"புதுசா வந்த விநாயகர்" என்று தொடங்கி ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மடமடவென்று பேசிச்செல்லும் தெய்வநிந்தனை ஆடியோவைக் கேட்கநேர்ந்தது. தென்கலை வைணவர்களாக இல்லாத பல பக்தர்களும், ஆன்மீக ஆர்வலர்களும் அவர்மீது மரியாதை வைத்துள்ளனர், அவரது வாட்ஸப் குழுக்களிலும் இணைந்துள்ளனர் என்பதை அவர் கட்டாயம் அறிந்தே இருப்பார். ஆயினும் ஏன் இப்படிப் பேசினார் என்பது அவருக்கே வெளிச்சம். தனது வைணவக் குறுங்குழுவின் உள்வட்டங்களுக்காக மட்டும் என்று எண்ணி அவர் பேசியது பொதுவிலும் பரவி, விவாதப் பொருளாகவும் ஆகிவிட்டது. அந்தப் பேச்சு பலரைப் போல எனக்கும் வருத்தமளித்தது. எனவே இந்தப் பதிவு.
(Historical & Theological view based on International University researches)
Monday, September 14, 2026
"புதுசா வந்த விநாயகர்" என தொடங்கி ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சிற்கு கண்டனம் - Jataayu Bangalore
சம்பிரதாயப் பிடிப்பை வலியுறுத்துவது தான் நோக்கம் என்றால் "மறந்தும் புறந்தொழா மாந்தர்" "தேவதாந்தர பஜனம் மகா பாபம்" போன்ற ஶ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களின் கூற்றுக்களையே அழுத்தமாக பல்வேறு விதங்களில் அவர் இன்னொரு முறை புகட்டியிருக்கலாம். பிள்ளையாரைப் பற்றிய நிந்தனை தேவையில்லாதது.
மேலும், "புராணங்களில் விநாயகரைப் பற்றி எதுவுமே இல்லை, அவர் எங்கிருந்தோ புதிகாக வந்தார்" என்றெல்லாம் அதீதமாக பேசுவதற்கு முன்பு, பாரதநாட்டில் இன்று உள்ள பல பாரம்பரியமான சமய மரபுகள் விநாயக வழிபாட்டை செய்கிறார்களே என்பது பற்றி அவர் யோசித்திருக்கலாம். சுவாமியின் பேச்சு வந்தவுடனேயே நண்பர் Gowtham Kalidass 4-5 மகாபுராணங்களில் உள்ள விநாயகர் குறிப்புகளை உடனே எடுத்துப் போட்டு பதிவு எழுதிவிட்டார். இத்தனைக்கும் அவர் சாஸ்திர பண்டிதர் கூட அல்ல, தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ஆன்மீக ஆர்வம் கொண்ட இளைஞர், சைவர். பேச்சைத் தயாரிக்கும் முன்பு சற்று கலந்தாலோசித்திருந்தால், தமிழ்நாட்டின் முதல் பெருமாள் கோயில்கள் தோன்றிய காலகட்டத்திலேயே, பொ.யு, 6-ம் நூற்றாண்டில் பிள்ளையார்பட்டிக் குடைவரையில் விநாயகர் கோயில் கொண்டுவிட்டார் போன்ற தகவல்களை சுவாமியின் வட்டத்தில் உள்ள வரலாறு/கல்வெட்டு ஆய்வாளர் யாராவது கூறியிருக்கக் கூடும்.
இதிகாச புராணங்கள் எதிலும் இல்லாத விஷயங்கள் ஆழ்வார்கள் அருளிச் செயல்களிலும் உள்ளன என்பதை சுவாமி அறியாதவர் அல்ல. உதாரணமாக, ராம-ராவண யுத்தத்தின் இறுதியில் அரக்கர் படைகள் "குழமணி தூரம்" "பொங்கத்தம் பொங்கோ" என்று கூத்துகள் ஆடியதைப் பற்றி திருமங்கையாழ்வார் வர்ணிப்பது, வால்மீகி ராமாயணத்திலோ, அல்லது புராணங்களில் உள்ள எந்த இராமாயண சித்திரிப்புகளிலும் இல்லாத ஒன்று. அதனை அருளிச் செயல் என்று ஏற்கும் பட்சத்தில், விநாயகரைப் பற்றிய விஷயங்களுக்கு மட்டும் புராண பிரமாணம் எங்கே என்று கேட்பது நியாயமானதல்ல.
சம்ஸ்கிருதம் அல்லாத தேசபாஷைகளில் முதன்முதலாகத் தோன்றிய பகவத்கீதை நூல் என்ற மகத்தான பெருமைகொண்ட 'ஞானேஸ்வரி' என்ற மராத்தி கிரந்தத்தில் அதன் ஆசிரியரான மகான் ஞானேஸ்வரர் (பொ.யு 12ம் நூற்.) தொடக்கத்தில் அதியற்புதமான கணேச ஸ்துதியை செய்திருக்கிறார். சகல சாஸ்திரங்களும் பிரணவ ஸ்வரூபியான கணேசரின் திருமேனியாக உள்ளன என்கிறார். எல்லா மராத்திய பாண்டுரங்க பக்தர்களும் கணேசரைப் போற்றியிருக்கிறார்கள். ராமபக்த சிரோமணியான தியாகராஜர் ஶ்ரீகணபதினி என்று கீர்த்தனம் பாடியுள்ளார். இப்படி, பல சாதுக்கள், பாகவதர்கள், அருளாளர்கள் வாக்கில் விநாயகர் இருக்கிறார் என்பதைப் புறம்தள்ளி விட முடியாது.
அதுவும், தற்போதைய சூழலில் விநாயகரை ஒரு "சைவ" கடவுள் என்பதாகக் கற்பனை செய்து வன்மத்தை வளர்ப்பது சிறுபிள்ளைத்தனமானது. பல நூற்றாண்டுகள் முன்பே அவர் எல்லா சம்பிரதாயங்களைச் சேர்ந்தவர்களும் போற்றும் செல்லப்பிள்ளையாகி விட்டார். பல கணேச சதுர்த்தி பந்தல்களில் இராமாயண, பாரத, பாகவதக் காட்சிகளின் சித்தரிப்புகள் உள்ளன, ஹரிநாம சங்கீர்த்தனம் கனஜோராக நடந்து கொண்டிருக்கின்றது என்பதையாவது கண்ணைத் திறந்து பார்க்கிறீர்களா? இன்று நாம் வாழ்வது இந்து மறுமலர்ச்சி யுகம் + தகவல் தொழில்நுட்பம் விரல்நுனியில் இருக்கும் நவீன யுகம். இப்போதும் ஏதோ பொயு. 10-11ம் நூற்றாண்டு திருச்சி-ஶ்ரீரங்கத்தின் சமயப்பூசல் சூழலில் வாழ்ந்துகொண்டிருப்பதாக பாவனை செய்வது வேடிக்கையானது.
வெள்ளைக்காரர்களையும், ஆப்பிரிக்கர்களையும், தென்னமெரிக்கர்களையும், தெற்காசிய சமூகங்களையும் வசீகரித்து தன் பக்தர்களாக ஆக்கிக் கொள்ளும் தெய்வ ஸ்வரூமான பிள்ளையார் உள்ளூரில் உள்ள சிலபல ஐயங்கார்களை மட்டும் வசீகரிக்காமல் இருப்பாரா என்ன? அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வேளுக்குடி ஸ்வாமியின் அடியார் குழுவிலும் சுப்பிரமணியன்களும், கணேசன்களும், புவனேஸ்வரிகளும் இருக்கிறார்களே, அதுபோலத்தான் என்று எடுத்துக் கொண்டிருக்கலாம். இவ்வளவு பதற்றம் அவசியமல்ல.
ஆனால் இந்த "அபசாரத்தை" தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்ற அதீத ஆர்வத்தில் அவர் தேவையற்ற தெய்வநிந்தனையைச் செய்கிறார். இந்த அளவுக்கு சாஸ்திர ஞானமும் கல்வியும் பிரவசன அனுபவமும் கொண்டவராயிருந்தும், ஒரு சுதந்திரமான சூழலில் மனித மனம் ஆன்மீகத்தை நாடிச் செல்வதற்கும், தனக்கு உகந்த தெய்வ வடிவங்களின் மீதும் தத்துவங்களின் மீதும் இயல்பான ஈடுபாடு கொள்வதற்குமான உளவியல் காரணங்கள் என்ன என்பது பற்றிய புரிதலை அந்தப் பேச்சு வெளிப்படுத்தவில்லை.
தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவம் தானே
தமருகந்த தெப்பேர்மற் றப்பேர் – தமருகந்து
எவ்வண்ணம் சிந்தித் திமையா திருப்பரே
அவ்வண்ணம் ஆழியா னாம்.
(பொய்கையாழ்வார்)
Subscribe to:
Post Comments (Atom)
"புதுசா வந்த விநாயகர்" என தொடங்கி ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் பேச்சிற்கு கண்டனம் - Jataayu Bangalore
"புதுசா வந்த விநாயகர்" என்று தொடங்கி ஶ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி மடமடவென்று பேசிச்செல்லும் தெய்வநிந்தனை ஆடியோவைக் கேட்கநேர்...
No comments:
Post a Comment