இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் அறங்காவலருக்கான விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அறங்காவலருக்கு விண்ணப்பித்து பார்ப்போமே என்று அந்த விண்ணப்பத்தை பார்த்தால், பல சான்றிதழ்கள் கேட்கிறார்கள். எனக்கு தலை சுற்றுகிறது. எங்கே போய் இத்தனை சான்றிதழ்களை பெறுவது?
எடுத்துக்காட்டுக்கு, இந்து சமயத்தை சார்ந்தவனாக இருக்கின்ற பட்சத்தில் அதற்கு ஒரு சான்றிதழ் வேண்டும். அந்த மாதிரியான சான்றிதழ் யார் கொடுப்பார்கள் என்றே தெரியவில்லை. தாசில்தார் இதைப்போன்ற சான்றிதழை கொடுப்பார் என்பது நான் கேள்விப்படாத ஒன்று. வசிப்பிடச் சான்றிதழும் கேட்கிறார்கள். ஆதாரில் எனது முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல், வசிப்பிட சான்றிதழ் ஏன்? இவ்வளவுகூட விண்ணப்பவரின் மீது நம்பிக்கை இல்லையெனில், எதற்காக இந்த விண்ணப்பம்? சொத்து மதிப்பிற்கான சான்றிதழ் கிராம நிர்வாக அலுவலரிடம் பெறவேண்டும். நான் வசிக்கின்ற வேளச்சேரியில் கிராம நிர்வாக அலுவர் இருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது! நானும் கடந்த 25 வருடங்களாக உள்ளூர் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். இதுவரை கிராம நிர்வாக அலுவலரைப்பற்றி கேள்விபட்டதோ பார்த்ததோ இல்லை. எனக்கு தெரிந்து "ரெவன்யூ இன்ஸ்பெக்டர்" -என்பவர் இருக்கிறார். இவரால் நான் வேளச்சேரியில் சொத்து வைத்திருந்தால் தெரிய் முடியும். ஆனால், வெளியூரிலோ சென்னையின் மற்ற இடங்களில் சொத்து வைத்திருந்தால், நான் அதை அவருக்கு தெரியப்படுத்தினாலே ஒழிய அவருக்கு தெரியப் போவதில்லை. வருமான சான்றிதழையும் கிராம நிர்வாக அலுவலர் (அ) தாசில்தாரிடம் பெறவேண்டும். வருமான வரித்துறைக்கு வருடாவருடம் நான் அளிக்கின்ற ஆவணங்களில் கடந்த மூன்று வருடங்களுக்கான ஆவணங்களை நான் சமர்பித்தால் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? சுய அறிவிப்பு அறிக்கையோ(ரூ 100 முத்திரைத்தாளில்) அல்லது ஒரு நோட்டரி பப்ளிக்-கின் மூலம் உறுதிமொழிப் பத்திரத்தையோ பெற்று விண்ணப்பவரின் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி அதை சமர்ப்பிக்க அனுமதிக்கலாம். அதைத்தவிர, வருமான வரித்துறைக்கு வருடாவருடம் நான் அளிக்கின்ற ஆவணங்களில் கடந்த மூன்று வருடங்களுக்கான ஆவணங்களையும் சமர்ப்பிக்க அனுமதிக்கலாம். விண்ணப்பிப்பதையே பெரும் சவாலாக மாற்றிவிட்டால், ஆத்மார்த்தமாக திருக்கோயில் பணியில் ஈடுபடவேண்டும் என்று நினைப்பவர்க்ள் எத்தனைப்பேர் விண்ணப்பிக்க போகிறார்கள் என்பதை அரசு சிந்திக்கவேண்டும்!
No comments:
Post a Comment