சந்தனக்கூடு விழாவிற்கான நிபந்தனைகள்; தர்கா கோரிக்கையை நிராகரித்தது ஐகோர்ட் ADDED : ஜன 07, 2026
மதுரை: திருப்பரங்குன்றம் மலை சந்தனக்கூடு உருஸ் திருவிழாவில், 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற நிபந்தனையை மாற்றியமைக்க கோரிய தர்கா நிர்வாகத்தின் மனுவை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நிராகரித்தது.
மதுரையைச் சேர்ந்த மாணிக்கமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் மலையில், கந்துாரி விழா நடத்த தடை விதிக்க வேண்டும் என, குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'சந்தனக்கூடு உருஸ் திருவிழாவை மட்டுமே தர்கா நிர்வாகம் நடத்த வேண்டும்; 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்; விலங்குகளை பலியிடக்கூடாது' என, உத்தரவிட்டார்.
இதில், தர்கா தரப்பில் விளக்கம் கோரியதால், நேற்று அதே நீதிபதி முன், மனு விசாரணைக்கு வந்தது. தர்கா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''விழா ஆண்டுதோறும் தை மாதத்தில் நடக்கும்; இதில், 1,000க்கு மேற்பட்டோர் பங்கேற்பர். இந்த எண்ணிக்கையை 50 ஆக கட்டுப்படுத்துவது தவறானது'' என்றார்.
இதை தொடர்ந்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: அரசு தரப்பு வாதத்தின் அடிப்படையிலேயே அந்நிபந்தனை விதிக்கப்பட்டது. தர்காவில் உருஸ் திருவிழா நடத்தும்போது, அந்த இடம் அதிக கூட்டத்தை தாங்க இயலாது. 2003ல் இத்திருவிழாவின்போது, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது.
கூட்டம் அனுமதிக்கப்பட்டால், கோவிலின் இடத்தை ஆக்கிரமித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னை உருவாகும். முந்தைய திருவிழாவின் அடிப்படையில், இந்நீதிமன்றம் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை 50 ஆக கட்டுப்படுத்தியுள்ளது. எனவே, ஏற்கனவே பிறப்பித்த உத்தரவே நீடிக்கும். இவ்வழக்கின் அடுத்த விசாரணை ஜன., 21க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.



No comments:
Post a Comment