திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 1-ல் பிரதமர் சுவாமி தரிசனம்: தேசிய பாதுகாப்பு படையினர் ஆய்வு 26 Feb 2026
மதுரை / சென்னை: மதுரையில் மார்ச் 1-ல் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார்.
தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் கட்டிடம், புதிய ரயில் நிலையங்கள், புதிய சாலைப் பணிகள் திறப்பு விழாவில் பங்கேற்கிறார்.
இதற்காக மண்டேலா நகரில் அரசியல் விழா, அரசு விழாவுக்கு 2 மேடைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இது தொடர்பாக மதுரை ஆட்சியர் பிரவீன்குமார், காவல் ஆணையர் லோகநாதன், எஸ்.பி. அரவிந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தனர்.
இதற்கு தேசிய பாதுகாப்புப் படையினர் ஒப்புதல் அளிக்காததால், அரசு விழாவை விமான நிலையம் அருகில் நடத்த முடிவெடுக்கப்பட்டது. இதற்காக தனியாக மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்கிறார்.
இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக திருப்பரங்குன்றம் கோயிலில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 பேர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டதுடன், காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
சிவப்பு மண்டலம்...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வரும் 28-ம் தேதி இரவு தங்குகிறார். இதையொட்டி, சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் 28 மற்றும் மார்ச் 1-ம் தேதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் மற்றும் பிரதமர் வரும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஆளுநர் மாளிகையை சுற்றிலும் ட்ரோன் கேமராக்கள் மற்றும் ஆளில்லா வான்வழி கருவிகள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment