அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இறந்த இந்திய மாணவி குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு 13 Feb 2026
சியாட்டில்: அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்த இந்தியப் பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.262 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜானவி கன்டுலா, அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் முதுநிலை தகவல்தொழில்நுட்பப் படிப்பு படித்து வந்தார்.
கடந்த 2023-ம் ஆண்டு இவர் சியாட்டில் நகர சாலையை கடக்கும் போது, சைரன் ஒலியுடன் அவசரமாக சென்ற போலீஸ் வாகனம் மோதியது. இதில் ஜானவி கன்டுலா உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு சியாட்டில் நீதிமன்றத்தில் நடைபெற்றது. போலீஸ் வாகனம் சைரன் ஒலி மற்றும் அவசரகால விளக்குகளை எரியவிட்டுதான் சென்றது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் இந்த வழக்கில் ஜானவி குடும்பத்தினருக்கு 29 மில்லியன் டாலர் (ரூ.262 கோடி) இழப்பீடு வழங்க கிங் மாகாண உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் வாகனத்தை கவனக் குறைவாக ஓட்டிய கெவின் டேவ் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு 5,000 டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் மீது குற்ற வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
விபத்து நடந்த போது, இச்சம்பவத்துக்கு சிறிய தொகை இழப்பீடாக வழங்க வேண்டியிருக்கும் என சிரித்துக் கொண்டு இழிவாகக் கருத்து தெரிவித்த மற்றொரு போலீஸ் அதிகாரி டேனியல் ஆட்ரர் என்பவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தனது பணி நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

No comments:
Post a Comment