Friday, May 29, 2026

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

தமிழகத்தின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

https://www.hindutamil.in/news/tamilnadu/mahesh-kumar-aggarwal-appointed-as-tamil-nadus-new-dgp

சென்னை: தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை டிஜிபியாக பணியாற்றி வரும் இவர், இப்போது தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

யார் இந்த மகேஷ்குமார் அகர்வால்?

மகேஷ்குமார் அகர்வால் 1994-ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி. இவர் சட்டம் பயின்றவர். சொந்த மாநிலம் பஞ்சாப் ஆகும். தந்தையும் வழக்கறிஞர் என்பதால் சட்டம் பயின்று பின்னர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.

தேனி எஸ்.பி., தூத்துக்குடி எஸ்.பி., 2001-ல் சென்னை பூக்கடை துணை ஆணையர், சென்னை போக்குவரத்து காவல் தெற்கு துணை ஆணையர் எனப் பொறுப்பு வகித்த மகேஷ்குமார் அகர்வால், பின்னர் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் சிபிஐ எஸ்.பி.யாக அயல் பணியில் சென்றார்.

7 ஆண்டுகள் சிபிஐ அதிகாரியாக பஞ்சாப், ஹரியாணா, ஜம்மு காஷ்மீரில் பணியாற்றினார். பின்னர் ஐஜியாகப் பதவி உயர்வுபெற்று தமிழகம் திரும்பிய மகேஷ்குமார் அகர்வால், சிபிசிஐடி ஐஜியாகப் பதவி வகித்தார். பின்னர் மதுரை காவல் ஆணையராகச் சென்றார். மீண்டும் சிபிசிஐடி ஐஜியாகப் பதவி ஏற்றார்.

பின்னர் சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையராகப் பொறுப்பேற்றார். பின்னர் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால், 2020-ல் சென்னையின் இளம் காவல் ஆணையராகப் பொறுப்பேற்றவர்.

சிறந்த பணிக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தையும், பொது சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல்வர் பதக்கத்தையும் வென்ற இவர் சிபிஐ, சிபிசிஐடி உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளிலும் திறம்பட செயலாற்றியவர் என்பது நினைவுகூரத்தக்கது.

முன்னதாக, தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். டிஜிபி பணி ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே, அடுத்து தகுதிவாய்ந்த டிஜிபிக்களின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மாநில அரசு அனுப்பிவைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை.

மேலும், பணி மூப்பு அடிப்​படை​யில் டிஜிபி-க்​களான சீமா அகர்​வால், ராஜீவ்கு​மார், சந்​தீப்ராய் ரத்​தோர் ஆகிய 3 பேரில் ஒரு​வர் புதிய டிஜிபி​யாக நியமிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தமிழக அரசு இந்தப் பட்டியலிலேயே இல்லாத ஜூனியரான வெங்கடராமனை சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமித்தது.

இதற்கிடையே தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் - ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையம் நியமித்தது. அதன்பின், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக டெல்லியில் மத்திய பணியாளர் தேர்வாணையம் சமீபத்திய நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், உள்துறை செயலர் மணிவாசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில், டிஜிபிக்களான ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் (அயல் பணியாக எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகிய 3 பேர் பட்டியலுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் வழங்கி அவர்களின் பெயர்களை பரிந்துரைத்தது.

இந்தப் பட்டியல் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்களில், மகேஷ்குமார் அகவர்வாலை சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக தமிழக அரசு முறைப்படி இப்போது அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

அதிகாரிகள் நியமனத்தில் மெகா ஊழல் | Tamizha Tamizha Pandian | CM Vijay

 https://www.youtube.com/watch?v=C3vEbMfYxGE அதிகாரிகள் நியமனத்தில் மெகா ஊழல் | Tamizha Tamizha Pandian | CM Vijay