*தமிழக அரசுக்கு பாஜக தொழில்துறை வல்லுநர் பிரிவின் பகிரங்கக் கேள்விகள்!* https://x.com/ssundarraman/status/2076209342953791703?s=20
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் - வணக்கம்.
தமிழக கோவில் சொத்துக்கள் குறித்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், கவலைகளும் இருந்து வருகின்றன. குறிப்பாக, கோவில் நிலங்களின் பரப்பளவு, அவற்றின் தற்போதைய நிலை, ஆக்கிரமிப்புகள் மற்றும் உரிமை தொடர்பான விவரங்கள் குறித்து அரசு முழுமையான வெள்ளை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், கரூர் மாவட்டத்தில் நான்கு கோவில்களுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் சுமார் 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் தொடர்பாக, பதிவு துறையின் ‘Prohibitory Module’ (பரிவர்த்தனைத் தடை) நீக்கப்பட்டதாக 09.07.2026 அன்று இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஏழை விவசாயிகளின் நலன் முக்கியமானதே. ஆனால், அதே நேரத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் குறித்த எந்த முடிவும் முழுமையான ஆய்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சட்டப்பூர்வ பரிசீலனையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும்.
இந்தப் பின்னணியில், தமிழக அரசிடம் சில நேரடியான கேள்விகளை முன்வைக்கிறோம்.
கேள்வி 1 – இந்த அவசர நடவடிக்கைக்கான காரணம் என்ன?
ஜூலை 10 அன்று இந்த விவகாரம் பொதுவெளியில் முக்கியமாக எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு முந்தைய நாளான ஜூலை 9-ஆம் தேதியே 3,084.95 ஏக்கர் நிலங்களுக்கான Prohibitory Module நீக்கப்பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த முடிவு எப்போது எடுக்கப்பட்டது?
அவசர நடவடிக்கைக்கான காரணம் என்ன?
இந்த உத்தரவிற்கு முன் எந்த சட்ட ஆலோசனைகள் பெறப்பட்டன?
கேள்வி 2 – முழுமையான ஆய்வு நடைபெற்றதா?
இந்த நிலங்கள் அனைத்தும் 1963-ஆம் ஆண்டு சிறு இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் ரயத்துவாரி பட்டா வழங்கப்பட்ட நிலங்கள்தான் என்பதை எந்த அதிகாரி உறுதி செய்தார்?
பின்வரும் ஆவணங்கள் முழுமையாக ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டனவா?
• Pre-UDR ‘A’ Register
• Settlement Register
• Inam Fair Register
• FMB Sketch
• கோவில் பதிவேடுகள்
• வரலாற்று செப்பேடுகள் மற்றும் கல்வெட்டு ஆதாரங்கள்
இந்த ஆய்வின் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படுமா?
கேள்வி 3 – இது சட்டவிரோத பரிவர்த்தனைகளுக்கு வழிவகுக்காதா?
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஏக்கர் கோவில் நிலங்கள் இன்னும் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அரசே பலமுறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஒட்டுமொத்தமாக பதிவு தடையை நீக்குவது எதிர்காலத்தில் சட்டவிரோத பரிவர்த்தனைகள் மற்றும் நில மாஃபியாக்களின் செயல்பாடுகளுக்கு வாய்ப்பை அதிகரிக்காதா?
சட்டமும் வரலாறும் என்ன கூறுகின்றன?
பல இனாம் நிலங்கள் கோவில் வழிபாடு, அர்ச்சனை, நைவேத்தியம், விளக்கேற்றம் போன்ற நிரந்தர சமயச் சேவைகளுக்காக வழங்கப்பட்ட மானிய நிலங்களாகும்.
எனவே, ஒவ்வொரு நிலத்தின் உரிமையும் அதன் வரலாற்று ஆவணங்கள், வழங்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் சட்டப்பூர்வ தீர்ப்புகளின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.
மெட்ராஸ் உயர்நீதிமன்றமும் பல தீர்ப்புகளில், கோவில் சொத்துக்களைப் பாதுகாப்பது அரசின் சட்டப்பூர்வ கடமை என்று வலியுறுத்தியுள்ளது. வெறும் வருவாய் பதிவுகள் மட்டுமே அனைத்து உரிமைச் சிக்கல்களுக்கும் இறுதியான ஆதாரமாக கருதப்பட முடியாது என்பதும் பல தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசு உடனடியாக செய்ய வேண்டியவை
1. உயர்மட்ட சுயாதீனக் குழுவை அமைக்க வேண்டும்
சட்ட நிபுணர்கள், வருவாய்த் துறை, தொல்லியல் நிபுணர்கள், கோவில் பிரதிநிதிகள், விவசாய சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் இணைந்த குழு அமைத்து, 6–12 மாதங்களில் முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
2. அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்
Inam Fair Register, Settlement Register, GIS Mapping, Survey-wise விவரங்கள், வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
3. விவசாயிகளின் நலனையும் பாதுகாக்கும் மாற்று வழிகளை பரிசீலிக்க வேண்டும்
நீண்டகால குத்தகை, நியாயமான குத்தகைத் தொகை, தேவையான இடங்களில் தஸ்திக் தொகை மறுஆய்வு உள்ளிட்ட நடைமுறை தீர்வுகளை அரசு பரிசீலிக்கலாம்.
4. சர்ச்சைக்குரிய சர்வே எண்களுக்கு பதிவு தடையை நீக்கும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்
முழுமையான ஆய்வு முடியும் வரை இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் நிறுத்தி வைப்பதே அனைவரின் நலனுக்கும் ஏற்றதாக இருக்கும்.
ஆன்மிகப் பாரம்பரியம் மிக்க தமிழ்நாட்டில், கோவில் சொத்துக்கள் தொடர்பான ஒவ்வொரு முடிவும் சட்டப்பூர்வமாகவும், வரலாற்று ஆதாரங்களுடனும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் எடுக்கப்பட வேண்டும்.
விவசாயிகளின் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும்; அதே நேரத்தில் கோவில் சொத்துக்களின் உரிமை மற்றும் எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழுமையான வெள்ளை அறிக்கையை வெளியிட்டு, அனைத்து ஆவணங்களையும் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்து, வெளிப்படையான முறையில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி.
இப்படிக்கு,
CA S. Sundar Raman -மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழக பாஜக தொழில்துறை வல்லுநர் பிரிவுகோவில் நிலம் கோவிலுக்கு மட்டுமே சொந்தம்..
இது பல தீர்ப்புகள் தெளிவாக தரப்பட்டுள்ளன.
இப்போது இந்த கூறு கெட்ட அரசும் இந்த விவகாரத்தில் நீதி மன்றத்தில் உதை வாங்க போவதும் உண்மை.
உங்கள் கருத்து படி பார்ப்போம்.
"இனாம் நிலங்கள் அனைத்தும் ரயத்வாரி பட்டா வழங்கப்பட்டதால் தனிநபர் சொத்தாகிவிட்டன" என்ற உங்களின் புரிதல் ஒரு தவறான புரிதல்.
1963-ஆம் ஆண்டு இனாம் ஒழிப்புச் சட்டம் (Act 30/1963), நிலத்தை சாகுபடி செய்யும் உரிமை அல்லது அனுபவ உரிமையை (Occupancy Rights) மட்டுமே தனிநபருக்கு வழங்கியது.
ஆனால், அந்த நிலத்தின் மேல்நிலை உரிமம் (Melvaram/Dominium) கோவிலுக்கே சொந்தமானது.
பல தீர்ப்புகளில் நீதிமன்றங்கள், இனாம் நிலங்கள் கோவிலின் அறக்கட்டளைச் சொத்துகளே (Endowment properties) என்று உறுதிப்படுத்தியுள்ளன.
நீங்கள் குறிப்பிடும் "பூஜ்ஜிய மதிப்பு" (Zero Guideline Value) என்பது, அந்த நிலங்கள் கோவிலுக்குச் சொந்தமானவை என்பதால், அவற்றை வெளிச்சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டது.
இது விவசாயிகளின் உரிமையை பறிப்பதற்காக அல்ல; மாறாக, பொது அறக்கட்டளை சொத்துகள் (Public Trust Property) களவு போவதைத் தடுக்கவே கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை அகற்றுவது, கோவில் நிலங்களை விற்பனை செய்வதற்கும், பெரிய நிறுவனங்கள் அவற்றை அபகரிப்பதற்கும் வழிவகுக்கும்.
ரயத்வாரி பட்டா என்பது விற்பனை உரிமை அல்ல
சட்டப்படி ரயத்வாரி பட்டா பெற்றவர்கள், அந்த நிலத்தில் பயிர் செய்ய மட்டுமே உரிமை பெற்றவர்கள்.
அவர்கள் அந்த நிலத்தின் முழு உரிமையாளர்கள் (Absolute Owners) அல்ல. எனவே, இந்த நிலங்களை விற்பனை செய்வதற்கோ அல்லது பத்திரப்பதிவு செய்வதற்கோ அனுமதிப்பது, கோவில் சொத்தை ஒரு தனிநபர் சொத்தாக மாற்றும் சட்டவிரோதச் செயலாகவே அமையும்.
நீதிமன்றங்கள் பலமுறை, "கோவில் நிலங்களை பட்டா பெற்றிருந்தாலும், அவற்றை விற்பனை செய்ய உரிமையாளர்களுக்கு அதிகாரம் இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளன.
ஆக்கிரமிப்பு மற்றும் வாழ்வாதாரம்
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது அரசின் கடமைதான், ஆனால் அதை கோவில் சொத்துகளைப் பறிப்பதன் மூலம் செய்யக்கூடாது.
குத்தகைதாரர்களாக இருப்பவர்கள், முறையான குத்தகைத் தொகையை கோவிலுக்குச் செலுத்தி தங்கள் விவசாயத்தைத் தொடரலாம்.
ஆனால், சொத்துரிமையையே மாற்ற முனைவது என்பது, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்த கோவில் வழிபாட்டுத் தேவைகளுக்கான நிதி ஆதாரத்தையே அழிப்பதாகும்.
அரசுக்கு இருக்கும் பொறுப்பு
அரசின் முதன்மையான கடமை அறநிலையத்துறை சட்டத்தின்படி கோவில் சொத்துகளைப் பாதுகாப்பதே.
ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவினரின் வசதிக்காக அல்லது அரசியல் காரணங்களுக்காக, சட்டப்பூர்வமான வழிமுறைகளைத் தவிர்த்து, கோவில் நிலங்களைப் பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பது "சொத்து கையாடல்" (Asset Stripping) என்றே கருதப்படும். இது கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையாகவே அமையும்.
முடிவாக - இனாம் நிலம் என்ற பெயரில் கோவிலின் சொத்துகளைத் தனிநபர் சொத்துகளாக மாற்றி, பத்திரப்பதிவு செய்ய அனுமதிப்பது சட்டத்திற்குப் புறம்பானது.
ரயத்வாரி பட்டா என்பது நிலத்தைப் பயிர் செய்யும் உரிமைதானே தவிர, விற்பனை செய்யும் உரிமை அல்ல. அரசின் இந்த நடவடிக்கை கோவில் சொத்துகளின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய அறநிலையத்துறையின் கடமைக்கு எதிரானது.
எனவே, பட்டா பெற்ற விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடனுதவி அல்லது மானியங்கள் வழங்கலாமே தவிர, கோவில் சொத்துகளின் உரிமையையே மாற்றக் கூடாது.
No comments:
Post a Comment