தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகள் மஞ்சு பிரியா (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த முகமது இத்ரிஸ் (27) என்பவரை கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
மஞ்சு பிரியா சட்டப்படிப்பு படிக்க சென்னை சென்ற நிலையில், முகமது இத்ரிஸை அவரது பெற்றோர் வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், காதலை கைவிடாத இத்ரிஸ் மூன்று மாதங்களிலேயே பெற்றோருக்குத் தெரியாமல் சென்னை திரும்பி, மஞ்சு பிரியாவுடன் ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வாழத் தொடங்கியுள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.
இந்த விவகாரம் மஞ்சு பிரியாவின் பெற்றோருக்குத் தெரியவர, அவர்கள் புளியங்குடி ஜமாத்தார்கள் முன்னிலையில் இருவருக்கும் முறைப்படி திருமணம் செய்து வைத்தனர்.
அதன் பிறகு, இந்த தம்பதியினர் தங்களது குழந்தையுடன் சென்னையில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு பக்ரீத் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக, பெற்றோரைப் பார்க்கச் செல்வதாகக் கூறி விட்டு புளியங்குடி வந்த முகமது இத்ரிஸ், அதன் பின்னர் மனைவியுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் தலைமறைவாகியுள்ளார்.
கணவனின் மௌனத்தால் சந்தேகமடைந்த மஞ்சு பிரியா, தனது கைக்குழந்தையுடன் சென்னையில் இருந்து புளியங்குடிக்கு விரைந்துள்ளார்.
அங்கு சென்ற அவருக்கு, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருவது தெரியவந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் செய்வதறியாது திகைத்த மஞ்சு பிரியா, நியாயம் கேட்கத் தன் குழந்தையுடன் கணவர் வீட்டிற்குச் சென்ற போது, இத்ரிஸின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தன் கணவரைச் சந்திக்காமல் நகர்வதில்லை என உறுதியோடு வீட்டின் முன்பு கைக்குழந்தையுடன் மஞ்சு பிரியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது இத்ரிஸின் குடும்பத்தினர் அவரை மிரட்டி, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவரது கால்களைப் பிடித்து வாசலில் இருந்து வெளியே இழுத்துத் தள்ளி, கேட்டைப் பூட்ட முயன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment