திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார்: காதல் ஒன்றும் தவறு இல்லை என்கிறார் கேரள அமைச்சர்
திருவனந்தபுரம்: திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் கூறியதையடுத்து தனக்கு ஒன்றல்ல, 5 ஆயிரம் காதல் உறவு இருப்பதாக கேரள மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.பி. கணேஷ்குமார் கூறியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. கொல்லம் மாவட்டம் பதனப்புரம் தொகுதியில் இருந்து 5-வது முறையாக எம்எல்ஏவாக கணேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நடிகரும் கூட. 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள காங்கிரஸ்(பி) கட்சியைச் சேர்ந்தவர். இந்நிலையில் கேரள அமைச்சர் கே.பி.கணேஷ்குமார் மீது அவரது மனைவி ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேஷ் குமாரின் மனைவி பிந்து மேனன்.
இந்நிலையில் தனது கணவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பிந்து மேனன் முன்வைத்துள்ளார். இது குறித்து பிந்து மேனன் கூறும்போது, “எனது கணவர் கணேஷ்குமார் திருமணத்தைத் தாண்டிய கள்ள உறவில் இருக்கிறார். கடந்த சனிக்கிழமை எனது கணவரை வீட்டில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாகப் பிடித்தேன். அப்போது அமைச்சரின் உதவியாளர்கள் என்னைத் தாக்கினார்.
போலீஸாரிடம் புகார் கொடுத்தபோது, போலீஸாரை கூட வீட்டுக்குள் அனுமதிக்க அமைச்சரின் உதவியாளர்கள் மறுத்தனர். 2014-ல் எங்களுக்கு திருமணம் ஆனதிலிருந்து எங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் நிலவி வந்தன. இதுதொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவிடம் கூட புகார் கொடுத்துள்ளேன்" என்றார். இது குறித்து கே.பி.கணேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, "தேர்தல் நெருங்குவதால் இதுபோன்ற பல விஷயங்கள் வரும். இதற்கு முன்பும் எனது வீட்டில் இருந்து பிரச்சினை வந்துள்ளது. எனது அரசியலைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதி மக்களுக்கு என்னவெல்லாம் செய்கிறார். அதனால் கேரளாவுக்கு என்ன நன்மை நடந்தது என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். என்னைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு அது தெரியும். கணேஷ் குமாருக்கும் (எனக்கு) காதல் உண்டு. உங்களில் காதலிக்காதவர்கள் யாரா வது இருக்கிறீர்களா ? காதல் ஒன்றும் குற்றம் கிடையாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2-வது திருமணம்: 2013-ம் ஆண்டில் அப்போதைய காங்கிரஸ் முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான கேரள அரசிலும் கணேஷ்குமார் அமைச்சராக இருந்தார். அப்போது தனது முதல் மனைவி யாமினி தன்காச்சியை அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து தனது அமைச்சர் பதவியை கணேஷ்குமார் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ல் பிந்து மேனனை, 2-ம் திருமணம் செய்துகொண்டார் கணேஷ்குமார்.

No comments:
Post a Comment