அதிகளவில் குப்பை சேரும் கேதார்நாத் கோயில்: சுற்றுச்சூழல் மோசமடைவதாக புகார்28 Feb 2026 Tamil Hindu
புதுடெல்லி: ஆண்டுதோறும் அதிக அளவில் கேதார்நாத் கோயில் பகுதியில் குப்பை சேர்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் கோயிலைச் சுற்றி சுற்றுச்சூழல் மோசமடைவதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புண்ணியத்தலங்களாக கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகியவை உள்ளன. இவை சார்தாம் என்று அழைக்கப்படுகின்றன. இந்துக்கள் இந்த சார்தாம் கோயில்களுக்கு புனிதச் சுற்றுலா சென்று வருவதை புண்ணியமாகக் கருதுகின்றனர்.
குறிப்பாக கேதார்நாத் கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தக் கோயிலைச் சுற்றியும், மலைப்பகுதிகளிலும் அதிக அளவில் குப்பை சேர்வதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
2025-ம் ஆண்டில் மட்டும் இங்கு 21.4 மெட்ரிக் டன் குப்பை சேர்ந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 22 சதவீதம் அதிகமாகும். அதிக அளவில் இங்கு குப்பை சேர்வதால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் மோசமாகும் நிலை ஏற்படுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இங்கு வரும் பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் பொருட்களை பயன்படுத்திவிட்டு அப்படியே வீசி விடுவதால் அதிக அளவில் குப்பை சேர்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிப்பததாக அமைந்துள்ளது.
யுனெஸ்கோவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த புண்ணியத் தலத்தை குப்பை போன்ற மாசுகளில் இருந்து காக்கவேண்டும் என்ற கோரிக்கை சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து எழுந்துள்ளது.
இந்த ஆய்வை கேதார்நாத் நகர் பஞ்சாயத்து நடத்தியுள்ளது. இதுதொடர்பாக அமித் குப்தா என்று சுற்றுச்சூழலியலாளர் கூறும்போது, “குப்பை போன்ற திடக்கழிவு மேலாண்மைக்கான வசதிகள் இருந்தபோதிலும், சரிவர அவை அகற்றப்படுவதில்லை. இது திடக் கழிவு மேலாண்மை தோல்வியைத் தெளிவாகக் காட்டுகிறது.
2025-ம் ஆண்டு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் இடையே சேர்ந்த 21.4 மெட்ரிக் டன் குப்பையில் வெறும் 8.7 மெட்ரிக் டன் குப்பை மட்டுமே பதப்படுத்தப்பட்டது. இதனால் மீதமுள்ள 12.7 மெட்ரிக் டன் குப்பை, கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள அடிப்படை முகாமின் நிலப்பரப்புகளிலோ அல்லது திறந்தவெளி இடங்களிலோ குவிந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இது மிக அதிக அளவிலான திடக்கழிவாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாகும்” என்றார்.
இந்நிலையில் ரூ.3.13 கோடி மதிப்பிலான திடக்கழிவை பதப்படுத்தி வெளியேற்றும் கருவிகளை வாங்குவதற்காக திட்டமும் இன்னும் நிலுவையில் உள்ளதாக கேதார்நாத் கோயில் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து உத்தராகண்ட் மாநிலத்தின் கர்வால் இமாலய மலைப்பகுதியில் கேதார்நாத் புனிதத் தலம் 3,583 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக சாலைகள் மேம்பாடு, ஹெலிகாப்டர் சேவைகள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டாலும், திடக்கழிவு நிர்வாகத்தையும் கவனிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


No comments:
Post a Comment