ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? காவல்துறை வெளியிட்ட முதற்கட்ட தகவல்.
- Published by:Arivazhagan T news18-tamil Last Updated: April 27, 2026
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைப்பு விவகாரத்தில், திருவான்மியூர் காவல்துறை விசாரணையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட விவகாரத்தில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அண்மைக்காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை விமர்சித்து வருகிறார். சமீபத்தில் கூட தவெக தொண்டர்கள் மத்தியில் அவர் ஆற்றிய உரையாடல் எக்ஸ் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில்தான் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “தறுதலைகளின் வேலையா அல்லது தற்குறிகளின் வேலையா என்று தெரியவில்லை” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக நேற்று அவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர்; “இதற்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று நான் வீட்டில் இருந்து கிளம்பும்போது என்னை பின்தொடர்ந்து வந்து இதனை செய்திருக்கலாம். அல்லது நான் உணவகத்தில் காரை நிறுத்திவிட்டு இறங்கும்போது அதனை கவனித்து இதனை செய்திருக்கலாம். யார், எதற்காக செய்தார்கள் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவரும்.
நான் எதனையும் யூகிக்க விரும்பவில்லை. முகநூலிலும் கூட ‘தறுதலைகளா? தற்குறிகளா?’ என்றுதான் பதிவிட்டேன். இதற்கு காரணம், தாக்குதல் நடத்துவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது தற்போது நான் சொல்லியுள்ள அரசியல் விமர்சன கருத்துகளால் குறிப்பிட்ட நபர்களாக இருக்கலாம். அதன் காரணமாகவே நான் அப்படி பதிவிட்டேன். என் கார் என தெரிந்தே இதனை செய்திருக்கிறார்கள் என்பது என் அனுமானம்.
பொதுநலனுக்கான கருத்துகளை சொல்லும்போதே பலரையும் நாம் பகைத்துக்கொள்வோம் என்பது நமக்கு தெரியும். இப்படியான சிறுசிறு விஷயங்கள் மூலம் நம்மை அச்சுறுத்திவிட முடியும் என அவர்கள் நினைத்தால், அது தவறு. என் பணி தொடரும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைப்புக்கு அரசியல் காரணம் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர், “ஜேம்ஸ் வசந்தனின் கார் அந்த உணவகத்தின் அருகே இருந்த வீட்டின் வாசலில் நிறுத்தியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளரான பெண், தன் அவசர தேவைக்காக வீட்டிற்குள் அரை மணி நேரமாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால், ஆத்திரத்தில் காரின் கண்ணாடியை உடைத்துள்ளார். இதில் அரசியல் காரணங்கள் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment