மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து
புதுடெல்லி: மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடியாது. சாலையை மறித்தால் அரசு தலையிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இடையீட்டு மனுதாரர் சார்பில் நிஜாம் பாஷா வாதிடும்போது, “ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற நம்பிக்கையில் உயர் நீதிமன்றம் தலையிட்டு ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் கட்டாயமாகப் பின்பற்றப்படும் வழக்கம் இல்லை என்று தீர்ப்பு கூறியது” என்று தெரிவித்தார்.
வழக்கறிஞர் ஏகலைவ துவிவேதி வாதிடும்போது, “மத சுதந்திரத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமைக்குப் பொருந்தாது” என்று தெரிவித்தார். இந்து தர்ம ஆச்சார்ய சபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அக்சய் நாகராஜன் கூறும்போது, “மத நடவடிக்கைகளில் பொது ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அரசு தலையிட முடியாது ” என்றார்.
அப்போது நீதிபதி பி.வி. நாகரத்னா கூறும்போது, “மதச்சார்பற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படும் பட்சத்தில் அரசு தலையிட முடியும். உதாரணத்துக்கு ஒரு கோயிலில் நடைபெறும் தேரோட்ட நிகழ்வுக்காக அனைத்து சாலைகளையும் மறித்து அடைத்து வைக்க முடியாது. சாலைகளை மறித்து அடைத்து வைப்பதற்கும், மதத்துக்கும் தொடர்பில்லை. அரசு தலையிட்டு முறைப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.
வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் கூறும்போது, “லட்சக்கணக்கான மசூதிகள் இருந்தாலும் மெக்காவுக்கும். லட்சக்கணக்கான தேவாலயங்கள் இருந்தாலும் ஜெருசலேத்துக்கும் தனி புனிதத் தன்மை உள்ளது. இதுபோல 1,500 ஐயப்பன் கோயில்கள் இருந்தாலும் சபரிமலைக்கு தனி புனிதத் தன்மை உள்ளது. சம்ஸ்கிருதம் ஆங்கிலத்தை காட்டிலும் அதிகமாக 52 எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் அலுவல் மொழியாக்கும் மசோதாவை டாக்டர் அம்பேத்கர் அறிமுகப்படுத்தினார்” என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி ஆர். மகாதேவன் குறுக்கிட்டு, ‘‘வழக்கு சார்ந்து மட்டும் வாதிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
நீதிபதி அறிவுறுத்தல்: அரசமைப்பு சாசனத்தை ஆங்கிலத்தில் விளக்குவது கடினம் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் வாதிட்டபோது, மற்றொரு நீதிபதி பி.வி.நாகரத்னா குறுக்கிட்டு “கன்னடமும் 52 எழுத்துகளைக் கொண்டுள்ளது. அனைவரும் சமமே. மேட்டிமை வாதத்தை முன் வைக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தினார். மற்றொரு நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் குறுக்கிட்டு இதுபோன்ற வாதங்களை முன் வைக்கக் கூடாது என்று கூறி வாதத்தை நிறைவு செய்ய அறிவுறுத்தினார்.

No comments:
Post a Comment