Friday, May 31, 2024

சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. அண்ணா பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் உள்பட 6 பேர் கைது

 சென்னையில் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு.. அண்ணா பல்கலைக்கழக மாஜி பேராசிரியர் உள்பட 6 பேர் கைது

By Nantha Kumar R Updated: Sunday, May 26, 2024, 0:07 [IST] 

சென்னை: சென்னையில் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்ததாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கவுரவ பேராசிரியர் உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

 சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ளது ஜானிஜஹான்கான் தெரு உள்ளது. இந்த தெருவில் ‛மாடர்ன் எசன்சியல் கல்வி அறக்கட்டளை' செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளையை நடத்தி வந்தவர் ஹமீது உசேன். இவர் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர். 
 இந்நிலையில் தான் ஹமீது உசேன் மற்றும் அவரது அறக்கட்டளை மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. இதையடுத்து போலீசார் அறக்கட்டளை நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிக்க தொடங்கினர். 

அதாவது பயங்கரவாத சித்தாந்தங்களை இளைஞர்களுக்கு போதித்ததாக புகார்கள் எழுந்தன. மேலும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்புக்கு ஆட்கள் சேர்க்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி மதபிரசங்கள் என்ற பெயரில் ரகசிய கூட்டங்கள் நடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும் புகார்கள் கிளம்பின. இந்த புகாரை தொடர்ந்து தான் ஹமீது உசேன் மற்றும் அவரது அறக்கட்டளையை மீதான கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. 

அதோடு சென்னை ராயப்பேட்டை, தண்டயார்பேட்டை, தாம்பரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஹமீது உசேன் அறக்கட்டளை தொடர்பான டிஜிட்டல் ஆவணங்கள் கிடைத்தன. அதோடு உளவுத்துறைக்கும் சில முக்கிய தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் அறக்கட்டளையில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். 

மேலும் ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர்கள் 3 பேரும் எச்யூடி எனும் Hizb-ut-Tahrir என்ற சர்வதேச அமைப்புடன் தொடர்பில் இருப்பதும், அதில் உறுப்பினர்களாக செயல்படுவதும் தெரியவந்தது. அதோடு இளைஞர்களை மூளைச்சலவை செய்து Hizb-ut-Tahrir அமைப்புக்கு ஆட்கள் திரட்டியதும் தெரியவந்தது. 

இதில் ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறிது காலம் கவுரவ பேராசிரியராக பணியாற்றி கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றவர் என்பது தெரியவந்தது. மேலும் ஹமீது உசேன் தனியாக யூடியூப் ஒன்றை நடத்தி வருவதும், அதில் இந்திய தேர்தலுக்கு எதிராகவும், கிலாபாத் சித்தாந்தம் தொடர்பாகவும் பேசியிருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து ஹமீது உசேன், அவரது தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. அதுமட்டுமின்றி ஹமீது உசேன் அளித்த தகவலின் பேரில் சென்னை காமராஜபுரத்தை சேர்ந்த முகமது (35), நவாஸ் செரீப் என்ற ஜாவித், தண்டையார்பேட்டையை சேர்ந்த அகமது அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-arrested-6-men-including-ex-anna-university-professor-who-were-sympathisers-of-terror-608643.html


https://islamindia.wordpress.com/2024/05/27/hizb-ut-tharir-propagandist-arrested-in-chennai-with-his-family-and-associates/


சுவடு பதிப்பக ஆசிரியர் மன்சூர் உள்ளிட்ட 6 பேர் ஊபா சட்டத்தில் கைது: முதல்வருக்கு தெரிந்து தான் நடக்கிறதா?

சென்னையில் ‘சுவடு’ இதழின் ஆசிரியர் திரு.மன்சூர் (எ) அகமது மன்சூர், அவரது மகன்கள் Dr. ஹமீது உசேன், மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் ‘ஊபா’ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அகமது அலி, முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என மேலும் 3 பேரும் ஊபாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், சனநாயக தேர்தல் முறைக்கு எதிராகவும் இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது குறித்து பிரச்சாரம் செய்ததாகவும், கூட்டங்கள் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு குறித்த விவரங்களை சைபர் கிரைம் போலீசாரிடம் #NIA கேட்டு பெற்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

பிரச்சாரம் செய்ய பயன்படுத்தப்பட்டதாக காவல்துறையால் சொல்லப்படும் ’Dr. Hameed Hussain’ என்ற பெயரிலான யூடியூப் பக்கத்தை இன்றளவும் நம்மால் பார்க்க முடிகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி தொடங்கப்பட்ட பக்கத்தில் Dr. ஹமீது உசேன் பேசும் மொத்தம் 33 வீடியோக்கள் உள்ளன. 

அவற்றில் பெரும்பாலானவை இஸ்லாமிய மார்க்கம் பற்றிய உள்ளடக்கத்தை கொண்டிருந்தாலும், சில வீடியோக்களில் சனநாயகம், தேர்தல் முறை, உலகளாவிய இஸ்லாமிய ஆட்சி முறை, நடப்பு அரசியல் நிலவரம் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளது தெரியவருகிறது.

குறிப்பிட்ட சில வீடியோக்களை பார்க்கும்போது, இந்திய சமூக கட்டமைப்பை - அரசியல் எதார்த்தத்தை சகோதரர் ஹமீது உசேன் நன்கு உணர்ந்திருந்தாலும், அதனை மாற்றுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நியாயமான அரசியல் நடவடிக்கைக்கான தீர்வாக, மிகக்குறுகிய ஆன்மீக - அரசியல் பார்வையை வலியுறுத்தும் வறட்டு தத்துவத்தை கொண்டிருப்பது நமக்கு தெளிவாகிறது. 

ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் (HuT) என்ற சர்வதேச அமைப்பின் உறுப்பினர்களாக 
‘சுவடு’ மன்சூரும் அவரது மகன்களும் இருந்ததாக குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த அமைப்பானது 1952ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் தொடங்கப்பட்டது. அது நாடுகளின் எல்லைகளை கடந்து உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியை (Islamic State/ Caliphate) வலியுறுத்தும் இறையியல் - அரசியல் கோட்பாட்டை முன்வைக்கிறது.

குறிப்பிட்ட இந்த அமைப்பானது ரஷ்யா, ஜெர்மனி, எகிப்து மற்றும் அரபு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பிரிட்டனிலும் தடை செய்யப்பட்டது. இதுவரை இந்தியாவில் தடை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 2020ஆம் ஆண்டு முதலே இந்த அமைப்பின் கருத்துகளை பரப்பியதாக இளைஞர்கள் பலர் என்.ஐ.ஏவால் ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Dr. ஹமீது உசேனின் தந்தையான சுவடு மன்சூர் சிறு பத்திரிகை, பதிப்பக தளங்களில் செயல்பட்டு வருபவர். 2007 முதல் 2012 வரை ’சுவடு’ என்ற பெயரில் மாத இதழை நடந்தி வந்துள்ளார். பின்னர் 2020ஆம் ஆண்டிலிருந்து அதே பெயரில் மின்னதழையும், வலைதளத்தையும் நடத்தி வருகிறார்.

சுவடு மன்சூரின் பத்திரிகை - பதிப்பக பணிகள் அவரது உறுதியான பெரியாரிய - அம்பேத்கரிய கொள்கை நிலைப்பாட்டை விளக்குகின்றன. அதற்கு சுவடு பதிப்பகம் மூலம் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களே சாட்சியாக உள்ளன.

அவற்றுள் சில: 1.பெரியாரின் பெண் ஏன் அடிமை ஆனாள்?, 2.பெரியார் வாழ்ந்து கொண்டிருக்கிறார், 3.பெரியார்: 
தமிழ்த் தேசிய தந்தை 4.பெரியாரும் மறைமலையடிகளும், 5.இந்து மதம்: ஒரு பார்ப்பனிய மோசடி, 6.இடஒதுக்கீடு: 
இந்திய அரசியலமைப்பும் அம்பேத்கர் சிந்தனைகளும், 7.திராவிட சுவடுகள்: திராவிட இனத்தின் விடிவெள்ளிகள்: பெரியார் - அண்ணா, 8.வஞ்சிக்கப்படும் பொதுக்கல்வி
9.கலைஞர் அந்தாதி, 10.தளபதி விருத்தம்.
இவையெல்லாம் சுவடு பதிப்பகத்தின் வெளியீடுகள் தான்.

இன்றளவும் சுவடு மன்சூர் முன்னெடுத்த அனைத்து செயல்பாடுகளும் பொதுத்தளத்தில் பார்வைக்கு உள்ளன. ரகசிய கூட்டம் நடத்த பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் Modern Essential Education Trust (MEET) அமைப்பின் அரங்கத்தில் நடத்தப்பட்ட கூட்டங்கள்: ஈத்மிலன் பெருநாள் சந்திப்பில் பேசப்பட்ட தலைப்புகள் இஸ்லாமிய தமிழ் இலக்கியம் - மார்க்சியமும் இஸ்லாமும் - தமிழ்த்தேசியமும் இஸ்லாமும், பெரியாரியலும் இஸ்லாமும், இஸ்லாமும் முஸ்லீம்களும், பொது சிவில் சட்டம் தேவையா? - ஆய்வரங்கம், மணிப்பூர் நடப்பது என்ன? - கருத்தரங்கு போன்றவை தான்.

Dr.  ஹமீது உசேனின் கருத்துகளில் இறையியல் கோட்பாடு என்பது விடுதலைச்சிறுத்தைகள் முன்வைக்கும் அரசியல் கோட்பாட்டுக்கு முரணானது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஊபா போன்ற கறுப்பு சட்டங்களை முழுவதும் திரும்பப்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை விடுதலைச்சிறுத்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். பொடாவில் தொடர் கைதுகள் நடக்கும்போது, அது குறித்து பேச எல்லோரும் அஞ்சியபோதே, நாட்டிலேயே முதன்முறையாக பொடா எதிர்ப்பு கூட்டமைப்பை அமைத்தவர் எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

நேரடியாக எந்த வன்முறை நிகழ்வுக்கோ அல்லது வன்முறைக்கு வித்திடும் பதற்ற சூழ்நிலைக்கோ Dr. ஹமீது உசேனின் செயல்பாடுகள் காரணமாக இருந்ததாக இதுவரை எங்கும் தகவல் இல்லை. அவரது தந்தையின் செயல்பாடுகளும் சனநாயக கட்டமைப்புக்குள் தான் இதுவரை அமைந்துள்ளது. இந்தியாவில் தடை செய்யப்படாத ஒரு இயக்கத்துக்கு ஆதரவாக இருந்ததாக சொல்லி இஸ்லாமிய இளைஞர்கள் நாடெங்கும் கைது செய்யப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்து ராஷ்டிரம் அமைப்போம், இது இந்துக்களின் நாடு என்றும், புரட்சியாளர் அம்பேத்கரின் சமய சார்பற்ற அரசியல் சட்டத்தை (Secular Constitution) ஏற்க மாட்டோம், சனாதன தர்மத்தை நிறுவுவோம் என்றெல்லாம் பேசியும், அதற்கு ஆயுத பயிற்சியும் எடுத்துவரும் சங்க பரிவார கூட்டத்தின் செயல்பாடுகள் பயங்கரவாதமாக கருதப்படாதா? அவை இந்திய இறையாண்மைக்கு ஊறுவிளைவிக்காதா?

பொடாவை எதிர்த்த போது, “அடுத்த கைது தொல்.திருமாவளவன் தான்”என்று மிரட்டினார்கள். ஆனாலும் அஞ்சாது சிறுத்தைகள் களமாடினோம். பொடா தான் காணாமல் போனது. 
இப்போது ஊபா எனும் கொடுஞ்சட்டத்தை வைத்து அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறார்கள். பொடா போல ஊபாவும் ஒரு நாள் காணாமல் போகும். அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் போன்ற சனநாயக சக்திகள் தொடர்ந்து செயல்படும்.

சனநாயக ரீதியாக செயல்பட்டு வந்த சுவடு மன்சூர் உள்ளிட்ட 6 பேர் மீதான ஊபா வழக்கை தமிழ்நாடு காவல்துறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். திராவிட கோட்பாட்டோடு பதிப்பகம் நடத்தி, சனாதன பயங்கரவாதத்தை எதிர்க்கும் இவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானதாகும். இந்த கைது நடவடிக்கை முதல்வருக்கு தெரிந்துதான் நடக்கிறதா எனும் கேள்வியும் எழுகிறது.

இவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பிற பிரிவுகளில் வழக்கை மாற்றி உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். என்.ஐ.ஏ.விடம் இந்த வழக்கை ஒப்படைக்க கூடாது.

ஆகவே, தமிழ்நாடு முதல்வர் மாண்பைமிகு 
@mkstalin
 அவர்கள் உடனடியாக திரு.மன்சூர் உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வன்னி அரசு
29.05.24

No comments:

Post a Comment

நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை

 நடிகர் சங்கம் சார்பாக நடிகை ரோகிணி முக்தார் யூட்யுப் சேனலில் பேசிய காந்தராஜ் மீது வழக்கு- ஏன் முக்தார் மீது இல்லை