'கல்வி உரிமையை கடைப்பிடிக்காத மதரசாவுக்கான நிதியை நிறுத்துங்கள்'
நமது நிருபர் ADDED : அக் 13, 2024 புதுடில்லி: 'கல்வி உரிமை சட்டத்தை கடைப்பிடிக்காத, நடைமுறைபடுத்தாத மதரசாவுக்கு வழங்கப்படும் நிதியை மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்' என, குழந்தைகள் உரிமை அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
என்.சி.பி.சி.ஆர்., எனப்படும் குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன், புதிய அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
மதநம்பிக்கை பாதுகாவலர்களா அல்லது உரிமை பறிப்பாளர்களா என்ற பெயரில் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அரசியலமைப்பு சட்டத்தின் 29 மற்றும் 30வது பிரிவுகள், தங்களுடைய கலாசாரத்தை பாதுகாக்கவும், கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் சிறுபான்மையினருக்கு உரிமை அளிக்கின்றன.
ஆனால், முஸ்லிம்கள் நடத்தும் மதரசா எனப்படும் மதப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்படுகிறது.
கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைவருக்கும் முறைசார் கல்வி வழங்க வேண்டும். மதரசாக்களில் இது வழங்கப்படுவதில்லை.
ஆய்வறிக்கைகளின்படி, 1.2 கோடி முஸ்லிம் சிறுவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல், முறையான கல்வி வழங்கப்படுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மதம் தொடர்பான கல்வியுடன், வாழ்க்கைக்கு தேவையான முறைசார் கல்வியும் வழங்க வேண்டும். மதரசாக்களில் இவை பின்பற்றப்படுவதில்லை. முஸ்லிம் மாணவர்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
இந்த மதரசாக்கள், பள்ளிகள் என்ற வரையறைக்குள் வராமல் தனியாக இயங்கி வருகின்றன.
மதரசாக்களில் முறைசார் கல்வி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாத மதரசாக்களுக்கு வழங்கும் நிதியை, மாநில அரசுகள் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment