Saturday, August 22, 2026

ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம்

கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின்
கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்;
அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும்
ஆழ்ந்தி ருக்கும் கவிளம் காண்கிலார்;
வணிக மும்பொருள் நூலும் பிதற்றுவார்;
வாழு நாட்டிற் பொருள்கெடல் கேட்டிலார்
துணியு மாயிரஞ் சாத்திர நாமங்கள்
சொல்லு வாரெட் டுணைப்பயன் கண்டிலார். 23

கம்ப னென்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதைபு னைந்ததும்,
உம்பர் வானத்துக் கோளை மீனையும்
ஓர்ந்த ளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும்,
நம்ப ருந்திற லோடொரு பாணினி
ஞால மீதில் இலக்கணங் கண்டதும்,
இம்பர் வாழ்வின் இறுதிகண் டுண்மையின்
இயல்பு ணர்த்திய சங்கரன் ஏற்றமும், 24

சேரன் தம்பி சிலம்மை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்,
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தர்மம் வளர்த்ததும்,
பேரு ருட்சுடர் வாள்கொண் டசோகனார்
பிழைப டாது புவித்தலங் காத்ததும்,
வீரர் வாழ்த்த மிலேச்சர்தந் தீயகோல்
வீழ்த்தி வென்ற சிவாஜியின் வெற்றியும். 25

அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
முன்னர் நாடுட திகழ்ந்த பெருமையும்
மூண்டி ருக்குமிந் நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியுந் தேர்கிலார்
பேடிக் கல்வி பயின்றுழல் பித்தர்கள்;
என்ன கூறிமற் றெங்ஙன் உணர்த்துவேன்
இங்கி வர்க்கென துள்ளம் எரிவதே! 26    
            --- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

குறிப்பு -
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்
தாங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்;
என்பதனை கீழ்வருமாறு படிக்கவும்
அன்ன யாவும் அறிந்திலர் பாரதத்து
ஆங்கிலம் பயில் பள்ளியுட் போகுநர்

இந்தியர்களுக்கு எத்தகைய கல்வி கற்பிக்கப்பட வேண்டும், கல்வியில் எவற்றுக்கெல்லாம் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பாரதிக்கு தீர்க்கமான, தெளிவான கருத்துகள் இருந்தன. இன்று கல்வித் துறையில் நிலவும் சிக்கல்களுக்கு மாற்றாக கல்வித் துறை செயற்பாட்டாளர்களால் முன்வைக்கப்படும் சிந்தனைகள் பலவும் நூறாண்டுகளுக்கு முன்பே பாரதியிடம் வெளிப்பட்டிருக்கின்றன. தாய்மொழி குறித்த பாரதியின் கருத்துகள் அவற்றில் முதன்மையானவை. ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி உட்பட பல மொழிகளில் தேர்ச்சிபெற்றிருந்த பாரதி இந்தியர்கள் பல மொழிகள் கற்பதை ஊக்குவித்தார். அதே நேரம் பிற மொழிகளைக் கற்பதற்கு முன் தாய்மொழியில் தேர்ச்சிபெற்றிருப்பதை அடிப்படைத் தகுதியாக வரையறுத்தார்.


ஆங்கிலவழிக் கல்வியை அவர் ஏற்கவில்லை. ‘சுயசரிதை’ என்னும் நெடுங்கவிதையில் ஆங்கிலக் கல்வியின் அவலநிலை குறித்து ஆழ்மன வேதனையை வெளிப்படுத்துகிறார். தந்தை சின்னசாமி திருநெல்வேலிக்கு அனுப்பி ஆங்கிலக் கல்வி படிக்க வைத்தது குறித்து மனம் நொந்து பதிவுசெய்துள்ளார். சிங்கக்குட்டியிடம் புல்லைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வது அது என்று அவர் வர்ணித்துள்ளார். வெள்ளையர்களிடம் கைகட்டி சேவகம் செய்ய விரும்புவோரும் ஒற்றர்களும் பயிலும் கல்வி என்று ஆங்கிலக் கல்வியை இடித்துரைக்கிறார்.


கணிதத்தைப் பன்னிரண்டு ஆண்டுகள் கற்பிக்கும் இந்தக் கல்வி முறை, கண்களுக்குத் தெரியும் நட்சத்திரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ள வழிவகுப்பதில்லை. வணிகத்தையும் பொருளாதார நூல்களையும் கற்பவர்கள் நாட்டில் நிலவும் பொருளிழப்பை, பொருளாதார சீர்கேட்டைக் கேள்வி எழுப்பக் கற்பதில்லை அவற்றின் காரணத்தையும் கண்டறிவதில்லை என்று ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய கல்வியின் குறைகளைப் பட்டியலிடுகிறார். இவற்றுக்கு மாற்றாக இந்திய மன்னர்கள், அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் ஆகியோரைப் பற்றி இந்திய மாணவர்கள் கற்க வேண்டும், இந்தியாவின் வரலாறு அனைவருக்கும் கற்பிக்கப்பட வேண்டும் என்று முழங்கினார் பாரதியார்.


முழுமையான வளர்ச்சிக்கான கல்வி


இந்தக் கருத்துகளை வைத்து தன் நாடு, தன் இனம், தன் மொழி மட்டுமே சிறந்தது என்னும் குறுகிய பார்வை கொண்ட அடிப்படைவாதிகளின் பட்டியலில் பாரதியாரை இணைத்துவிட முடியாது. எழுத்து, படிப்பு, கணக்கு, சரித்திரப் பாடங்கள், பூமி சாஸ்திரம் (புவியியல்), சமயக் கல்வி, ராஜ்ய சாஸ்திரம் (சமூகவியல்), பொருள் நூல் (பொருளாதாரம், வணிகம்), பெளதிக சாஸ்திரம் (அறிவியல் கல்வி), தொழில் கல்வி, சரீரப் பயிற்சி (உடற்கல்வி) என ஒரு மாணவரின் முழுமையான வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது பாரதி முன்மொழிந்த கல்வித் திட்டம். அதோடு மேலை நாடுகளில் நிகழ்ந்துள்ள அறிவியல் முன்னேற்றங்களும் புதிய தொழில்நுட்பங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படும் அளவுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகளும் கலைச்சொல்லாக் கங்களும் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கிறார்.


இப்புவியில் 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதி தேச பக்தி, சாதி எதிர்ப்பு, ஆண்-பெண் சமத்துவம், நவீனத் தமிழ் மொழி வளர்ச்சி ஆகிய தளங்களில் அளப்பரிய பங்களிப்பு ஆற்றியுள்ளார். இவற்றோடு கல்வியின் முக்கியத்துவத்தையும் எப்படிப்பட்ட கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் அவர் வெளிப்படுத்திய கருத்துகள், பாரதியின் பன்முக ஆளுமையை வியந்து போற்றுவதற்கான இன்னுமொரு காரணத்தைத் தருகின்றன.

No comments:

Post a Comment

ஆங்கில கல்வி - மகாகவி பாரதியின் பார்வை

ஆங்கிலக் கல்வியின் அவலம் கணிதம் பன்னிரண் டாண்டு பயில்வர்,பின் கார்கொள் வானிலோர் மீனிலை தேர்ந்திலார்; அணிசெய் காவியம் ஆயிரங் கற்கினும் ஆழ்ந்த...