Wednesday, February 18, 2026

மாற்றுத் திறனாளிகளை தாக்கிய திமுக அரசு காவல் துறை -மார்க்சிஸ்ட் கண்டனம்

 

மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

கோப்புப் படம்

கோப்புப் படம்

வெற்றி மயிலோன் Updated on: 18 Feb 2026, 4:16 pm
சென்னை: மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடிய மாற்றுத் திறனாளிகளுக்கு குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்காமல் அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் துறையின் செயலை வன்மையாக கண்டிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநில செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

ஆந்திராவைப் போலவே தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்புத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) பிப்ரவரி 10-ஆம் தேதி மாநிலம் முழுவதும் காலவரையற்ற மறியல் போராட்டத்தைத் தொடங்கியது. பிப்ரவரி 12-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 32,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இடைக்கால பட்ஜெட்டிற்காக சட்டமன்ற கூட்டம் தொடங்க இருந்ததை முன்னிட்டு நேற்று (17.02.2026) சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே போராட்டம் நடத்த சங்கம் திட்டமிட்டிருந்தது. காவல் துறை கேட்டுக்கொண்ட அடிப்படையில் சிவானந்தா சாலைக்கு இப்போராட்டம் மாற்றப்பட்டது.

மதியம் 2,700-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு 20-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மைதானத்தில் மாற்றுத் திறனாளிகளை அமர வைக்க ஏற்பாடு, கழிப்பறைகள் எதுவும் இல்லை.

இந்நிலையில், இரவு 7 மணியளவில் போலீஸார் திருமங்கலம் அருகே உள்ள பெரியார் சமூகக் கூடத்திற்கு அழைத்துச் செல்வதாக அறிவித்து, மாநில தலைவர்கள் உள்ளிட்ட சிலரை மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு, மற்ற மாற்றுத்திறனாளிகளை 20 பேருந்துகளில் ஏற்றிய பிறகு, பேருந்துகளை பூட்டி, எங்கும் நிறுத்தாமல் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு இடங்களுக்கு பிரித்து அலைக்கழிக்கப்பட்டனர்.

நள்ளிரவு 1 மணி அளவில் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சொந்த ஊர்களுக்கு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப காவல் துறை முயற்சி செய்தது.

மாற்றுத் திறனாளிகள் உறுதியாக மறுத்துப் போராட்டம் நடத்திய பிறகு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 2 மணி அளவில் கொண்டு வந்து பேருந்துகளோடு மாற்றுத்திறனாளிகளை விட்டுவிட்டு காவல் துறையினர் சென்றுள்ளனர். இதற்கிடையில், சங்கத்தின் மாநில தலைவர்கள் வைக்கப்பட்டிருந்த ராஜரத்தினம் மைதானத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டு யாரும் அணுக முடியாத நிலையில் இருட்டில் வைக்கப்பட்டிருந்தனர்.

நள்ளிரவு 1.30 மணியளவில், காவல் துறையினர் அவர்களை பேருந்துகளில் வலுக்கட்டாயமாக ஏற்றினர். வலுக்கட்டாயமாக காவல்துறை இழுத்து தூக்கி கீழே போட்டதில் மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார். காயமடைந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் போலீசார் தெருவில் விட்டுச் சென்றனர்.

மற்றவர்கள் ஆம்புலன்ஸ் அழைத்து வந்து ஜான்சிராணியை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இரவு முழுவதும் குடிக்க தண்ணீரோ, உணவோ வழங்காமல் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்து, தாக்கி சித்ரவதை செய்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இத்தகைய மோசமான நடவடிக்கைகளுக்கு காரணமான காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு வலியுறுத்துகிறது.

மாற்றுத்திறனாளிகளை கண்ணியமாக நடத்த வேண்டும், அவர்களது உரிமைகள் மனித உரிமைகளுக்கு ஈடானது என உறுதி அளிக்கும் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மாற்றுத்திறனாளிகள் உரிமை சாசனத்தை 7-வது நாடாக கையெழுத்திட்டு ஏற்ற நாடு இந்தியா என்ற அடிப்படையில், மாற்றுத் திறனாளிகளின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய தற்போது ஆந்திர மாநில அரசு வழங்குவது போன்று தமிழ்நாட்டிலும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், இது சம்பந்தமாக உடனடியாக சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

மாற்றுத் திறனாளிகளை தாக்கிய திமுக அரசு காவல் துறை -மார்க்சிஸ்ட் கண்டனம்

  மாற்றுத் திறனாளிகளை தாக்கியது மனித உரிமை மீறல்: காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம் கோப்புப் படம் வெற்றி மயிலோன்   Updated on:  18 Feb 202...