பள்ளி வைத்திருப்பவர்களே கமெண்ட்டில் உண்மையை சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அறிவுநேர்மைக்கும் திமுகவினருக்கும் தான் விரோதமாயிற்றே
இந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும் போது நம்ப முடியவில்லை!
நாம் தற்போது தமிழ் நாட்டில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது!
தனியார் பள்ளிக் கூட உரிமையாளர்கள் பூரித்துப் போய் பேசுகிறார்கள்;
''முந்தைய திமுக ஆட்சியில் 1,000 பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிக்க தலா ரூ.5 லட்சம் லஞ்சம் கேட்டார்கள். புதிய சி.பி.எஸ்.இ தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வாங்க ரூ.25 லட்சம் வரையும் கஷ்டப்பட்டு கொடுத்தோம். ஆனால், இப்போது ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் 1,000 பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பித்துக் கொடுத்துள்ளது, முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு. இது வரலாற்று சிறப்பு மிக்கது. கல்வித்துறையில் இதுவரை யாரும் செய்யாதது'' என்று நெகிழ்ந்து பேசுகிறார்கள்!
கல்வித் துறையை ஊழல் கறை படிந்த துறையாக பணம் கறக்கும் காமதேனுவாகத் தான் கடந்த கால ஆட்சியாளர்கள் கருதி ஆதாயங்கள் அடைந்து வந்தனர். அரசுத் துறைக்கு அளவுக்கு மீறி லஞ்சப் பணம் தருவதை ஈடுகட்ட அந்தத் தனியார் பள்ளிகள் பெறறோர்களிடம் அதிக கல்வி கட்டணம், நன்கொடை எனப் பிடுங்கினர்.
இதனால், இந்த தனியார் பள்ளிகள் தொடர்பாக அரசாங்கத்திற்கு எந்த புகார்கள் போனாலும் நடவடிக்கைகள் இருக்காது. ஏனென்றால், அவர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய பிறகு, ஆட்சியாளர்கள் எப்படி அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ முடியும்?
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் சுமார் 12,000 உள்ளன!
சி.பி.எஸ்.இ பள்ளிகள் 1,725 உள்ளன.!
தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பது என்பது ஒரு சாதாரண நடைமுறை. ஏற்கனவே செயல்படும் பள்ளியில் ஒரு இன்பெக்ஷன் நடத்திவிட்டு, குறைகள் இருந்தால் நிவர்த்திக்க கட்டளையிட்டு, அதையும் சரிபார்த்து தருவது தான் அங்கீகாரத்தை புதுப்பிக்கும் நடைமுறை!
இந்த சாதாரண நடைமுறைக்கு ஐந்து லட்சத்தை அடித்து பறித்தது திமுக அரசு. இதில் மிகவும் கறார் காண்பித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
எனக்கு தெரிந்த வடமாவட்டத்தை சேர்ந்த ஒரு நண்பர் பாரம்பரிய திமுககாரர். அவர் ஒரு தரமான தனியார் பள்ளி நடத்துகிறார். மாவட்ட திமுக இலக்கிய அணியின் மிக முக்கிய பொறுப்பு வகிப்பவர். ’பள்ளி அங்கீகாரப் புதுப்பித்தலுக்கு ஐந்து லட்சம் தர வேண்டும்’ என அதிகாரிகள் கூறிய போது அதிர்ந்தார்.
’’என் பள்ளியிலே நான் எந்தக் குறையும் வைக்கலே. அப்படி இருக்கும் போது அங்கீகார புதிப்பித்தல் என்ற சாதாரண நடைமுறைக்கு – அதுவும் திமுககாரன்கிட்டேயே நீங்க கேட்பீங்க’’ என்று சண்டை போட்டார்.
‘’இந்த சவுண்டு விடுவதெல்லாம் எங்ககிட்ட வச்சுக்காதீங்க. நாங்களா கேட்கிறோம். மேலிடத்தில் வசூல் பண்ணித் தரச் சொல்றாங்க. இதை செய்யாட்டி எங்க சீட்டு கிழிஞ்சிடும்...’’ என்று சொல்லவே, அவர் அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு போன் போட்டு பேசினார்.
அவர் பிடி கொடுத்தே பேசாமல் ரொம்ப பிஸியாக இருப்பவர் போல பாவனை செய்யவும் நேரடியாக சென்னை வந்தார். இவருக்கு அப்பாயிண்மெண்டே தராமல் அமைச்சரும் இரண்டு நாள் இழுத்தடித்தார். ஒருவழியாக காத்திருந்து மூன்றாவது நாள் பிடித்துவிட்டார்.
’’இந்தா பாருங்க. நாங்க பாரம்பரிய திமுககாரங்க. எங்க அப்பன், தாத்தன் எல்லாம் இந்த கட்சி தான். எங்க மாவட்டத்துல எந்த விழா நடந்தாலும் நாங்க தான் எடுத்துச் செய்வோம். கட்சிக்கு நாங்க செலவழித்த பணத்திற்கு கணக்கு வழக்கில்ல. தேர்தல் வந்தால் பம்பரமாக வேலை பார்ப்போம். இந்த கட்சியினாலே எதுவும் அனுபவிச்சது இல்லை. கொள்கை பிடிப்புக்கு தான் இருக்கோம். அடித்தட்டு மக்களை முன்னேற்றிவிட த் துவங்கிய கட்சி இது. நான் பள்ளிக் கூடத்தைக் கூட கல்வி சேவையாகத் தான் பண்ணுகிறேன். நீங்க இதை விசாரித்து உறுதிபடுத்திக்கோங்க. நியாமான கட்டணம் தான். ஏழைகளுக்கு சலுகை உண்டு. இப்ப நான் உங்களுக்கு ஐந்து லட்சத்தை அளந்து கொடுத்தால், அந்தப் பணத்தை பெற்றோர்களிடம் ஏதோ ஒரு வகையில் பிடுங்கித் தான் தரணும். இது நியாயம் இல்லை’’ என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ், ’’அண்ணே என்னை தப்பா நினைக்காதீங்க. மேலிடத்துல எங்களுக்கு சொன்னதை செய்கிறோம். இதை உங்களுக்காக மட்டும் விதிவிலக்கு செய்து தர எனக்கு அதிகாரமில்லை. ஒன்னு வேணா செய்றேன். இதுல என் பங்கு இரண்டு லட்சத்தை கழிச்சிட்டு மூன்று லட்சம் தந்துடுங்க. இது தான் என்னாலான ஆகப் பெரிய உதவி. மன்னிச்சிடுங்க’’ என்றவுடன் மூன்று லட்சம் தந்து புதுப்பித்தார்.
ஆனால், அவருக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ’’இது நாங்க பார்த்து வளர்ந்த கட்சியில்ல. இப்ப எப்படியோ போயிருச்சு. இனி வெளங்காது. பொய்த் தொலைங்க’’ என்று திட்டித் தான் பணம் தந்தார்.
ஆக, 12,000 பள்ளிகள் தலா ஐந்து லட்சம்!
சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்றுக்கு 25 லட்சம் என்றால், அந்த தொகையின் அளவு நமக்கு திகைப்பூட்டுகிறது.
இதை புறக்கணிக்கும் தைரியம் என்பது அசாத்தியமானது. இதற்கு மிகப் பெரிய மனவலிமை வேண்டும். ஏனென்றால், ஐந்து வருடம் பழக்கப்படுத்தப்பட்ட விஷயத்தை அப்படியே தொடர்ந்து கொண்டு போவது எளிது. அதை மாற்றுவது கடினம். அதைவிட, ’’பல நூறு கோடிகள் வேண்டாம். நீங்க நல்ல கல்வியைத் தாங்க அது போதும்’’ என்பது பெரிய விஷயம்.
அதே சமயம் இந்த விவகாரத்தை இதற்கு சற்று மாறாக புதிப்பித்தலுக்கு குறைந்த பட்சம் ஒரு லட்சம் அதிகாரபூர்வ கட்டணமாக்கி இருந்தால், இதில் கிடைக்கும் பெரும் தொகையைக் கொண்டு, அரசு பள்ளிகள் சிலவற்றுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்றி இருக்காலாமே என்றும் தோன்றுகிறது.
சரி, முதல்வர் விஜய்யும், அமைச்சர் ராஜ்மோகனும் மிகவும் பெருந்தன்மையாக நடந்துள்ளனர். இதற்கு கைமாறாக பள்ளி உரிமையாளர்கள் செய்ய வேண்டியது எல்லாம் மாணவர்களிடம் நியாயமான கட்டணங்கள் வாங்குவது தான். அதைச் செய்வார்களா? தெரியவில்லை. ஆனால், செய்ய வைக்க வேண்டியது அரசின் கடமை, உரிமையும் கூட.
இரண்டுவாரம் முன்பு நடந்த நிகழ்வை சொல்கிறேன்;
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் மே 25 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, ஜூன் 5-ஆம் தேதிக்குள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடும்படி, அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ, தனியார் பள்ளிகள் இயக்குநர் ஜூன் ஒன்றாம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்தார்.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளில் வெளியிட வேண்டும் என்ற உத்தரவுகளுக்கு எதிராக அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்க பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ’’கட்டண விவரங்களை வெளியிட மறுக்க முடியாது. தகவல் உரிமைச் சட்டத்தில் விலக்களிக்கும் பிரிவில் கூட, பொது நலன் சார்ந்த விவரங்களை வெளியிட வேண்டும். கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால், அதன் விவரங்களை சொல்லலாமே’’ என குட்டு வைத்தார்.
ஆகவே, தவெக தலைமையிலான தமிழக அரசு தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் பெருந்தன்மையை வெளிப்படுத்தியதைப் போல, கல்வி கட்டண விவகாரத்தில் கறார் தன்மை காட்ட வேண்டும்.
No comments:
Post a Comment