மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.108 கோடி நிதி முறைகேடு - நமது நிருபர் -
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வழியாக, மகளிர் முன்னேற்றத்திற்காக, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், ஊரக புத்தாக்க திட்டம் என, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆண்டுக்கு 1,000 கோடி முதல் 1,800 கோடி ரூபாய் வரை, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பல்வேறு திட்டங்களுக்கு அரசு வழங்குகிறது. இது தவிர வங்கிகளில் கடன் பெறப்படுகிறது.
முறைகேடுகள்
மத்திய அரசிடமிருந்து பெறப்படும் பணம் முறையாக செலவிடப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்ட திட்ட அலுவலகம், வட்டார அலுவலகம், ஊராட்சி அலுவலகங்களில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இவை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது அரசு வட்டாரத்தில், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், மேற்கொண்டு விசாரணை நடத்தாமல், ஊழலை மூடி மறைக்க, அதிகாரிகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, தணிக்கை அதிகாரிகள் சிலர் கூறியதாவது:மகளிர் திட்டத்தில் பணிபுரிவோரில், 95 சதவீதம் பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்ப்பவர்கள். அவர்களின் ஊழல்களை, லஞ்ச ஒழிப்பு துறை விசாரிப்பதில்லை. சிலரின் வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதை, வருமான வரித் துறை கவனிக்கவில்லை.
தணிக்கை துறையில் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என, கடிதம் கொடுத்து முடித்து விடுகின்றனர். இதுபோன்ற புகார்கள், மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு சென்றன.
கடந்த ஆண்டு, அதன் மேலாண் இயக்குநராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷாஜீவதனா, புகார் மனுக்களை ஆய்வு செய்தபோது, துறையில் ஊழல் நடந்திருப்பதை கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தணிக்கை குழு நியமித்து, 388 வட்டாரங்கள், 12,560 ஊராட்சிகளில், மகளிர் சுய உதவிக் குழு திட்டத்திற்கு வழங்கிய நிதி, செலவு விபரங்களை ஆய்வு செய்ய, கடந்த மார்ச் 5ம் தேதி உத்தரவிட்டார்.
குழுவில், தணிக்கை அலுவலகம், கருவூல கணக்குத் துறை, 'எல்காட்' போன்ற அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற, சீனியர் கணக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள், மார்ச் 9ல் பணியை தொடங்கினர்.
சென்னை தலைமை அலுவலகத்திற்கு, வட்டாரங்களில் இருந்து, நிதி பதிவேடு, ரசீது மற்றும் ஆவணங்களை எடுத்து வர செய்து ஆய்வு செய்தனர். முறைகேடு நடந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று, வங்கிகளில் சம்பந்தப்பட்ட கணக்கு பரிவர்த்தனைகளை பார்வையிட்டு, ஊழல் மற்றும் கையாடல்களை உறுதி செய்தனர்.
பணம் கையாடல்
இது குறித்து, மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு, தற்போது நடவடிக்கை தொடங்கி உள்ளது.
*ஏழ்மையில் உள்ளவர்களுக்கு, 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை, 6 சதவீத வட்டியில், ஊராட்சிகளில் கடன் வழங்கப்படுகிறது. இதை உண்மையான பயனாளிகளுக்கு வழங்காமல், தங்கள் உறவினர் பெயரில் வழங்கி உள்ளனர்
* மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு, கால்நடை வளர்ப்பு பயிற்சி அளிக்காமல், அளித்ததாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. விவசாய இயந்திரங்கள் வாங்கி, வாடகைக்கு விட்டு சம்பாதிக்க வழங்கப்பட்ட தொகையில், இயந்திரங்கள் வாங்காமல் அவற்றை வாங்கியதாக, போலி 'பில்' போட்டு பணம் எடுத்துள்ளனர். அதன்பின் வாங்கிய இயந்திரங்கள் பழுதாகி விட்டதால், வாடகைக்கு விடவில்லை எனக் கூறி, அதை முடித்து விட்டனர்.
* 'ட்ரோன்' வாயிலாக பூச்சி மருந்து தெளிக்க, வாடகைக்கு விட, 'ட்ரோன்' வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. ஆனால், 'ட்ரோன்' வாங்கவில்லை
*ஜெராக்ஸ் போட, ஒரு லட்சம் ரூபாய், பிரின்ட் போட ஒரு லட்சம் ரூபாய் என, கணக்கு காட்டப்பட்டுள்ளது
*பயிற்சி வகுப்பு நடத்தாமல், நடத்தியதாக பில் போட்டு, பணம் எடுக்கப்பட்டுள்ளது
*காலையில் ஒரு கலர் புடவை, மாலை வேறு கலர் புடவை உடுத்தி, புகைப்படம் எடுத்து, இரண்டு நாட்கள் பயிற்சி நடந்ததாக காண்பித்து, பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது
*பங்கேற்பாளர்கள் 50 பேருக்கு, 1,000 ரூபாய் வழங்கியதாக கணக்கு காண்பித்து, அதில், 10 பேர் கையெழுத்தை, ஒருவரே போட்டு பணம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது
*மயிலாடுதுறை மாவட்டத்தில், 10.5 கோடி ரூபாய் கையாடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், ஊராட்சிக்கு அனுப்ப வேண்டிய பணத்தை, தன் மகள் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். இதேபோல் திருவாரூரிலும் நடந்துள்ளது
*வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் வட்டாரத்தில், வங்கியில் வேறு 'ஸ்டேட்மென்ட்' கொடுத்து பணம் கையாடல் செய்துள்ளனர்
*விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில், 73 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக, முன்னாள் திட்ட அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார். அவரும் அந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார்
*சேலத்தில் தணிக்கை குழு அமைக்கப்பட்டதும், கையாடல் செய்த பணத்தை, மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தி உள்ளனர்
*அரியலுாரில் மகளிர் சுய உதவிக்குழு பொருட்களை விற்க, குழு உறுப்பினர்களை டில்லி, ஆக்ரா அழைத்து சென்றதாகக் கூறி, போலி ரயில் டிக்கெட் தயாரித்து, 3.60 லட்சம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர்
*காலை உணவு திட்டத்திற்கு, பாத்திரங்கள் வாங்காமல், வாங்கியதாக பணம் எடுத்துள்ளனர்
*உலக வங்கி நிதியில், ஓய்வுபெற்ற ஐ.ஏஎஸ், அதிகாரி ஒருவர் 300 கோடி ரூபாய் வரை ஊழல் செய்துள்ளார்
*ஊழல் செய்தவர்களிடம் விசாரித்தபோது, சிலர் காசோலையில் கையெழுத்திட்டு வைத்திருந்தேன். அதை வேறு யாரோ பூர்த்தி செய்து, பணம் எடுத்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். சிலர் வெளியில் தெரிந்தால், தற்கொலை செய்து கொள்வோம் என, மிரட்டி உள்ளனர்
*தற்போது தணிக்கை நடப்பதால், திட்டங்களை செயல்படுத்தவில்லை. பணத்தை செலவழிக்காமல் உள்ளனர். இதுவரை, 200 வட்டாரங்களில் தணிக்கை நடந்துள்ளது. இன்னும், 180 வட்டாரங்களில் தணிக்கை நடத்த வேண்டி உள்ளது.
இதுவரை கண்டறியப்பட்ட முறைகேடுகள் அடிப்படையில், 600 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் உட்பட ஏராளமான அரசு அலுவலர்கள் சிக்குகின்றனர். எனவே, இவ்விவகாரத்தை மூடி மறைக்க, 2017 - 2026ம் ஆண்டு வரை, தணிக்கை செய்யும் பொறுப்பு, புதிதாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அது, பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவருக்கு வேண்டிய நிறுவனம் என்று கூறப்படுகிறது.
மகளிர் மேம்பாட்டு திட்டங்களில் நடந்த முறைகேடு முழுமையாக வெளி வர, தமிழக அரசு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பது, நேர்மையான அலுவலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
போலீசார் வழக்கு பதிவு
மயிலாடுதுறையில் சப் - கலெக்டர் கோகுல், கடந்த ஜூலை 3ம் தேதி மாவட்ட குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதன்படி, உதவி திட்ட இயக்குநர் சிவக்குமார், வட்டார இயக்க மேலாளர்கள் சுந்தரி, விமலா, கோமதி, சசிகலாதேவி, மகேஸ்வரி, ஹேமா, மாதரசி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோல், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கி உள்ளது.

No comments:
Post a Comment