கோயில் நிலத்திற்கான வாடகை நிலுவைத் தொகையை செலுத்த கோரிய உத்தரவை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் மேல்முறையீடு -முகமது இம்ரானுல்லா எஸ்.,
சென்னை வலி நிவாரண தைலத்திற்கு புகழ்பெற்ற 132 ஆண்டுகள் பழமையான அம்ருதாஞ்சன் லிமிடெட் நிறுவனத்திற்கு இப்போது ஒரு புதிய 'தலைவலி' ஏற்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான, லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் நிலத்திற்கான பல கோடி ரூபாய் வாடகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயமே இதற்குக் காரணம்.
வெளியேற்ற உத்தரவு
கோயில் நிலத்திலிருந்து தங்களை வெளியேற்றவும், நவம்பர் 1, 2001 முதல் மாதத்திற்கு ₹3.3 லட்சம் என்ற வீதத்தில் வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்கவும் ஒரு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அக்டோபர் 2001 வரை அந்த நிலத்திற்கு மாதம் வெறும் ₹1,400 மட்டுமே அந்நிறுவனம் வாடகையாக செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னதாக, 2005-ம் ஆண்டு அம்ருதாஞ்சன் தொடர்ந்திருந்த மனுவை கடந்த செப்டம்பர் 25, 2025 அன்று நீதிபதி எம். தண்டபாணி தள்ளுபடி செய்திருந்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்தே தற்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
99 ஆண்டு குத்தகை
நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டி காட்டியுள்ள படி, லஸ் சர்ச் சாலையில் உள்ள 14 கிரவுண்ட் மற்றும் 910 சதுர அடி நிலத்தை பி.ஆர். சுந்தர ஐயர் என்பவருக்கு கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் ஆகஸ்ட் 28, 1901 அன்று குத்தகைக்கு வழங்கியது. ஒப்பந்தப்படி, 99 ஆண்டுகளுக்கு மாதம் ₹1,400 வாடகை நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் சுந்தர ஐயர் அந்த குத்தகை உரிமையை அம்ருதாஞ்சன் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுத்தார்.
பல தசாப்தங்களாக அந்நிறுவனம் அங்கு இயங்கி வருகிறது. அசல் குத்தகை காலம் ஆகஸ்ட் 27, 2000 அன்று முடிவடைந்த நிலையில், கோயில் நிர்வாகம் உயர்த்தப்பட்ட வாடகையை கேட்டது.
ஆனால், அம்ருதாஞ்சன் நிறுவனம் அதைச் செலுத்த முன்வரவில்லை.
இதையடுத்து, நவம்பர் 1, 2001-க்குள் நிலத்தை காலி செய்யுமாறு செப்டம்பர் 17, 2001 அன்று கோயில் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. நிறுவனம் நிலத்தை காலி செய்யாததால், ஜூன் 16, 2024 அன்று மீண்டும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் நிறுவனம் தொடர்ந்து அந்த நிலத்தை தன் வசமே வைத்திருந்தது.
இதற்கிடையில், 2003-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தில் (HR&CE Act, 1959) கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் 'பிரிவு 34A' இணைக்கப்பட்டது.
இதன் மூலம் கோயில் சொத்துக்களுக்கு சந்தை மதிப்பின் அடிப்படையில் வாடகை நிர்ணயம் செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
மாற்றியமைக்கப்பட்ட வாடகை அறநிலைய துறை இணை ஆணையர், கோயில் செயல் அலுவலர், அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் மாவட்டப் பதிவாளர் ஆகியோரைக் கொண்ட இந்தக் குழு, 2005-ம் ஆண்டில் அந்த 14 கிரவுண்ட் நிலத்திற்கு மாத வாடகையாக ₹3.30 லட்சத்தை நிர்ணயம் செய்தது.
மேலும்,2001-ம் ஆண்டிலிருந்து முன் தேதியிட்டு இந்த வாடகையை செலுத்துமாறு கோரியது.
இதை எதிர்த்து அம்ருதாஞ்சன் நிறுவனம் அறநிலையத் துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தது.
ஆனால், 'பிரிவு 34A(5)'-ன் கீழ், நிர்ணயிக்கப்பட்ட தொகையை கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தினால் மட்டுமே மேல் முறையீட்டை ஏற்க முடியும் என ஆணையர் மறுத்துவிட்டார்.
இதைத் தொடர்ந்து, அந்தச் சட்டப் பிரிவு சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரி அம்ருதாஞ்சன் 2005-ல் மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கு 20 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த போதும் நிறுவனம் நிலத்தை காலி செய்யவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட போது, நிறுவனம் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
"ஒருவேளை இதுவரை வெளியேற்றம் செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட நிலத்திலிருந்து மனுதாரரை (அம்ருதாஞ்சன்) வெளியேற்றவும், நிர்ணயிக்கப்பட்ட வாடகை மற்றும் நிலுவைத் தொகையை நான்கு வாரங்களுக்குள் வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment