தமிழ்நாடு அரசின் சமூகநீதிக் கண்காணிப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து சுப. வீரபாண்டியன் விலகுவதாக தனது பதவி விலகல் கடிதத்தை அவர் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ளார் என்ற அதிகாரப்பூர்வத் தகவலை உறுதிப்படுத்துகிறது.
வேங்கைவயல் குடிநீர் மேல்நிலை தொட்டி மலம் கலப்பு, மடப்புரம் காளி கோயில் காவலாளி அஜித் குமாரின் போலீஸ் கஸ்டடி மரணம், தமிழகத்தையே உலுக்கிய எண்ணற்ற பாலியல் வன்கொடுமைகள், தரமணி மகளிர் பாலிடெக்னிக் காவலாளி, அவர் மனைவி மற்றும் பச்சிளம் குழந்தை படுகொலை செய்யப்பட்டு பள்ளிக்கரணை குப்பைகிடங்கில் வீசப்பட்ட கொடூரம், திருத்தணியில் வடமாநிலத் தொழிலாளி சுராஜ் கஞ்சா குடியர்களால் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட நிகழ்வு என அடுத்தடுத்து அரங்கேறிய இந்தச் சமூக அநீதிகள் எதைக் குறிக்கின்றன?
இத்தனை மரணங்களும், குருதி வாடையும் காற்றில் மிதக்கும்போது, ஒரு மாநிலத்தின் மிக உயரிய அதிகாரப் பதவியில், அதுவும் "சமூகநீதிக் கண்காணிப்புக் குழு" என்ற பெயரிலேயே அமைந்த பதவியில் இருந்தவர் ஒரு சிறு முனகலைக் கூட வெளிப்படுத்தாமல் மௌனம் காத்தது அதிகார மமதையின் உச்சம் அல்லவா?.
ஐந்தாண்டு காலம், அதாவது 60 மாதங்கள் என்பது ஒரு சாதாரணப் பொழுதுபோக்கு அல்ல. மக்களின் வரிப்பணத்தில் சொகுசுக் கார், பங்களா, ஊதியம் என அத்தனை சலுகைகளையும் "ஜமாய்த்துவிட்டு",சுகாதார பணியாளர்கள் நீதி கேட்டு வீதியில் நின்றபோது வாய்மூடித் தவம் கிடந்த இந்தப் போக்கு ஒரு நிர்வாகத் தோல்வி என்பதை விடப் பெரிய அறவீழ்ச்சி.
அதிகாரத்தின் பிடியில் மாட்டின் உடலில் நிலைகுத்திய ஒட்டுண்ணியைப் போல ரத்தத்தை உறிஞ்சும் இத்தகைய நபர்கள், சமூக நீதி பற்றிப் பேசும் போதெல்லாம் அது வெறும் கேலிக்கூத்தாகவே முடிகிறது.
சமூக நீதிப் பாதுகாவலர் என்ற போர்வையில் வலம் வந்த ஒருவரிடமிருந்து, எளிய மனிதர்களின் உயிர் பறிக்கப்பட்டபோது ஒரு கண்டனம் கூட வராதது ஏன்?
கஸ்டடி மரணங்கள் நிகழ்ந்தபோது சட்டத்தின் மாண்பைக் காக்கத் தவறியதும், ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தலைவி அவர்களின் குழந்தையும் கொலையுண்டு அநாதையாகக் குப்பையில் வீசப்பட்டபோது அதிகாரத்தின் கண்கள் மூடிக்கிடந்ததும் வரலாற்றுத் துரோகங்கள். தெருவோரக் கல்லைப் போல உணர்ச்சியற்று, எதற்கும் எதிர்வினையாற்றாமல் காலத்தைக் கடத்திவிட்டு, இப்போது எவ்விதப் பொறுப்புக்கூறலும் இன்றி சத்தமின்றி ராஜினாமா செய்து வெளியேறுவது என்பது மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?.
ஒரு பதவியில் இருப்பவர் அந்தப் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தகைய அநீதிகளைத் தடுத்திருக்க முடியும் அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நீதியைப் பெற்றுத் தந்திருக்க முடியும்.
ஆனால், எவ்விதச் சலனமுமின்றி ஐந்தாண்டு காலத்தைச் சலுகைகளுக்காக மட்டுமே செலவிட்டுவிட்டு, இப்போது "முன்னாள்" என்ற பட்டத்தோடு வலம் வருவது பொதுவாழ்வின் அவலம்.
அதிகாரத்தின் நிழலில் ஒதுங்கிக் கொண்டு, மக்களின் கண்ணீரைத் துடைக்க முன்வராத இத்தகைய "வீணர்கள்" வரலாற்றின் பக்கங்களில் வெறும் ஒட்டுண்ணிகளாகவே அடையாளப்படுத்தப்படுவார்கள். இந்த மௌனம் வெறும் அமைதி அல்ல; இது அநீதிக்குத் துணைபோகும் ஒரு மறைமுகக் குற்றம்.


No comments:
Post a Comment