Wednesday, June 16, 2021

சங்க இலக்கியத்தில் இந்தியா

  பரிபாடல் - பரி 8

பரங்குன்று இமய குன்றம் நிகர்க்கும்
இமய குன்றினில் சிறந்து
நின் ஈன்ற நிரை இதழ் தாமரை
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின்	15
அருவி தாழ் மாலை சுனை
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல்
இந்தத் திருப்பரங்குன்றம்; எனவே இது இமயத்தை நிகர்க்கும்;
அந்த இமய மலையினும் சிறந்து,
உன்னை ஈன்ற வரிசையான இதழ்களையுடைய தாமரையின்
மின்னல் போன்று விளங்கும் இதழ்த்தொகுதி என்றும் உதிராத தன்மையுடைய
வற்றாமல் ஒரே நிலையிலிருக்கும் சரவணப் பொய்கையைப் போன்றது, உன் குன்றினில்
அருவிநீர் தங்கும் வரிசையாக அமைந்த சுனை;
முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட
தன்மையது முகிலின் இடிக்குரல்;

கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி - பரி 23/83

புகாஅ எதிர் பூண்டாரும் தாம்
மணி புரை மா மலை ஞாறிய ஞாலம்		80
அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்
செல் விடை பாகன் திரிபுரம் செற்று_உழி
கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகி
தொல் புகழ் தந்தாரும் தாம்
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த	85
கணம்_கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி
நல் அடி ஏத்தி நின் பரவுதும்
எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே                
மேருமலையை மோதித்தாக்க மிக்கு வந்து மோதிய காற்றுத்தேவனின் மேம்பட்ட வலிமை எல்லாம்
அந்த மலையில் புகாதபடி எதிர்ப்பினை மேற்கொண்டாரும் ஆதிசேடனே!
நீலமணி போன்ற பெரிய மலைகள் தோன்றிய இந்த மண்ணுலகத்தையே
அணிகலன்களைத் தாங்குவதுபோல் எளிதாகத் தாங்கியிருப்பவரும் ஆதிசேடனே! பிறரைப் பணிதல் இல்லாத புகழையுடைய,
விரைந்து செல்லும் எருதாகிய ஊர்தியையுடையோன் முப்புரத்தை அழித்தபோது
மலைகளிலேயே உயர்ந்த சிகரத்தையுடைய இமயத்தை வில்லாகக் கொள்ள, அதற்கு நாண் ஆகி
தொன்மையான புகழினைத் தந்தவரும் ஆதிசேடனே!
அச்சமூட்டக்குடிய அரிய தலைகள் ஆயிரத்தை விரித்த
திரளான சுற்றத்தைக் கொண்ட அந்த அண்ணலை வணங்கி,
உனது நல்ல திருவடிகளைப் போற்றி உன்னை வாழ்த்துகிறோம்,
யாம் எல்லாரும் எப்பொழுதும் உன் திருவடியைப் பிரியாமல் இருக்க, எம் சுற்றத்தாரோடு ஒன்று சேர்ந்து.

இமய செம் வரை மானும்-கொல்லோ - அகம் 265/3

புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து
பனி ஊர் அழல் கொடி கடுப்ப தோன்றும்
இமய செம் வரை மானும்-கொல்லோ
பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர்
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை			5
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ
புகை போல மிகுந்து பரந்து, அகன்ற வானத்தில் உயர்ந்து
பனி படர்ந்த நெருப்புப் பிழம்பு போலக் காணப்படும்
இமயம் என்னும் செம்மையான மலையினைப் போன்றதோ?
பல்வேறு புகழ்களால் நிறைந்த, வெல்லும் பேராற்றல் உடைய நந்தர் என்னும் அரசமரபினர்
சிறப்பு மிக்க பாடலிபுரத்தில் கூடி, கங்கை ஆற்றின்
நீரின் அடியில் மறைத்துவைத்து மறைந்துபோன செல்வமோ?

    இமயத்து (5)

வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த - சிறு 48

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்
வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த
எழு உறழ் திணி தோள் இயல் தேர் குட்டுவன்
வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று
மேற்றிசைக்கண்ணுள்ள நிலத்தைக் காக்கும் சேரர் குடியிலுள்ளோன் - பகைவருடைய
வட நாட்டு இமயமலையின் மேல் வளைந்த வில்(சின்னத்தைப்) பொறித்த
கணையத்திற்கு மாற்றான திணிந்த தோளினையும், கடக்கின்ற தேரினையும் உடைய குட்டுவனுடைய
(பெருகி)வரும் நீரும் (கோபுர)வாயிலும் உடைய வஞ்சியை(யே) தரும் பரிசிலும் சிறிதாயிருக்கும்; அதுவன்றியும் 5

பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி - நற் 356/3


நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவி செம் கால் அன்னம்
பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்
நிலத்தின் தாழ்ந்த பக்கத்தில் இருக்கும் தெளிந்த கடலில் இரைய அருந்திய,
ஒன்றற்கொன்று விலகிய மென்மையான இறகினையும், சிவந்த கால்களையுமுடைய அன்னங்கள்,
பொன்னாய் மின்னும் நெடிய சிகரங்களைக் கொண்ட இமயத்து உச்சியில்
தேவருலகத்துத் தெய்வ மகளிர்க்கு மிகவும் விருப்பமாக இருக்கும்


நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை - பரி 5/48

அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர்			45
மறு அறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறை_வயின் வழாஅது நின் சூலினரே
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை
பயந்தோர் என்ப பதுமத்து பாயல்
பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே				50
அரிது அமர் சிறப்பின் அமரர்_செல்வன்
எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என
அறு வேறு துணியும் அறுவர் ஆகி
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய்
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய    
கடவுள் கற்பினையுடைய ஒரு மீனாகிய அருந்ததி ஒழிய
அறுவராகிய ஏனையோரும் அப்பொழுதே உண்டனர்;
குற்றமற்ற கற்பினையுடைய அந்த முனிவர்களின் மனைவியர்
தம் கற்பில் குறைவுபடாது உன்னைக் கருக்கொண்டனர்;
உயர்ந்து ஓங்கிய இமயத்திலுள்ள நீலப்பூக்களைக் கொண்ட பசிய சரவணம் என்ற சுனையில்
உன்னைப் பெற்றெடுத்தனர் என்பர், தாமரைப்பூவாகிய படுக்கையில்,
பெரிய புகழினை உடைய முருகனே! உன்னை இவ்வாறு பெற்ற பொழுதே
கிட்டுவதற்கு அரிய, பிறரும் விரும்பும் சிறப்பினை உடைய தேவர் கோமான்
தீயை உமிழும் வச்சிரப்படையைக் கொண்டு, பகைமை கொண்டு வந்து வெட்டினானாக,
முன்னர் ஆறு வேறு துண்டுகளும் ஆறு வடிவம் ஆகி,
பின்னர் ஒரே உருவம் உடையவனானாய்! ஓங்குகின்ற வெற்றியை உடைய குமாரதெய்வமே!
வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப்


முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து/முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து - அகம் 127/4,5

வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து		5
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண்
நிலம் தின துறந்த நிதியத்து அன்ன		10
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள்
வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
தனது மரக்கலத்தைக் கடலில் செலுத்தி, பகைவரின் காவல்மரமாகிய கடம்பமரத்தை வெட்டி, இமயமலையில்
தனது முன்னோரைப் போன்று வளைந்த வில்லாகிய முத்திரையைப் பொறித்து
நல்ல நகரமாகிய மாந்தை என்னும் ஊரிலுள்ள தன் அரண்மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகக் கொடுத்த பெருமை மிக்க அழகிய அணிகலன்களையும்,
பொன்னால் செய்த பாவையினையும் வயிரங்களையும், ஆம்பல்
என்னும் பேரெண் அளவுக்கு இடமெல்லாம் நிறையும்படிக் குவித்து, அக்காலத்தில் அவ்விடத்தில்
நிலம் அரித்துப்போடும்படி விட்டுவைத்திருக்கும் நிதியம் போன்ற பொருளை
ஒருநாளின் ஒரு பகல்பொழுதில் பெற்றாலும், அவர் வரக்கருதியிருந்த நாளுக்கு அடுத்த நாள்

மாறி பிறவார் ஆயினும் இமயத்து/கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு - புறம் 214/11,12

அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு
செய்_வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்
தொய்யா_உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா_உலகத்து நுகர்ச்சி இல் எனின்
மாறி பிறப்பின் இன்மையும் கூடும்		10
மாறி பிறவார் ஆயினும் இமயத்து
கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டு
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே
அதனால், உயர்ந்த விருப்பமுடைய பெரியவர்களுக்கு
அவர் செய்த நல்வினைக்குத் தகுந்த பயன் கிடைக்குமானால்,
விண்ணுலக இன்பம் கிடைக்கலாம்.
விண்ணுலக இன்பம் கிடைக்காவிடினும்
மீண்டும் பிறவாமல் இருக்கும் நிலையையும் பெறலாம்.
பிறவாமை என்ற நிலை இல்லை என்றாலும், இவ்வுலகிலே இமயத்தின்
சிகரம்போல் உயர்ந்த புகழை நிலைநாட்டிக்,
குறையற்ற உடலோடு இறப்பது மிகப் பெருமை வாய்ந்தது.

 பதிற்றுப்பத்து11/

கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம்
தென்னம் குமரியொடு ஆயிடை
மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே  25
முருக்க மரங்கள் செறிவாக வளர்ந்த மலைச்சரிவில் துயில்கொள்ளும் கவரிமான்கள்,
பரந்து விளங்கும் அருவியோடு, நரந்தம் புற்களைக் கனவில் காணும்
ஆரியர் குழுமியுள்ள பெரும் புகழைக் கொண்ட இமயமலை,
தெற்கில் உள்ள அழகிய குமரி முனை ஆகியவற்றுக்கு இடையில் உள்ள
பெருமை பேசித் திரியும் மன்னர்களின் வீரம் எல்லாம் கெட்டொழியுமாறு -

பதிற்றுப்பத்து 43

கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை
வட திசை எல்லை இமயம் ஆக
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர்
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ
சொல் பல நாட்டை தொல் கவின் அழித்த		10
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ
தெய்வங்கள் நிலைபெற்றிருக்கும், பெரும் பாறைகள் உயர்ந்து நிற்கும் மலையான
வடதிசையிலுள்ள இமயம் வடக்கு எல்லையாக,
தெற்கில் உள்ள குமரியோடு, இவற்றுக்கிடையே உள்ள அரசர்களின்
முரசுகளையுடைய பெரிய போர் அழிந்துபோக, அதனால் ஆரவாரம் மிகுந்து எழ,
புகழ் பெற்ற பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த,

வட திசையதுவே வான் தோய் இமயம்/தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132/7,8

நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
குவளை பைம் சுனை பருகி அயல		5
தகர தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே
நரந்தை என்னும் நறுமணமுள்ள புல்லை மேய்ந்த கவரிமான்
குவளைப் பூவையுடைய புதிய நீரைக்கொண்ட சுனையில் பருகி அருகில் இருக்கும்
தகர மரத்தின் குளிர்ந்த நிழலில் தம் பெண்ணோடு தங்கும்
வடதிசையில் இருக்கிறது வானளாவிய இமயம்,
தென்திசையில் ஆய் குடியும் இல்லையென்றால்
இந்தப் பரந்த இடத்தையுடைய உலகம் தலைகீழாய்ப் போயிருக்கும்

கழை வளர் இமயம் போல - புறம் 166/33

பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்		30
செல்வல் அத்தை யானே செல்லாது
மழை அண்ணாப்ப நீடிய நெடு வரை
கழை வளர் இமயம் போல
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே
பூக்கள் பரந்த புது நீரையுடைய காவிரி காக்கும்
குளிர்ந்த நீருடைய விளைநிலம் கொண்ட எங்கள் ஊரில் 
உண்பன உண்டும், தின்பன தின்றும், ஏறுவனவற்றில் ஏறியும் கொண்டாடுவதற்காகச்
செல்கிறேன் நான், நீ இறவாதிருந்து
மேகங்கள் அண்ணாந்துபார்க்கும் உயர்ந்த நீண்ட மலையான
மூங்கில் வளரும் இமயம் போல
நீ நிலைபெற்று வாழ்வாயாக, இந்த நிலத்தின் மேல்

 


இமயமும் துளக்கும் பண்பினை - குறு 158/5

நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும்
கடு விசை உருமின் கழறு குரல் அளைஇ
காலொடு வந்த கமம் சூல் மா மழை
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை
இமயமும் துளக்கும் பண்பினை			5
துணை இலர் அளியர் பெண்டிர் இஃது எவனே
உயர்ந்த மலையின் பக்கத்திலுள்ள பாம்புகள் இறந்துபடும்படி இடிக்கும்
மிகுந்த வேகத்தையுடைய பேரிடியின் இடிக்கும் முழக்கத்தோடு கலந்து
காற்றோடு வந்த நிறைந்த கருக்கொண்ட பெரிய மழையே!
நிறைந்த இரக்கத்தை நீ பெறவில்லையோ? பெரும் புகழ்கொண்ட
இமயமலையையும் அசைக்கின்ற தன்மையையுடையாய்!
துணையின்றி இருக்கின்றனர், இரங்கத்தக்கவர், பெண்டிர், இது எதற்காக?

நிலனும் நீடிய இமயமும் நீ - பரி 1/51

நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சி
புலமும் பூவனும் நாற்றமும் நீ
வலன் உயர் எழிலியும் மாக விசும்பும்				50
நிலனும் நீடிய இமயமும் நீ
அதனால்
இன்னோர் அனையை இனையையால் என
அன்னோர் யாம் இவண் காணாமையின்
பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய				55
மன் உயிர் முதல்வனை ஆதலின்
நலம் என்று கூறப்படுவன அனைத்தும் பொருந்திய குற்றமற்ற அறிவைத் தரும்
வேதமும், பூவின்மேலுள்ளோனாகிய நான்முகனும், பூவின் நாற்றம் போன்ற நான்முகனின் படைப்புத்தொழிலும் நீ!
வலமாக உயர்ந்தெழும் மேகமும், மேலிடமாகிய விசும்பும்,
இந்த நிலவுலகும், அதில் நெடிதுயர்ந்து நிற்கும் இமயமும் நீ!
அதனால்
இப்படிப்பட்டவரைப் போன்றவன், இன்ன தன்மையினன் என்று கூறும்படியாக
அப்படிப்பட்டவரை நாம் இங்கு காணாததால்,
பொன்னால் செய்யப்பட்ட அழகிய சக்கரப்படையை வலது கையில் தாங்கிக்கொண்டவனாய்,

பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே - புறம் 2/24

நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து		20
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
மனக்கலக்கம் இன்றி நிற்பாயாக, பக்க மலையில்
சிறிய தலையையுடைய குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள்
மாலையில் அந்தணர் தம் அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீயாகிய விளக்கின்கண்ணே தூங்கும்
பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதிகை மலையும் போன்றே.


No comments:

Post a Comment