Saturday, October 5, 2024

பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது

 ரூ.10 கோடி நில மோசடி.. 8 முறை மாறிய வில்லங்க சான்றிதழ்.. பத்திர பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது 

By Hemavandhana Updated: Thursday, September 26, 2024, 10:18 [IST]

https://tamil.oneindia.com/news/salem/deed-registration-department-dig-rabindranath-arrested-for-rs10-crore-land-scam-with-8-times-encumbr-641533.html

சேலம்: சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சேலம் பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தவர் ரவீந்திரநாத்... இவர் கடந்த 2021-ம் ஆண்டு, தென்சென்னை பத்திரப்பதிவு டிஐஜியாக பணியாற்றி வந்தார்..

" போலி ஆவணங்கள்: அப்போது, தாம்பரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பதிவு செய்வதற்கு ரவீந்திரநாத் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. எனவே, பாதிக்கப்பட்டவர்கள், இதற்கான ஆதாரங்களுடன் புகார்களை தந்தார்கள். 

சென்னையை சேர்ந்தவர் சையத் அமான், பதிவுத்துறை ஐஜியிடம் ஒரு புகார் மனு அளித்திருந்தார்.. அந்த மனுவில், தாம்பரம் வரதராஜபுரத்தில் 85 சென்ட் நிலம் எனக்கு சொந்தமாக உள்ளது. இந்த நிலத்தை எனது தந்தை 1980ம் ஆண்டு எனக்கு எழுதிக் கொடுத்தார். சமீபத்தில் இந்த நிலத்தை இசி செய்து பார்த்தபோது எனது தந்தை, இந்த நிலத்தை காந்தம்மாள் என்பவருக்கு விற்பனை செய்ததுபோல காட்டுகிறது. எனக்கு எனது தந்தை 1980ம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். 

பதிவுத்துறை: ஆனால் 1987ல் எனது தந்தை, அந்த நிலத்தை காந்தம்மாளுக்கு எழுதிக் கொடுத்ததுபோல ஆவணங்களை தயார் செய்து, போலியாக பதிவுத்துறை ஆவணங்களில் ஏற்றியுள்ளனர். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ10 கோடி. இதனால், ஒரிஜினல் ஆவணங்கள் என்னிடம் உள்ள நிலையில் போலியாக இடைச்செருகல் மூலம் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போலியாக பதிவு செய்த ஆவணத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த புகார் குறித்து விசாரணை நடத்த பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், உத்தரவிட்டிருந்தார்... அதன்படியே, புகாரில் தெரிவித்திருந்தது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து, இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சங்கர்ஜிவாலுக்கு பதிவுத்துறை ஐஜி கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

தனிப்படை: சிபிசிஐடி ஐஜி அன்பு உத்தரவின்பேரில், எஸ்பி வினோத் சாந்தாராம், டிஎஸ்பி புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில், தற்போதைய சேலம் பதிவுத்துறை டிஐஜியாக இருந்த ரவீந்திரநாத், தென் சென்னை உதவி ஐஜியாக பணியாற்றியபோதுதான், இந்த தவறு நடந்திருப்பது தெரியவந்தது. 

அதாவது, ரவீந்திரநாத்தே, அதில் விரல் ரேகை பதிந்து லாகின் செய்து, ஆவணங்களை பதிவேற்றம் செய்திருப்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, 8 முறை முறை வில்லங்க சான்றிதழ் முறைகேடாக மாற்றி வைத்திருக்கிறாராம்.

ரவீந்திரநாத்: அனைத்து புகார்களும் உறுதியானநிலையில்தான், நேற்றைய தினம் கைது செய்வதற்காக சிபிசிஐடி தனிப்படை போலீசார், சேலத்தில் உள்ள ரவீந்திரநாத் வீட்டுக்கு சென்றுள்ளனர்.. அங்கிருந்து போலீஸ் வேனில் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். 

நேற்று இரவு முழுவதுமே, சென்னையிலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து டி.எஸ்.பி. புருஷோத்தமன் அவரிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.. முழுமையான விசாரணைக்கு பிறகே அவர் கைது செய்யப்பட்டார்... இப்போது அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். 

பரபரப்பு : சென்னையில் ரூ10 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரப்பதிவு செய்ததாக பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருவது, வருவாய்த்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment

பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா தேர் - உயரத்தைக் குறைக்கணுமாம்

  நெல்லை, பாளையங்கோட்டை வடக்கு உச்சி மாரியம்மன் கோவில் தசரா விழாவில், தேர் திருவீதியுலா நடப்பது வழக்கம். 'தேரின் உயரத்தைக் குறைக்க வேண்ட...