Tuesday, July 7, 2026

அரசு பள்ளி மாணவி -விஜய் அரசுக்கு வில்லன் ஆகிறதா தவெகவின் ‘ரீல்ஸ்’ ஆயுதம்?

விஜய் அரசுக்கு வில்லன் ஆகிறதா தவெகவின் ‘ரீல்ஸ்’ ஆயுதம்?

                                            

வெகவின் ஆட்சி அமைவதற்கு மிக முக்கிய கருவிகளில் ஒன்றாக இருந்தது ரீல்ஸ். ஆனால், இன்று அதே ரீல்ஸ், விஜய் அரசுக்கு வில்லனாக மாறிப் போய் நிற்கிறது. ரீல்ஸ்களால் தவெக அமைச்சர்களும், நிர்வாகிகளும் சிக்கலில் மாட்டுவது தொடர்கதையாகி உள்ளது.

எந்தக் கட்சி தலைமையிலான அரசுக்கும் ஏதோ ஒரு வகையில் பிரச்சினை வருவது வழக்கம்தான். ஆனால், தவெக அரசுக்கு வரும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானது ரீல்ஸ் மூலம்தான். ஆர்வக் கோளாறில் சில தவெக நிர்வாகிகள் எடுக்கும் ரீல்ஸ்கள் சர்ச்சைகளில் சிக்குவது ஒருபுறம் இருக்க, அமைச்சர்களும் அவ்விதமே செயல்படுவது மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது.

2026 சட்டப்பேரவைக் களத்தில் திமுக, அதிமுக கூட்டணிக் கட்சிகள் களத்தில் சுற்றி சுழன்று கொண்டிருந்த நேரத்தில், பக்காவாக சில பல ரீல்ஸ்களை தட்டிவிட்டு ஸ்மார்ட் பிரச்சாரம் செய்தனர் தவெகவினர். ரீல்ஸெல்லாம் மக்களிடம் எடுபடாது என ஆண்ட கட்சிகள் மிதப்பில் இருந்த நேரத்தில்தான், ஆட்சியையே தட்டி தூக்கி தெறிக்கவிட்டது தவெக. இப்படி விஜய்யின் வெற்றிக்கு மிகவும் கைகொடுத்த ரீல்ஸ், இப்போது விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. அந்த மாணவியிடம் சகஜமாக பேசி, அவரின் பயத்தை போக்காமல், அதிகாரத்தோடு, மாணவியை கைகட்டி பதில் சொல்லவைத்த அமைச்சர் கீர்த்தனாவின் போக்கு விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவரின் இத்தகைய செயல்பாட்டுக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அமைச்சர் கீர்த்தனா ஏற்கெனவே தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸ் வெளியிட்டும் சலசலப்பில் சிக்கினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அமைச்சர் சரத்குமார் தொடர்பான ஒரு வீடியோ தவெக அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது. சரத்குமார் ஒரு கிரிக்கெட் போட்டியில் செல்போனில் ஏதோ ஒருவகை பவுடரை தூளாக்கும் ரீல்ஸ் வைரலானது. அது போதைப்பொருள் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தியது. மேலும், அவரின் இன்னும் சில ரீல்ஸ்களும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், “என் குழந்தைக்கு மாத்திரை உடைத்தேன்” என சொல்லி ரீல்ஸ் மூலமே பதிலும் சொன்னார் அமைச்சர் சரத்குமார்.

தவெக ஆட்சி அமைந்த புதிதில், அக்கட்சியின் நிர்வாகிகள் அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், அலுவலகங்களில் புகுந்து ஆய்வு செய்து ‘ரீல்ஸ்’கள் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது. இதன்பின்னர், தவெக நிர்வாகிகள் யாரும் ஆய்வில் ஈடுபட கூடாது என அமைச்சர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனாலும் கூட இப்போது வரை தவெகவினரின் ஆய்வு ‘ரீல்ஸ்’கள் குறையவே இல்லை.

சமீபத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்களில் புகுந்து கூட சில நிர்வாகிகள் ஆய்வு செய்து ரீல்ஸ் போட்டு சலசலப்பை உருவாக்கினார்கள். அதேபோல, அரசுப் பள்ளிகளில் புகுந்து மாணவர்களிடம் ஆய்வு செய்வது, முதல்வர் விஜய்யின் படத்தை மாட்டுவது என தொடர்ந்து வெளிவரும் ரீல்ஸ்கள் தவெகவின் பெயரை டேமேஜ் செய்துவருவது உண்மை.

அமைச்சர் ஆன புதிதில் எந்த குவாரிக்கு சென்றாலும் ட்ரோன் கேமராக்களை பறக்கவிட்டு, ஆய்வு செய்யும் போது பின்னணி பாடல்களோடு ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வந்த கனிமவளத் துறை அமைச்சர் இப்போது கொஞ்சம் அமைதியாகியிருக்கிறார்.

கோயில்களில் முறுக்கின் ‘தயாரிப்பு தேதியை’ கேட்டு தடதடக்கும் ‘ரீல்ஸ்’கள் எடுத்த அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷின் ரீல்ஸ்களும் குறைந்துள்ளன. இப்படி ‘ரீல்ஸ்’கள் தவெக ஆட்சிக்கு ஆபத்து கணைகளாக மாறுவதை உணர்ந்து சில அமைச்சர்கள் அமைதியானாலும், கீர்த்தனா போன்ற சில அமைச்சர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு ‘ரீல்ஸ்’களை தெறிக்கவிட்டு வருகிறார்கள்.

‘கடந்த ஆட்சி சரியில்லை, அவர்களின் ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை, எல்லா துறைகளிலும் போதிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, எல்லா துறைகளிலும் ஊழல் நிரம்பி வழிந்தது’ என ஒருபக்கம் குற்றம் சாட்டும் தவெக அரசு. அதே ஆட்சியில் நிர்வகிக்கப்பட்டு வந்த அரசு மருத்துவமனைகள், பள்ளிகளில், அலுவலகங்களில் ஒரே நாளில் மாற்றம் வந்துவிடும் என எதிர்பார்ப்பது சரியா?

கடந்த ஆட்சிகளில் நடந்ததாக சொல்லும் சீர்கேடுகளை சரி செய்து, போதிய பணியாளர்களை நியமித்து அதன்பின்னர் ஆய்வுகளில் ஈடுபட்டால், அதில் நியாயம் உண்டு. அதனை விடுத்து இப்படி செய்யப்படும் ‘திடீர்’ ஆய்வு ரீல்ஸ்கள் விளம்பரத்துக்கு மட்டுமே உதவும்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

தவெக அமைச்சர்கள், நிர்வாகிகளின் ரீல்ஸ்க்கு அதிகம் இலக்காவது அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் தான். ‘இதே அமைச்சர்கள், தவெக நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகம், காவல் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் புகுந்து ‘ரீல்ஸ்’ எடுக்க முடியுமா?’ என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன.

அரசு மருத்துமனைகளில் ரீல்ஸ்கள் இப்போது பெரும் இடையூறாக மாறியுள்ளதாக கண்டனங்கள் குவிகின்றன. இதற்கு உதாரணமாக ‘அரசியல் கட்சியினர் என்ற பெயரில் மருத்துவமனைக்குள் புகுந்து ரீல்ஸ் வீடியோ எடுப்பதை அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்’ என வலியுறுத்தி திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆய்வுகள் என்பது வழக்கமான ஒன்றுதான், அதன் மூலமாக உண்மை நிலையை கண்டறிந்து விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் ஊட்டுவது நல்லதுதான். ஆனால், ரீல்ஸ்களுக்காகவே ஆய்வு செய்வது கண்டனங்களையே பெற்றுத் தரும்.

எனவே, சர்ச்சைகளை உருவாக்கும் ‘ரீல்ஸ்’ புள்ளிகளுக்கு தவெக அரசு முற்றுப்புள்ளி வைக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்கிறேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
https://www.facebook.com/photo/?fbid=122307589040026524&set=a.122269125560026524
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும். அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.

என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.

மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.

இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழியில் படிக்கிறார்கள்?

அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
See less

No comments:

Post a Comment

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு: திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

  கரூர் வழக்கு: முதல்வர் விஜய்க்கு எதிராக இடையீட்டு மனு தாக்கல் செய்த திமுகவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு   புதுடெல்லி: கரூரில் கூட்ட நெர...