகவின் அரசியல் அணுகுமுறையும், விஜயின் அரசியல் மாதிரியும் எங்களுடைய கொள்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவை.
டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைப்பதில் உங்கள் பங்கு என்ன?
திரு. டி.டி.வி. தினகரனும், திரு. ஓ. பன்னீர்செல்வமும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவர். திரு. தினகரனுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. திரு. ஓ. பன்னீர்செல்வத்துக்கு நடந்தது மிகவும் வருத்தமளிக்கிறது. அது என் வாழ்க்கையில் மிகவும் வேதனையான நாட்களில் ஒன்றாகவே இருக்கும். அவர் திமுகவில் இணைந்தபோது, அது குறித்த எனது கருத்துக்களை கட்சியிடம் வெளிப்படையாக தெரிவித்திருந்தேன்.
பாஜக–அதிமுக–தவெக கூட்டணி அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என்று நினைக்கிறீர்களா?
அப்படிப்பட்ட கூட்டணி அமைந்திருந்தால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் தேர்தல், அரசியலில் வெறும் கூட்டணி எண்களைவிட, கூட்டணிக்குள் இருக்கும் நம்பிக்கையும் ஒத்துழைப்பும் மக்களுக்கு முக்கியம் என்பதைக் காட்டியது.
வானதி சீனிவாசன் உங்களை பாஜகவின் ஒரு பரிசோதனை முயற்சி என்று கூறியிருந்தார். அந்தப் பரிசோதனை வெற்றியடைந்ததா?
இதற்குப் பதில் சொல்ல வேண்டியது பாஜகதான். ஆனால், நான், பாஜகவில் இருந்தபோதும் அண்ணாமலை என்றுமே அண்ணாமலையாகவே இருந்தேன் என்பதை நான் பெருமையுடன் சொல்ல முடியும். இந்திய தேசிய உணர்விலும், தமிழ்நாட்டை நாட்டிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கிலும் நான் மிக உறுதியாக இருந்தேன்.
பாஜக உங்கள்மீது அதிக முதலீடு செய்தது. நீங்கள் கட்சியை விட்டு வெளியேறியதில் வருத்தம் இல்லையா?
எந்த வருத்தமும் இல்லை. நான் பாஜகவுக்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன். அதேபோல் பாஜகவும் எனக்கு பல வாய்ப்புகளை வழங்கியது. ஒரு கட்சித் தொண்டனாக (காரியகர்த்தாவாக) நான் என் கடமையை முழுமையாகச் செய்தேன் என்று நம்புகிறேன். அதேபோல், பாஜகவும் எனக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அளித்தது.
நீங்கள் இந்தியரா? தமிழரா?
நான் எப்போதும் முதலில் இந்தியன். அதே நேரத்தில் தமிழனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவின் பல மாநிலங்களில் வாழ்ந்து பணியாற்றியிருக்கிறேன். இந்திய அடையாளமே எனக்கு முதன்மை. ஆனால், தமிழ்நாடு இந்தியாவின் சிறந்த மாநிலமாக வேண்டும் என்பதே என் கனவு.
ஒரு வருடம் கழித்து உங்களை எங்கே பார்க்கிறீர்கள்?
உண்மையில், இதற்கான பதில் என்னிடம் இல்லை. ஆனால், மக்கள் We, the Leaders இயக்கத்தை ஆரோக்கியமான அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் இயக்கமாகவும், தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும் இயக்கமாகவும் பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
உலகின் முதல் சோடியம்- சீனாவின் CATL அயான் பேட்டரி சேமிப்பு அமைப்பு
உலகின் முதல் சோடியம்-அயான் பேட்டரி சேமிப்பு அமைப்பை CATL அறிமுகப் படுத்தியது -T K L Shriram
சீனாவின் பெரிய பேட்டரி நிறுவனமான CATL, உலகின் முதல் "நிஜ உலகில் சோதிக்கப்பட்ட" சோடியம்-அயான் ஆற்றல் சேமிப்பு அமைப்பை அறிமுகப்படுத்தியது. 2026 ஆம் ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 1 GWh (கிகாவாட்-அவர்) அளவிற்கு விற்பனை செய்வதை இலக்காக வைத்துள்ளது.
இந்த அமைப்பை TENER Sodium Energy Storage System என்று அழைக்கிறார்கள். இதை ஜூன் 22, 2026 அன்று ஜெர்மனியின் மியூனிக் நகரில் அறிவித்தார்கள்.
CATL கூற்றுப்படி, சோடியம் என்பது லித்தியத்தை விட 1,000 மடங்கு அதிகமாக உலகெங்கும் கிடைக்கும் ஒரு பொருள். எனவே, இது எதிர்காலத்தில் மின்சார சேமிப்பிற்கு மிகவும் உகந்தது.
நிறுவனத்தின் ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் William Wu கூறுகிறார்: "சோடியமும் லித்தியமும் சேர்ந்தே எதிர்கால ஆற்றல் சேமிப்பு முறையின் இரட்டை அடித்தளங்களாக இருக்கும்."
CATL 2016 ஆம் ஆண்டிலிருந்தே சோடியம்-அயான் பேட்டரி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் €1.2 பில்லியன் (₹10,000 கோடிக்கும் மேல்) முதலீடு செய்தது.
தயாரிப்பு திறனை அதிகரிக்க, சீனாவில் உள்ள Fuding ஆலையில் CNY 5 பில்லியன் (சுமார் ₹6,000 கோடி) முதலீடு செய்து, ஆண்டுக்கு 40 GWh உற்பத்தி திறன் கொண்ட உற்பத்தி வரிகளை நிறுவியுள்ளனர். மேலும் Jining, Shandong இல் 160 GWh உற்பத்தி திறன் கொண்ட புதிய ஆலையும் திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப சிறப்பு அம்சங்கள்
இந்த சோடியம் அமைப்பு, ஏற்கனவே உள்ள LFP (லித்தியம்-இரும்பு-பாஸ்பேட்) பேட்டரி அமைப்புகளுடன் பொருந்தும் வகையில் அதே அளவிலும் வடிவிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியும் சுமார் 46 டன் எடை கொண்டது; வெறும் 34 தொகுதிகளை வைத்தே 1 GWh சேமிப்பு தளம் உருவாக்கலாம்.
ஆயுட்காலம்
இந்த அமைப்பு 25°C வெப்பநிலையில் 15,000 முறை சார்ஜ்-டிஸ்சார்ஜ் சைக்கிள் வரை நீடிக்கும், அதாவது சுமார் 25 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம்.
தீவிர வெப்பநிலைகளிலும் செயல்திறன்
45°C வெப்பத்திலும் 10,000 சைக்கிள்கள் வரை இயங்கும். -20°C குளிரிலும் 92% கொள்ளளவை தக்க வைக்கும்.
பாதுகாப்பு
தீவிர நிலைகளிலும் கூட தீ மற்றும் வெடிப்பு அபாயங்களை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்போது கிடைக்கும்?
சீனாவில் செப்டம்பர் 2026 முதல் விற்பனை தொடங்கும். உலக சந்தைக்கு ஜூன் 2027 முதல் அனுப்பப்படும்.
சுருக்கமாக சொல்வதென்றால்...
லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக, மலிவான சோடியத்தை பயன்படுத்தும் இந்த புதிய பேட்டரி தொழில்நுட்பம் — நீண்ட ஆயுள், தீவிர வெப்பநிலைகளிலும் செயல்திறன், குறைந்த பராமரிப்பு — இவற்றோடு இப்போது வணிக பயன்பாட்டிற்கு தயாராகிவிட்டது.
சூரிய மற்றும் காற்று மின்சாரம் சேமிக்க இது மிகவும் உதவியாக இருக்கும்.
திருப்பரங்குன்றம் Files
1960-களில் திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய இந்து அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் திருப்பரங்குன்றம் Files என்ற ஆவண திரைப்படம் சென்னையில் 30.06.2026 இன்று மாலை 6:00 மணிக்கு இந்த அழைப்பிதழ் குறிப்பிட்ட இடத்தில் திரையிடப்படுவதாக கண்டேன் .
கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திகக் கூட்டத்திலிருந்து ஒருவர் மதம் இல்லை என்று சொல்லும் கம்யூனிச கூட்டத்திலிருந்து ஒருவர் உதட்டளவில் மத நல்லிணக்கம் உள்ள அளவில் மதவெறி கொண்ட ஒருவர் பொதுமக்களில் உரிமைக்கு உணர்வுக்கு போராடுகிறோம் என்று ஏமாற்றித் திரியும் ஒருவர் இப்படி பலர் பங்கேற்று சமூகப் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது .
இவர்கள் வாழ்நாளில் இந்து மதத்திற்கு ஆதரவாக என்றும் பேசியது கிடையாது. ஆனால் இந்து மதத்தை விமர்சிக்க வேண்டும் இந்துக்களுக்கு எதிராக அணி திரள வேண்டும் என்றால் ஓரணியில் வந்துவிடும் இந்து விரோதிகள் .
திருப்பரங்குன்றத்தில் இருக்கும் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உள்ளூரில் இருக்கும் இஸ்லாமியர்கள் எதிர்க்கவில்லை .
ஆனால் அவர்கள் மத வழிபாட்டு கூடத்தின் குழுவில் அடிப்படைவாத சிந்தனை கொண்ட மனிதர்கள் பொறுப்பில் இருக்கின்ற காரணத்தால் இவ்வளவு பிரச்சனை எழுதுகிறது .
கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொன்னவர்கள் நாங்கள் அதை கலவர தீபமாக மாற்றுகிறார்கள் என்று சொன்னவர்கள் கம்யூனிஸ்டுகள்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தன் நீதி அரசர் ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் உத்தரவு கொடுத்தார் .
அதை எதிர்த்து திராவிட மாடல் திமுக அரசு மேல்முறையீடு செய்தது.
அதை மாண்பமை ஜெயச்சந்திரன் ராமகிருஷ்ணன் ஆகிய இரு நபர் அமர்வு மேல்முறையீட்டை.தள்ளுபடி செய்து தனி நீதி அரசரின் உத்தரவை உறுதி செய்தது .
தற்போது பதவியேற்ற விஜய் தலைமையிலான அரசு திருப்பரங்குன்றம் தீபம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு தமிழ்நாடு அரசு சென்று இருக்கிறது .
எது எப்படியோ திருப்பரங்குன்றம் பைல்ஸ் என்ற பெயரில் திரையிடப்படும் குழுவை வைத்து இந்துக்களுக்கு எதிரான மீண்டும் ஒரு கருத்து பிரச்சாரத்தை இந்த இந்து விரோதிகள் உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
தமிழக அரசு காவல்துறை உடனடியாக இந்த திரைப்பட திரையிடலை தடுத்து நிறுத்த வேண்டும் சமூக அமைதியை கெடுக்க இந்து விரோத கூட்டணி கும்பல்களை தமிழக மக்களே இந்துக்களே கண்டுகொள்ளுங்கள்!!
Subscribe to:
Posts (Atom)
மார்க்சிச கம்யூனிஸ்டுகளிடம் பட்டியல் ஜாதி ஒதுக்கல் வெறி- நொறுங்கிய இளையராஜா
https://www.facebook.com/photo/?fbid=1056936576837859&set=a.154504820414377



