Wednesday, May 17, 2017

பெந்தகோஸ்தே அப்போஸ்தலிக் சர்ச் அசெம்பிளி 2000 கோடி சொத்து கொள்ளை

வெள்ளை துணியில் ஒரு கருப்பு புள்ளி

பாஸ்டர்.G.சுந்தரம், ஸ்தாபகர்
http://jamakaran.com/tam/2015/april/4.htm
தமிழ்நாட்டில் முதல் பெரிய சபை பாஸ்டர்.சுந்தரம் என்ற தேவ மனிதர் 1949ம் ஆண்டு ஆரம்பித்த (ACA)அப்போஸ்தலிக் சர்ச் அசம்பளி என்ற சபையாகும். பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் கோயமுத்தூரிலிருந்து சென்னைக்கு கர்த்தரால் அழைப்பை பெற்றுவந்து ஆரம்பித்த சபைதான் பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபையாகும். சபை ஆரம்பிக்கும்போது நான்கு பிச்சைக்காரர்களை அழைத்து அவர்களுக்கு உணவு அளித்து ஆராதனையில் உட்காரவைத்து ஆராதனை நடத்தினார். அநேக நாட்களுக்குப்பின் பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சபை தமிழ்நாட்டிலேயே அதிக விசுவாசிகளை கொண்ட சபையாக மாறியது.
சகோ.தினகரன் அவர்கள்தான் 1968ம் வருடம் டிசம்பர் மாதம்பாஸ்டர்.சுந்தரம் அவர்களுக்கு என்னை மிகப்பெரிய கன்வென்ஷன் பிரசங்கி என்று புகழ்ந்து அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு அடிக்கடி பாஸ்டர் அவர்களோடு நான் நெருக்கமாக உறவாடாமல்போனாலும், ஒன்று, இரண்டு முறை வேதத்தின் ஆவிக்குரிய சந்தேகங்களை கேட்க வாரநாட்களில் பாஸ்டர் அவர்களை சந்தித்து நீண்டநேரம் உரையாடியிருக்கிறோம். என்னைக்குறித்து பலர் மூலமாக அதிகம் கேள்விப்பட்டிருக்கிறார்.
இந்தியாவில் முதல் முழுஇரவு ஜெபத்தை நானும், பாஸ்டர்.ஜீவானந்தம், சகோ.தினகரன், கனம்வேதநாயகசாஸ்திரியார் ஆகிய நான்கு பேரும் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகேயுள்ளV.P.ஹால் என்ற கட்டிடத்தில் ஆரம்பித்தோம். அந்த முழு இரவு ஜெபம் நடத்துவது பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் அவ்வளவாக இஷ்டப்படவில்லை என்பதை சகோ.தினகரன் அவர்கள் கூறக்கேள்விப்பட்டேன். என்றாலும் அந்த ஜெபம் நடத்த எப்போதாவது நான் சென்னை செல்லும்போது பாஸ்டர்.சுந்தரம் அவர்களை எப்படியும் சந்தித்து பேசி, ஜெபித்து வருவேன்.

பாஸ்டர்.சாம்சுந்தரம்
சகோ.தினகரன் அவர்கள் மிகவும் மதிக்கும், மிக முக்கிய ஊழியர்கள் பாஸ்டர்.சுந்தரம், பாஸ்டர்.வாசு என்பவர்களாவர். அதனால்தான் சகோ.தினகரன் மகள் மரித்தபோது அந்த மரணம் கர்த்தரின் எச்சரிப்பு என்று தைரியமாக நேரில் சென்று நேருக்குநேர் கூறி உரிமையோடு அறிவித்த ஒரே ஊழியர் பாஸ்டர்.சுந்தரம் அவர்களாவார். பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் மரணத்துக்குபிறகு அந்த சபையில் மாலை நேர ஆராதனையில் மட்டும் பிரசங்கம் செய்துகொண்டிருந்த பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் மனைவியின் சகோதரரான பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் அந்த சபையின் தலைமை பாஸ்டராக 1989ம் வருடம் பொறுப்பெடுத்தார். ஊழியம் விரிவடைந்தது. சபைக்கு புதிய இடம் பல கோடி ரூபாயில் வாங்கி ஆராதனை மிக சிறப்பாக நடந்துக்கொண்டிருந்தது.
பாஸ்டர்.சாம்சுந்தரம் வியாதி படுக்கையில்
கை-கால்கள் தளர்ந்து பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதி படுக்கையிலாகி ஞாபகசக்தியும் கொஞ்சம்கொஞ்சமாக இழக்க ஆரம்பித்தார். கிட்னி இயக்கம் குறைந்தது. அப்பெல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

பாஸ்டர்.காலேப் ஜாஷ்வாவின் தவறான நியமனம் -அது செல்லாத நியமனம்:

வியாதி படுக்கையில் பாஸ்டர்.சாம்சுந்தரம்
பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதி படுக்கையில் விழுந்தவுடன் அமெரிக்காவில் இருந்த பாஸ்டர்.சுந்தரம் (தலைமை பாஸ்டர்.ஸ்தாபகர்) அவர்களின் பேரனாகிய காலேப் ஜாஷ்வாவை அவசர அவசரமாக வரவழைத்து அவசர கல்யாணம் செய்வதுபோல் ஒரு ஞாயிறு ஆராதனையில் பாஸ்டராக அபிஷேகம் செய்யப்பட்டார். அப்போதே சபையில் உள்ள மூன்று மூத்த பாஸ்டர்மார்களில் யாராவது ஒருவர் தலைமை பொறுப்பெடுக்கவேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. அந்த போராட்டம் தோல்வியடைந்தது.
அன்று நான் ஜாமக்காரனில் எழுதியதை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன். அநேக போராட்டங்கள் நடுவில் காலேஜ் ஜாஷ்வா அவர்கள் தலைமை பாஸ்டராக நியமனம் நடந்துமுடிந்துவிட்டப்படியால் இனி வாக்குவாதம் பிரச்சனைகள் உண்டாக்காமல் பாஸ்டர்.சுந்தரம் வளர்த்த சபையில் உள்ள பாஸ்டர்கள், கிளை சபை பாஸ்டர்கள் சபை விசுவாசிகள் யாவரும் பாஸ்டர்.காலேப்பை ஊழியத்தில் சமாதானத்துடன் பெலப்படுத்துங்கள். அனுபவம் இல்லாத சிறிய வயதுடைய வாலிபன் ஆகவே சீனியர் பாஸ்டர்கள் அவருக்கு ஆலோசனை அளித்து பழையதை மறந்து நல்லசபை சாட்சியிழந்துவிடாதபடி பாஸ்டர்.காலேப்க்கு மூத்த பாஸ்டர்கள் ஒத்துழைப்பு தந்து சபை வளர உதவுங்கள் என்று எழுதினேன்.

பாஸ்டர்.சாம்சுந்தரம், பாஸ்டர்.காலேப்
ஆனால் அன்றேக்கே காலேபை நியமித்தது செல்லாது நாங்கள் கோர்ட்டுக்கு போகப்போகிறோம் என்றவர்களை தொலைபேசியில் அமைதிப்படுத்தினேன். கோர்ட் போக முயன்றவர்கள் பக்கம் சில நியாயங்கள் இருந்தது. சபையில் எத்தனையோ ஓய்வு பெற்ற மூத்த பாஸ்டர்கள் இருக்கும்போது அருகாமையில் அனுபவமுள்ள பாஸ்டர்.ஹென்றி ஜோசப், பாஸ்டர்.மோகன் ஆகியவர்கள் இருக்கும்போது அவர்கள் காலேப் ஜாஷ்வாவை கைவைத்து தலைமை பாஸ்டராக அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் நடந்ததோ மிகவும் தவறான முன்னுதாரணமாகிபோனது. அதாவது பெந்தேகோஸ்தே சபைக்கு சம்பந்தமில்லாத லூத்தரன், சிஎஸ்ஐ சபையை சார்ந்த ஒரு சுவிசேஷகனான சகோ.ஜான் சாலமோன் ஒருவரை தலைமை பாஸ்டராக நியமிக்க தன் கைகளை வைத்து அபிஷேகிக்க பெந்தேகோஸ்தே சபைகளின் நடைமுறை வழக்கத்தில் இல்லாத ஒன்றாகும். அது பெந்தேகோஸ்தே சபைகளில் ஏற்றுக்கொள்ளாத சம்பவமாக அமைந்துவிட்டது.
சகோ.ஜான் சாலமோன் அவர்கள் என்னை போல் ஒரு சாதாரண சுவிசேஷகன் ஆகும். அதுவும் பெந்தேகோஸ்தே அல்லாத சபையை சார்ந்த ஒருவர் இத்தனை பிரம்மாண்ட முக்கிய சபைகளுக்கு தலைமை பாஸ்டர் பொறுப்புக்கு ஒருவரை கைவைத்து அபிஷேகிக்க பெந்தேகோஸ்தே சபைகளின் அனுபவ சட்டம் இடம் கொடுக்கவில்லை.
ஆகவே காலேபின் தலைமை பாஸ்டர் நியமனம் செல்லாது என்று கூறி கோர்ட்டுக்கு செல்ல துடித்தவர்களை நான் ஒரு சில நண்பர்கள் மூலமாக அடக்கினேன். ஆனால் நான் நல்ல ஆவிக்குரிய சபை கோர்ட்டுக்கு போகக்கூடாது என்ற எண்ணத்தில் பாரப்பட்டேன். ஆனால் கோர்ட்டைவிட அசிங்கமாக, சாட்சிகெட்ட நிலையில் சபை ஆராதனையையே நடத்தவிடாமல் செய்ததும், சட்டசபையில் அரசியல்கட்சிகள் நடப்பதுபோல் மைக்கை உடைப்பது, பாஸ்டரை பிடித்து தள்ளுவது அத்தனையும் சினிமா படம்போல் அவரவர்கள் மொபைலில் படம் எல்லாரும் அறியும்வகையில் பெரும்பாலானவர்களுக்கு அந்த காட்சி அனுப்பப்பட்டது. எடுத்து தமிழ்நாடே சிரிக்கும்நிலைக்கு தள்ளப்பட்டது மிககேவலம் ஆகும்.

வதந்திகள்:
வீட்டு சிறையில் எங்கள் பாஸ்டர் வைக்கப்பட்டிருக்கிறார் என்று மற்றொரு செய்தி வெளியானது. செக்களில் பாஸ்டர்.சாம்சுந்தரத்தின் கையெழுத்தை கட்டாயப்படுத்தி பெற்றுவிட்டார்கள் என்று விதவிதமான வதந்திகள் தீயாக தமிழ்நாடு முழுவதும் பரவின. இதற்கு முக்கிய காரணம், பாஸ்டர்.காலேபின் அனுபவ குறைவாகும். பாஸ்டர் உடல்நலம் சரியில்லை. சபை மக்கள் பாஸ்டரை கண்ணால் பார்க்க ஆசைப்படுகிறார்கள். பார்க்க அனுமதிக்காது போனதால்தானே விதவிதமான வதந்திகள் பரவி தினசரி செய்திதாள்களில் வெளியானது. சாப்பாட்டில் மெதுவாக சாகடிக்கும் விஷம் கலக்கப்பட்டிருக்கிறது என்று போலீஸ்சுக்கு புகார் எழுதி கொடுத்திருக்கிறார்கள். காலேப் மனைவி கெத்சி சபையில் நடந்து கொண்டவிதமும், பேசிய கோப வார்த்தைகளும் சபை மக்களை கோபத்தின் எல்லைக்கே கொண்டு போய்விட்டது. போலீஸ் உயிர் அதிகாரிகளோடு சபைக்கு வந்தது. உயர் போலீஸ் அதிகாரிகளைக்கூட, விசாரணை செய்ய பாஸ்டர்.சாம்சுந்தரத்தை பார்க்க அனுமதிக்க மறுத்தது. இவைகள் யாவும் சாட்சி கெட்ட பிரச்சனைகளின் உச்சக்கட்டமாகும். ஒரு வழியாக கடைசி முயற்சியாக பாஸ்டர்.காலேபை உள்ளே வைத்து வெளியே வரமுடியாதபடி பூட்டிவிட்டார்கள். ஒரு வழியாக பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் ஞாயிறு ஆராதனையில் காட்சியளித்தார். அவர் பேசினார் உயிரோடு இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தினார்கள். சபை மேடையில் வீல்சேரில் அமர்ந்தபடி பேசினார். கொந்தளிப்பு அடங்கியது. வதந்திகள் பொய்யாகின.
அடுத்த வதந்தி சுமார் 2000 கோடி காணிக்கை வருமானம் உள்ள ஒரு சபையின் பணம் காலேபினால் கொள்ளையடிக்கப்படுமோ என்றும் சந்தேகப்பட்டனர். அந்த ஒரே காரணத்தால்தான் சபை சொத்துக்களை, பணத்தை வெளிஆட்கள் அனுபவிப்பதைவிட சொந்த பேரன் அனுபவிக்கட்டுமே என்ற உள்நோக்கம் இதில் உண்டு என்றாலும், இது தமிழ்நாட்டில் உள்ள குடும்ப கட்சிகளைப்போல், சொந்த பிள்ளைகளும், பேரன்மார்களும், உறவினர்களும் அல்லது வளர்ப்பு மகன்களும் அரசாங்க பணத்தை, சொத்தை கொள்ளையடிப்பதைப்போல் ACA சபையில் செய்யமுடியாது. ஸ்தாபகரும், தலைமை பாஸ்டருமான மறைந்த சுந்தரம் அவர்கள் மிக ஞானத்துடன் சபை சொத்துக்களை, சபையையும், சபை பணத்தையும் TRUSTஆக பதிவு செய்யாமல் SOCIETIES சட்டத்தில் பதிவு செய்ததால் அவரவர் இஷ்டத்துக்கு பணத்தையோ, சபை நிலத்தையோ, அதை சார்ந்த வீட்டையோ யாரும் குறப்பாக பாஸ்டர்.காலேப்கூட உரிமை கொண்டாடமுடியாது. விற்க அடமானம் வைக்கமுடியாது. உயிரோடு இருக்கும்வரை பணத்தை அனுபவிக்கலாம். அதற்கும் அரசாங்கத்துக்கு கணக்கு காட்டவேண்டும். சொசைட்டி சட்டம் அப்படி கூறுகிறது.
எப்படியோ பாஸ்டர்.சாம்சுந்தரம் நேரில் வந்து பேசியபின் சபைக்குள் அமைதி உண்டானது. ஆனால் பிப்ரவரி மாதம் ஆராதனை நடத்தவிடாமல் மேடையில் நடந்த சண்டையை சபை வாலிபர்கள், புது விசுவாசிகள் சபை மக்கள் கண்டபோது சண்டை போட்டவர்களையும், சண்டையிட காரணமான காலேபையும், மேடையில் காலேப் மனைவி கெத்சியா பேசிய வார்த்தைகளையும் கேட்டவர்கள் என்ன நினைப்பார்கள்?. இதில் ஆவியின் நிறைவு, அந்நியபாஷையும் காணப்பட்டன. ஆனால் ஆவியின் கனியில்லாத ஆவியின் சுபாவம் இல்லாத பொய்யான நிறைவுதான் அங்கு காணப்பட்டது.
சபைமக்களும், சபை பாஸ்டர்களும், சண்டையிட்ட பாஸ்டர்களும், ஜெபத்தில் அன்று பேசிய அந்நியபாஷைக்கு என்ன அர்த்தம். இதை மட்டும் சபை மக்கள் யோசித்தால் தெளிவு பெறுவார்கள். கலாத்தியரில் எழுதிய ஆவியின் கனிகள், ஆவியின் சுபாவங்கள் எங்கே? அவர்களுக்குள் இருந்த ஆவி! என்ன ஆவி? இனியாவது பரிசுத்த ஆவியானவரின் நிறைவை சத்தத்தில் காண்பிக்கவேண்டாம். அந்நியபாஷையில் காண்பிக்கவேண்டாம். கனியில் (சுபாவத்தில்) காண்பியுங்கள். இனியாவது போலியான அந்நியபாஷையை பேசவேண்டாம்.
பாஸ்டர்.சுந்தரம் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் கண்ணீர்விட்டு கதறியிருப்பார். நம்மை ரட்சித்த இயேசுகிறிஸ்து கண்ணீர் விடுகிறார். வெள்ளை துணியில் சிறு கருப்பு புள்ளியும் மிக தெளிவாக தெரியும். அந்த ACA சபை மக்கள் சாட்சியாக இருங்கள்.
CSI சபைகள்தான் செத்துப்போன சபை என்றார்கள். இப்படிப்பட்ட பெந்தேகோஸ்தே சபைகளின் இப்படிப்பட்ட சண்டையில் செத்துப்போன பிணம் பாஷை பேசுவதாகத்தான் மற்றவர்கள் நினைப்பார்கள்.

தேவன் தம்மை பரியாசம் பண்ணவொட்டார்:
பாஸ்டர்.சாம்சந்தரத்தின் மரணத்தை பாஸ்டரின் வீட்டுக்குள்ளேயும், சபையிலும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சனைகள் நீருபூத்த நெருப்பாகத்தான் இருக்கிறது. நெருப்பு இன்னும் அணையவில்லை. ACA சபைக்காக தொடர்ந்து ஜெபிப்போம்.

No comments:

Post a Comment