Thursday, July 23, 2026

பழனி கோவில் நில மோசடியில் திமுக/தவெக ஐஏஎஸ் அதிகாரி? -- நக்கீரன்..


 
பழனி கோவில் நில மோசடியில் புது அமைச்சர்!
பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான இடத்தினை ₹2 கோடி மதிப்பில் கிரையம் செய்துள்ள விவகாரத்தில், குற்ற வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சிபிசிஐடி. தேடி வருகிறது. இந்த நிலையில், இந்த நில மோசடியில் அறநிலையத்துறை அமைச்சர், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மற்றும் துறைச் செயலாளருடன் இன்னொரு அமைச்சரும் சம்பந்தப்பட்டுள்ளார் என நக்கீரனுக்கு பிரத்யேக தகவல் கிடைத்துள்ளது.
பத்திரப்பதிவு செய்துகொடுத்து பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஜஸ்டின் மணிகண்டனின் திண்டுக்கல் லிங்கா அவென்யூவில் உள்ள வீடு, பத்திரம் தயார் செய்து கொடுத்த ஒட்டன்சத்திரம் டாக்குமெண்ட் எழுத்தர் ஜெயப்பிரகாஷ் வீடு, லீகல் பார்த்த வழக்கறிஞர் சிவக்குமார் வீடு, கிரையம் செய்த பொன்னாபுரம் சேதுபதி வீடு, பாப்பான்குளம் வெள்ளைத்துரை வீடு மற்றும் பத்திரத்திற்கு சாட்சி கையெழுத்திட்ட இடும்பன் நகரிலுள்ள மயில்சாமி மற்றும் லெட்சுமணன் வீடு என சார்பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சஜிதா தலைமையிலான சிபிசிஐடி. போலீஸார் சனிக்கிழமை 18ஆம் தேதி அதிகாலை 4 மணி முதல் சோதனை நடத்தினர். இதில் வெள்ளைத்துரையின் வீட்டில் ஏற்கனவே வண்டி வாய்க்கால் பகுதியிலும், தாழையூத்திலும் விற்கப்பட்ட சொத்துக்களின் விபரமும், ஏனையோர் வீட்டில் அரசு அதிகாரிகளின் ரப்பர் ஸ்டாம்புகளும் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியது.
"வெள்ளைத்துரையால் விற்பனை செய்யப்பட்ட வண்டி வாய்க்கால் பகுதி நிலம், சண்முகா நதிக்கு அருகிலுள்ள பகுதி 10 ஏக்கர் அளவிலான அந்த இடமும் பழனி திருக்கோவிலுக்கு சொந்தமானது என்பதுதான் சிபிசிஐடி. விசாரணையில் கிடைத்த கூடுதல் தகவல். வெள்ளைத்துரைக்கும், சேதுபதிக்கும் இதுதான் பிழைப்பு. ஆட்கள் இல்லாத இடங்கள், கோவில் நிலங்கள் ஆகியவற்றை தேர்வுசெய்து, அதற்காக டாகுமெண்ட் ரெடி செய்து, தனக்கு உரிமையாக்கிய பிறகு நல்ல விலைக்கு விற்று விடுவார்களாம். போலியான டாகுமெண்ட் தயாரித்துக் கொடுப்பது ஒட்டன்சத்திரம் டாகுமெண்ட் ரைட்டர் ஜெயப்பிரகாஷ். இவருக்கு லீகல் பார்த்து சரி செய்து கொடுப்பது வழக்கறிஞர் சிவக்குமார். அதன்பின் தங்களுக்கு தெரிந்த துறை ரீதியான அதிகாரிகளை கொண்டு கிரையம் செய்து கொள்வார்கள். தற்பொழுது பிரச்சனையான இந்த நிலத்தை 6 மாதத்திற்கு முன்பே கிரையம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்து அறநிலையத்துறையின் தாவா மனுவினை காரணம் காட்டி பதிய மறுக்கப்பட்டது கடந்த காலங்களில்! அதன் பின் இந்த தவெக. ஆட்சியில் அமைச்சர்கள், துறை ரீதியான செயலாளர்கள் முன்னெடுப்பில் இந்த நிலம் இப்பொழுது கிரையம் செய்யப்பட்டிருக்கின்றது. அதற்கு தேவையான ஆவணங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளது'' என்கின்றார் சிபிசிஐடி. விசாரணை அதிகாரிகளில் ஒருவர்.
"கடந்த 1ஆம் தேதியன்று நிர்வாக காரணங்களுக்காக 132 சார்பதிவாளர்களை தமிழகமெங்கும் இடமாற்றம் செய்தது பத்திரப்பதிவுத்துறை. இதில், பழனி பதிவு மாவட்டத்தில் பழனியில் சார்பதிவாளர் 1ஆக இருந்த பாலச்சந்திரனை சத்திரப்பட்டிக்கும், ஈஸ்வரியை திருப்பூரிலிருந்து பழனிக்கும் இடமாற்றம் செய்தனர். "பழனி பதிவு மாவட்டத்தினைப் பொறுத்தவரை 45 விழுக்காடுகள் பத்திரப் பதிவு துறையில் காலியிடம் உள்ளது. இதனை சரி செய்ய வேலை நாட்களில் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடங்களுக்கு பொறுப்புப் பணி வழங்கப்படுவது வாடிக்கையான ஒன்று. இந்த நிலையில் ஈஸ்வரி வந்த பிறகு பணிப் பொறுப்பேற்கலாம் என பாலச்சந்திரன் காத்திருக்க, அவரையும் மற்றொரு சார்பதிவாளர் சுந்தரத்தையும் கட்டாயமாக விடுமுறை எடுத்துச்செல்ல வற்புறுத்தி, கடந்த 3ஆம் தேதியன்று பழனிக்கு பொறுப்பு சார்பதிவாளராக கொண்டுவரப்பட்டார் ஜஸ்டின் மணிகண்டன். திட்டமிட்டபடி பத்திரப்பதிவு நடந்தது'' என்றார் பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவர்.
இதனிடையே பழனி திருக்கோவிலுக்கு சொந்தமான ₹100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் திண்டுக்கல் மாவட்ட பதிவாளராகப் பணியாற்றிய சசிகலா. இதேவேளையில், நிலமோசடி பத்திரப்பதிவை திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்து கொடுத்துள்ள விவகாரத்தில் தொடர்பிருப்பதாக நெல்லையில் டவுன் சாலை தெரு சண்முகசுந்தரம், பாளையங்கோட்டை குமரகுருபரன் மற்றும் சிவகுமாரும் சிபிசிஐடி விசாரணையில் தப்பவில்லை.
பழனி பத்திரப்பதிவு விவகாரத்தில் தோண்டத் தோண்ட பல்வேறு முறைகேடுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. பத்திரப்பதிவுக்கான கட்டணம் என்பதை, அரசு மதிப்பீட்டில் 11 சதவீதம் என்றே நிர்ணயித்துள்ளனர். சம்பந்தப்பட்ட பழனி கோவில் நிலத்தின் சதுர அடி ₹.1750 என்றிருக்கும் நிலையில்... 1.40 ஏக்கருக்கு ₹11 கோடி வருகிறது. ஆனால் இவர்களோ, வெறும் ₹2 கோடிக்கு பத்திரப்பதிவு செய்துள்ளனர். இதற்காக அளித்த காசோலைகளும் செல்லாதவையாக இருக்கின்றன. ஆக... இந்த முறை கேடுகளில் அதிகாரிகளின் பங்களிப்பு பெரிதும் இருப்பது தெரியவருகிறது. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர், மாவட்ட பதிவரை விசாரித்தால் மட்டுமே பின்னணியிலுள்ளவர்கள் யார், யாரென்பது தெரியவரும்.
இது இப்படி யிருக்க, நிலத்திற்கு சொந்தக்காரர் என டாகுமெண்ட் இருந்தால் அதன் படி பத்திரப்பதிவு செய்யலாம் என்கின்றது பதிவு சட்டம் 55. ஆனால், மடம் சொத்து என்று கூறப்படுமானால் பதிவு சட்டம் பிரிவு 22 அலிவில் பதிய தடை இருக்கிறது. ஆனால் இது தனி நபர் சொத்து என டாக்குமெண்ட் இருக்கின்றது. நீதிமன்றத்தில் உத்தரவும் இருக்கின்றது. அதன்படிதான் பத்திரம் பதியப்பட்டிருக்கின்றது. இதில் சார்பதிவாளரை மட்டும் குற்றவாளி யாக்குவது சரியல்ல. சார்பதிவாளர்களை இடமாற்றம் செய்வதும், சார்பதிவாளர் இங்கு வந்து பொறுப்பு ஏற்பதும், அங்கு இருக்கின்ற சார்பதிவாளர்களை விடுமுறையில் செல்லத் தூண்டுவதும் தனி நபரால் இயலாது. இதில் அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தனபால், துறைசெயலாளர் குமரகுருபரன் உள்ளிட் டோரின் உதவி இல்லாமல் எவராலும் முடியாது. இவர்களையெல்லாம் இணைத்தது, இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக உள்ள மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ். அவருடைய நெருக்கமான உறவினர்தான் கிரையம் செய்தவர்களில் ஒருவரான பொன்னாபுரம் சேதுபதி. பொறுப்பு அமைச்சர் என அரசு அறிவிப்பு வந்த நிலையில் பொறுப்பு அமைச்சருக்கு தெரியாமல் மாவட்டத்தில் என்ன செய்ய முடியும்? அவருடைய பங்கும் இதில் உள்ளது. அதுபோல் திருக்கோவிலின் டிரஸ்ட்டிகளும் இதுவரை வாய் திறக்காதது ஏன்?'' என்கின்றார் பத்திரப்பதிவுத்துறையின் உயரதிகாரி ஒருவர்.
அறநிலையத்துறை அதிகாரி ஒருவரோ, "2026-ல் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்து தனியாருக்கு கிரையம் செய்யப்பட்டதுதான் விவகாரம். ஆனால், 1888-ல் மடத்திற்கு சென்ற உரிமை, 1981-ல் எந்த அடிப் படையில் தனியார் உரிமையாக மாறியதாகக் கூறப்பட்டது? இந்த கேள்விக்கு விடையில்லை. இந்த நில மோசடியில் 3 அமைச்சர்கள் இருப்பினும் இதனின் மையப்புள்ளி, துறை செயலாளரான குமரகுருபரனும், அவருக்காக இயங்கிய "அந்த பெண் சொற்பொழிவாளருமே'! தேசமான அந்த பெண் சொற்பொழிவாளர் வைத்ததுதான் இன்று வரை அறநிலையத்துறை சட்டம். பள்ளி இறுதி வகுப்பையே தாண்டாத அந்த பெண்மணியும், இந்த நில மோசடியில் பங்குதாரர் என்பதுதான் கூடுதல் தகவல்'' என்கின்றார் அவர்.
-- நக்கீரன்..

No comments:

Post a Comment