Tuesday, May 19, 2026

ரூ.300 கோடி மக்கள் பணத்தைச் சுருட்டிய மோசடிப் பேர்வழிக்கு தவெக-வில் ரத்தினக் கம்பள வரவேற்பு..?

ரூ.300 கோடி மக்கள் பணத்தைச் சுருட்டிய மெகா மோசடிப் பேர்வழிக்கு தவெக-வில் ரத்தினக் கம்பள வரவேற்பு..? நிதியமைச்சருடன் வலம் வரும் தலைமறைவுக் குற்றவாளி. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்..!!

சேலம் - வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் முதலீடுகளுக்கு இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்த வழக்கில் சிவக்குமார் என்பவர் உட்பட 30 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்ற சிவக்குமார், பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் சென்னை உயர்நீதிமன்றம் அவரது முன்ஜாமீனை ரத்து செய்தது. சிவக்குமாரின் நிலங்களை ஏலம் விட்டு பணத்தை மீட்கும் முயற்சிகளுக்கும் அவர் முட்டுக்கட்டை போட்டு வரும் நிலையில், தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான வின் ஸ்டார் சிவக்குமார், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியில் இணைந்துள்ளதாகப் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவைச் சேர்ந்த நிதியமைச்சர் செங்கோட்டையனை சிவக்குமார் நேரில் சந்தித்து, இருவரும் பரஸ்பரம் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கழுத்தில் மாட்டியபடி வந்து நூதன முறையில் மக்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இந்த சந்திப்பின் போது காவல்துறை அதிகாரிகளும் உடன் இருந்ததாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தங்களை ஒரு “தூய சக்தி” என்று பொதுவெளியில் அடையாளப்படுத்திக் கொள்ளும் தவெகவினர், ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களின் பணத்தைச் சுருட்டிவிட்டு பல ஆண்டுகளாகப் போலீசாருக்குப் பயந்து தலைமறைவாக இருக்கும் ஒரு குற்றவாளிக்குக் கட்சியில் உயரிய மரியாதை அளிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொதுமக்களை ஏமாற்றிய நபருடன் நிதியமைச்சர் நெருக்கமாக இருப்பது தங்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும், இந்த விவகாரத்தில் தங்களுக்கு உரிய நீதி கிடைக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

No comments:

Post a Comment