சமீப நாட்களாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழகத்தினுடைய அரசு பேருந்துகளில் உள்ள டிஜிட்டல் பலகைகளில் வரக்கூடிய வழித்தட பெயர்களின் விவரங்கள் மாற்றப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விமர்சிக்கும் வகையில் அரசு பேருந்து ஒன்றில் உள்ள டிஜிட்டல் பலகையில், ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற பெயர் ஓடியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 
அதாவது, சென்னை அடையாறு பணிமனையில் இருந்து இயக்கப்படக்கூடிய 119 என்ற சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தினுடைய பேருந்தில், ‘தக்காளி வெற்றிக் கழகம்’ என்ற சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றிருந்தது. தமிழகத்தை ஆளும் அரசான தவெக அரசை விமர்சிக்கும் வகையில் யாரோ சில மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், இது குறித்து சென்னை மாநகராட்சி போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், ‘சம்பந்தப்பட்ட பேருந்தின் வழித்தட விவர பலகை சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் இவ்வாறு மாற்றப்பட்டிருந்தது. இது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வழித்தட விவர பலகை சரி செய்யப்பட்டது. மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்று விளக்கம் அளித்துள்ளது.

No comments:
Post a Comment