மத்திய கைலாஷ் பாலத்தில்.. இரவு நேரம் நடந்த பரபரப்பு ‘ஆபரேஷன்’.. இனி 3 இன்ச் எக்ஸ்ட்ரா! செம திருப்பம் By Shyamsundar IMarch 6, 2026
சென்னை: "என்னங்க இது மேம்பாலமா இல்ல ராட்டினமா?" என்று வாகன ஓட்டிகள் புலம்பித் தள்ளிய மத்திய கைலாஷ் புதிய மேம்பாலத்திற்கு ஒரு வழியாக விடிவுகாலம் பிறந்திருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே இந்த மேம்பாலத்தில் பயணிப்பவர்கள், 'பவுன்சி' (Bouncy) எஃபெக்ட்டால் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சிமெண்ட் கான்க்ரீட் (CC) தளம் என்பதால், சாலை நெகிழ்வுத்தன்மை இல்லாமல் கரடுமுரடாக இருந்ததே இதற்கு முக்கிய காரணம். புகார்கள் குவிந்ததையடுத்து, நெடுஞ்சாலைத் துறை அதிரடியாக களத்தில் இறங்கியது.
மத்திய கைலாஷ் பாலம் - இரவு நேர 'ஆபரேஷன்'
புதன்கிழமை இரவு தொடங்கிய தார் பூசும் பணி (Bituminous tar wearing coat), விடிய விடிய நடைபெற்று வியாழன் காலைக்குள் முடிக்கப்பட்டது. இதற்காக மேம்பாலம் தற்காலிகமாக மூடப்பட்டதால், ராஜீவ் காந்தி சாலைக்குச் செல்லும் வாகனங்கள் ஐ.ஐ.டி மேம்பாலம் வரை அணிவகுத்து நின்றன. டிராபிக் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் திணறியிருந்தாலும், "நல்ல வேலை நடந்தா சரிதான்" என்ற மனநிலையிலேயே பலரையும் காண முடிந்தது.
3 இன்ச் எக்ஸ்ட்ரா... என்ன காரணம்?
இது குறித்து நெடுஞ்சாலைத் துறை தரப்பில் கேட்டபோது, "சிமெண்ட் தளம் கடினமாக இருந்ததால் வாகனங்கள் குதிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இப்போது அதன் மேல் 3 இன்ச் உயரத்திற்கு தார் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் 'டெட் வெயிட்' (Dead weight) சற்று அதிகரித்தாலும், பயணம் மிகவும் மென்மையாக இருக்கும்," என்கிறார்கள்.
இனி வேகம் வேணாம்! தார் சாலை போட்டாச்சு... இனி 'பறக்கலாம்' என நினைப்பவர்களுக்கு ஒரு செக் வைத்திருக்கிறது துறை. வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த விரைவில் புதிய 'ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்' (Rumble strips) அமைக்கப்பட உள்ளன.
ஆக, மத்திய கைலாஷ் மேம்பாலத்தில் இனி 'குலுக்கல்' இருக்காது, ஆனா 'வேகம்' மட்டும் உங்க கட்டுப்பாட்டுல இருக்கட்டும் மக்களே!
அன்புமணி ராமதாஸ் அறிக்கை
இப்படிப்பட்ட நிலையில்தான் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் பற்றி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் எல் வடிவ மேம்பாலம் தரமற்றும், பலவீனமாகவும், அதிர்வுகளை ஏற்படுத்தும் வகையிலும் கட்டப்பட்டிருப்பதாக தொடர்ந்து நான் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், இப்போது மேம்பாலத்தின் மீது அவசர, அவசரமாக தார்ச்சாலை அமைத்திருக்கிறது. உலகிலேயே புதிதாக அமைக்கப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது தார்ச்சாலை அமைத்த ஒரே கம்பெனி கடந்த ஐந்தாண்டுகளாக தமிழ்நாட்டைச் சீரழித்த திமுக கம்பெனி தான். இத்தகைய தார்பூச்சு வேலைகளின் மூலம் பாலம் கட்டுவதில் நடந்த ஊழலை மூடி மறைக்க முடியாது. எல் வடிவ மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படும் வரை அதை போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க வரும் தேவதையாகப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அந்தப் பாலம் திறக்கப்பட்ட அடுத்த நிமிடத்திலிருந்து அதை உயிரைப் பறிக்க வந்த எமனாகப் பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த அளவுக்கு மத்திய கைலாஷ் பாலத்தை தரமற்றதாக திமுக அரசு கட்டியிருந்தது. அனைத்திலும் ஊழல் செய்து கொள்ளையடிக்க வேண்டும் என்ற ஆட்சியாளர்களின் அடங்காத பேராசை தான் இதற்குக் காரணம் ஆகும். மத்திய கைலாஷ் பாலம் தரமற்று இருப்பதற்கு காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து வல்லுனர்கள் தெரிவித்திருந்த கருத்துகளை கடந்த 3-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன். திமுக அரசுக்கு உண்மையாகவே மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால், அதைத் தாண்டி நேர்மையான அரசாக இருந்திருந்தால் பாலத்தின் பலவீனத்திற்கு காரணம் என்ன? என்பது குறித்து வல்லுனர் குழு அமைத்து ஆய்வு செய்து சரி செய்ய முயற்சி செய்திருக்க வேண்டும்; இன்னொருபக்கம் பாலம் தரமற்று கட்டப்பட்டதன் பின்னணியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதையெல்லாம் செய்யாமல் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைத்திருப்பதன் மூலம், பாலம் தரமற்று அமைக்கப்பட்டிருப்பதையும், அதன் பின்னணியில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கும் திமுக அரசு, இன்னொருபக்கம் ஊழலை தார்ப்பூசி மூடி மறைக்க முயற்சி செய்திருக்கிறது. திமுக அரசின் இந்த முயற்சி ஒரு போதும் வெற்றி பெறாது. 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சாலைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட விதிகளின்படி, அதிக போக்குவரத்து இல்லாத கிராமப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாலங்களின் மேற்பரப்பில் வேண்டுமானால் தார் சாலை அமைக்கலாம்; நகர்ப்புறங்களில் அவ்வாறு செய்யக்கூடாது. ஆனால், இதிலும் விதிகளை மீறி தார்ச்சாலை அமைத்திருக்கிறது திமுக அரசு. விதி மீறலுக்கு அதிகாரிகளும் துணையாக இருந்துள்ளனர். எல் வடிவ மேம்பாலம் பலவீனமாக இருப்பதற்காக காரணங்களில் முதன்மையானது,''அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் பயணிக்கக் கூடிய பாலத்தைத் தாங்குவதற்காக பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் போதிய வலுவற்றவையாக இருக்கக் கூடும். அதிக வாகனங்களைத் தாங்கும் அளவுக்கு இரும்புக் கம்பிகள் பொருத்தப்படாததும் தான்" என்று கட்டுமான வல்லுனர்கள் கூறியுள்ளனர். இத்தகைய சூழலில் பாலத்தின் மீது 25 மி.மீ அளவுக்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டால் பாலத்தின் எடை அதிகரிக்கும். அதனால் பாலம் விரைவாகவே வலுவிழந்து விடும். இவை அனைத்தும் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியும் என்றாலும் இப்போது பழியிலிருந்து தப்புவதற்காகவே இந்த ஏற்பாடுகளையெல்லாம் செய்துள்ளனர். ஆட்சியாளர்கள் செய்துள்ள இந்த ஏற்பாடும் பயன் தராது. இன்னும் சில வாரங்களில் பாலம் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பி விடும். மேம்பாலத்தின் மீது தார்ச்சாலை அமைப்பது போன்ற பயனற்ற செயல்களை செய்வதற்கு பதிலாக கீழ்க்கண்ட நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ள வேண்டும். 1. எல் வடிவ மேம்பாலத்தின் குறைபாடுகள் குறித்து பாலத்திற்கு அடுத்த வளாகத்தில் உள்ள ஐஐடி பேராசிரியர்கள் அடங்கிய குழுவைக் கொண்டு ஆய்வு நடத்த வேண்டும். அதில் தெரியவரும் தரவுகளின் அடிப்படையில் பாலத்தை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். 2. தரமற்ற முறையில் எல் வடிவ பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரை உடனடியாக கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும்; பாலம் கட்டியதற்கான ஒப்பந்தத் தொகையில் ஏதேனும் நிலுவை இருந்தால் அதை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும். 3. மத்திய கைலாஷ் எல் வடிவ மேம்பாலம் கட்டப் பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுவது குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இவற்றைச் செய்யாமல் எல்& வடிவ மேம்பால ஊழலை மறைக்க திமுக அரசு என்ன தான் ஏமாற்று வேலைகளை செய்தாலும் ஊழலுக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், எல் வடிவ மேம்பாலம் கட்டப்பட்டதில் நடைபெற்ற ஊழல் குறித்து விசாரணைக்கு ஆணையிடப்படும். அப்போது ஊழலுக்கு காரணமான அனைவரும் நீதியின் தண்டனையை கண்டிப்பாக அனுபவித்தே தீர வேண்டும்.
Read more at: https://tamil.oneindia.com/news/chennai/new-tar-layer-laid-on-the-madhya-kailash-bridge-after-the-complaints-from-commuters-779055.html


No comments:
Post a Comment