தனியார் நிலத்தில் இயங்கிய நித்தியானந்தா ஆசிரமம்: சீடர்கள் வெளியேற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த ஐகோர்ட்
விருதுநகரில் உள்ள நித்தியானந்தா தியான பீடத்தில் தங்கியுள்ள சீடர்களை வெளியேற்றக் கோரி மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சந்திரசேகரன் தாக்கல் செய்த மனுவில், ஆசிரமம் இயங்கி வரும் நிலம் தொடர்பான விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தவிதமான முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் வருவாய் அலுவலர் சீடர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அந்த உத்தரவை அடிப்படையாகக் கொண்டு ராஜபாளையம் போலீசார் வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, நிலுவையில் உள்ள வழக்கு சூழலில் யாரையும் வெளியேற்றக் கூடாது எனவும், வருவாய் அலுவலரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த போது, நித்தியானந்தா தலைமறைவாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவரைச் சார்ந்த விவகாரங்களை நீதிமன்றம் எவ்வாறு மேற்கொள்ள முடியும் என ஐகோர்ட்டு முன்பே சந்தேகம் எழுப்பியிருந்தது. அதே நேரத்தில், ஆசிரமத்தில் உள்ள சீடர்களை வெளியேற்றக்கூடாது என இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டது. பின்னர் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த சூழலில், வழக்கின் தீர்ப்பை நீதிபதி விக்டோரியா கவுரி நேற்று வழங்கினார். தீர்ப்பில், ஆசிரமத்தில் தங்கியுள்ள நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேற்ற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், ராஜபாளையம் ஆசிரம சீடர்கள் வெளியேற்ற நடவடிக்கைக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment