#ரூபாய்_60000/- அபராதம் விதித்த தஞ்சாவூர் நுகர்வோர் ஆணையம்...
#பொதுமக்கள்_விழிப்புணர்வு அடைய வேண்டிய #வழக்கின்_வெற்றிக்கதை...!
நான் கடந்த 07.12.2024 அன்று அலைபேசி ஒன்று வாங்குவதற்காக தஞ்சாவூர் சாம்சங் ஷோரூமில் ரூ.17,000 மதிப்பிலான செல்போன் வாங்கி பணம் செலுத்த முற்பட்ட பொழுது, அங்கிருந்த பஜாஜ் பைனான்ஸ் (Bajaj Finance) ஊழியர், "சார் 0% வட்டி தான், EMI இல் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார்.
"என்னிடம் பணம் இருக்கிறது, மேலும் கடன் வாங்கி EMI கட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை, எனவே வேண்டாம்" என்றேன்.
"சார் எங்களுக்கு இவ்வளவு லோன் கொடுக்க வேண்டும் என்ற டார்கெட் இருக்கு, பிளீஸ் சார்... உங்களுக்கும் சிபில் ஸ்கோர் உயரும், EMI ஏதாவது சரியாக செலுத்தினால் தான் சிபில் ஸ்கோர் உயரும், இல்லையேல் அப்படியேதான் இருக்கும்" என்றார்.
உடன் வந்திருந்த நண்பர், "சார் அடுத்து வீட்டு லோன் வாங்கனும்னு சொன்னீங்களே, அதுக்கு உதவியா இருக்கும், நீங்க என்ன ஒழுங்கா EMI காட்டாமலா இருக்க போறீங்க, வாங்குங்க சார்" என்றார்.
இவ்வளவு வற்புறுத்தலின் பேரில் CIBIL Score உயரும் என்ற நல்லெண்ணத்தில் ரூ.13,222 தொகையை 0% வட்டி கடனாகப் பெற்றேன்.
மாதம் ரூ.1,888 வீதம், 02.01.2025 முதல் 02.07.2025 வரை ஏழு தவணைகள்...
அனைத்துத் தவணைகளுக்கும் எனது இந்தியன் வங்கி (Indian Bank) கணக்கில் போதிய பணத்தை முறையாகப் பராமரித்து வந்தேன்.
ஒவ்வொரு மாதமும் சரியாக 2- ஆம் நாள் ECS முறையில் EMI பணத்தை எடுத்துக் கொள்ளும் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம், கடைசி EMI தொகையான ஜூலை 2-ஆம் தேதி என் கணக்கில் பணம் இருந்தும், பஜாஜ் நிறுவனம் அதனை எடுக்காமல் விட்டுவிட்டு, 11.07.2025 அன்று என்னை தொலைபேசியில் அழைத்து, காசோலை பணமின்றி திருப்பப்பட்டதாக #Cheque_Bounce கூறி வழக்கமான மிரட்டும் தொனியில் பேசினார்கள். நான் யாரென்று எதுவும் சொல்லாமல் பேசினேன்.
எனது வங்கி கணக்கு அறிக்கையை (Bank Statement) அனுப்பி, என் தரப்பில் தவறு இல்லை என்பதை நிரூபித்தும், அதை ஏற்க மறுத்து தாமதக் கட்டணம் மற்றும் காசோலைத் திருப்பப்பட்டதற்கான கட்டணம், தாமதக்கட்டணம் என ரூ.530-ஐக் கூடுதலாக மொத்தம் ரூ.2,418 கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தனர். பலமுறை போன், Msg....
"சரி, உங்களுக்கு நேரம் சரியில்லடா" என்று மனதில் நினைத்துக் கொண்டு அடுத்த நாள் 12.07.2025 சனிக்கிழமை ரூபாய். 2418/- யை ஆன்லைனில் செலுத்தி விட்டேன்.
பணத்தைச் செலுத்திய மறுநாளும்/ ஞாயிறு அன்றும் மீண்டும் பணம் கட்டச் சொல்லி என்னை தொந்தரவு செய்தனர் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தினர்.
அப்பொழுது தான் கேட்டேன், "நான் யாரென்ற தகவல் உங்களிடம் உள்ளதா?" என்று...
"இல்லை, லோன் நம்பர், போன் நம்பர் தான் வரும்" என்றார்கள்.
"சரி, நான் நேற்றே பணத்தை செலுத்தி விட்டேன், பிறகெதற்கு இன்று அழைக்கின்றீர்கள்? அதும் ஞாயிறு கடன் வசூல்...?" என்றேன்.
"எங்களுக்கு இன்னும் Update ஆகவில்லை" என்றார் அந்த ஊழியர்.
அப்போது சொன்னேன்,
"நான் ஒரு வழக்குரைஞர், பிறருக்கு வழக்குகளை நடத்துபவன், என்னிடமே இப்படி முறைகேடாக பணம் வசூல் செய்கின்றீர்கள் என்றால், சட்டமறியாத பொது மக்களிடம் என்னவெல்லாம் செய்வீர்கள்?" என்றேன்.
"எங்க மேனேஜரிடம் சொல்லி, செக் பவுன்ஸ் பணத்தை திரும்ப கொடுக்கிறோம் சார்" என்று பதறினார் அந்த ஊழியர்...
"வேண்டாம், உங்களை, உங்கள் நிறுவனத்தை எங்கு நிறுத்த வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும், இந்த ரூபாய். 530 கூடுதலாக வாங்கியதற்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்க வைக்கிறேன் பாருங்கள்" என்று அந்த அழைப்பை துண்டித்தேன்.
அதுமட்டுமின்றி, இந்த கடன் பெறும் பொழுது எனது CIBIL Score-ஐ 744-லிருந்து 733 ஆகக் குறைத்து விட்டது. மேற்படி பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கை என் நற்பெயருக்கு மிகப்பெரிய களங்கத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியது.
"ஒரு வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களை இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வளவு பாடுபடுத்தும்?"
தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் CC NO:165/2025 வழக்கு தொடர்ந்தேன்.
நேற்று முன்தினம் 21.07.2026 எனது வாதங்களை ஏற்றுக்கொண்டு பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சேவைக் குறைபாடு மற்றும் முறையற்ற வணிக நடைமுறையைக் கண்டித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் பின்வருமாறு தீர்ப்பளித்தது:
1) வங்கி கணக்கில் உரிய தொகை இருந்த பொழுதே, காசோலை திரும்பப் பட்டதாக கூறி புகார்தாரரிடம் சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட ரூ.530/- தொகையை, வசூலித்த தேதியிலிருந்து திரும்பச் செலுத்தும் நாள் வரை 12% வட்டியுடன். பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்.
2) சேவைக் குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையால் புகார்தாரருக்கு ஏற்படுத்திய மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.50,000/- வழங்க வேண்டும்.
வழக்குச் செலவுத் தொகையாக ரூ.10,000/- வழங்க வேண்டும்.
இத்தொகையை 6 வார காலத்திற்குள் வழங்கத் தவறினால், கூடுதல் அபராத வட்டியாக ஒட்டு மொத்த தொகைக்கும் சேர்த்து 12% வட்டி செலுத்த வேண்டும்.
இதன் மூலம் பொது மக்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றைத்தான்...
பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் இப்படி சட்டவிரோதாமாக உங்களிடம் வசூல் செய்யும் தொகையை என்ன ரூ.530 தானே என்று கடந்து செல்லாதீர்கள்...
ஏதும் சண்டையிடாமல் பணத்தை செலுத்தி விட்டு அதன் அடிப்படையில் வழக்கு தொடருங்கள்,வெற்றி பெறுவதுடன் அந்நிறுவனங்களுக்கு பெரும் படிப்பினையை ஏற்படுத்துங்கள்...
இவ்வாறு சட்டவிரோதமாக வசூலிக்கும் சிறு தொகை, கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கணக்கிடும்போது பல நூறு கோடி ரூபாய் அந்த நிறுவனங்களுக்கு அநியாய லாபமாக மாறுகிறது.
நான் நுகர்வோர் ஆணையத்திடம் இறுதியாக வைத்த வாதம் இதுதான்,
"இந்த நிறுவனம் குறைந்தது இந்தியா முழுவதும் 5,00,00,000/- (5 கோடி) பேருக்கு கடன் கொடுத்ததாக வைத்துக் கொண்டால் கூட இதுபோன்று சட்டவிரோத வசூல் மூலம் அவர்கள் இப்படியாக பெறும் உத்தேச வருமானம் ரூ. 530× 5,00,00,000 = 26,50,00,00,000/- இலாபம். (265 கோடி)"
ஏன் இந்த நிறுவனங்கள் கொழுத்து திரிகின்றன என்பது இப்போது புரியும் என்று நினைக்கிறேன்.

No comments:
Post a Comment