நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுகவினர், சில்லறைகள், சமூக விரோதிகள் அவதூறு; தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?' - உச்ச நீதிமன்றம்
இதற்கிடையில் தனி நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் வழக்கறிஞர்கள் குழுவினர் போராட்டங்களை நடத்தினர். மேலும் அவருக்கு எதிராக புத்தகங்களும் வெளியிடப்பட்டது.
இதற்கிடையில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவதூறு பரப்புவோர், போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆஜரான மனுதாரர் மணி, ``நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்காக அவர் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுகிறார். அவருக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுவதோடு போராட்டங்களும் நடத்தப்படுகிறது. இது தடுக்கப்பட வேண்டும்" என வாதம் முன் வைத்தார்.
குறிப்பாக யூடியூப்பர்கள் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் காவல்துறையும் அல்லது தமிழக அரசு எடுப்பதில்லை எனவும் வாதிட்டார்.
அப்போது பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `தமிழ்நாடு அரசு சார்பிலான வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளனரா?' என கேள்வி எழுப்பியதோடு, `நீதிபதிக்கு எதிராக நீதிமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்துவது, அவருக்கு எதிராக அவதூறு பரப்புவது தொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது?' என கேள்வி எழுப்பினர்.
`ஒரு குறிப்பிட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்புவது, போராட்டம் நடத்துவது உள்ளிட்டவை தடுக்கப்பட வேண்டும்' என கூறிய நீதிபதிகள், `இந்த விவகாரத்தில் ஏராளமான புகார் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், ஏன் அதன் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருக்கிறது?' என கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய மனுதாரர் மணி, ``திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்த காரணத்தினால் மட்டுமே யூடியூபர்கள் அவதூறு கருத்துக்களை பரப்புகிறார்கள. ஆனால் அதனை தமிழக காவல்துறை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பதாக" குற்றம் சாட்டினார்.
அப்போது மீண்டும் பேசிய நீதிபதிகள், ``மனுதாரர் கூறக்கூடிய விஷயங்கள் மிகவும் முக்கியமானது. எனவே இந்த விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள விரும்புகிறோம்" என சொல்லியதோடு, ``என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை உயர் அதிகாரிகளிடம் கேட்டு தெரிவியுங்கள்" என தமிழக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு சிறிது நேரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்
பிற்பகலில் விசாரணைக்கு மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி, ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டவர்கள் மீதும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் , உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.
ஏற்கனவே ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக சார்பில் நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளதும், அதை தமிழ்நாட்டிற்கு பிரச்சாரத்திற்கு வரும் பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருவதும் தொடர்ந்து நடந்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றமும் தற்பொழுது தமிழக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளது.
No comments:
Post a Comment