Sunday, August 23, 2026

வேதத்தில் பரம்பொருள்/ஒருதெய்வக் கொள்கை

 வேதங்கள் பல்தெய்வ வழிபாட்டைத் தான் வலியுறுத்துகின்றதா?

வேதத்தில் பரம்பொருள்/ஒருதெய்வக் கொள்கை உண்டா?
வேதம் இந்திரனைத் தான் பரம்பொருள் என்கின்றதா?
வேதத்தில் வரும் “இந்திரன்”, ”அக்நி”, ”வாயு” முதலிய பெயர்கள் யாரைக் குறிக்கின்றது?
- சந்த்ரு ராஜமூர்த்தி
“ஆதிகால ஆரியர்கள், பயத்தின் அடிப்படையில், இயற்கையின் பல பரிணாமங்களைப் பல தெய்வங்களாக உருவகப்படுத்தி வழிபட்டனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே வேதங்கள். அவற்றில் பல்தெய்வ வழிபாடு மட்டுமே பேசப்படுகின்றதே தவிர ஓரிறைக் கொள்கை கிடையவே கிடையாது” என்ற தவறான கருத்து பெரும்பான்மையான மக்களிடையே பல்நெடுங்காலமாகப் பரப்பப்பட்டு வந்துள்ளது. அரைகுறையாக வேதத்தை “ஆராய்ந்து”விட்டு, தம் மதத்தை எவ்வாறாவது பாரதத்தில் பரப்பியே தீரவேண்டுமென்ற வெறிகொண்ட அந்நியர் அன்று விதைத்த இந்த விஷவிதைக் கொப்பான கருத்தை இன்று மொழிவெறி கொண்ட சிலர் நீர்பாய்ச்சி வளர்த்து வரும் விந்தையானது பெரும் வருத்தத்திற்குரிய விடயம்.
“வேதங்களின் பெரும்பான்மையான பகுதிகள் இந்திரன், அக்நி, வருணன், வாயு போன்ற தேவர்களைத் தானே துதிக்கின்றன, அது சிவப்பரம்பொருளைப் போற்றவே இல்லையே; அப்படியிருக்க அத்தகு வேதங்களை எதற்காக நாம் ஏற்க வேண்டும்?” என்ற வினா இன்று பலரின் மனதில் விஸ்வரூபமெடுத்துள்ளது. மேலோட்டமாக வேதத்தை படித்தால் இவ்வாறான எண்ணம் உதிப்பது சகஜமே. மாறாக, நிதானமாக ஆராய்ந்தால் மறையில் மறைந்திருக்கும் மர்மம் விலகி அதன் உண்மை தாத்பர்யம் புலப்படும்.
முதற்கண், வேதத்தில் காணப்படும் “இந்திரன்”, “அக்நி”, “வாயு”, “வருணன்” முதலிய சொற்கள் பலர் நினைப்பது போல வெவ்வேறு தேவர்களை குறிப்பிடும் சொற்கள் அல்ல. இதை ருக்வேதத்தின் முதலாம் மண்டலம், 164ஆவது ஸூக்தத்தின் 46ஆம் மந்த்ரம் தெளிவாக விளக்குகின்றது:
இந்த்³ரம்॑ மி॒த்ரம் வரு॑ணம॒க்³நிமா॑ஹு॒ரதோ॑² தி॒³வ்ய: ஸ
ஸு॑ப॒ர்ணோ க॒³ருத்மா॑ந் ।
ஏகம்॒ ஸத்³விப்ரா॑ ப³ஹு॒தா⁴ வ॑த³ந்த்ய॒க்³நிம் ய॒மம் மா॑த॒ரிஶ்வா॑நமாஹு: ॥ 1.164.46
சத்தாகிய #ஏக (ஒரே) பரம்பொருள்# இந்திரன், மித்ரன், வருணன், அக்நி, திவ்யமான அழகிய சிறகுகளையுடைய கருத்மான், யமன், வாயு என்று பலவாறாக அந்தணர்களால் அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து, “ இந்திரன்” , “மித்திரன்”, “அக்நி” போன்ற சொற்கள் ஒரே பரம்பொருளைத் தான் குறிக்கின்றது ; அவை பரம்பொருளின் வெவ்வேறு பெயர்களே தான் என்பதும் தெளிவாகின்றது.
அது சரி, ருக்வேதம் சுட்டிக்காட்டும், அக்நி முதலிய திருநாமங்களையுடைய இந்த சத்தாகிய ஏக பரம்பொருள் யார்? யஜுர் வேதம் (தைத்திரீய ஆரண்யகம் ) பதிலுரைக்கிறது :
புருஷோ வை ருத்ரஸ் ஸந்மஹோ நமோ நம: 24
ருத்ரனே புருஷன். மஹானாக விளங்கும் அந்த #சத்தாகிய #ருத்ரருக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரம்.
யஜுர்வேதத்தின் தைத்திரீய சம்ஹிதை, “ஏகம்” - இரண்டற்ற ஒரே பரம்பொருள் ருத்ரனே என்றுரைக்கிறது :
ஏக ஏவ ருத்ரோ நத்விதீயாய தஷ்டே
அதே யஜுர்வேதத்தின் ஸ்வேதாஸ்வதரோபநிஷத்தும் ருத்ரனே இரண்டற்ற ஒருவன் என்கிறது:
ஏகோ ஹி ருத்³ரோ ந த்³விதீயாய தஸ்து²ர்ய இமாம்ʼல்லோகானீஶத ஈஶனீபி⁴꞉।
ப்ரத்யங் ஜநாஸ்திஷ்ட²தி ஸஞ்சுகோசாந்தகாலே
ஸம்ஸ்ருʼஜ்ய விஶ்வா பு⁴வநாநி கோ³பா: ||
இரண்டற்ற ஒரே பரம்பொருள் ருத்ரன். அவனே இவ்வனைத்துலகங்களையும் தமது ஆற்றலால் ஆள்கிறான். அவனே அனைத்துலகங்களையும் படைத்து, காத்து பின் அவற்றை காலமுடிவில் அழிக்கிறான். 3 . 2
அதர்வண வேதத்தின் அதர்வசிரமும் இரண்டற்ற ஏக பரம்பொருள் ருத்ரனே என்று முழங்குகிறது:
யத்பரம்ப்³ரஹ்ம ஸ ஏக: ய ஏக: ஸ ருத்³ர:
ஏகோ ஹி ருத்³ரோ ந த்³விதீயாய தஸ்மை
மேலும், மேற்கண்ட “ஏகம் சத் விப்ர பஹுதா வதந்தி” என்ற ரிக் வேத வாக்யம் பரமசிவனைத் தான் குறிக்கின்றது என்று ஆதித்ய புராணம் விளக்கமளிக்கிறது :
தமேகம் பரமாத்மாநமாதிகாரண மீஸ்வரம்|
ப்ராஹுர்பஹுவிதம் தத்வமிந்த்ரம்மித்ரமிதி ஸ்ருதி:|| 2
தாம் ஒருவரே பரமாத்மா; தாமே ஆதிகாரணரான ஈஸ்வரன்; தம்மையே இந்திரன், மித்ரன் முதலிய பெயர்களால் பலவிதமாக அழைக்கின்றனர் என்கின்றது ஸ்ருதி.
திருமுறைகளும் "வேதங்கள் இந்திரன், அக்நி போன்ற பெயர்களால் ஈசனையே போற்றுகின்றன" என்று உறுதியாக உரைக்கின்றன.
சுருதி வானவனாம் திருநெடுமாலாம்
சுந்தர விசும்பின் இந்திரனாம்
பருதி வானவனாம் படர்சடை முக்கட்
பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்
எருது வாகனனாம் எயில்கள் மூன்றெரித்த
ஏறு சேவகனுமாம் பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் கங்கை
கொண்ட சோழேச் சரத்தானே!
எவ்வாறு ஒரு தந்தை தமது நாமத்தை தம் புதல்வருக்கு சூட்டுவாரோ, அவ்வாறே பரமபிதாவான பரமசிவனும் தன்னால் படைக்கப்பட்டு, தமது விபூதிகளாக விளங்கும் தேவர்களிற்கு இந்திரன், அக்நி, வாயு, வருணன் முதலிய தமது திருநாமங்களைச் சூட்டியருளினார்.
இந்த ரஹஸ்யத்தை வெளிப்படுத்துகிறது ருக்வேதத்தின் பத்தாவது மண்டலம், 82ஆவது ஸூக்தத்தின் 3ஆம் மந்த்ரம் :
யோ ந॑: பி॒தா ஜ॑நி॒தா யோ வி॑தா॒⁴தா தா⁴மா॑நி॒ வேத॒³ பு⁴வ॑நாநி॒
விஶ்வா॑ ।
யோ தே॒³வாநாம்॑ நாம॒தா⁴ ஏக॑ ஏ॒வ தம் ஸ॑ம்ப்ர॒ஶ்நம் பு⁴வ॑நா
யந்த்ய॒ந்யா ॥
நமது தந்தையும் பாதுகாவலனும் அனைத்தையும் படைத்தவனும் எல்லா இடங்களையும் உயிர்களையும் அறிபவனும் தேவர்களின் பெயர்களை தாங்கியிருப்பவனும், தேவர்களுக்குப் பெயர் சூட்டியவனும் ஒருவனே உண்டு. எல்லா உயிர்களும் அறிந்துகொள்ள அவனிடமே செல்கின்றன.
(இந்த மந்திரத்தில் வரும் “தே॒³வாநாம்॑ நாம॒தா⁴ “
என்ற சொற்றொடருக்குத் “தேவர்களின் பெயர்களை தாங்கியிருப்பவன்”( இந்திரன், அக்நி, வருணன், வாயு போன்ற தேவர்களின் பெயர்களைத் தாங்கியவன் என்பதே தாத்பர்யம்) மற்றும் “தேவர்களுக்குப் பெயர் சூட்டியவன்” என்ற இருவிதமான அர்த்தங்கள் உண்டு. மேலும், ரிக் வேதத்தின் 6வது மண்டலம், 49வது ஸூக்தத்தின் 10வது மந்த்ரம் ருத்ரனை பிரபஞ்சத்தின் தந்தை - “புவனஸ்ய பிதரம் கீர்பிராபி ருத்ரம்” என்கிறது.)
இவ்வாறாக வேதத்தில் வரும் மந்திரங்களில் பரமேஸ்வரனே இந்திரன், வாயு, அக்நி, வருணன் முதலிய பெயர்களால் போற்றப்படுகின்றார். ஈஸ்வரனின் விபூதிகளாக விளங்குவதால் ஈஸ்வரனின் நாமங்களைத் தாங்கிய இந்திராதி தேவர்களுக்கு ஈஸ்வரனைப் போற்றும் மந்திரங்களால் ஹவிர்பாகம் வழங்கப்படுகின்றது.
இந்திரன்,அக்நி, வாயு, ப்ரஹ்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் அனைவரும் பரமசிவனின் விபூதிகளே என்று அதர்வண வேதத்தின் அதர்வசீர்ஷம் உரைக்கிறது :
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச ப்³ரஹ்மா தஸ்மை வை நமோநம: ॥ 1॥
ப்ரஹ்மனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந் யஶ்ச விஷ்ணுஸ்தஸ்மை வை நமோநம: ॥ 2॥
விஷ்ணுவின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச ஸ்கந்த³ஸ்தஸ்மை வை நமோநம: ॥ 3॥
ஸ்கந்தனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்சேந்த்³ரஸ்தஸ்மை வை நமோநம: ॥ 4॥
இந்திரனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்சாக்³நிஸ்தஸ்மை வை நமோநம: ॥ 5॥
அக்நியின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச வாயுஸ்தஸ்மை வை நமோநம: ॥ 6॥
வாயுவின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச ஸூர்யஸ்தஸ்மை வை நமோநம: ॥ 7॥
சூரியனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச ஸோமஸ்தஸ்மை வை நமோநம: ॥8॥
ஸோமனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
யோ வை ருத்³ர: ஸ ப⁴க³வாந்யஶ்ச யமஸ்தஸ்மை வை நமோநம: ॥ 21॥
யமனின் வடிவில் திகழும் பகவானாகிய ருத்ரனுக்கு நமஸ்காரம்.
இதைக் கூர்ம புராணமும் உரைக்கின்றது :
ஏனமேகே வதன்த்யக்னிம் நாராயணமதாபரே||
இந்த்ரமேகே பரே ப்ராணம் ப்ரஹ்மாணமபரே ஜகு:|
ப்ரஹ்மவிஷ்ணவக்னிவருணா: ஸர்வே தேவாஸ்ததர்ஷய:||
ஏகஸ்யைவாத ருத்ரஸ்ய பேதாஸ்தே பரிகீர்த்திதா:|
ஒன்றாகியப் பரம்பொருளைச் சிலர் அக்நி என்று அழைப்பர். சிலர் அவரை நாராயணர் என்பர். சிலர் அவரை இந்திரன் என்று கூறுவர். மற்றவர் அதை பிராணன் என்றும்; இன்னும் சிலர் அதை ப்ரஹ்மன் என்று விழிப்பர். இருப்பினும் ப்ரஹ்மன், விஷ்ணு, அக்நி, வருணன் முதலிய அனைத்து தேவர்களும் ரிஷிகளும் உண்மையில் ஒருவனாகிய ருத்ரனின் மூர்த்தி பேதங்களே.
இதை வலியுறுத்தும் வகையில் தான் யஜுர் வேதத்தின் ஸதருத்ரீயம் பரமேஸ்வரனை
“ தே³வாநா ஹ்ருʼத³யேப்⁴யோ” - “எல்லா தேவர்களுடைய இருதயத்திலும் வீற்றிருப்பவர்” என்று பணிகிறது.
தேவர்களைத் துதித்து ஹவிர் பாகம் வழங்குவது பல்தெய்வ வணக்கம் இல்லையா... என்ற கேள்வி எழலாம். இதற்கு ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலம், 92வது ஸூக்தத்தின் 9வது மந்திரத்தில் பதில் உள்ளது:
ஸ்தோமம்॑ வோ அ॒த்³ய ரு॒த்³ராய॒ ஶிக்வ॑ஸே க்ஷ॒யத்³வீ॑ராய॒ நம॑ஸா தி³தி³ஷ்டந ।
யேபி॑:⁴ ஶி॒வ: ஸ்வவா॑ँ ஏவ॒யாவ॑பி⁴ர்தி॒³வ: ஸிஷ॑க்தி॒ ஸ்வய॑ஶா॒ நிகா॑மபி:⁴ ॥
ஓ தேவர்களே! இன்று உங்களைக்குறித்து நாங்கள் கொடுக்கும் நமஸ்காரங்களையும், ஸ்துதிகளையும் திறன் மிக்கவரும், (வீரபத்திரன் முதலிய) வீரர்களின் தலைவரும், சிறந்த ஸம்ரக்ஷகரும், மிகுந்த புகழுடையவரும், ஆகாயத்தில் ஆர்வத்தோடு வேகமாக நகரும் (கணங்களோடு / மருத்துக்களோடு ) கூடிய ருத்ரனாகிய சிவனிடம் சமர்ப்பித்து விடுங்கள்.
( வேதத்தில் “சிவன் என்கிற தெய்வமே இல்லை ருத்ரன் தான் இருக்கிறார்” என்று கூறுபவர்கள் கவனத்திற்கு..!! இம் மந்திரத்தில் தெளிவாக ருத்ரன் “சிவன்” என்று அழைக்கப்படுகின்றார்.)
வேதங்களில் எந்தவொரு தேவதைக்கும் வந்தனமோ ஸ்தோத்ரமோ விதிக்கப்பட்டிருந்தாலும் அது பரமேஸ்வரனுக்கேயன்றி அந்த தேவதைக்கு அல்ல என்பதை மேற்கண்ட ருக்வேத மந்திரம் மிக அழகாகத் தெளிவுபடுத்துகின்றது.
எவ்வாறு திருடனால் கொண்டுவந்து கொடுக்கப்பட்ட, அரசன் தரிக்கத்தகுந்த தலையாபரணமாகிய கிரீடத்தைப் பாமரன் ஒருவன் வைத்துக் கொண்டு தரித்துக்கொள்ள சக்தியற்றவனாக இருப்பானோ, அவ்வாறே தேவர்களும் தங்களுக்கு அளிக்கப்படும் நமஸ்காரங்களை ஏற்பதற்குச் சக்தியற்றவர்கள்; ஏனெனின் நமஸ்காரங்களுக்கு சொந்தக்காரன் பரமேஸ்வரன் ஒருவனே என்று இந்த வேத வாக்யத்திற்கு விளக்கமளிக்கின்றார் ஸ்ரீ ஹரதத்தாசார்யர்:
தத்தம் நம: கிமுபிசுச்ரும தேவதாப்ய:
த்வாமந்தரேண நமஸா மவஸான பூமிம் |
தாஸ்தத் க்ரஹீதுமனலன்ன ஹி க: சிதீஷ்டே
சோரோபநீதமிவ தாரயிதும் கிரீடம் ||
அடுத்து, வேதம் மிகத் தெளிவாகப் பரம்பொருள் ஒருவன் உளான், அவனே இந்த தேவர்களைப் படைத்தான் என்று நிலைநாட்டுகின்றது. பரம்பொருளாகிய இந்த புருஷன் பரமசிவனே என்று யஜுர் வேதத்தின் தைத்திரீய ஆரண்யகம் கூறியதோடு ( புருஷோ வை ருத்ர:- 24 ), இந்த புருஷனே இந்திரன் முதலிய தேவர்களைப் படைத்தான் என்றும் கூறுகின்றது :
ச॒ந்த்³ரமா॒ மந॑ஸோ ஜா॒த: । சக்ஷோ॒: ஸூர்யோ॑ அஜாயத ।
முகா॒²தி³ந்த்³ர॑ஶ்சா॒க்³நிஶ்ச॑ । ப்ரா॒ணாத்³வா॒யுர॑ஜாயத ।
அந்த பரமபுருஷனின் மனதிலிருந்து சந்த்ரன் தோன்றினான்; அவன் கண்ணிலிருந்து சூரியன் உதித்தான்; அவனுடைய முகத்திலிருந்து இந்திரனும் அக்நியும் பிறந்தார்கள்; அவனின் ப்ராணனிலிருந்து வாயு உண்டானான்.
- ருக்வேதம் 10.90.13
ஜகத் சிருஷ்டிக்கு பின்னரே தேவர்கள் தோன்றினார்கள் என்கிறது ருக்வேதத்தின்
நாஸதீய ஸூக்தம் - அ॒ர்வாக்³தே॒³வா அ॒ஸ்ய வி॒ஸர்ஜ॑நே॒நாதா॒²
பரம்பொருளான அந்த இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களே தேவர்கள் -
ய ஆ॑த்ம॒தா³ ப॑³ல॒தா³ யஸ்ய॒ விஶ்வ॑ உ॒பாஸ॑தே ப்ர॒ஶிஷம்॒ யஸ்ய॑ தே॒³வா: ।
- ருக்வேதம் 10.121.2
இவற்றிலிருந்து, வேதங்கள் சிவன் ஒருவனே இறைவன் என்ற ஓரிறைக் கொள்கையைத்தான் வலியுறுத்துகின்றதேயன்றி பல்தெய்வ
வணக்கத்தை அல்ல என்பதும், வேதங்கள் இந்திரன், அக்நி, வாயு, வருணன் போன்ற பல பெயர்களால் ஒரே இறைவனான பரமசிவனைத்தான் போற்றுகிறது என்பதும், ஆதிமுதல் அந்தம் வரை, வேதத்தின் எல்லா பகுதிகளும், வேதத்தின் ஒவ்வொரு மந்திரமும், ஒவ்வொரு வரியும் சிவனை மட்டுமே போற்றுகின்றது என்பதும் ஐயத்திற்கிடமின்றி நிரூபணமாகின்றது.
இந்த்³ரம் மித்ரம் வருணமநிலம் புநரஜம் விஷ்ணுமீஶம் பத்³மஜம்
ப்ராஹுஸ்தே தே பரமஶிவ தே மாயயா மோஹிதாஸ்த்வாம் ।
ஏதை: ஸாகம் ஸகலமபி யச்ச²க்திலேஶே ஸமாப்தம்
ஏதைஸ்ஸார்த⁴ம்
ஸ த்வம் தே³வ: ஶ்ருதிஷு விதி³த: ஶம்பு⁴ரித்யாதி³தே³வ: ॥
பரமசிவனே! உமது மாயையால் மயங்கித்தவிப்பவர்கள் உம்மை இந்திரன், சூரியன், வருணன், வாயு, ப்ரஹ்மா, விஷ்ணு, ஈசன் என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களோடு அனைத்தும் எந்த சக்திக்குள் அடங்கிவிடுமோ, வேதங்களில் ஸம்பு என்று அறியப்பட்ட ஆதிதேவர் எவரோ, அந்த தேவரே தாங்கள்.
இருக்கு நான்மறை யீசனை யேதொழும்
கருத்தி னைநினை யார்கன் மனவரே.
இருக்கு முதலிய நான்கு வேதங்கள் இறைவனையே தொழும் கருத்தினைக் கல்மனம் படைத்தவர்களாய்ச் சிலர் நினைக்கமாட்டார்கள்.
- ஆதிபுராண திருகுறுந்தொகை அப்பர் தேவாரம், ஐந்தாம் திருமுறை

No comments:

Post a Comment

இறந்தவருக்கு நடுகல் என்பது வழிபாடு அல்ல எனத் திருவள்ளுவர் காட்டுவார்

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ன  முன்நின்று கல்நின் றவர்”  - 771 குறள் படைச்செருக்கு   மணக்குடவர் உரை: என்னுடைய ஐயன் முன்னர்ப் பகைவீர...