Wednesday, June 10, 2026

 (படிக்கவும் பகிரவும்)


பிரம்மா கோயில் தலையெழுத்து மாறுவது எப்போது ?


தலையெழுத்தை மாற்றி வைக்கும்

 #பிரம்மா கோவில் மூடி கிடக்குது

 சாமி வேறு கோவிலில் இருக்குது!!??


 பூட்டிய கோயில் திறக்க வேண்டும்;

 சுவாமி சிலைகள் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினசரிபூஜைகள் தொடங்க வேண்டும் .


 இந்து சமய அறநிலையத்துறை

 துரித நடவடிக்கை எடுக்க 

இந்து தமிழர் கட்சித் தலைவர்

 ராம ரவிக்குமார் வேண்டுகோள்!!

************************************************************************************************


 தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், கண்டியூரில் அமைந்துள்ள அருள்மிகு வேதவதி (சரஸ்வதி) சமேத நான்முகன் (பிரம்மர்) திருக்கோயில், தமிழ்நாட்டில் உள்ள அரிதான பிரம்மர் திருத்தலங்களில் ஒன்றாகும் .


 (நேரில்நேற்று இந்த திருக்கோவில் நிலை கண்டு வந்தேன்)


 இத்திருத்தலம் பல நூற்றாண்டுகளாக பக்தர்களின் வழிபாட்டுத் தலமாகவும், சமய மற்றும் பண்பாட்டு பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கி வந்துள்ளது.


தற்போது இத்திருக்கோயிலில் மூலவராக இருந்த நான்முகன் (பிரம்மர்) மற்றும் வேதவதி (சரஸ்வதி) அம்மன் திருமேனிகள் இல்லாத காரணத்தால், கோயில் வழிபாட்டில் இல்லாமல் மூடப்பட்ட நிலையில் உள்ளது.


 இத்திருமேனிகள் தற்போது அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.


 இதன் விளைவாக, பிரம்மர் திருக்கோயிலின் தனித்துவ அடையாளமும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது.


மேலும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே எழும் முக்கியமான கேள்விகள் பின்வருமாறு:


1. அருள்மிகு வேதவதி சமேத நான்முகன் (பிரம்மர்) திருக்கோயிலில் இருந்த பிரம்மர் மற்றும் சரஸ்வதி அம்மன் திருமேனிகள் எந்த ஆண்டு மற்றும் எந்த காரணத்தின் அடிப்படையில் அகற்றப்பட்டன?


2. திருமேனிகளை மூலஸ்தானத்திலிருந்து அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அல்லது பிற அதிகாரிகளால் ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா?


3. அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தால், அந்த உத்தரவின் நகல் மற்றும் தொடர்புடைய கோப்புகளின் விவரங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.


4. ஆகம நிபுணர்கள், ஸ்தபதிகள் அல்லது சமய அறிஞர்களின் கருத்து பெறப்பட்டதா?


5. திருமேனிகள்  மாற்றப்பட்டிருந்தால், மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்ய இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? சிலர் இந்த திருக்கோவிலில் இருந்து சிலை களவு போனதாகவும் ஊர் மக்கள் சொல்கிறார்கள். உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.


ஒரு கோயிலின் மூலவர் திருமேனியை அதன் மூலஸ்தானத்திலிருந்து அகற்றுவது என்பது சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல.


 அதற்கான சட்ட, ஆகம மற்றும் நிர்வாக நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். 


எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.


மேலும், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் அடிப்படை கடமைகளில் ஒன்று கோயில்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகளைப் பாதுகாத்து, பக்தர்கள் தடையின்றி வழிபடுவதற்கான சூழலை ஏற்படுத்துவதாகும். தற்போது பிரம்மர் திருக்கோயில் மூடப்பட்டிருப்பது, அந்த நோக்கத்திற்கு எதிரான நிலையை உருவாக்கியுள்ளது.


எனவே, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேண்டுகிறேன்.


1. அருள்மிகு வேதவதி சமேத நான்முகன் (பிரம்மர்) திருக்கோயிலின் தற்போதைய நிலை குறித்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


2. பிரம்மர் மற்றும் சரஸ்வதி அம்மன் திருமேனிகள் அகற்றப்பட்டதற்கான உத்தரவு, கோப்பு குறிப்புகள் மற்றும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களின் விவரங்களையும் வழங்க வேண்டும்.


3. திருமேனிகள் அகற்றப்பட்ட நடவடிக்கை சட்டப்பூர்வமானதா மற்றும் ஆகம விதிகளுக்கு உட்பட்டதா ?என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.


4. அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள திருமேனிகளை மீண்டும் அவற்றின் மூலஸ்தானமான பிரம்மர் திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


5. இதற்காக ஆகம நிபுணர்கள், ஸ்தபதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு நடத்த வேண்டும்.


6. பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான செயல்திட்டத்தை உருவாக்கி, அதற்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும்.


7. அதிகபட்சமாக 90 நாட்களுக்குள் மூலவர் திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்து, தினசரி வழிபாடுகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


8. பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் கோயிலை திறந்து வைத்து, நித்திய பூஜைகள் நடைபெற நிரந்தர ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.


9. இம்மனு மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வமாக பதில் வழங்க வேண்டும்.


எனவே, கண்டியூர் அருள்மிகு வேதவதி சரஸ்வதி சமேத நான்முகன் (பிரம்மர்) திருக்கோயிலின் சமய, வரலாற்று மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, மூலவர் திருமேனிகளை மீண்டும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்து, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


இதுகுறித்து அரசு செயலர் தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை , ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை , இணை ஆணையர் துணையானைய செயல் அலுவலர் தக்கார் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு இருக்கிறது .


#ராமரவிக்குமார் 

#இந்துதமிழர்கட்சி 

#நிறுவனதலைவர் 

9655365696


நாள்

10.06.2026

முகாம்:

திருச்சி







No comments:

Post a Comment

Mukthar arrested