Wednesday, January 7, 2026

புலிமான் கோம்பை - புள்ளிமான்கோம்பை நடுகற்கள் -பொமு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை

புளியம்கொம்பை கல்வெட்டுகள்

  புள்ளிமான்கோம்பை நடுகற்கள் பொமு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளில் மிக பழமையானதாக அசோகரின் பிராமி கல்வெட்டு கருதப்பட்டு வந்தது. ஆனால் இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்கற்களிலேயே மிகவும் பழமையானவை இந்த நடுகற்கள் தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். தமிழர்கள் மொழியறிவு, எழுத்தறிவு பெற்றவர்கள் என்றும் கல்வெட்டுகளில் எழுத்து குறிக்கும் பழக்கம் கொண்டவர்கள் என்றும் புலிமான்கோம்பை கல்வெட்டுகள் நிரூபித்துள்ளன. 

 மூன்று  கல்வெட்டுகளின் விளக்கம்

1: கல்வெட்டு சிதைந்துள்ளதால் (அன் ஊர் அதன் ..(ன்)அன் கல்) முழுமையான பொருளை அறிய முடியவில்லை

 2  வேள் ஊர் அவ்வன் பதவன்- வேள் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்

 3 :  கல் பேடு தீயன் அந்தவன் கூடல் ஊர் ஆகோள்-கூடல் ஊரில் நடந்த ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடுதீயன் அந்தவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்

எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொமு. 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொமு. 2ம் நூற்றாண்டு சற்று பிற்பகுதி எனவும் கணிக்கப் பெற்றுள்ளது.

இந்த கல்வெட்டைப் பற்றி காலம் பற்றியும் முன் தள்ளி பல ஊகங்கள் கூறப்பட்டாலும் பிராமி எழுத்துகளை ஆராயும் பன்னாட்டு பல்கலைக் கழக அறிஞர்கள் ஏற்கும் காலத்தை நாம் தந்து உள்ளோம்


புலிமான் கோம்பை நடுகற்கள்..
பழந்தமிழ் எழுத்துக்கள் பழமை வரலாற்றில் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு.
இந்நடுகற்கள் வெளிப்படும் முன் அப்போதிருந்த வரலாற்றுக் கற்பிதத்தை முற்றிலுமாக தகர்த்த நடுகற்கள்..
தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே புலிமான்கோம்பை என்னும் ஓர் கிராமம். வைகையாற்றின் தென்கரையில் அமைந்திருந்த அழகான ஓர் கிராமம்.
2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி.
இப்பகுதியில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கல்வெட்டியல் துறை மற்றும் தொல்லியல் துறையினர் களஆய்வு மேற்கொண்டனர். மூன்று நாட்கள் நடந்த களஆய்வில் மூன்று நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
சங்கத் தமிழர்கள் எழுதிய பழந் தமிழி எழுத்துக்கள் கொண்ட நடுகற்கள் இவை.
கல்வெட்டு ஒன்றில்...
"கல்பேடு தீயன் அந்தவன்
கூடல் ஊர் ஆகோள் "
என்ற தமிழி எழுத்துப்பொறிப்பு இருந்தது. கூடல் ஊரில் நடைபெற்ற ஆகோள் பூசலில் உயிர்நீத்த பேடு தீயன் அந்தவன் என்பவரது நினைவைப் போற்றும் வகையில் எடுக்கப்பட்ட நடுகல். ஆகோள் என்னும் சொல் தொல்காப்பியத்திலும் உள்ளது.
இரண்டாவது நடுகல்லின்
முன்பகுதி உடைந்து உள்ளது.
எழுத்துப் பொறிப்பு..
அன் ஊர் அதன்.......
...ன் அன் கல்..
மூன்றாவது கல்லில்..
" வேள் ஊர் பதவன் அவ்வன் "
இம்மூன்று நடுகற்களும் பல வகையில் சிறப்பு வாய்ந்தன..
எவ்வித பிராக்ருத கலப்புச் சொற்களும் இல்லாத தூய தமிழில் எழுதப்பட்டுள்ளது.
மலைக்குகைகளில் மட்டுமே தமிழி எழுத்துக்கள் இருக்கும் என்ற கற்பிதத்தை உடைத்து தரைத்தளத்தில் கிடைத்த நடுகல். எந்த ஒரு சமணர் தொடர்பும் இல்லாமல் அடையாளம் காணப்பட்ட தமிழி எழுத்துக்களில் காலத்தால் மிக மூத்த நடுகல்.
இக்கல்வெட்டு குறித்து ஐயா ஐராவதம் மகாதேவன் அவர்கள் கூறியது -
எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும்போது இந்நடுகற்களின் காலத்தை கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் துவக்க காலத்திற்கு முன்பாக எடுத்துச் செல்லலாம். பிராக்ருதச் சொற்கள் கலப்பின்றி தூய தமிழ்ச் சொற்களைக் கொண்டு எழுதப்பட்டுள்ளன.சங்க காலத்தில் தமிழகம் முழுவதும் கல்வி அறிவை பெற்றுத் திகழ்ந்திருப்பதை இக்கல்வெட்டுகள் உணர்த்துகிறது என்று கருத்து தெரிவித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இம்மூன்று நடுகற்களையும் கீழடி அருங்காட்சியகத்தில் காணலாம்.
=====================

அன்புடன்..
மா.மாரிராஜன்.

No comments:

Post a Comment